Wednesday 1 May 2013

தந்தை பெரியாரின் நாக்திகமும் மார்க்சிய நாத்திகமும்

[இங்கு பயன்படுத்தும் பெரியாரின் படைப்புகள் முனைவர் மா.நன்னன் தொகுத்த  பெரியார் கணினி  என்ற நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. வெளியீடு ஞாயிறு பதிப்பகம் 11, முதல் தெரு, அரங்கராசபுரம், சைதாப்பேட்டை, சென்னை 600015.]
தமிழகத்தில் தந்தை பெரியார் பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டியவராவார். கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது, வெகு காலமாக நடைபெற்று வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பக் கூடாது. அனேகம்பேர் பின்பற்றுகிறார் என்பதனால் அதை நம்பிவிடக் கூடாது. எந்த விசயமானாலும் நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திரச் சக்தி என்றோ நம்பிவிடக் கூடாது. (33.4.1)* என்று எதனையும் பகுத்தறிவோடு சிந்திக்க வைத்தவர் தந்தை பெரியார்.

பெரியார் எதனையும் புத்தியைக் கொண்டு தான்முடிவெடுக்க வேண்டும், மற்ற சிறப்புகளின் அடிப்படையில் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறார்.  இது மட்டுமல்லாது யாருக்கும் எசமான் கடவுளோ, மதவாதிகளோ அல்ல. அறிவுதான் எசமானன். தான் கூறியதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் பகுத்தறிவிற்குச் சரியெனப் பட்டதை மட்டுமே ஏற்றுக் கொண்டு மற்றவற்றைத் தள்ளிவிடும்படி பெரியார் வலியுறுத்துகிறார். (33.4.22)

நா.வானமாமலை  பெரியார் நூற்றாண்டின்போது பெரியாரின் நாத்திகவாதத்தை ஆராய்ந்து, அதன் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து, பெரியாரின் நாத்திகக் கருத்துகளை மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் கற்று, அறிவியல் அறிவின் முடிவுகளோடு இணைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
“1, இந்தியத் தத்துவங்கள் அனைத்துமே கடவுள் நம்பிக்கையைப் போதிக்கவில்லை. மாறாக, மிகப் பெரும் பான்மையானவை கடவுளை மறுக்கின்றன.

2, நமது பண்டைய நாத்திகவாதிகளின் பலவீனங்களை, மார்க்சீயம்தான் நிவர்த்தி செய்து, அவர்களது நாத்திகவாதத்தை தருக்க நிலையில் இருந்து, கீழே கொணர்ந்து வாழ்க்கை நிலையோடுள்ள  தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறது.

3, இன்று, மார்க்சீயம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில்கூட, நமது பண்டைய நாத்திகவாதிகளின் கடவுள் மறுப்பு வாதங்கள், பயனுள்ள தர்க்க வாதங்களாகவே உள்ளன. அவற்றை முற்போக்காளர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

மேற்கூறிய மரபும் அதன் தற்கால வளர்ச்சியான மார்க்சீயமும் வளர்ந்துள்ள நாத்திகத்தின் அடிப்படையில் பெரியாரின் நாத்திகவாதத்தை மதிப்பிட வேண்டும். மார்க்சீயவாதிகள் பெரியாரின் நாத்திகத்தை, சமூக வளர்ச்சிப்போக்கின் வெளிப்பாடாக ஆராய வேண்டும். இத்தகைய ஆராய்ச்சி இன்னும் துவங்கவில்லை.

ஆராய்ச்சி துவங்கு முன்னரே, முடிவுகளுக்கு வருவது மார்க்சீயவாதிகளின் மரபல்ல. ஆயினும் சில மேற்போக்கான கருத்துக்களை இங்குக் கூறலாம். பெரியார்  முரணற்ற நாத்திகர்.  கடவுள் இல்லை. இல்லை. கடவுளை நம்புபவன் முட்டாள்  என்ற அவருடைய முழக்கங்களை, அவருடைய சிலைகளின்கீழ் செதுக்கி வைத்துள்ளார்கள். அவருடைய சுயமரியாதை இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள் கடவுளை ஒப்புக்கொண்டு நாத்திகத்தை கைவிட்டார்கள்.  ஒன்றே குலம், ஒருவனே தேவன்  என்ற முழக்கத்தை அரசியல் சௌகரியத்துக்காக மேற்கொண்டார்கள்.

பெரியார் கடவுள் எதிர்ப்போடு, மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் பிரச்சாரம் செய்தார். தீமிதியின் தெய்வத் தன்மையை மறுத்து, எவ்வித விரதங்களும் இல்லாமல், கடவுள் இல்லை என்று முழங்கிக் கொண்டு அவருடைய மாணவர்கள் தீமிதி நடத்தினார்கள்.

கடவுளை, சமூகமும், அரசும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையில் படைத்தது என்ற மார்க்ஸீய சிந்தனையை அறியாமல் அவர் சமூகப் படைப்பின் ஒரு பிரிவினரான பிராம்மணரையே, கடவுளைப் படைத்தவர்களாகவும், தங்கள் பிழைப்புக்கு தாங்கள் படைத்த மாயையான கடவுளையே பயன்படுத்தினார்கள் என்றும் கூறினார்.

பிராம்மணரையும், சூத்திரரையும் சமூக வரலாறு படைத்தது என்ற உண்மையை அவர் அறியவில்லை.

அவருடைய நாத்திகம் பொது அறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. அதில் விஞ்ஞானக் கொள்கைகளை அவர் பயன்படுத்தவில்லை. எனவே அது கரடுமுரடாக இருந்தது.

அவருடைய காலத்தில் மார்க்சீயத்தைக் கற்றுணர வாய்ப்பு இருந்தது. ஆனால் அவருடைய நாத்திகத்தில் மார்க்சீயப் பொருள்முதல்வாதத்தின் தாக்கம் எதுவும் இல்லை. பண்டையப் பொருள்முதல்வாதிகள் வாதங்களின் சிலவற்றை அவர் பயன்படுத்திக் கொண்டார்.

