Wednesday 7 August 2013

சமூகத்தின் அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றிய திருத்தல்போக்கு

வரலாற்றை இயக்கும் விசை எது? என்ற கேள்விக்கு மார்க்ஸ் கண்டுபிடித்ததும், அதனை  வரலாற்றியல் பொருள்முதல்வாதம்  என்று அழைத்ததும் அவரது அறிவொளியின் வெளிப்பாடாகும். இதனை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் தங்களை மார்க்சியர் என்று அழைத்துக் கொண்டு, மார்க்சிய அடிப்படையில் திருத்தலை செய்ய முற்படுகின்றனர். இதற்கு முதன்மையான காரணம் அவர்களால் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதும். அவர்களது சிந்தனையில் உள்ள கருத்துமுதல்வாதப் போக்கை விட்டுவிடமுடியவில்லை என்பதும் ஆகும்.

இந்த சிந்தாந்தப் புரட்டல் வேலையால், இளம் மார்க்சியவாதிகளை குழப்ப முயற்சிக்கின்றனர். சோவியத் தகர்வு போன்ற காரணத்தைப் பயன்படுத்தி, மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவர்களிடம், மார்க்சியத்தின் மீது சந்தேகத்தை எழுப்புகின்றனர்.

மார்க்சியத்தின் அடிப்படைகளை முழுமையாகப் புரிந்தவர்களிடம் இந்த திருத்தல் வேலையும், சோவியத் தகர்வும் போன்ற காரணமும் எதையும் சாதித்திட முடியாது. ஆனால் மார்க்சியத்தின் அடிப்படைகளை அறிந்திராத, மார்க்சியத்தின் பால் ஈர்ப்பை மட்டும் பெற்றவர்களுக்கு, இந்த சிந்தாந்த புரட்டல்கள் குழப்பத்தை விளைவிக்கும். இது மட்டுமல்லாது சமூகவியல், வரலாற்றியல், தத்துவவியல், பொருளியல், தமிழ் போன்ற பாடங்களைப் படிக்கும் கல்லூரி மாணர்களுக்கு இதுபோன்ற குழப்பும் செயல்களால், பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி, மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர், கூறிய கருத்துகளிலிருந்து தொகுப்போம். தொகுத்ததை மார்க்சிய ஆசான்களின் படைப்புகளைக் கொண்டு சரிபார்த்து, உறுதிப்படுத்திக் கொள்வோம். இந்தக் கருத்தோட்டத்தைப் பற்றி அதிகமான திருத்தல்வாதப் போக்கு இருப்பதால், இந்த முறையினைக் கையாள்வது சிறந்ததாயிருக்கும்.

I
மனிதர்கள் தமது வாழ்க்கைக்காக உற்பத்தி செய்திடும் போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் மனிதர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து புறநிலையாக இருப்பவையாகும்இதுவரை வளர்ச்சியடைந்துள்ள  பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும். இந்த அடித்தளத்தின் மீது சட்டம், அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது. இதற்கு பொருத்தமாக சமூக உணர்வின் வடிவங்கள் தோன்றுகின்றன.

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லைஅவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.. இந்த மாற்றம் விரைவிலோ அல்லது சற்றுதாமதமாகவோ நடைபெறலாம். மனிதர்களின் சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வுநிலையை நிர்ணயிக்கிறதுஇவ்வகையில் தான் சமூக உணர்நிலையின் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு சமூக அமைப்பும் அதன்  உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை எட்டுவதற்குமுன்பாக மறைந்திடுவதில்லை. அச்சமூகத்திலுள்ள பழைய உற்பத்தி உறவுகள் அகற்ற வேண்டுமானால், புதிய உற்பத்தி உறவுகள் தோன்றுவதற்கான, பொருளாயத நிலைமைகள் அச்சமூகத்தில் தோன்றியிருக்க வேண்டும்.
II
உற்பத்தியும், மறுவுற்பத்தியும், அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தியாகும். ஆனால், மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தாக்கம் செலுத்துவதையும், இடைச்செயல் புரிவதையும் மார்க்சியம் மறுத்திடவில்லை. இந்த இடைத்தொடர்பு மிகவும்  தொலைவானதாக இருக்கிறது, முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு மத்தியில்முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது. மேற்கட்டமைப்பு பலயினங்களில் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாயிருக்கின்றன

III
இரண்டாம் நிலையானாலும் சித்தாந்தங்கள் அடித்தளத்தின் மீது எதிர்ச்செயல் புரிவதை மார்ச்சியம் மறுக்கவில்லை. இதனை மறுப்பவர்கள் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை  இயக்கவியல் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை, காரணத்தை ஒரிடத்திலும், விளைவை வேறோர் இடத்திலும் காண்கிறார்கள். ஆனால் இந்த இடைச்செயல் சார்பானதாகும், மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்கு கட்டுப்பட்ட வகையில் தனது செயற்பாட்டில் சுதந்திரம் பெற்று அடித்தளத்தில் தாக்கம் செலுத்துகிறது. இந்த சார்பான தாக்கம், மேற்கட்டமைப்பின் முழுச்சுதந்திரம் பெற்றதாகவோ, அடித்தளத்தை  நிர்ணயிக்கிற சக்தி உடையதாகவோ கணக்கிடமுடியாது. பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், ஆதிமூலமானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருக்கிறது.

இந்த மூன்று பகுதியின் தொகுபிற்குரிய மார்க்சிய ஆசான்களின் கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
I
மார்க்ஸ் கூறுகிறார்:-
 மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும்  சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

                   .. .. ..
பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் - சுருக்கமாகச் சொல்வதென்றால்  சித்தாந்தத் துறைகளில் - இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து  கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.
 .. ..
இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாக, உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்க முடியும்.

எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை
அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு  முன்னுரை

எங்கெல்ஸ் கூறுகிறார்:-
 சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்பொழுதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால்தான் வரலாற்றின் அந்தந்தக் காலக் கூறுக்கும் உரிய நீதிநெறி அரசியல் நிறுவனங்களும் மற்றும் சமயக் கருத்துக்களுமாகிய மேற்கட்டமைப்பு அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காணமுடிகிறது.... இதுகாறும் செய்யப்பட்டது போல மனிதனது உணர்வைக் கொண்டு அவனுடைய வாழ்நிலைக்கு விளக்கம் கூறுவதற்குப்பதில், மனிதனது வாழ்நிலையைக் கொண்டு அவனுடைய உணர்வுக்கு விளக்கம் கூறுவதற்கு ஒரு வழி கண்டறியப்பட்டது.                                      டூரிங்குக்கு மறுப்பு

II
எங்கெல்ஸ் கூறுகிறார்:-
 ...வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருதுகோளின்படி மெய்யான வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாற்றை முடிவாக நிர்ணயிக்கின்ற சக்திகளாகும். மார்க்சோ, நானோ இதற்கு மேல் ஒருபோதும் சொல்லவில்லை. ஆகவே பொருளாதாரக் கூறு ஒன்றுதான் நிர்ணயிக்கின்ற ஒரே கூறு என்று யாராவது இதைத் திரித்துக் கூறினால், அவர் இந்தக் கருதுகோளைப் பொருளில்லாத, சூக்குமமான, அர்த்தமில்லாத சொற்றொடராக மாற்றிவிடுகிறார். பொருளாதார நிலைமைதான் அடிப்படை, ஆனால் மேற்கட்டபைப்பின் பல்வேறு கூறுகள் - வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்களும் அதன் விளைகளும், வெற்றிகரமான சண்டைக்குப் பிறகு வெற்றி பெற்ற வர்க்கம் நிறுவிய அரசியலமைப்பு, இதரவை, சட்டவியல் வடிவங்கள், பங்கெடுப்பவர்களின் அறிவில் இந்த மெய்யான போராட்டங்கள் எல்லாவற்றின் மறிவினைகளும் கூட, அரசியல், சட்டவியல், தத்துவஞானத் தத்துவங்கள், சமயக் கருத்துக்களும் வறட்டுக் கோட்பாடுகளைக் கொண்ட அமைப்புகளாக அவற்றின் கூடுதலான வளர்ச்சியும் - வரலாற்றுப் போராட்டங்களின் நிகழ்வுப்போக்கின் மீது தாக்கம் செலுத்துகின்றன, பல இனங்களில் அவற்றின் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாயிருக்கின்றன.

இக்கூறுகள் அனைத்தும் இடைச்செயல் புரிகின்றன, அந்த முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு (அதாவது, பொருள்கள் மற்றும் சம்பவங்களின் உள்இடைத்தொடர்பு மிகவும் தொலைவானதாக அல்லது நிரூபிக்க முடியாததாக இருப்பதால் அதை இல்லை என்று, அற்பமானதென்று நாம் கருத முடியாது) மத்தியில் முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது.
பிலோஹுக்கு எழுதிய கடிதம் செப்டெம்பர் 21 (22) 1890


III
எங்கெல்ஸ் கூறுகிறார்:-
 ... பொருளாயத வாழ்க்கை முறை முதன்மையாக இருந்தாலும் சித்தாந்த துறைகள் தம்மளவில் - இரண்டாம் நிலையான விளைவுடன் என்றாலும் கூட - எதிர்ச்செயல் புரிவதை இது தடுக்கவில்லை என்பதை இந்த நபர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், அவர் எதைப் பற்றி எழுதுகிறாரோ, அந்தப் பொருளைப் புரிந்து கொண்டிருப்பது சாத்தியமல்ல.
கோ.ஷ்மிட்டுக்கு எழுதிய கடிதம் ஆகஸ்ட் 5, 1890

எங்கெல்ஸ் கூறுகிறார்:-
 இந்தக் கனவான்கள் எல்லோரிடமும் இயக்கவியல் கிடையாது. அவர்கள் எப்பொழுதும் ஓரிடத்தில் காரணத்தையும் இன்னோர் இடத்தில் விளைவையும் பார்க்கிறார்கள். அது ஒன்றுமில்லாத சூக்குமம், அத்தகைய இயக்க மறுப்பியலான எதிர்முனைக் கோடிகள் மெய்யுலகத்தில் நெருக்கடிகளில் மட்டுமே நிலவுகின்றன, அப்பொழுது மொத்த, பரந்தகன்ற நிகழ்வுப் போக்கும் இடைச்செயலின் வடிவத்தில் நடைபெறுகிறது (இடைச்செயலில் ஈடுபடும் சக்திகள் மிகவும் சமமில்லாதவை என்றாலும், இவற்றில் பொருளாதார இயக்கம் இதுவரை மிக வலிமையான, மிகவும் ஆதிமூலமான, மிகவும் தீர்மானகரமான சக்தியாக இருக்கிறது) இங்கே எல்லாமே சார்பு நிலையானது. எதுவுமே தனிமுதலானது அல்ல - இதை அவர்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை.
எங்கெல்ஸ் ஷ்மிட்டுக்கு எழுதிய கடிதம்

அரசியல், சட்டவியல், தத்துவஞான, சமய, இலக்கிய, கலை, இதர வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, ஆனால் இவை அனைத்தும், ஒன்றின் மீது ஒன்றும், பொருளாதார அடிப்படையின் மீதும் எதிர்ச்செயல் புரிகின்றன. மற்றவை ஒவ்வொன்றும் செயலற்ற விளைவை       மட்டுமே கொண்டிருக்கின்றன, பொருளாதார நிலைமை காரணமாக, தனியாக சுறுசுறுப்புடன் செயல் புரிகிறது என்பதல்ல. பொருளாதார அவசியத்தின் அடிப்படையில்  அது இறுதியில் எப்பொழுதும் தன்னை வலியுறுத்துகிறது       இடைச்செயல் நடைபெறுகிறது.              -எங்கெல்ஸ் வொ.போர்கியுசுக்கு எழுதிய கடிதம், லண்டன், ஜனவரி 25, 1894

தொகுத்துக் கொண்டதை, மார்க்சிய ஆசான்களான மார்க்ஸ், எங்கெல்ஸ், ஆகியோர்களின் கூற்றைக் கொண்டே சரிபார்த்தோம். இப்போது மார்க்சியத்தை புரட்டுபவர்கள் எவ்வாறு திருத்தல் பணியினை செய்கின்றனர் என்பதை காண்போம்.

ஏன் இவ்வாறு தொகுக்க வேண்டிவந்தது என்றால், மார்க்சியம் கூறும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்றகிற கருத்தாக்கத்தை சிதைக்கும் போக்கு தமிழகத்தில் மிகவும் கடுமையாக நடத்தப்பட்டு வருகிறதுஅடித்தளம் மேற்கட்டுமானம் என்ற எதிர்வுகளுக்கு மார்க்சிய முதலாசிரியர்கள் கூட இவ்வளவு இறுக்கத்தை வழங்கினார்களா என்பது சந்தேகமே. இயங்கியல் எதிர்வுகளை நெகிழ்வாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடு ஒன்றிலிருந்து மற்றதை வருவிக்கும் முறையியலை அவர்கள் ஏற்கவில்லை. ஹெகலிய இயங்கியலில் கூட இத்தனை இறுக்கம் கிடையாது  என்று மார்க்சின் கருத்தை புரட்டி, சிதைக்கும் போக்கு அதிகமாகவே நடத்தப்படுகிறது. இவர்களது கருத்து மேலே தொகுத்த மார்க்சிய கருத்தாக்கத்தை சந்தேகிக்கும் போக்காகும்.

அதுமட்டுமல்லாது, மார்க்சியம் எதை எதிர்த்து தோன்றியதோ, அந்த பழைய நிலைக்கு மார்க்சியத்தை எடுத்துச்செல்லும் வேலையை செய்கிறது இந்தப் போக்கு.

மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது எங்கெல்ஸ் நிகழ்த்திய உரையில் கூறினார்:-
  .. ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருத்தாக்கம், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளாச்சியடைகின்றன, ஆகவே அதன் ஒளியில் அவற்றை விளக்க வேண்டமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது
  இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாதுஎன்று எங்கெல்ஸ் குறிப்பிட்டதற்கு மாறாக பழையபடி மீண்டும் மறுதலையாக, அதாவது மனிதர்களின் உணர்வுநிலையைக் கொண்டு சமூகவாழ்நிலையை விளக்க முற்படுகின்றனர்.
இந்த போக்கு அனைத்துலகிலும் காணப்படுகிறது.
மேலை நாடுகளில் மார்க்சியத்தை சிலர் விஞ்ஞான மார்க்சியம், விமர்சன மார்க்சியம் என இரண்டாகப் பிரித்து பார்க்கின்றனர்.

விஞ்ஞான மார்க்சியம் என்பது  சமூக எதார்த்ததை, சமூக உற்பத்தி முறைகளில் உள்ள புறவய முரண்பாடுகளில் காண்கிறது. கட்சி, நடைமுறை, புரட்சியின் அகவயக் காரணிகள், கருத்தியல் போன்ற தத்துவார்த்த நடவடிக்கைகளுக்கு முதன்மை கொடுப்பது விமர்சன மார்க்சியம் என்கின்றனர்.

                மார்க்சியத்தை இரண்டாக்குவதின் மூலம், மார்க்சியத்தை நீர்த்து போக வைக்க முயற்சிக்கின்றனர். மார்க்ஸ், எங்கெல்ஸ் கூற்றுகளை திரித்தும், மாற்றியும் விளக்கம் அளிப்பதின் வழியில் இதனை செய்கின்றனர்.

இதற்கு எங்கெல்ஸ் எழுதிய இரு கடிதங்களை பயன்படுத்துகின்றனர். ஆதில்  பொருளாதார மண்டலத்தில் நடைபெறும் மோதல்கள் இயல்பாகவே அரசியல் புரட்சிகளில் பிரதிபலிக்கிறது என்ற இயந்திரத்தனமான துர்வியாக்கியானத்தை அம்பலப்படுத்தி எங்கெல்ஸ்க எழுதியிருப்பதாக தெரிவிக்கின்றனர். இக் கூற்றில் பொருளாதார உற்பத்தி முறை என்னும் அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது என்பதை தெரிவிக்காமல், மார்க்சின் கண்டுபிடிப்பான வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மறைக்கப்படுகிறது. இதன் மூலம்  அடித்தளத்துக்கும் மேற்கட்டுமானத்துக்குமான உறவுகள் பொருளாதாரத்துக்கு நேர் பொருத்தமாக அரசியல், கலை, இலக்கியம் என்றெல்லாம் வருவது கிடையாது. ஒவ்வொரு துறைக்கும் சுயேச்சையான தனி வரலாறு உண்டு. இவற்றிடையே செயற்கையாக முடிச்சுப் போடும் முயற்சிகள் உண்டு. அதேபோல இவை ஒன்றின் மீதொன்று செலுத்துகிற தாக்கத்தைக் காணாதிருப்பதும் தவறுக என்ற மார்க்சியத்திற்கு முரணான முடிவிற்கு வருகின்றனர்.

இந்த வழியில் செல்லும் போது  மார்க்சியத்தில் மிக அடிப்படையான ஒரு கூறு அடித்தளத்துக்கும் மேற்கோப்புக்கும் இடையிலான உறவு. அடித்தளமும் மேற்கோப்பும் ஒன்றை ஒன்று பாதிப்பது. ஒன்றோடொன்று முரண்படுவது.க ஏன்று கூறி, பிறகு  அடித்தளம் மேற்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது. மேற்கட்டுமானமும் அடித்தளத்தை தீர்மானிக்கிறதுக என்ற முடிவிற்கு வருகின்றனர். இறுதியாக மார்க்சின் கண்டுபிடிப்பான, ஏடறிந்த வரலாற்று அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறு என்பதும், அதன் விளக்கமான, அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கமும், ஆக வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையே கொச்சைப்படுத்திவிடுகின்றனர்.

 சமூக வாழ்நிலை தான், சமூக உணர்வுநிலையை உருவாக்குகிறது என்பதை எற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதால், மார்க்சிய முடிவுகளை நோக்கி இவர்களால் வரமுடியாமல் போகிறது.

எங்கெல்ஸ் கூறுகிறார் :-
"வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருத்தோட்டமானது (மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின்) உற்பத்தியும், அதற்கு அடுத்தபடி இந்த உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையும் தான், சமுதாயக் கட்டமைப்பு அனைத்துக்குமான அடித்தளமாகும் என்ற வரையறுப்பிலிருந்து தொடங்குகிறது. வரலாற்றில் தோன்றியுள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் எவ்விதம் செல்வம் வினியோகிக்கப்படுகிறது, சமுதாயம் எப்படி வர்க்கங்கள் அல்லது படிநிலைகளாய் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது, என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்திப் பொருள்கள் எவ்விதம் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பவற்றைச் சார்ந்தே உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தின் படி எல்லாச் சமுதாய மாறுதல்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான இறுதிக் காரணங்களைப் பொருளுற்பத்தி மற்றும் வினியோக முறைகளின் மாற்றங்களில் கண்டறிய வேண்டுமே அல்லாது, மனிதனது மூளையில் அல்லநிலையான சாசுவத உண்மை மற்றும் சாசுவத நீதி குறித்து மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வில் அல்ல. இவற்றை அந்தந்த சகாப்தத்தின் பொருளியலில் கண்டறிய வேண்டுமே அல்லாது தத்துவவியலில் அல்ல."                                    -டூரிங்குக்கு மறுப்பு



லெனின் கூறுகிறார்:-
"இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் (மார்க்ஸ்) விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம்  விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய  கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த  முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது."
மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் - லெனின்

மேலே எங்கெல்சின் கூற்றான சமுதாய மாறுதல்களை தத்துவயியலில் அல்ல பொருளியலில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதையும், லெனின் கூறிய வரலற்றையும், அரசியலையும் பற்றி பழைய குழப்பமும், தான்தோன்றித் தனமும் நீங்கிவிட்டதும், உள்ளிணக்கம் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவத்தையும், இந்த புரட்டல் பகட்டு அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.