அவருடைய ்நூற்றாண்டு விழாவில் நாத்திக சிந்தனையை மிகவும் துணிச்சலோடு மக்களிடையே பிரச்சாரம் செய்தார் என்பதை நினைவு கொள்வோம். அவருடைய பிரசாரம் பல நாத்திகர்களை உருவாக்கிற்று என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் வளர்ந்துவரும் அறிவியல் உண்மைகள், அவற்றின் அடிப்படையில் உருவாகும் அறிவியல் கொள்கைகள், இவ்வறிவியல் கொள்கைகளைக் கிரகித்துக் கொண்டு வளர்ச்சி பெற்றுவரும் மார்க்சீய தத்துவம், இவற்றினின்று அவருடைய நாத்திகம் விலகியே நிற்கிறது. இதுவே அதனுடைய பலவீனம்.

தமிழக மார்க்சீயவாதிகள், முற்போக்காளர்கள் அவருடைய் நூற்றாண்டின்போது, அவருடைய நாத்திகவாதத்தை ஆராய்ந்து, அதன் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து, பெரியாரின் நாத்திகக் கருத்துக்களை மார்கசீயத் தத்துவத்தின் அடிப்படையில் கற்று, அறிவியல் அறிவின் முடிவுகளோடு இணைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
                                                                       இ்ந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்

நா.வானமாமலை கூறிய ஆலோசனையை முழுமையாகத் தமிழக மார்க்சியவாதிகள் செய்திடவில்லை. அதுமட்டுமல்லாது பெரியாரைப்பற்றி பல முரண்பட்ட கருத்துகள் தமிழக மார்க்சியவாதிகளிடம் நிலவுகிறது. இதனைப் போக்க வேண்டும் என்றால் நா.வானமாமலை கூறியதைப்போல் மார்க்சிய பார்வையில் பெரியாரை முழுமையாக அணுக வேண்டிய கட்டாயம் நமக்கிருக்கிறது. இதற்கான இடம் இதுவல்ல  என்றாலும், இதனை இங்கு தொடங்கிவைக்கலாம்.

பெரியார் மூடநம்பிக்கைகளைக் களைவதற்கும், சாதி வேற்றுமைகளை நீக்குவதற்கும், பெண்விடுதலைக்கும் போராடியவர்.  சுயமரியாதை, பகுத்தறிவுவாதம் என்ற கோட்பாடுகளைக் கொண்டு தமது கண்ணோட்டத்தை வகுத்துக் கொண்டவர்.

மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும். மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடப் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெறவேண்டும் என்பதினை வலியுறுத்தி, தமது நீண்டகால வாழக்்கை முழுவதும் சோர்வில்லாமல் போராடியவர். இறுதிவரை தமது வாழ்க்கையைப் போராட்ட களமாகவே அமைத்துக் கொண்டவர் பெரியார்.

பகுத்தறிவு, கடவுள், மதம், ஆத்மா போன்றவற்றைப் பற்றி பெரியார் கூறுவதைப் பார்ப்போம்.

மனிதன் தன்னைக் காப்பாற்ற மட்டும் போதிய அறிவை அடைந்திருப்பதோடு அதற்கும் மேம்பட்ட அறிவையும் அடைந்திருக்கிறான். அப்படி அதிகமாக அடைந்துள்ள அறிவுதான் பகுத்தறிவு. (33.1.2)

பகுத்தறிவு என்பது யாவற்றையும்விட மேலானது.  சிந்தித்தும், ஆழ்ந்து யோசித்தும், ஆராய்ந்தும், அனுபவத்தை யொட்டியும், சூழ்நிலைக்கேற்ற வண்ணமும் அப்போதைக்கப்போது தன் வாழ்க்கையின் நிலையை மாற்றி அமைத்துக் கொள்வதும் வாழ்க்கையின் நலனுக் கேற்றவாறு ஒவ்வொரு புதிய சாதனங்களையும் அமைத்துக் கொள்வதும் இதன் சம்பந்தப்பட்டதாகும். (33.1.3)

சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு. (33.1.19)

கடவுள் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்குத் தெளிவேற்படுத்தி, அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாகவும் மோட்சம், நரகம் ஆகிய கற்பனைச் சொற்களுக்குப் பயப்படாதவர்களாகவும் ஆக்குவதே பகுத்தறிவுவாதிகளின் முக்கியப் பணியாகும். (33.1.16)

மனிதனுக்கு நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு, அறிவின் வழியில் சென்று சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையிலிருந்து மனிதத் தன்மை அடைமுடியும் (33.4.24)

ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும் சரீரம், உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே, சரீரம் உருவம் இல்லாததற்கு நாம் பார்ப்பனரிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்? “(43.2.2)

ஆத்மா என்பது ஒரு பொய். மதக் கற்பனைக்கு ஒரு பொய்ப் பாதுகாப்பே அல்லாமல் வேறல்ல. ஒரு பொய்யை  நிலைநிறுத்தப் பல பொய் பேச வேண்டியிருப்பதுபோல், மதத் தத்துவம் என்னும் பொய்யை நிலை நிறுத்தவே ஆத்மா மோட்சம், நரகம், மறுபிறவி, விதி, தர்மம் என்பதாகப் பொய்க் களஞ்சியக் கற்பனைகளை ஏற்படுத்த வேண்டியதாயிற்று. (43.2.10)

எல்லாம் ஆண்டவன் செயல் என்றும், விதிப்பயன் என்றும் நம்பிக் கிடப்பவன் பகுத்தறிவு சூன்யம் என்பது வெள்ளிடைமலை: (43.3.5)

கடவுளும், மதமும், பக்தியும் மனிதனை நாசமாக்கி விடுகின்றன. இம் மூன்றும் உடையவனுக்குச் சுதந்திரமே இல்லை. அவன் அறிவைப் பயன்படுத்த மாட்டான். எதை எடுத்தாலும், கடவுளுக்கு விரோதம், மதத்துக்கு விரோதம், சாத்திரத்துக்கு விரோதம் என்று பயந்து கொண்டே இருப்பான். அறிவின்படி ஆராயக் கூடாதவைகள்தான் கடவுள், மதம், சாத்திரங்கள் வெறும் நம்பிக்கைதான் அவற்றுக்கு ஆதாரம். இப்படிப்பட்டவன் அறிவில் முன்னேற முடியுமா?”  (33.10.19)

நீங்கள் எந்த முறையில் கடவுளை நிர்ணயித்தாலும் எந்த முறையில் எவ்வளவு நல்ல கருத்தில் மதத்தை நிர்மாணித்தாலும் பலன்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர மூட நம்பிக்கைக் கடவுளைவிடக் குருட்டுப் பழக்க மதத்தைவிடச் சீர்திருத்தக் கடவுளும் பகுத்தறிவு மதமும் ஒன்றும் அதிகமாய்ச் சாதித்துவிடப் போவதில்லை. (33.10.2)