புரட்டல்வாதிகள் தவறாகப் பயன்படுத்தும், எங்கெல்சின்  இரு கடிதங்களை இப்போது பார்வையிடுவோம்.

எங்கெல்ஸ் பிலோஹுக்கு எழுதிய (செப்டெம்பர் 21 (22) 1890) கடிதம்:-
 இளைஞர்கள் சில சமயங்களில் பொருளாதாரத் தரப்பின் மீது உரியதைக் காட்டிலும் அதிகமான அழுத்தம் கொடுப்பதற்கு மார்க்சும் நானும் பகுதியளவுக்குப் பொறுப்பாகும். முக்கியமான கொள்கையை மறுத்த எதிரிகளுக்கு எதிராக நாங்கள் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தது, இந்த இடைச்செயலில் பங்கெடுக்கின்ற மற்ற கூறுகளுக்கு உரிய அழுத்தம் கொடுப்பதற்கு அவசியமான காலம், இடம் அல்லது சந்தர்ப்பம் எங்களுக்கு எப்பொழுதும் இருக்கவில்லை. ஆனால் வரலாற்றின் ஒரு காலகட்டத்தை ஆராய்ச்சி செய்வது, அதாவது செய்முறையில் அதைக் கையாளுவது என்பது வேறு விஷயம், அங்கே தவறு செய்வதை அனுமதிக்க முடியாது.

எங்கெல்ஸ் மேரிங்குக் எழுதிய (ஜுலை 14, 1893)கடிதம்:-
"...மற்றபடி ஒரே ஒரு விஷயம் மட்டுமே இடம் பெறவில்லை, ஆனால் மார்க்சும் நானும் எங்களுடைய எழுத்துக்களில் அதைப் போதுமான அளவுக் வலியுறுத்தத் தவறினோம், அதைப் பொறுத்தமட்டில் நாங்கள் சம அளவுக்குத் தவறு செய்தவர்களே. அதாவது, நாங்கள் பிரதான அழுத்தத்தை முதலாவதாக அரசியல், சட்டவியல் மற்றும் இதர சித்தாந்தக் கருத்துக்களையும் இக்கருத்துக்கள் என்னும் ஊடகத்தின் மூலமாகத் தோன்றுகின்ற நடவடிக்கைகளையும் அவற்றின் அடிப்படையான பொருளாதார மெய்விவரங்களிலிருந்து பெறுவதற்குக் கொடுத்தோம், அப்படிச் செய்யக் கடமைப்பட்டிருந்தோம். ஆனால் நாங்கள் அப்படிச் செய்கின்ற பொழுது, உள்ளடக்கத்துக்காக வடிவத்தைப் பற்றிய பிரச்சினையை, அதாவது இக்கருத்துக்கள் ஏற்படுகின்ற வழிகளை, இதரவற்றைப் புறக்கணித்தோம். அது நமது எதிரிகள் எங்களைத் தவறாகப் புரிந்துக் கொள்வதற்கும் திரித்துக் கூறுவதற்கும் விரும்பத்தக்க சந்தர்ப்பத்தை அளித்தது.

...விஷயத்தின் இந்த அம்சத்தை என்னால் இங்கே ஓரளவு தான் சுட்டிக்காட்ட முடிகிறது. இந்த அம்சத்தை நாம் அதற்குரியதைக் காட்டிலும் அதிகமாகப் புறக்கணித்திருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். அது பழைய கதையே, உள்ளடக்கதுக்காக முதலில் வடிவம் எப்பொழுதுமே புறக்கணிக்கப்படுகிறது. ஏற்கெனவே நான் கூறியபடி நானும் இதைச் செய்திருக்கிறேன், அது தவறு என்று பிற்பாடுதான் எனக்குப் பட்டிருக்கிறது. ஆகவே நான் உங்களை இதற்காக எவ்விதத்திலும் குறைசொல்லாதது மட்டுமன்றி - தவறு செய்த தரப்பினரின் மூத்தவர் என்ற முறையில் அப்படிச் செய்வதற்கு எனக்கு உரிமையில்லை - அதற்கு மாறாக. எனினும் மற்றவை எப்படியிருந்தாலும் எதிர்காலத்தை முன்னிட்டு இந்த அம்சத்தை உங்களுடைய கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

வரலாற்றில் பாத்திரம் வகிக்கின்ற பல்வேறு சித்தாந்தத் துறைகள் சுயேச்சையாக வரலாற்று ரீதியில் வளர்ச்சி  அடைவதை நாம் மறுப்பதால், அவை வரலாற்றின் மீது எவ்விதமான தாக்கத்தைச் செலுத்துவதையும் நாம் மறுக்கிறோம் என்னும் சித்தாந்திகளின் முட்டாள் தனமான கருத்தும் இதனுடன் சேர்ந்திருக்கிறது. காரணமும் விளைவும் தவிர்க்க இயலா எதிர்முனைகள் என்னும் பொதுப்படையான, இயக்கவியல் அல்லாத கருதுகோள், இடைச்செயல் முற்றிலும் கருதப்படாமல் இருப்பது இதற்கு அடிப்படை ஆகும். வரலாற்று நிகழ்ச்சி மற்ற காரணிகளால், முடிவில் பார்க்குமிடத்து பொருளாதாரக் காரணிகளால் ஏற்படுவதால், அது உடனேயே தீவிரமான காரணியாகிறது, அதன் சூழ்நிலை மற்றும் அதைத் தோற்றுவித்த காரணங்களின் மீது கூட அதனால் எதிர்ச்செயல் புரிய முடியும் என்பதை இந்தக் கனவான்கள் பெரும்பாலும் அநேகமாக திட்டமிட்ட முறையிலும் மறந்து விடுகிறார்கள்."

 உள்ளடக்கத்தை விளக்கிய அளவிற்கு வடிவத்தை விளக்கவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார் எங்கல்ஸ், அத்தோடு இதை அன்றே பழைய கதை என்றும், எதிர்காலத்தை முன்னிட்டும் கவனத்திற்கும் கொண்டுவந்து விவரித்தும் உள்ளார்.

                எங்கெல்ஸ் சித்தாந்த துறையின் தனித்த சுயேச்சையைத் தான் மறுக்கிறார். சித்தாந்தம் வரலாற்றின் மீது எவ்வித தாக்கத்தையும் செலுத்தவில்லை என்று மறுப்பதான, முட்டாள் தனமான சித்தாந்திகளின் கூற்றைத் தான் எதிர்க்கிறார். அத்துடன் காரணமும் விளைவும் தவிர்க்க இயலாத எதிர்முனைகள் என்னும் பொதுப்படையான, இயக்கவியல் அல்லாத கருதுகோள், இடைச் செயல் முற்றிலும் கருதப்படாமல் இருப்பது இதற்கு அடிப்படை ஆகும் என்று முட்டாள் தனமான சித்தாந்திகளின்  கூற்றாக எழுதியிருக்கிறார்.

அடித்தளத்தின் மீது மேற்கட்டமைப்பு எதிர்ச்செயல் புரிவதை மார்ச்சியம் மறுக்கவில்லை. இதனை மறுப்பவர்கள் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை  இயக்கவியல் கண்ணோட்டத்தில் அணுகவில்லை என்கிறார் எங்கெல்ஸ். மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்கு கட்டுப்பட்ட வகையில் தனது செயற்பாட்டில் சுதந்திரம் பெற்று அடித்தளத்தில் தாக்கம் செலுத்துவதை மார்க்சியம் மறுத்திடவில்லை.


இயக்கவியலை தளரவிட்டவரைப் பற்றி எங்கெல்ஸ் ஷ்மிட்டுக்கு எழுதிய (அக்டோபர் 27, 1890) கடிதம் எழுதுகிறார்:-
 ...பொருளாதார இயக்கத்தின் அரசியல், இதர பிரதிபலிப்புகள் அந்த இயக்கத்தின் மீது செலுத்துகின்ற ஒவ்வொரு எதிர்த்தாக்கத்தையும் நாங்கள் மறுப்பதாக பார்ட் கருதினால், அவர் வெறும் கற்பனையுடன் போராடுகிறார். அவர் மார்க்ஸ் எழுதிய பதினெட்டாம் புரூமேரைப் பார்த்தால் போதும், அரசியல் போராட்டமும் சம்பவங்களும் - பொருளாதார நிலைமைகளை அவை பொதுப் படையில் சார்ந்திருக்கின்ற நிலைக்குள் என்பது மெய்யே - வகித்த குறிப்பிட்ட பாத்திரத்தை இந்நூல் அநேகமாக முற்றாக ஆராய்கின்றது, அல்லது மூலதனத்தை, உதாரணமாக நாள் வேலை நேரத்தைப் பற்றிய பகுதியைப் படிக்கட்டும், அரசியல் நடவடிக்கையான சட்டம் அத்ததைய பெரும் அழுத்தத்தைக் கொண்டிருக்கிறது, அல்லது முதலாளி வர்க்கத்தின் வரலாற்றைப் பற்றி பகுதியை (அத்தியாயம் xxiv) படிக்கட்டும். அரசியல் அதிகாரம் பொருளாதார ரீதியில் சக்தியில்லாதது என்றால், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் சர்வாதிகாரத்துக்காக நாங்கள் போராடுவது ஏன்? பலாத்காரம் (அதாவது, அரசின் ஆட்சியதிகாரம்) ஒரு பொருளாதாரச் சக்திதானே!
...
இந்தக் கனவான்கள் எல்லோரிடமும் இயக்கவியல் கிடையாது. அவர்கள் எப்பொழுதும் ஓரிடத்தில் காரணத்தையும் இன்னோர் இடத்தில் விளைவையும் பார்க்கிறார்கள். அது ஒன்றுமில்லாத சூக்குமம், அத்தகைய இயக்க மறுப்பியலான எதிர்முனைக் கோடிகள் மெய்யுலகத்தில் நெருக்கடிகளில் மட்டுமே நிலவுகின்றன, அப்பொழுது மொத்த, பரந்தகன்ற நிகழ்வுப் போக்கும் இடைச்செயலின் வடிவத்தில் நடைபெறுகிறது (இடைச்செயலில் ஈடுபடும் சக்திகள் மிகவும் சமமில்லாதவை என்றாலும், இவற்றில் பொருளாதார இயக்கம் இதுவரை மிக வலிமையான, மிகவும் ஆதிமூலமான, மிகவும் தீர்மானகரமான சக்தியாக இருக்கிறது) இங்கே எல்லாமே சார்பு நிலையானது. எதுவுமே தனிமுதலானது அல்ல - இதை அவர்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை.