இவ்வாறு பெரியார் மதத்தையும், கடவுளையும் சாடிப் பகுத்தறிவின் துணையோடு சிந்திக்கும்படி தூண்டுகிறார். தமிழச்் சமூகத்தில் பொதுவாக அனைத்துச் செயற்பாடும் மத நம்பிக்கையோடு இணைந்து காணப்படுகிறது. அதனால் மத மறுப்பாளர்கள், தம் கருத்தை மக்களிடம் எடுத்துச்செல்வதில் அச்சவுணர்வோடு இருந்த நேரத்தில், தந்தை பெரியார் தம் மத மறுப்புக் கருத்தை வெளிப்படையாக தமிழகம் முழுமைக்கும் சென்று பரப்பினார். இச்சாதனையைக் கண்ட பிறகும், இன்றைய நிலைமையில்கூட மார்க்சியவாதிகளில் சிலர் மதமறுப்பை மக்களிடம் எடுத்துச் செல்லத் தயங்குகின்றனர்.  இதனைத் தாண்டி மக்களிடம் எடுத்துச் செல்பவருக்கு வழிகாட்டியாக இருப்பவர் தந்தை பெரியாராவார்.

இந்து மதச்செயற்பாட்டில் காணப்படும் மூடநம்பிக்கை மற்றும் மனிதனிடத்தில் காட்டும் ஏற்றத் தாழ்வு போன்றவற்றைக் கடுமையாக எதிர்த்தவர் பெரியார். அதே நேரத்தில் இந்து மதத்தின் தோற்றம் முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான நிலையினைப் பற்றிய முழுமையான விமர்சனத்தை நமக்கு அளித்திடவில்லை. இந்துமத நடைமுறையில் காண்பதிலிருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இந்த முறையில்தான் மற்ற மதங்களையும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வந்த மதங்களில் காணப்படும் மூடப்பழக்கங்களை மட்டும் எதிர்த்தார்.

மதத்தின் மூடச் செயற்பாட்டை எதிர்த்த பெரியார், பொதுவான மதத்தின் தோற்றம், அதன் இன்றைய நிலையின் தன்மை, பிறகு அதன் மறைவு என்ற வழியில் மதத்தை முழு ஆய்வுக்கு உட்படுத்தவில்லை.

இதன் விளைவாக, சமூகத்தில் காணும் அனைத்து முரண்பாடுகளுக்கும் கடவுளையும், மதத்தையும் காரணமாக்குகிறார் பெரியார். மதம் மனிதர்களின் சிந்தனையை மட்டுப்படுத்துகிறது என்று கூறும் பெரியாரின் கூற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். இந்த மட்டுப்படுத்தும் செயல் யாருக்காக செய்யப்படுகிறது என்று அடையாளம் காட்டாமல், மத நடவடிக்கையில் ஈடுபடும் பார்ப்பனர்களையும், மதத்தைப் பரப்புபவர்களையும் முதன்மைப்படுத்தி எதிர்க்கும்போது, இவை யாருடைய நலன்களுக்காகச் செய்யப்படுகின்றன என்பது அடையாளம் காட்டப்படாமல் போகிறது. பார்ப்பனர்கள் பணம் பறிக்கின்றனர் என்ற உண்மையின் ஊடே, மத நம்பிக்கைகள் எந்தச் சுரண்டல்வாதிகளின் நலன்கள் காக்கப்படுகிறது என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

இந்து மத எதிர்ப்பு என்பது, பார்ப்பன எதிர்ப்போடு நின்றுவிடுவதில்லை. மதத்தின் வர்க்கத் தன்மையைப் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. தந்தை பெரியார் மத நடவடிக்கையின் வர்க்கத் தன்மையை வலியுறுத்தாமல் போனதால், அவரது மத எதிர்ப்பென்பது பார்ப்பன எதிர்ப்போடு நின்றுவிடுகிறது. பார்ப்பனர்கள் சுரண்டும் வர்க்கத்திற்கான அறிவுத்துறைப் பணியினைச் செய்தவர்கள். வர்க்கச் சார்பான அறிவை எதிர்ப்பதோடு, சுரண்டும் வர்க்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும். இன்றைய முதலாளித்துவ வர்க்கத்திற்கான அறிவுத்துறைப் பணியினை செய்துவருபவர்களில் பார்ப்பனர்கள் மட்டும் இடம் பெறவில்லை என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முந்தைய சமூகத்தில் பார்ப்பனர்களின் செயற்பாட்டை எதிர்க்கும் அதே நேரத்தில், இன்றைய சமூகத்தில் சுரண்டும் வர்க்கத்தையும், இவர்களுக்குத் துணைபோகும் அறிவுத்துறையினரைப் புரிந்தும், அறிந்தும் எதிர்க்க வேண்டும். ஏனெனில் இன்றைய சுரண்டும் வர்க்கத்திற்கான அறிவுத்துறையாளர்கள் பார்ப்பனர்களை மட்டும் கொண்டிருக்கவில்லை.

இந்திய சமூகத்தில் காணும் முரண்பாட்டிற்கு மதநம்பிக்கையை மட்டும் காரணப்படுத்துவதால், சமூகத்தில் காணும் அனைத்து முரண்களும், பகுத்தறிவு ஏற்பட்டால் தீர்ந்துவிடும் என்ற புரிதலுக்குச் சென்றுவிடுகிறார் பெரியார்.

பெரியாரின் கூற்றை நேரடியாகப் பார்ப்போம்.

நமது இழிநிலை நமது முட்டாள்தனம் மாறவேண்டுமானால் நாம் ஒன்றும் பெரிய கஷ்டப்பட்டு முயற்சி செய்யவேண்டியதில்லை. பகுத்தறிவு கொண்டு தாராளமாய்ச் சிந்தித்தால் போதும். நமது கொள்கை பகுத்தறிவு. பகுத்தறிவு என்றால் நாத்திகம் என்பது பொருள். அறிவு கொண்டு சிந்திப்பதுதான் நாத்திகம் ஆகும். (33.1.18)

சமுதாயத் துறையில் இன்றுள்ள வேற்றுமை, பகைமை, துவேசம், இழிவு, தரித்திரம், மடமை முதலிய குணங்கள் மனிதன் அறிவுக் குறைவினால் பகுத்தறிவைச் செவ்வனே பயன்படுத்தாததால் ஏற்பட்டவை என்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய காலக் கொடுமையாலோ கடவுள் தன்மையாலோ அரசாட்சியாலோ ஏற்பட்டது என்று எவரும் சொல்லிவிட முடியாது. (33.4.3)

பகுத்தறிவு இன்று எல்லா மக்களுக்கும், எல்லாத் துறையிலும் செலுத்தப்படுவது சாத்தியமாக இருக்கக்கூடுமானால் மனிதச் சமுதாயத்தில் இன்று காணப்படும் பேத நிலைமைகளும், போதாமை உணர்ச்சிகளும், மனக் குறைகளும், ஒப்பற்ற போட்டித் தன்மைகளும் இருப்பதற்கு இடமே இல்லாமல் போய்விடும் (33.6.2)

இவ்வாறு சமூகத் தீங்கிற்கு மதமே காரணம் என்று கூறும்போது, சமூக முரணிற்கான மூல காரணத்தை அறியாமல், அந்த மூலகாரணத்திற்கு துணைபோகும் மதத்தையே முதன்மைப்படுத்தும் போது இலக்கு மாறிப்போகிறது.  அம்பை எய்தவனுடன் போராடுவதை விடுத்து அம்புடன் மோதுவது, எய்தவனை தப்பிக்க வைத்துவிடும்.

சமூக முரணிற்கு காரணமான இந்த சமூக பொருளாதார அமைப்பை அறிந்து கொண்டு, அதனை மாற்றுவதற்கான வழிமுறைகளைத் தேடாமல், அதற்குத் துணைபுரியும் மதம், அரசாங்கம் போன்றவற்றை மட்டுமே குறிவைக்கும்போது, நடைமுறையில் காணப்படும் சமூக அமைப்பைத் தக்கவைக்கத் துணைபுரிவது போலாகிவிடுகிறது.

இந்த நாட்டில் பணக்காரன் என்றும் ஏழை என்றும் இரு பிரிவுகள் இருக்கக் காரணம் என்ன வென்று நினைக்கிறீர்கள்? இதற்கு முன்சென்மம் பின்சென்மம் பித்தலாட்டம்தான் காரணம். பாவம், புண்ணியம் என்ற பித்தலாட்டம்தான் காரணம். ஏழையும் பிச்சைக்காரனும் தன் ஏழ்மைத் தன்மையை ஒப்புக் கொண்டு பொறுத்துக் கொண்டிருப்பதுதான் காரணம்.  (43.9.12)

நம் நாட்டில் பெரும்பான்மை மக்களின் ஏழ்மைக்குக் காரணம் இந்தப் பாடுபட்ட மக்கள் பாடுபடாத சோம்பேறிக்கு மோட்சம் பெற விரும்பித் தாம் சம்பாதித்த பணத்தையெல்லாம் கொடுத்து விடுவதால் வரும் வினைப் பயன்தானே. இந்த மடமை நீங்காதவரை இவர்கள் ஏழ்மை நீங்காது. இவர்கள் நாகரிகமும் அடைய முடியாது.  (43.4.3)

மக்கள் ஏன் கடவுளை நாடிச் செல்கிறார்கள் என்பதற்கான காரணங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், கடவுள் நம்பிக்கையால் பணம் எல்லாம் புரோகிதர்களுக்குச் செல்கிறது என்று வருத்தப்படுவதோடு நின்றுவிடுவதால், அதாவது பிரச்சனையின் தோற்றத்திற்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியாமல் போகிறது. 

இந்தப் புரோகிதர்களின் செயல்களும், மதப் பிரச்சாரகர்களின் நடவடிக்கைகளும் பணம் படைத்தவர்களின் நலன்களின் அடிப்படையில்தான் செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பாடுபடாத சோம்பேறிகள் புரோகிதர்கள் மட்டுமல்லஉடலுழைப்பு செய்யாத சோம்பேறிகளின் அணியில் முதலில் இடம்பெறுபவர் பணம்படைத்தவர்களே. இந்தப் பணம்படைத்தவர்கள்தான் உழைப்பாளர்களைச் சுரண்டிப் பெற்ற பணத்தை, உடல் உழைப்பில்லாத மற்ற பணியாளர்களுக்குப் பெரும் அளவிற்கு அளிக்கின்றனர்.

பணக்காரர்களின் நலன்களைக் காப்பதற்காகவே மத நம்பிக்கைகள் நிலைநாட்டப்படுகிறது. மதம், தத்துவம், அரசு போன்ற மேற்கட்டமைப்பு முழுவதும் சுரண்டும் வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்வதற்கு உருவானவையேயாகும்.

ஏன் இதனைக் குறிப்பிட வேண்டிவருகிறது என்றால், தொழிலாளர்கள், கூலிப் போராட்டம், பொருளாதாரம் பற்றிய பெரியாரின் பார்வையினைக் காணும்போதும், இதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிவருகிறது.

தொழிலாளர்களுக்குக் கூலி உயர்வைப் போராடிப் பெற்றுத் தரும் அரசியல்வாதிகளை மிகச் சாதாரணமாகத் தள்ளிவிடுகிறார். பெரியார் கூறுகிறார்:-
தொழிலாளருக்குப் பாடுபட்டோம் என்று சொல்லும் சிலர் தங்களால்தான் கூலி உயர்ந்து விட்டதென்று கூறலாம். ஆனால் கூலி வேலை செய்பவன், தோல் வேலை செய்பவன், வண்டி ஓட்டுபவன், புல் விற்பவன் இன்றைக்கு முன்பைவிட நான்கு மடங்கு அதிகமாகக் கூலி சொல்கிறானே, அவனுக்காக யார் பாடுபட்டார்கள்? எந்தக் கட்சி பாடுபட்டது? அரிசி மூட்டை ரூ10க்கு விற்றது, இபொழுது (1965) ரூ 45க்கு விற்கிறதே, அவர்கள் எந்தச் சங்கம் வைத்து விலை ஏற்றினார்கள்? சில  அரசியல் கட்சியினர் வேண்டு மென்றே ஒன்று மறியாத தொழிலாளரிடம், நாங்கள்தான் பாடுபட்டோம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். காலம், சூழ்நிலை இவைகளால் தானாகவே பொருள்களின் விலை அதிகமாயிற்று, கூலியும் அதிகமாயிற்று.  (38.1.1)

இந்தக் கருத்துகளை நோக்கும்போது பெரியாரின் பொருளாதார அறிவுவறட்சி வெளிப்படுகிறது.  கூலிக்கான போராட்டம் நடத்துவதையே சந்தேகித்து, பகுத்தறிவை மட்டும் பிடித்துக் கொண்டிருந்தால் சமூக மாற்றம் எவ்வாறு நிகழும்? காலம் சூழ்நிலை இவற்றால் தானாகவே மாறுகிறது என்றால், இந்தச் சமூகப் பொருளாதாரச் சுரண்டல் அமைப்பை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். இந்த ஆபத்தைக் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.