பொருளாதார இயக்கத்தின் அரசியல், இதர பிரதிபலிப்புகள் அந்த இயக்கத்தின் மீது செலுத்துகின்ற ஒவ்வொரு எதிர்த்தாக்கத்தையும் நாங்கள் மறுப்பதாக கருதினால், அவர் வெறும் கற்பனையுடன் போராடுகிறார் என்று தெளிவாக இக்கடிதத்தில் எங்கெல்ஸ் கூறுயிருக்கிறார்.

மார்க்சியத்தை புரட்டுபவர்கள் கிராம்க்சியின்  பண்பாட்டு மார்க்சியத்தை , மார்க்சியத்தின் அடிப்படைகளில் திணிக்க விரும்புகின்றனர்.

 கிராம்க்சியின் கண்ணோட்டதைப் பார்ப்போம்.

கிராம்க்சியின் கருத்துக்கள் குழப்பம் நிறைந்தாக காட்சியளிக்கிறது, இந்தக் குழப்பம் அவரது முடிவுகளை பாதிக்கிறது.
  ..பொருளாதார சக்திகள் உள்ளடக்கமாவும் கருத்துநிலைகள் வடிவமாகவும் அமைகின்றன. ஆனால் உள்ளடக்கம் என்றும் வடிவம் என்றும் வேறுபடுத்திப் பார்ப்பது விஷயத்தைப் புரிந்து கொள்வதற்காகச் செய்யப்படும் பாகுபாடே அன்றி வேறல்ல.
(கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்   எஸ்.வி.ராஜதுரை வ.கீதா பக். 466)

மார்க்சியம் கூறும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பதை, வெறும் புரிந்து கொள்வதற்கு வகுத்துக்கொண்ட பாகுபாடாக மட்டுமே பார்க்கிறார். பொருளாதார சக்திகள் மேற்கட்டமைப்பை  தீர்மானிக்கிறது என்ற மார்க்சின் கண்டுபிடிப்பை ஏற்றுக்கொள்ளும் நிலையில் கிராம்ஸ்கி இல்லை.
   .. வரலாற்று ரீதியாக, பொருளாயதச் சக்திகளை அவற்றுக்குள்ள வடிவங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. அதுபோல பொருளாயதச் சக்திகளிலிருந்து கருத்துநிலை வடிவங்களைப் பிரித்துப் பார்த்தால் அவை தனிமனிதர்களின் வெறும் கற்பனையாகவே காட்சியளிக்கும்.
(கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்   எஸ்.வி.ராஜதுரை வ.கீதா பக். 466)

      இதில், பொருளாதார சக்திகளை அதற்குரிய வடிவங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது, என்றும் பொருளாதார சக்திகளிலிருந்து கருத்துநிலை வடிவங்களை பிரித்துப் பார்த்தால் அது தனிமனிதர்களின் வெறும் கற்பனையாகவே இருக்கும் என்று கூறும் கிராம்ஸ்கியின் கூற்றில் பொருளாதார சக்திகள் வடிவத்தை (மேற்கட்டமைப்பை) தீர்மானிக்கிறது என்ற மார்க்ஸ் கண்டுபிடிப்பை பற்றி புரிதல் இல்லை. அதனை ஏற்றுக் கொள்ளவும் இல்லை என்பது தான் உண்மை. அடித்தளம் மேற்கட்டமை என்ற இரண்டையும் சமநிலையில வைத்துப் பார்க்கிறார். இந்த மார்க்சியத்திற்கு மாறான கருத்தாக்கத்தில் நிலைகொண்டிருப்பதால், அவரது முடிவுகள் மார்க்சியத்திற்கு எதிராக வெளிப்படுகிறது.

கிராம்சி கூறுகிறார்:
 ..அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பே பாட்டாளி வர்க்கம் தனது மேலாண்மையை வளர்த்துக் கொள்வதும் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு உருவாக்கும் எதிர்கால சோசலிச அரசின் கூறுகளை இப்போதே உருவாக்கத் தொடங்குவதும் அவசியம். இங்குதான் அறிவாளிகளின் பங்கு முக்கியமாகிறது
(கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்   எஸ்.வி.ராஜதுரை வ.கீதா பக். 470)

கிராம்சி மேலே கூறிய  பொருளாயதச் சக்திகளிலிருந்து கருத்துநிலை வடிவங்களைப் பிரித்துப் பார்த்தால் அவை தனிமனிதர்களின் வெறும் கற்பனையாகவே காட்சியளிக்கும்  என்பதற்கு மாறாக, இங்கே அவரே  எதிர்கால சோஷலிச அரசிற்கு தேவைப்படும் வடிவத்தை, இப்போதே உருவாக்க தொடங்கவும், அதற்கான அறிவாளிகளின் பங்கையும் முதன்மை படுத்தவும் செய்கிறார். மேலே கூறிய கிராம்க்சியின் கூற்றின்படி, அரவரது பாட்டாளி வர்க்கத்தின் மேலாண்மை என்பது அறிவாளிகளின் கற்பனையாகவே முடியும் என்பது சந்தேகம் இல்லை.

லெனின் கூறுகிறார்:-
 .. நாம் கற்கனாவாதிகள் அல்ல.
.. புரட்சிக்குப் பிறகு சில காலத்துக்கு பழைய அறநெறியின் சாயல்கள் புதியதன் இளங் குருத்துக்களை விஞ்சி ஆதிக்கம் புரியவே செய்யும் என்பதையும் அறிவோம். குறிப்பிட்ட சிறிது காலத்துக்கு பழையது அதைக் காட்டிலும் பலம் கொண்டதாகவே இருக்கும். இயற்கையிலும் சமூக வாழ்விலும் எப்பொழுதும் இப்படித்தான்                                மாபெரும் தொடக்கம்

இங்கு அறநெறிக்கு கூறியது, பொதுவாக எல்லா கருத்துநிலைகளுக்கும் பொருந்தும்.
கிராம்சியின் மார்க்சியத்திற்கு முரணான சிந்தனை, அவரது கீழ் காணும் முடிவில் அடங்கியிருக்கிறது.
கிராம்சி கூறுகிறார்:
 பொருளாதாரக் கட்டமைப்புக்கும் அரசியல் அமைப்புக்கும் இடையில் எளிமையான, நேரடியான உறவுகள் இல்லை. மக்களின் வரலாறு என்பது பொருளாதார விவரங்களை மட்டும் கொண்டு உருவாக்கப்படவில்லை. அரசியல் அமைப்புக்கான காரணகாரியங்களைக் கண்டிறிவது சிக்கலானது கடினமானதுமாகும். இக்காரண காரியங்களைப் பிரித்துப் பார்ப்பதற்குப் பல்வேறு வகையான சிந்தனைகளையும் நடைமுறைகளையும் ஆழமாகவும் பல்வேறு கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து அறிவது இன்றியமையாதது.. வரலாறு என்பது கணிதம் அல்ல 
(கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்   எஸ்.வி.ராஜதுரை வ.கீதா பக். 13)

கிராம்சியின் சிந்தனைகள், மார்க்ஸ் கண்டுபிடிப்பான, வரலாற்றியல் பொருள்முதல்வாதத்திற்கு எதிரானது என்பது, வெளிப்படையாகவே தெரிந்து விடுகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் சாரமே, வரலாற்றின் வளர்ச்சியை கணித்துக் கண்டறிவதுதானே.

 மார்க்சிய சிந்தனையை நமது சொந்தச் சூழல்களுக்கேற்ப வளர்த்தெடுக்க வேண்டும் என்பது பேராசியர் நா.வா. அவர்களே மாணவர்களுக்கு இட்ட பணியாகும்க என்ற கருத்தும் தமிழகத்தில் காணப்படுகிறது. பேராசியர் நா.வானமாமலை அவர்கள் நமது சொந்தச் சூழல்களுக்கேற்ப மார்க்சிய சிந்தனையை வளர்த்தெடுக்க சொன்னதாக சொல்வதில் உள்ள தொனி, மண்ணிற்கேற்ற மார்க்சியம் என்பது போல் ஒலிக்கிறது. ஆனால் பேராசியர் நா.வா. அவர்களின் கருத்தை 'மார்க்சிய தத்துவம்' என்ற தமது நூலில் தெளிவாக  எழுதியிருக்கிறார்.