மேலும் பெரியார் கூறுகிறார்:-
நம் பொருளாதார ஏற்றத் தாழ்விற்குக் காரணமே கடவுள், மதம், சாத்திரம்தான். எப்படி என்பீர்கள்? நீ எப்படிடா பணக்காரன் என்று ஒருவனைக் கேட்டால் அவன் என்ன சொல்லுகின்றான். எனது சாமர்த்தியத்தால் சம்பாதித்தேன் என்று சொல்லுவது கிடையாது, கடவுள் அருளால் கிடைத்தது என்கின்றான். லட்சுமி கடாட்சம் என்கிறான். அதை மற்றவனும் நம்புகிறான்.  (38.2.8)

பணக்காரன் தமது சாமர்த்தியத்தையும் கடவுள் அருளியதே என்று சேர்த்துத்தான் கூறுகிறான். பணக்காரனைக் காப்பாற்றும் சக்திதான்  மதம்.

மேற்கட்டமைப்புக்குக் காரணமான பொருளாதாரத் தன்மைகளை மனதில் கொள்ளாமல், மதம், அரசுப்பொறியமைப்பு போன்றவற்றோடு மட்டும் போராடினால், வெற்றி என்பது பெரியார் கூறுகிற  காலம், சூழ்நிலை  இவற்றுக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். 

சமூக மாற்றத்தின் விதியையும், சமூக வளாச்்சியின் நியதியையும் அறிந்திடாமல் பகுத்தறிவு ஒன்றே போதும் என்பது சமூகத்தைப் புரிந்து செயல்படுவதிலிருந்து நம்மைத் தடுத்துவிடும்.  காலம், சூழ்நிலை இவைகளால் தானாகவே பொருள்களின் விலை அதிகமாயிற்று, கூலியும் அதிகமாயிற்று  என்ற பெரியாரின் கூற்று  சமூகவளர்ச்சியைப் பற்றிய கருத்தோட்டம் ஏதுமின்றி காலத்திற்கு முன் கைகட்டி நம்மை நிற்கச்செய்கிறது.

பொருளாதாரச் சமத்துவத்தால் சமுதாயப் பேதாபேதங்கள் அகன்றுவிடும் என்பது மேல் நாடுகளுக்குச் சற்றுப் பொருத்தமானதா யிருக்கலாம். மேல்நாட்டு மக்கள் எல்லோருமே ஒரே மதத்தைத் தழுவியவர்கள் ஆவார்கள். எனவே இயல்பிலேயே அங்குச் சமுதாயத்தில் பேதா பேதம் இல்லாமலிருந்து வருகிறது. நம் நாட்டு நிலை அப்படி இல்லை. (இங்குப் பிறவியிலேயே பேதாபேதம் கற்பிக்கப்பட்டு மக்கள் பல சாதிகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்).  (38.3.13)

இங்கு பெரியார் இந்தியாவில் பிறவியால் ஏற்படும் ஒடுக்குமுறை என்பது, பொருளாதார நலன்களின் விளைவாய் ஏற்பட்ட சித்தாந்தப் போக்கு என்பதைப் புரிந்து கொள்ளாமல், பிறப்பால் பிரித்து வைத்திருக்கும் சித்தாந்தத்துடனான மோதலாக மட்டுப்படு்த்துகிறார்.

சிந்தனையின் தோற்றுவாயை அறிந்திடாமல், பகுத்தறிவின் துணையை மட்டும் நாடுவதால் என்ன அறிவைப் பெற்றுவிட முடியும்?

பகுத்தறிவு என்றால் அன்றன்றைய கருத்துக்கேற்ப நடப்பிற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்வதுதான்.   (33.1.14)

கருத்துகள் ஏன் மாறுகின்றனஅந்த மாற்றத்தை நிகழ்த்துவது எது, அதற்கான சமூகக் காரணம் என்ன என்பதெல்லாம்  பகுத்தறிவுச் சிந்தனைக்குள் அகப்படுவதில்லை

செல்வம் என்பது உலகின் பொதுச்சொத்து. அதாவது மக்கள் அனைவரும் அனுபவிக்க உரிமையுள்ள சொந்தமான சொத்தாகும். அதை யார் உண்டாக்கி யிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்தச் சீவனுக்கும் அது பொதுச் சொத்தாகும். அனுபவிக்கும் உரிமை போல அதை அழியாமல் பாதுகாக்கவும் உரிமை உண்டு.  (38.3.15)

                இந்தக் கூற்று நம்மை அராஜகப் போக்கிற்கே இட்டுச் செல்லும். தனியுடைமையின் தோற்றத்தையும் சாரத்தையும் அறிந்துகொள்ளாமல் எடுத்த முடிபாகும். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தமிழகத்தில் முதன்முறையாக மொழியாக்கம் செய்து வெளியிட்ட பெரியாருக்கு, விஞ்ஞானக் கம்யூனிசத்தின் மேல் பிடிப்பு ஏற்படவில்லை என்பதை இது காட்டுகிறது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் நேரடி நூல்கள் தமிழகத்தில் தமிழில் கிடைக்கும் காலத்தில் வாழ்ந்தவர் பெரியார். ஆனால் விஞ்ஞானக் கம்யூனிசம் அவரைச் சிறிதளவிற்கும் பாதிக்கவில்லை என்பதும் அதிலிருந்து விலகியே இருந்தார் என்பதும் நம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த கெட்ட வாய்ப்பாகும்.

நம் நாட்டில் கடவுள்களுக்கு இருக்கும் செல்வங்களைக் கைப்பற்றி தொழிற்சாலைகள் பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தினால் வேலையில்லாத் திண்டாட்டமும் தற்குறித் தன்மையும் அந்நிய நாட்டார் வியாபாரத்தின் பேரால் சுரண்டுதலும் இந்நாட்டில் அரைநிமிடமாவது இருக்க முடியுமா?”  (38.7.7)

சமூகச் சீரழிவிற்கு மூலதனப் பற்றாக்குறைதான் காரணம் என்பதாக  இங்குப் பெரியார் கூறுகிறார். மூலதனத்தின் ஆதிக்கத்தை புரிந்துப் கொள்ளாததால்தான் இவ்வாறான முடிவிற்கு வரமுடிகிறது.

மூலதனத்திற்கும் மதத்திற்கும், மூலதனத்திற்கும் தொழிலாளர்களைச் சுரண்டடுவதற்கும் உள்ள இணைப்பை புரிந்து கொள்ளாமல் போனால் இன்றைய சமூகத்தின் சுரண்டலை எவ்வாறு அறிந்து போராடுவது?.   இந்த அரைநிமிடத் தீர்வு  என்பது சமூகப் போராட்டத்தை  மிகவும் எளிமைப்படுத்திவிடுகிறது.

தொழிலாளர் சங்கம் என்று வைத்துக்கொண்டு அதன்மூலம் தொழிலாளர்கள் உயர வேண்டும், முதலாளிகள் ஒழிய வேண்டும் என்று கூப்பாடு போடுவது (இனி எனக்கு) அர்த்தமற்றதாகவே தோன்றுகிறது. சக்ரவர்த்திகளை ஒழித்து விட்டோம். அரசர்களை ஒழித்துவிட்டோம்.  சமீனை ஒழிக்கிறோம். முதலாளிகள் மாத்திரம் ஏன் ஒழியாமல் இருக்க வேண்டும்? ஆகவே முதலாளிகள் என்ற தன்மையும் ஒழியுமானால் தொழிலாளிகள் எப்படி இருக்க முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள்.”  (28.2.6)

                தொழிலாளர் இருப்பிற்காக முதலாளியின் தேவை என்ற அடிப்படையில் புரிந்து கொள்வது, முதலாளித்துவத்திற்கு முதலாளியும் அதாவது முதலாளியிடம் சேகரமாகியிருக்கும் பணமும், பழைய உற்பத்தி முறையிலிருந்து விரட்டப்பட்ட தொழிலாளர்களின் படையும் தேவை. இவற்றில் ஒன்றைக் கொண்டு முதலாளித்துவம் செயற்படமுடியாது. இவற்றில் ஒன்று சுரண்டுகிறது, மற்றொன்று சுருண்டலுக்கு ஆளாகிறது. தொழிலாளியின் வாழ்வென்பது முதலாளியின் இருப்போடு மட்டும் புரிந்து கொள்வது முதலாளிக்கு ஆதரவான கருத்தேயாகும்.

இத்தோடு பெரியார் தனது கூற்றை நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் கூறுகிறார்:-
:முதலாளி தொழிலாளி என்கிற பிரச்சினை எங்கிருந்து வந்தது? மூட நம்பிக்கையிலிருந்து வந்ததல்ல. அந்தப் பிரச்சினை ஆதாரத்தோடுதான் உள்ளது. எப்படி இருக்கிறான் முதலாளி? சட்டத்தின்படி இருக்கிறான். அரசாங்கத்தின் பாதுகாப்பின்படி இருக்கிறான். அரசாங்கத்தின் சலுகையில்தான் அவன் முதலாளியாக வாழ முடிகிறது. ஆகையால் முதலாளி கூடாது என்றால் அவனைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் மீது திரும்ப வேண்டும். முதலாளி மீது பாய்வதால் பலன் ஏதுமில்லை. முதலாளிகள் மீது போராட்டம் துவக்கித் தொழிற்சங்கங்கள் இந்த அய்ம்பது வருடக் காலமாகச் சாதித்தது என்ன?”   (28.2.10)

                இங்கு அரசாங்கம் என்பதற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து அதுவே முதலாளித்துவத்தை உருவாக்கியது போல் காட்டப்படுகிறது. முதலாளித்துவத்திற்குத் தேவையான மேற்கட்டமைப்பாக அரசாங்கம் தோற்றம் பெற்றுள்ளது. அதனால்தான் அது முதலாளித்துவச் சார்பான வர்க்கத் தன்மையுடன் செயற்படுகிறது என்பதுதான் மார்க்சியம்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைக் கடுமையாக எதிர்க்கிறார் பெரியார்.

ஸ்ட்ரைக் என்றால் இதில் ஈடுபடுபவர்கள் பரம முட்டாள்கள். இதை நடத்துகிறவர்கள் பரம அயோக்கியர்கள். அதாவது சட்டம், அமைதி, கட்டுப்பாடு, ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றில் சிறிதும் கவலை அற்றவர்கள.் இப்படிபட்ட இவர்களைக் கொண்டு நடத்தப்படும் காரியம் எப்படி ஒழுங்காக இருக்க முடியும்? “ (28.3.11)

அரசாங்கத்தின் கருவிகளைக் காப்பாற்றிவிட்டு, முதலாளி இல்லையேல் தொழிலாளி இல்லை என்று முதலாளியையும் காப்பாற்றிவிட்டு, வெறும் அரசாங்கத்தை மட்டும் எதிர்ப்பது என்பது, அரசு என்பதின் தோற்றத்தையும், அதன் வாக்க தன்மையையும் அறிந்திடாததின் விளைவேயாகும்.

அரசாங்கம் என்பது ஆளும் முதலாளித்துவத்துக்கு சார்பான ஒடுக்கும் கருவியாகும், ஒடுக்குவர்களை விட்டுவிட்டு ஒடுக்கும் கருவிகளைக் குறைசொல்வதால் என்ன பயன் கிட்டிவிடும்?

                 சமூகப் பொருளாதார அமைப்பின் அடித்தளத்தின் மீதுதான் அரசாங்கம், மதம், சித்தாந்தம் போன்ற மேற்கட்டமைப்புகள் அமைந்துள்ளன என்பதைப் பெரியார் ஏற்றுக் கொள்ளாததால், முதலாளித்துவ அமைப்பின்மீதான போராட்டத்தை முதலாளிமீதான போராட்டமாகப் பார்க்கிறார். ஆனால் இங்கு பெரியாரின் தொழிலாளர் மற்றும் கம்யூனிச எதிர்ப்புக் கருத்தினைப் பற்றி விமர்சிப்பதைவிடபெரியார் மதத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தை விமர்சனக் கண்கொண்டு புரிந்து செயல்படுவதோடு நிறுத்திக்கொள்வோம்.