"இந்த நூல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் இவர்களுடைய தத்துவக் கொள்கைளை விளக்கும் முயற்சியில் ஒரு சிறிய காணிக்கை. இந்நூலில் பொருள்முதல்வாதம், ஆன்மீகவாதம், இயக்கவியல் முதலிய கருத்துக்களை விளக்க இந்திய தத்துவங்களிலிருந்து உதாரணங்களைத் தந்துள்ளேன். பல நாட்டு அறிஞர்கள் மார்க்சின் தத்துவம்பற்றி எழுதியுள்ளார்கள். ஒரு ஜெர்மன்அறிஞர் எழுதிய புத்தகத்தை நான்படித்தேன். அவர், அவரது நாட்டுத் தொழிலாளிகளுக்குப் புரியும்படி ஜெர்மன் உதாரணங்களைக் கொடுத்து கருத்துக்களை விளக்கியுள்ளார். பூபூலிட்ஸர் என்ற பிரெஞ்சு பேரறிஞர், பிரெஞ்சு தத்துவம், வரலாற்றுத் துறைகளில் இருந்து எடுததுக்காட்டுகள் தந்து மார்க்சிய கருத்தமைப்புகளையும், கருத்துக்களையும் விளக்கியுள்ளார். மாரிஸ்கான்போர்த் என்னும் ஆங்கில மார்க்சிய அறிஞர், ஆங்கில உதாரணங்கள்  தந்து மார்க்சிய தத்துவத்தை விளக்கியுள்ளார். இந்தியாவில் இத்தகைய முயற்சி மிகக் குறைவு, அவ்வாறு முயற்சி செய்கிறவர்கள் மார்க்சியத்தை, வேதாந்தத்திற்குச் சமமாகவே ஆக்கிவிடுகிறார்கள்."

இதில் பேராசிரியர் எச்சரிக்கையோடு தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய தத்துவயியலிருந்து உதாரணங்களைக் கொடுத்து மார்க்சிய தத்துவயியலை தந்துள்ளேன் என்றுதான் கூறுகிறார். இது மட்டுமில்லாது, இதுபோன்ற முயற்சியில் ஈடுபடுபவர்கள் மார்க்சியத்தை வேதாந்தத்திற்குச் சமமாகவே ஆக்கிவிடுகிறார்கள் என்று வருத்தத்தோடு எழுதியுள்ளார். மார்க்சியத்தை வேதாந்தத்திற்கு சமமாக ஆக்கியர்களில் கோவை ஞானி, தோழர் காலன்துறை முதன்மையானவர்கள்.
மார்க்சிய திருத்தல்வாதிகளைப் பற்றி லெனின் கூறிய கருத்தோடு, இப்போதைக்கு முடித்துக்கொள்வோம்:-

"மார்க்சிய போதனை - தற்காலச் சமுதாயத்தின் மிகவும் முன்னேறிய வர்க்கத்துக்கு அறிவொளி ஊட்டி அதை ஒழுங்கமைக்க நேரடியாய் உதவுவதும், இந்த வர்க்கத்தின் முன்னுள்ள கடமைகளைச் சுட்டிக்காட்டுவதும், தற்போதுள்ள அமைப்பு (பொருளாதார வளர்ச்சி காரணமாய்) தவிர்க்க முடியாதபடி வீழ்த்தப்பட்டு அதனிடத்தில் ஒரு புதிய அமைப்புத் தோன்றுமென்பதை நிரூபிப்பதுமான மார்க்சியப் போதனை - அதன் வாழ்வு முழுவதும் ஒவ்வொரு அடியும் போராடியே முன்னேற வேண்டியிருந்துள்ளது என்பதில் வியப்பு ஏதுமில்லை.

..மார்க்சியத்துக்கு முற்பட்ட சோஷலிசம் நொறுக்கப்பட்டுவிட்டது. முன்பு போல தனது சொந்த அடிப்படையிலிருந்து போராடுவதற்குப் பதிலாய், இப்பொழுது அது மார்க்சியத்தின் பொது அடிப்படையிலே நின்று, திருத்தல்வாதமாய்ப் போராட்டத்தை நடத்தி வருகிறது."
மார்க்சியமும் திருத்தல்வாதமும் - லெனின்

Monday 29 July 2013

இந்தியாவில் சாதியம்



சாதிய ஒடுக்குமுறை என்பது இந்தியாவில் நெடுங்காலமாக இருந்துவருகிற வழக்கமாகும். இந்த ஒடுக்குமுறை பிறப்பின் அடிப்படையில் கடைபிடிக்கப்படுவது என்பது இந்தியாவில் மட்டும் காணப்படும் முறையாகும்.  இந்திய சுரண்டலின் ஒரு தனித்தன்மையாய் சாதியம் வெளிப்படுகிறது.

சமூகத்தில் சாதிய அமைப்பை கெட்டிப்படுத்த, உறுதிப்படுத்த மற்றும் பிராமணர்கள் தமது நிலையினை மேல்நிலையில் நிலைநிறுத்த, சாதியத்தைப் பற்றிய விளக்கம் கொடுத்திருக்கின்றனர். சாதியத்தை பிராமணிய இலக்கியம் விளக்குவதில் வெற்றி பெறவில்லை என்பது தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்றோர்களின் கருத்தாகும்.

நமது கருதுகோளான தொல்லினப் பழங்குடி அமைப்பு அரைகுறையாகச் சிதைந்துள்ளது என்பதைச் சாதியமைப்பு விளக்குவதால் இதன் தன்மையை நாம் விளக்க வேண்டியுள்ளது.

இந்திய சாதிய அமைப்பின் விசேடத் தன்மைகளைப் பிராமணிய இலக்கியங்களின், குறிப்பாகத் தர்மசூத்திரங்களின் துணைகொண்டு விளக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  சமகால அறிஞர்களில் தத்தாவும் மற்றவர்களும் சாதிகளின் தோற்றம் பற்றிய பிராமணியக்  கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். உதாரணமாக மனுநீதியில் உள்ளவற்றை ஏற்றுக் கொண்டனர். ஆனால் இத்தகைய  பிராமணியக் கொள்கைகளைச் சார்ந்திருப்பது இன்று பெரும்பாலும் கைவிடப்பட்டுள்ளது. ஏனென்றால் சாதிகள் பற்றிய உண்மை, பிராமணியக் கொள்கையுடன் பொருந்திவரவில்லை.
உலகாயதம் பக்கம் 253-254

பாரம்பரியமான நீதி நூல்களின் ஆசிரியர்களுக்குக்கூட, ஒரு குறிப்பிட்ட குழு சாதியா அல்லது பழங்குடி மக்களா என்று வேறுபடுத்திக் காண இயலவில்லை. இது பாரம்பரியமான வழக்காறுகளில் காணப்படும் செயற்கைத் தன்மை தெரியவருகிறது. இங்கு நாம் சில உதாரணங்களைத் தருவோம். மனு லிச்சாவிகளை தாழ்ந்த கலப்பு சாதி என்று குறிப்பிட்டார். ஆனால் பௌத்த நூல்களின் மூலம் அவர்கள் வஜ்ஜியர் கூட்டமைப்பிலுள்ள ஒரு பழங்குடி மக்கள் குழு என்று தெரியவருகிறது. மேலும் அம்பஸ்தா ஒரு தாழ்ந்த சாதி என்றும் பிராமணத் தந்தைக்கும், வைசியத் தாய்க்கும் பிறந்தவர்கள் என்று அதே மனு குறிப்பிட்டார். ஆனால் மகாபாரதத்தில் அம்பஸ்தா பழங்குடிகள் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
..
பண்டையக்கால எழுத்தாளர்கள்கூட, இக்காலத்திய மக்கள் தொகை கணக்காளர்களைப் போன்று ஒரு குறிப்பிட்ட பின்தங்கிய குழுவை சாதி என்று அழைப்பதா அல்லது பழங்குடி அமைப்பு என்று அழைப்பதா என்பது பற்றித் தெளிவில்லாமலேயே இருந்தனர். இதிலிருந்து நாம் பெறும் முடிவு என்னவென்றால் மிகப் பழங்காலம் தொட்டே சாதிய அமைப்புகள் பழங்குடி அமைப்பின் அடையாளங்களைக் கொண்டிருந்தன என்பதாகும். இதை சாதி, குடி ஆகிய சொற்கள் மாறிமாறிப் பயன்படுத்தப்படும் சூழ்நிலை நிரூபிக்கிறது. வெறும் சொற்கள் பற்றிய விஷயம் என்பதோடு மட்டுமல்லாமல் இந்த ஆதாரம் மிகவும் ஆழமானது. ஏனென்றால் சாதிகளின்அமைப்பைப் பற்றிச் சரியாக ஆராய்ந்தால் அவற்றில் தொல்லினப் பழங்குடி அமைப்பின் அடையாளகள் இருப்பது வெளிப்படுத்துகின்றனது
உலகாயதம் பக்கம் 256-257

நான்கு சாதிகள் பற்றிய கதையை முதலில் உருவாக்கிய கற்பனை நிறைந்தக அந்தப் பிராமணன் யார் என்று உண்மையில் நமக்குத் தெரியாது. ஆனால் கற்பனையான இன உளவியலின்படி இந்த அதிகார வர்க்கத்தினர் சாதிகளைப் பற்றி விளக்குவதும் கற்பனையாகிவிடும்
உலகாயதம் பக்கம் 271

       இந்த நான்கு வர்ண விளக்கம், இந்தியாவில் காணும் சாதியனைத்தையும் விளக்கிவிடவில்லை என்றாலும், காணப்படும் சாதிய அமைப்பிற்கு கடவுள், மத அங்கீகாரம் அளித்திடுகிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட கர்மம் இயற்கையானது என்பதாக தெரிவித்து, பிறர் கர்மத்தை சிறப்பாக செய்திட முடியும் என்றாலும் அதனை  விடுத்து, தனக்குரிய கர்மம் குறையுடையதாயினும் அதனை செய்வதே உயர்ந்தது என்கிறது பகவத் கீதை. சமூக ஒழுங்கிற்காக அமைக்கப்பட்டது சதுர்வர்ணம் என்று கூறும் ஆன்மிகம், இவ்வாறு குறைவுடையதாயினும் ஒதுக்கப்பட்ட கர்மத்தை செய்வதே சிறந்தது என்றுரைப்பதில் சமூகத்திற்கு கிடைப்பது சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதைவிட, பிறப்பால் கர்மங்களை கடைபிடிப்பதற்கே முக்கியத்துவம் கொடுப்பதை அறிந்திடமுடிகிறது.