                மதம் பற்றிய எதிர்ப்பென்பது மக்களிடமிருந்து நம்மைப் பிரித்துவிடும் என்ற எண்ணத்தைக் கொண்டுள்ளவர்களின் இடையில் பெரியார் மதத்தை மிகவும் கடுமையாக எதிர்த்தும், மக்கள் மதிப்பைப் பெற்றும் அதனை இன்னும் இழக்காமலும் இருக்கிறார். நம் நாட்டில் மதம் என்பது மக்களின் முழு வாழ்வோடும் இணைந்து பிணைந்து காணப்படுகிறது. அதனை எதிர்ப்பதென்பது மிகவும் கடினமான செயலேயாகும். இந்தப் பணியை செவ்வனே செய்த தந்தை பெரியாரின் பணியினை இன்றைய கம்யூனிஸ்டுகள் தமது இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் வழியில் செழுமைப்படுத்தி பின்தொடர வேண்டும். இதனை விடுத்துப் பெரியாரின் பொருளதாரக் கண்ணோட்டத்தில் வீழ்ந்தோமானால், வர்க்கப் போராட்டத்தைப் பாட்டாளி வாக்கச் சர்வாதிகாரத்தை நோக்கி எடுத்துச்செல்லும் பாதையை விட்டு விலகி மாற்றுப் பாதையில் பயணிக்க நேரிடும்.

பகுத்தறிவுவாதத்தின் பொதுவான குறைபாடு என்னவென்றால், மதத்தையும் கடவுள் சிந்தனையையும் உடனடியாகச் சித்தாந்தப் போராட்டத்தால் தூக்கி எறிய முயல்வதாகும். மத உணர்விற்கான வேர்கள் புறநிலையாக இருக்கும்போது அதனைப் பிடுங்கி எறிவதென்பது நடவாத காரியம். மத இருப்பிற்கான காரணங்கள் இருக்கும் வரையில் மதம் சமூகத்தில்  பிரதிபலித்துக் கொண்டிருக்கும் என்பதை பகுத்தறிவுவாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை.

இயற்கையான அதன் மரணத்தில் மதம் மறையும் வரையில் ஹெர் டூரிங்கால் காத்திருக்க முடியாது  (டூரிங்குக்கு மறுப்பு) என்று எங்கெல்ஸ் சொல்வதுபோல் பகுத்தறிவுவாதிகளால் மதத்தின் சமூக வேர்களைப் புரிந்து கொள்ளாமல் மதத்தின் இருப்பிற்கான புறநிலைக் காரணங்கள் மறையும்வரை பொறுத்திருக்காமல் மதத்தோடு நேரடி போராட்டத்தைக் கைக்கொள்கின்றனர்.

வர்க்கப் போராட்டத்திற்கு அப்பாற்பட்ட அறிவுத்துறைப் பிரச்சினையாக மதத்தைப் பார்ப்பது தவறானப் பாதை என்றும், அந்தப் போக்கு கருத்துமுதல்வாதப் பாணியில் அணுவதாகவே ஆகும் என்றும் லெனின் கூறுகிறார்.  மேலும் மதமெனும் மூடநம்பிக்கைகளை வெறும் பிரசாரத்தின்மூலம்  நீக்கிவிட முடியும்  என்பது அசட்டுத்தனமானது. தொடர்ந்து லெனின் கூறுகிறார்:-
மனிதகுலம் மதமெனும் நுகத்தடியின்கீழ் வதைபடுவது, சமுதாயத்திலுள்ள பொருளாதார நுகத்தடியின் விளைவும் பிரதிபலிப்புமே ஆகுமென்பதை மறப்பது முதலாளித்துவக் குறுகிய பார்வையையே குறிக்கும். முதலாளித்துவத்தின் இருண்ட சக்திகளை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் தானே போராடுவதன்மூலம் அது அறிவொளி பெறத வரை, எத்தனைப் பிரசுரங்களை வெளியிட்டாலும், எவ்வளவுதான் உபதேசம் செய்தாலும் அதை அறிவொளி பெறச் செய்துவிட முடியாது.
-சோஷலிசமும் மதமும்

                பாட்டாளி வர்க்கம்  முதலாளித்துவத்தின் இருண்ட சக்திகளை எதிர்த்துப் போராடும்போது ஏற்படும் அறிவொளியைப் பெறும்போதுதான், பொருளாதார விளைவின் பிரதிபலிப்பான மதமெனும் மூட நம்பிக்கையை நீக்க முடியும் என்கிறார்.  அதாவது வெறும் நூல்களின் மூலம் கல்வி புகட்டுவதால் மதத்தை நீக்கிவிட முடியாது. மக்களே எழுச்சியடைந்து மதத்தின் மூலவேர்களை எதிர்த்துப் போராடும்போதுதான் மதத்தைத் துடைத்தெறிய முடியும் என்கிறார் லெனின்.

                இதனால் மதத்திற்கெதிரான கல்வி புகட்டுவது தேவையற்றது என்று பொருள்கொள்ளக் கூடாது.  வர்க்கப் போராட்டத்திற்கு  உட்பட்டதாக நாத்திகப் பிரச்சாரம் இருக்க வேண்டும்.  அதுமட்டுமல்லாது தூய மார்க்சிய போதனை என்னும் நேரான பாதையிலேதான் இந்த இருளிலிருந்து விடுபட்டு வெளியே வர முடியுமென நினைப்பது, மார்க்சியவாதி செய்யும் மிகக் கடுந் தவறாகும் என்கிறார் லெனின். அதனால் பதினெட்டாம் நூற்றாண்டின் பழைய நாத்திக இலக்கியத்தை படித்தறிய வேண்டும். உப்புச்சப்பில்லாத மார்க்சிய சலிப்பூட்டும் பொழிப்புரையைக் காட்டிலும், பதினெட்டாம் நூற்றாண்டின் நாத்திகர்களது அறிவாற்றல் மிக்க இலக்கியம் ஏற்றவை என்கிறார் லெனின்.