சமூகத்தில் இருக்கும் சாதியத்தை பற்றி விளக்குவதில் இந்த சதுர்வர்ணக் கோட்பாடு வெற்றிபெறவில்லை என்றாலும், அதனை தக்கவைப்பதில் வெற்றி பெற்றுள்ளது. நாட்டில் காணும் அனைத்து சாதிப்பிரிவுகளின் தோற்றத்தை இந்த இலக்கியங்களால் முழுமையாக விளக்கிவிட முடியவில்லை, கடவுளின் சித்தம் தான் சாதிய இருப்பிற்கு காரணம் என்ற வகையில், இவ்வகையான இலக்கியங்கள் மத அங்கீகாரத்தை அளித்திடுகிறது. இதன் மூலம் சாதியத்தை மீற முடியாத அல்லது மீறக் கூடாத ஒன்றாக சுட்டுகிறது.

சமூக கட்டுகோப்பை காப்பதே  இந்த சாதியத்தின் நோக்கமாகும், அதாவது சமூகத்தில் காணும் ஏற்றத்தாழ்வை மையப்படுத்தி, சமூகத்தில் சுரண்டப்படுவற்கு எதிராக கிளர்ந்து எழும் போராட்டத்தை கட்டுப்படுத்த சாதியம் முயல்கிறது. சமூகத்தில் உடல் உழைப்பிலிருந்து விடுபட்ட சிலர் செழிப்பாக வாழ்வதற்கு, இந்த சாதிய ஒடுக்குமுறை நாட்டில் கையாளப்பட்டு வருகிறது. அனைத்து நாடுகளிலும் ஒடுக்குமுறையைக் காணமுடிகிறது என்பது உண்மையே, ஆனால் பிறப்பால் இந்த ஒடுக்குமுறை அமைந்திருப்பது இந்நாட்டிற்கே உரிய குறிப்பான வடிவமாகும்.

சமூக மாற்றத்தை விரும்புபவர்கள், பிறப்பால் பின்பற்றப்படும் இந்த சாதி முறையின் கொடுமையை பல காலமாக எதிர்த்து வருகின்றனர்.  சாதியை எதிர்ப்பது, மறுப்பது என்பதெல்லாம் சாதியை சமூகத்தில் இருந்து நீக்குவதற்கான கண்ணோட்டமாக, போராட்டமாக இருக்க வேண்டும். 

சாதியின் இருப்பைப் பற்றிய கண்ணோட்டங்கள் பல முரண்களைக் கொண்டதாக இருக்கிறது.
சாதியின் பிடிப்பு அல்லது தாக்கத்தை விட சாதியைப் பற்றிய பலருடைய நினைப்பு மேலோங்கி காணப்படுவதே இன்றைய சாதியைப் பற்றிய புரிதலில் உள்ள பெரும் சிக்கலாகத் தெரிகிறது. சாதியைப் பற்றிய எதிர்ப்பான கருத்தே, இன்று சாதியை வலுப்படுத்துவதாக இருக்கிறது. அதாவது சாதியை பற்றிய அளவுக்கு மிறிய அச்சவுணர்வு, அதன் மீது எதிர்நிலை தாக்கத்தை உண்டாக்கிவிடுகிறது.

இந்திய மார்க்சியவாதிகளிடையே  சாதியை பற்றிய  ஒத்த கருத்து இன்னும் எட்டவில்லை. எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் வகையில், சாதியைப் பற்றிய மார்க்சியப் பார்வையை இன்னும் அமைத்துக் கொள்ளவில்லை என்பது உண்மை. புதுப்புது கருத்துக்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறதே தவிர ஒத்த கருத்தை நெருங்கவில்லை. முடிவில், இது சாதியை ஏற்றுக் கொண்டவர்களுக்கு உகந்த நிலைமை ஏற்படுத்தித் தருகிறது, அதாவது சாதி என்பது நிலையான ஒன்று என்ற இவர்களின் கருத்தை நிலைப்படுத்தும் வகையில் நிலைமை இருக்கிறது.

சாதியின் தோற்றத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியான கருத்தை உருவாக்கினால், சாதியின் இருப்பு, மறைவு பற்றிய கண்ணோட்டத்தை அமைத்துக் கொள்வது எளிதாகிவிடும்.

சாதியைப் பற்றிய ஆய்வை பல்வேறு மார்க்சிய அறிஞர்கள் பல கோணங்களில் செய்திருக்கின்றனர். அதனை முதலில் தொகுத்துப் பார்ப்போம்.

இனக்குழு சமூகத்தின் சிதைவு முழுமையாக நடைபெறாமை என்னும் நிலைமையினால் தோன்றிய கூறுகளை, நிலவுடைமை உற்பத்தி முறை உறுதிப்படுத்தி சாதியம் தோன்றியதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர்.  இனக்குழுச் சமூகத்தன் வளர்ச்சி நிலையில் ஏற்றத்தாழ்வுகளை சமன்படுத்தவும் உபரி உற்பத்தியை உறிஞ்சும் வடிவமாகவும் சாதி தோன்றியிருக்கும் என்கின்றனர். இதனை மறுத்த சில அறிஞர்கள் இந்தப் போக்கு எந்திரத்தனமான பொருள்முதல்வாதமாக உள்ளது என்று விமர்சித்தனர்.

அதாவது சாதியத்தை நிலவுடைமை சமூகத்தன் தோற்றமாக கருதுவதால், நிலவுடைமையின் உற்பத்தி முறை மாற்றத்தோடு சாதியமும் மறைந்து போகும் என்பது இவர்களுக்கு எந்திரத்தனமாகப் படுகிறது.

மேற்கட்டுமானத்தின் தன்மை அடித்தளத்தை பாதிக்கும் என்பது மட்டுமல்ல, தீர்மானிக்கும் தன்மையையும் பெற்றிருக்கிறது என்பது இவர்களது முடிவு. அத்துடன், சாதியத்தின் எல்லாத் தன்மைகளையும், இந்த அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தால் விளக்கிட முடியாது.  பிறப்பால் அமைந்துள்ள சாதியத்தை வேலைப்பிரிவினை என்ற வடிவத்திற்குள் கொண்டுவந்து, சாதியத்தை மேற்கட்டமைப்பு என்ற அடிப்படையில் விளங்கிக் கொள்ள முடியாது என்பது இவர்களின் கருத்து.

ஐரோப்பிய நிலவுடைமை முறையில் தீர்மானகரமானத் தன்மையாக வர்க்கம் அமைந்துள்ளது, இந்திய நிலவுடைமைச் சமூகத்தில் மேற்கட்டுமானமாகச் சாதியம் அமைந்துள்ளது என்கின்றனர் சிலர். இத்துடன் நில்லாது  மேலும் இந்திய நிலவுடைமைச் சமூகத்தில் சாதியம் மேற்கட்டமைப்பாக அமையவில்லை அதற்கு மாறாக அடித்தளமாக அமைந்துள்ளது என்ற விளக்கம் கொடுப்பவர்களும் உண்டு.

ரத்தஉறவுகள் ஆளுமை செலுத்தும் சமூகம் வர்க்க மற்ற சமூகமாகும். இச் சமூகத்தில் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டை பயன்படுத்தல் சரியன்று.  இனக்குழுச் சமூகத்தின் சிதைவின் கூறுகளின் அடிப்படையில் சாதியம் தோற்றம் பெற்றதால், அதாவது ரத்த உறவின் அடிப்படையில் சாதியம் அமைந்துள்ளதால், இதனை அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது என்பது சில அறிஞர்களின் கருத்து.

இதற்கு நேர் மாறாக, பிறப்பின் வழியில் அமைந்த வேலைப் பிரிவினை அடிப்படையில் உருவான உற்பத்தி உறவுகள், சாதிய உற்பத்தி உறவாக அமைந்துள்ளதால், சாதியத்தை அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற இரண்டிலும் இடம்பெறுவதாக சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இரண்டு தளங்களிலும் சாதியம் இடம்பெறுவதால், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது, மேற்கட்டமைப்பு சார்புநிலை சுதந்திரத்தோடு செயற்பட்டு அடித்தளத்தை தாக்குகிறது என்ற வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பார்வை சாதியத்தை புரிந்து கொள்வதற்கு பயன்படுத்த முடியாது என்ற முடிவிற்கு சில  அறிஞர்கள் வருகின்றனர்.

இவ்வளவு குழுப்பங்களின் முடிவில் மார்க்சியப் பார்வைக்கு சாதியம் எட்டாது என்பதான முடிவே மேலோங்கியிருக்கிறது. மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தால்  சமூக வளர்க்சியை அறிந்து கொள்ள முடிகிறது என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்களை நாம் வலுவந்தப்படுத்த முடியாது.

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பது ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாக கருதுகிறது. இதனை முதலில் ஏற்றுக் கொண்டவர்களே மார்க்சியவாதிகளாவர். முதலாளித்துவ சமூகத்திற்கு முன்புள்ள இந்திய சமூகம், ஐரோப்பாவைப் போல் வர்க்கச் சமூகமாக காணப்படவில்லை, சாதிய சமூகமாக இருந்தது என்ற புரிதலில் மட்டும், வீழ்துகிடந்தால் கண்டிப்பாக மார்க்சிய அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தியாவில் காணும் சாதியம் என்பது இந்திய வர்க்கத்தின் தனித்த வடிவமாகும். அதாவது சாதியத்தை வர்க்கமாக பார்க்கும் போது மார்க்சியம் நமக்குப் பயன்படும்.

மார்க்சின் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற வழிகாட்டுதலை, தவறாக விளக்கியும், அதனைப் பரப்பியும் வருகின்றனர். அதாவது அடித்தளம் மேற்கட்டுமானத்தில் வினையாற்றுவதைப் போலவே, மேற்கட்டமைப்பும் அடித்தளத்தின் மீது வினைபுரிகிறது அதனால், அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பதை பரஸ்பர வினையாற்றுகிறது என்பதாக விளக்குகின்றனர். இந்த தவறான புரிதல் சாதியம் பற்றிய புரிதலில் இவர்களை தடுமாற வைக்கிறது. மார்க்சிய அடிப்படைகளைவிட்டு இவர்களை விலகச் செய்கிறது.

அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது, மேற்கட்டமைப்பு சார்புநிலை சுதந்திரத்தோடு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது என்பதே மார்க்ஸ் வகுத்தளித்த வழிமுறை. அடித்தளமும் மேற்கட்டமைப்பும் சம அளவில் வினையாற்றுகிறது, என்றால் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்று மார்க்ஸ் பிரித்திருக்கத் தேவையில்லை, இடது, வலது என்று பிரித்திருக்கலாம், இடது வலதை நிர்ணயிக்கிறது, சிலநேரங்களில் வலது இடதை நிர்ணயிக்கிறது என்று கூறுவதற்கு ஏதுவாக இருக்கும்.

அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயித்தால், அது சமூக வாழ்நிலையே சமூக உணர்வை நிர்ணயிக்கிறது என்று அறிய முடிகிறது. மேற்கட்டமைப்பு அடித்தளத்தை நிர்ணயிக்கிறது என்றால், சமூக உணர்வுநிலையே சமூக வாழ்நிலையை நிர்ணயிக்கிறது என்று பொருள்கொள்ள வேண்டும்.

இவ்விரண்டும் வர்க்கச் சமூகத்தில் காணப்படும் சிந்தனைப் போக்கு. இரண்டும் சரிசமமாக வினைபுரியும் என்பது வர்க்கம் மறைந்த சமூகத்திற்கு உரிய கோட்பாடாகும். அதாவது சோசலிச சமூகத்தைக் கடந்து கம்யூனிச சமூகத்தில் நுழையும் போது அடித்தளமும் மேற்கட்டமைப்பும் இணைந்து செயல்படும், அப்போது மதம், அரசு போன்ற வர்க்க ஒடுக்குமுறை கருவிகள் மறைந்து உலரத் தொடங்கும்.

கம்யூனிச சமூகத்திற்குரிய பரஸ்பர வினைபுரிதல் என்பதை, வர்க்கச் சமூகத்தில் கடைபிடித்தால், சமூக வாழ்நிலையே, சமூக உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது என்ற கோட்பாட்டிற்கு மாறாக, மார்க்ஸ் காலத்திற்கு முன்பு காணப்பட்ட வரலாற்றியல் சிந்தனையான, சமூக உணர்வுநிலையே சமூக வாழ்நிலையை தீர்மானிக்கிறது என்ற கண்ணோட்டத்திற்கு சென்றுவிடுவோம். அவ்வாறு செல்லும் போது, சமூகத்தை உருவாக்குவது, அரசு, ஆட்சியாளர், தளபதி, தலைசிறந்த மாமேதை, இத்துடன் போர் நடவடிக்கை, தத்துவப் போராட்டம் போன்றவற்றால் சமூகம் நிலைநாட்டப்படுகிறது என்ற பழைய முடிவிற்கே செல்லவேண்டிவரும். இது அப்பட்டமான கருத்துமுதல்வாதமாகும், சமூக வாழ்நிலையே சமூகஉணர்வை தீர்மானிக்கிறது என்பதே பொருள்முதல்வாதச் சிந்தனையாகும்.

அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றிய மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்தைப் பார்ப்போம்.
மார்க்ஸ் கூறுகிறார்:-
இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம். மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும்  சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.
....
பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் - சுருக்கமாகச் சொல்வதென்றால்  சித்தாந்தத் துறைகளில் - இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து  கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.
அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு  முன்னுரை

எங்கெல்ஸ்  கூறினார்:-
வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப் போராட்டங்களும், அவை அரசியல், மத, தத்துவஞான அல்லது வேறு ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் அவை அநேகமாக சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே, இந்த வர்க்கங்கள் இருப்பதும் அதன் காரணமாக இவற்றுக்கிடையே ஏற்படுகின்ற மோதல்களும் கூட அவற்றின் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்பது அந்த விதியாகும். இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றம் பற்றிய விதிக்கு உள்ள அதே முக்கியத்துவம் வரலாற்றில் இந்த விதிக்கு உண்டு.
லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் - எங்கெல்சின் முன்னுரை

பொருளாதார வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்தல், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருத்தாக்கம், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளாச்சியடைகின்றன, ஆகவே அதன் ஔயிலிக் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.
மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது எங்கெல்ஸ் நிகழ்த்திய உரை

அரசியல், சட்டவியல், தத்துவஞான, சமய, இலக்கிய, கலை, இதர வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, ஆனால் இவை அனைத்தும், ஒன்றின் மீது ஒன்றும், பொருளாதார அடிப்படையின் மீதும் எதிர்ச்செயல் புரிகின்றன. மற்றவை ஒவ்வொன்றும் செயலற்ற விளைவை        மட்டுமே கொண்டிருக்கின்றன, பொருளாதார நிலைமை காரணமாக, தனியாக சுறுசுறுப்புடன் செயல் புரிகிறது என்பதல்ல. பொருளாதார அவசியத்தின் அடிப்படையில் - அது இறுதியில் எப்பொழுதும் தன்னை வலியுறுத்துகிறது - இடைச்செயல் நடைபெறுகிறது.
-எங்கெல்ஸ் வொ.போர்கியுசுக்கு எழுதிய கடிதம், லண்டன், ஜனவரி 25, 1894

மேலே காணும் சிறிய பகுதியைக் கொண்டே, மார்க்சிய முதலாசியர்களின் வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை அறிந்து கொள்ள முடியும். இக்கண்ணோட்டத்தை முதலில் ஏற்றுக் கொண்டவர்களால் தான் அனைத்து துறைகளிலும் இதனைப் பின்பற்றி மார்க்சிய வழியில் ஆராய்ந்து முடிவெடுக்க முடியும். இதில் சந்தேகம் கொண்டவர்களால், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை முழுமையாக கடைபிடிக்க முடியாமல் போய்விடும்.

மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்தைத் தொகுத்துப் பார்ப்போம்.

மனிதர்கள் தமது வாழ்க்கைக்காக உற்பத்தி செய்திடும் போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் மனிதர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து புறநிலையாக இருப்பவையாகும்.  இதுவரை வளர்ச்சியடைந்துள்ள  பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும். இந்த அடித்தளத்தின் மீது சட்டம், அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது. இதற்கு பொருத்தமாக சமூக உணர்வின் வடிவங்கள் தோன்றுகின்றன.

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை,  அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.. இந்த மாற்றம் விரைவிலோ அல்லது சற்றுதாமதமாகவோ நடைபெறலாம். மனிதர்களின் சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.  இவ்வகையில் தான் சமூக உணர்வுநிலையின் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு மார்க்ஸ் தமது கண்டுபிடிப்பான வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை முன்வைக்கிறார்.

வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ் என்று எங்கெல்ஸ் தெரிவிக்கிறார். மேலும் கூறுகிறார், வரலாற்றில் நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் அவை ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே. வர்க்க மோதல்கள் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன, என்று வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் விதியை குறிப்பிடுகிறார். இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றம் பற்றிய விதிக்கு உள்ள அதே முக்கியத்துவம் வரலாற்றில் இந்த விதிக்கு உண்டு என்கிறார் எங்கெல்ஸ்.

பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருத்தாக்கம், கலை மற்றும் மதக் கருத்துக்கள் வளாச்சியடைகின்றன, ஆகவே அதன் ஔயிலிக் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது என்கிறார் எங்கெல்ஸ்.

எங்கெல்ஸ் அரசியல், சட்டவியல், தத்துவஞான, சமய, இலக்கிய, கலை போன்றவை பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, ஆனால் இவை அனைத்தும், ஒன்றின் மீது ஒன்றும், பொருளாதார அடிப்படையின் மீதும் எதிர்ச்செயல் புரிகின்றன. பொருளாதார நிலைமை காரணமாக, தனியாக சுறுசுறுப்புடன் செயல் புரிகிறது என்பதல்ல. பொருளாதார அவசியத்தின் அடிப்படையில்        இடைச்செயல் நடைபெறுகிறது, என்று மேற்கட்டமைப்பு சார்புநிலையான சுதந்திரத்தோடு அடித்தளத்தின் மீது எதிர்செயல் புரிகிறது என்கிறார்.

சமூகம் வர்க்கமாக பிளவுபட்டுள்ளதை ஏற்றுக் கொண்டால், மார்க்சியத்தின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் சமூகப் போக்குகளை புரிந்து, அறிந்து, அதன்வழியில் மாற்றத்தை கொண்டுவர முடியும்.  ஒப்புக் கொள்ளாதவர்கள் அவர்களின் சித்தாந்தத்தின் படி செல்லட்டும், ஒப்புக் கொண்டவர்கள் சாதியம் பற்றி ஆய்வில் மார்க்சியத்தை பின்பற்றுவோம்.

மார்க்ஸ் சாதியத்தை உற்பத்தி முறையோடு இணைத்தே ஆராய்கிறார்.

முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை உறைந்து இறுகச் செய்தோ, குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் காரணமாய் சாதி அமைப்புக்கு ஒவ்வாத முறையில் வேறுபாடுறும் தன்மை தனிஆளிடம் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்தோ வந்த போக்கிற்கு ஒத்ததே ஆகும். தாவரங்களும் மிருகங்களும் இனங்களாகவும் ராசிகளாகவும் வகைபிரிவதை முறைப்படுத்துகிற அதே இயற்கை விதியின் செயலிலிருந்தே, சாதிகளும் கைவினைச் சங்கங்களும் பிறக்கின்றன, ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்ததும் சாதி மூலமான பரம்பரைத் தன்மையும் கைவினைச் சங்கம் மூலமான பிரத்தியேகத் தன்மையும் சமுதாயச் சட்டத்தின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன என்பதே
மூலதனம் I பக்கம் 461

       மார்க்ஸ் மாற்றமின்றி காணப்படும் வேலைப் பிரிவினை பாரம்பரியமாகத் தொழில் புரிவதை சாதியத்தோடு இணைத்துக் காண்கிறார்.

சாதியத்தை உற்பத்தி முறையோடு இணைத்து புரிந்து கொள்ளும் போது, சாதியம் நிலவுடைமைச் சமூகத்தில் உறுதிப்படுத்தப்பட்ட வடிவமாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறும்போது சாதியம் என்பது, நிலவுடைமை உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்படும் போது அதன் வடிவமான சாதியமும் மறைந்து போகும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இதன் மூலம் பொருளாதாரப் போராட்டத்தை மட்டுமே செய்திட வேண்டும், சாதியத்தை அதன் அழிவுவரை அல்லது அதன் மறைவுவரை பொருத்திக்க வேண்டும் என்று பொருள்கொள்ளப்பட்டால் அது பெரும் தவறாகும்.  சாதிப் போராட்டத்தை பொருளாதாரப் போராட்டத்துடன் உள்ளடங்கியதாக புரிந்து கொண்டு சாதியத்தை எதிர்த்து போராட வேண்டும் என்பது தான் மார்க்சிய வழிகாட்டுதலாகும்.

நிலவுடைமை மேலோங்கிய இடத்திலும் அதன் கூறுகள் இன்னும் உயிரோட்டத்துடன் காணும் இடங்களில் சாதியப் போராட்டம் பொருளாதாரப் போராட்டத்துடன் இணைந்தே நடத்தப்பட வேண்டும். வளர்ச்சியடைந்த நகர்புறங்களில் முதலாளித்துவத் தன்மைகள் தோன்றிய இடங்களில் சாதியப் போராட்டம் ஒரு கருத்தியல் போராட்டமாக, அதாவது பொருளாயத உள்ளடத்திலிருந்து விடுபட்டும் சிந்தனையில் சாதியம் செயற்படும் போது இங்கு சித்தாந்தப் போராட்டமாக நடத்தப்பட வேண்டும்.

நாட்டில் முதலாளித்துவம் அனைத்துத் துறைகளில் வளர்ச்சியடையும் போது சாதியம் உள்ளடக்கத்திற்கான வடிவமாக காணப்படாமல், மீதமிச்சமாக உதிர வேண்டிய நிலையாக மாறிவிடும். இறுதியில் கருத்தியல் போராட்டமாக நடத்தப்பட்டு சாதியம் உலர்ந்து உதிரும்.

மதம் எவ்வாறு வர்க்கத்தோடு தோன்றியதோ அதே போல் சாதியமும் வர்க்கத்தோடு தோன்றியது, அதனால் சமூகத்தில் வர்க்கம் மறையும் போதுதான் மதம் மறையும் என்பது போலவே சாதியமும் வர்க்கத்தின் மறைவோடுதான் மறைந்து போகும் என்ற கருத்து சரியானதன்று. இதனை விளங்கிக் கொள்வோம்.

சாதியத்தை உற்பத்தி உறவோடு புரிந்து கொள்ளும் போது, முதலாளித்துவ வளர்ச்சியில் சாதியத்தின் வடிவம் தேவையற்றதாகும். ஆனால் கருத்தியலாக  சாதியத்தை மேலும் நீடிக்கிறது என்று சொல்லாம், அதற்கெதிரான போராட்டம் கருத்தியலான மீதமிச்சத்துடனான போராட்டமாகவே இருக்கும்.

ஒரு முதலாளி தன்வர்க்க நலனை காப்பதற்கு சாதியத்தை பயன்படுத்தினால், சாதியம் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு தேவையான ஒன்று என்று ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு குறிப்பிட்ட சாதியைக் கொண்ட முதலாளி, வர்க்கப் போராட்டத்தை மட்டுப்படுத்துவதற்கு தொழிலாளர்களிடையே  உள்ள தம் சாதியர்களை தனியே பிரித்து, தொழிலாளர்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு சாதியத்தை பயன்படுத்தலாம்.

சாதியத்தை காப்பதால் அல்லது துணைபோவதால் தொழிலாளியின் நலன்கள் தான் பாதிக்குள்ளாகிறது என்பதை சாதியத்திற்கு ஆட்பட்ட தொழிலாளிக்கு உணர்த்த வேண்டும். முதலாளியின் நலன்கள் வேறு, தொழிலாளர்களின் நலன்கள் வேறு. இவைகளுக்கு அப்பாற்பட்டது சாதிய நலன்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.  சாதிய நலன்களைவிட வர்க்க நலன்கள் வாழ்வியல் நலன்களின் அடிப்படையில் தோன்றுவதால் நிச்சயமாக வெல்லும்.


சாதிய நலன்களைவிட வர்க்க நலன் முனைப்போடே செயல்படும். சாதிய நலன்களைவிட வர்க்க நலனே வாழ்க்கைக்கு பயன்படும். வர்க்க நலன் வாழ்வியல் நலன் என்பதை அறியும் போது சாதிய நலன் வலுவிழக்கும்.

சாதியத்திற்கு ஆட்பட்ட தொழிலாளர்களின் போக்கை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி போராட வேண்டும். தொழிலாளர்களின் வர்க்க உணர்வை நிலைநிறுத்த பாடுபட வேண்டும். இதனைப் பற்றி முனைவர் கோ.கேசவன் கூறுகிறார்:-
வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் இன்றைய காலகட்டத்தில் சமூக உற்பத்தி உறவு அளவில் மிகவும் முற்போக்கான சக்திகளாக விளங்கும் ஆலைத் தொழிலாளியாக இருப்பினும் அவரது நேச சக்தியான விவசாயி வர்க்கமாக இருப்பினும், அவர்களிடத்தில் ஆதிக்க சாதிய மனோபாவம் குடிகொண்டி இருப்பின், அது பிற்போக்கான உணர்வே. அது பஞ்சமரில் உருவான அடிப்படை வர்க்கத்தையும் இணைத்துச் செல்வதற்கான மாபெரும் தடை. அவர்கள் எந்த அளவுக்கு சாதிய மனோபாவத்தைக் கலைத்துக் கொள்கின்றனரோ அந்த அளவுக்கே வர்க்க உணர்வு பெற இயலும். சொந்த வர்க்கத்தோடு இணைந்து சொந்த சாதியின் ஆதிக்க வர்க்கத்தை எதிர்த்துப் போராட இயலும்.”
 சாதியம் (பக்கம் 119)

       இந்திய சமூகத்தை சாதிய சமூகமாக புரிந்து கொள்வதா? வர்க்க சமூகமாக புரிந்து கொள்வதா? என்ற கேள்விக்கு, வர்க்கச் சமூகம் என்பதே பதிலாகும்.  இந்திய தனித்தன்மையான உற்பத்தி உறவின் அடிப்படையிலான வர்க்கம் சாதியமாக வடிவெடுத்துள்ளது.  நிலவுடைமைச் சமூகத்தை அதன் வர்க்கத்தின் வடிவ அடிப்படையில் சாதிய சமூகம் என்றழைத்தால் அது பெரிய குற்றமாகாது, ஆனால் குறிப்பிட்ட சாதிக்குள் முதலாளிகளாக, தொழிலாளிகளாக பிரிந்து வர்க்கமாக மாறியபின்பும், முற்ற முழுக்க இந்திய சமூகத்தை சாதிய சமூகம் என்றழைக்க முடியாது. ஏன் என்றால் சாதிக்குள் வர்க்கம் ஏற்பட்டுள்ள நிலையில், முதலாளித்துவ அமைப்புகளில் வர்க்கப் போராட்டத்தை நேரடியாக முழுமையாக நடத்தப்பட வேண்டியதாகும். தொழிலாளர்களிடம் காணப்படும் மீதமிச்ச சாதியக் கூறுகளை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து அழித்துவிட முடியும்.

நகர்புறங்களில் தாழ்த்தப்பட்ட சாதியில் மிகச்சிலர் இன்று முன்னேறி முதலாளியாகவோ, முதலாளித்துவ அறிவுத்துறை பணியினை செய்பவராகவோ, மாறுவதற்கு எவ்வளவோ வாய்ப்புள்ளது. இதனை புரிந்து கொண்டு நகர்புறத்து சமூகப் போராட்டம் என்பது, மீதமிச்சமாகத் தென்படும் சாதியக் கூறுகளை போக்குவதன் கூடிய வர்க்கப் போராட்டமாகத் தான் நடத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் இன்னும் நிலவுடைமை சமூகத்தை முழுமையாக கடந்துவிடவில்லை, இன்றைய அரசியல் போராட்டம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாகத் தான் நடத்தப்பட வேண்டியுள்ளது.  இன்னிலையில் நிலவுடைமைப்பகுதியில் சாதியத்துடன் கூடிய பொருளாதாரப் போராட்டமாகவும், முதலாளித்துவப் பகுதியில் சாதியக் கூறுகளை எதிர்ப்புடன் கூடிய, வர்க்கப் போராட்டமாகவும் நடத்தப்பட வேண்டும்.