மதத்தால் மயக்குண்ட நிலையிலிருந்து மக்களைத் தட்டியெழுப்புவதற்கு மிகப் பல சந்தர்ப்பங்களிலும் இவை, மார்க்சியத்தின் உப்புச்சப்பில்லாத, சலிப்பூட்டும் பொழிப்புரைகளைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கூடுதலாய் ஏற்றவையாய் இருக்கும். திறம்படத் தெரிந்தெடுக்கப்பட்ட உண்மைகளைக் கொண்டமைந்த எடுத்துக்காட்டுகள் வாயிலான விளக்கங்கள் அனேகமாய் எவையுமில்லாத இப்படிப்பட்ட பொழிப்புரைகள்தான் நமது வெளியீடுகளில் மிகவும் மலிந்திருக்கின்றன. இவையும் (இவ்வுண்மையை மறைத்துப் பயனில்லை) அடிக்கடி மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டுவனவாகவே இருக்கின்றன. மார்க்ஸ், எங்கெல்சின் பிரதான நூல்கள் யாவற்றின் மொழிபெயர்ப்புகளும் நம்மிடம் இருக்கின்றன, ஆகவே பழைய நாத்திகமும், பழைய பொருள்முதல்வாதமும், மார்க்சும், எங்கெல்சும் அவற்றில் புகுத்திய திருத்தங்களால் சரிசெய்யப்பட்டுச் செம்மையாக்கப்படாமல் இருந்து விடுமென்று அஞ்சக் காரணம் சிறிதும் இல்லை.
-போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதத்தின் முக்கியத்துவம் குறித்து

                தமிழகத்தைப் பொருத்தளவிலும் மார்க்ஸ், எங்கெல்சின் பிரதான நூல்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. அதன் வழிகாட்டுதலின்படி பெரியார் போன்றோரின் நாத்திக இலக்கியங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அளித்திட வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டின் நாத்திக இலக்கியத்தைப் படிப்பதுப் பற்றி லெனின் கூறிய ஆலோசனையின்படி நமது ஊரில் கிடைக்கும் நாத்திக இலக்கியத்தை வெளியிட வேண்டும்.

“..பதினெட்டாம் நூற்றாண்டின் பழைய நாத்திக இலக்கியம் பழமைப்பட்டுவிட்டது. விஞ்ஞானத்துக்கு ஒவ்வாததாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் ஆகிவிட்டது என்றெல்லாம் காரணம் கூறப்படுகிறது. இத்தகைய போலியான விஞ்ஞானக் குதர்க்கத்தைக் காட்டிலும் மோசமானது எதுவும் இல்லை. பகட்டுப் புலமையை அல்லது மார்க்சியத்தைப் பற்றிய அறவே தவறான உணர்வை மூடி மறைக்கவே இந்தக் குதர்க்கம் பயன்படுகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சியாளர்களுடைய நாத்திக நூல்களில் விஞ்ஞானத்துக்கு ஒவ்வாததும் சிறுபிள்ளைத்தனமானதும் நிறைய இருப்பது மெய்தான். ஆனால் இந்நூல்களில் பதிப்பாளர்கள் இவற்றைச் சுருக்கி வெளியிடுவதையும், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்குப் பிற்பாடு மதங்களைப் பற்றிய விஞ்ஞான விமர்சனத்தில் மனிதகுலம் கண்டிருக்கும் முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டியும், இப்பொருள் குறித்து அண்மைக் காலத்தில் வெளிவந்துள்ள புத்தகங்களைக் குறிப்பிட்டும், இன்ன பிற விவரங்களைக் கூறியும் சுருக்கமான பின்னுரைகளை இந்நூல்களுக்கு அளிப்பதையும் யாரும் தடுத்து நிற்கவில்லை. கோடிக் கணக்கான மக்கள் (முக்கியமாய் விவசாயிகளும் கைத்தொழிலாளர்களும்) நவீன காலச் சமுதாயம் அனைத்தாலும் இருளிலும் அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் வதையும்படி இருத்தப்பட்டிருக்கும் இவர்கள் கலப்பற்ற தூய மார்க்சிய போதனை என்னும் நேரான பாதையிலேதான் இந்த இருளிலிருந்து விடுபட்டு வெளியே வர முடியுமென நினைப்பது, மார்க்சியவாதி ஒருவர் புரியக்கூடிய மிகப் பெரிய, மிகக் கடுந் தவறாகிவிடும்.

இந்த வெகுஜனங்களை நாட்டங் கொள்ளும்படிச் செய்வதற்காகவும், மதத்தால் மயக்குண்ட நிலையிலிருந்து இவர்களை விழித்தெழச் செய்வதற்காகவும், மிகப் பல்வேறுபட்ட கோணங்களிலிருந்து உசுப்பி விடுவதற்காகவும், இன்ன பிறவற்றுக்காகவும், இவர்களுக்கு நாம் மிகப் பல்வேறுபட்ட நாத்திகப் பிரசார வெளியீடுகளும் கிடைக்கச் செய்ய வேண்டும். வாழ்க்கையின் மிகப் பல்வேறுபட்ட துறைகளிலிருந்துமான உண்மைகளை இவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். சாத்தியமான எல்லா வழிகளிலும் இவர்களை அணுகியாக வேண்டும்.
-போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதத்தின் முக்கியத்துவம் குறித்து

                பதினெட்டாம் நூற்றாண்டின் நாத்திக இலக்கியங்கள் விஞ்ஞானத்துக்கு ஒவ்வாததாக, சிறுபிள்ளைத்தனமானதாக இருந்தாலும் இந்நூல்களை வெளியிடும் பதிப்பாளர்கள், இதனைச் சுருக்கியும், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மதங்களைப் பற்றிய விஞ்ஞான விமர்சனத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டியும், பின்னுரைகள் எழுதியும் வெளியிடவேண்டும் என்று லெனின் கூறுகிறார். நம் காலத்தில் இதனைக் கணக்கில் கொண்டு, இந்த ஆலோசனைகளைப் பின்பற்றி இந்திய நாத்திக இலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிடவேண்டும்.

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மேலைத்துவத்தை எதிர்த்து, மேலைத்துவ சிந்தனையை உள்வாங்கி கீழைத்துவ தத்துவ அடிமை மனப்பான்மையில் எழுதப்பட்டது.இது போன்ற கருத்துகளுக்கு பதில்கள் சொல்லி பல வருடங்கள் ஆகி, அறிஞர்கள் பலரும் கருத்து கூறியும் மீண்டும் இது போன்ற அறியாமை தேவை தானா? ஆதாரம் : பெரியார்: சுய மரியாதை சமதர்மம் விடியல் பதிப்பகம்

    ReplyDelete
  3. மார்க்சியவாதிகளில் சிலர் மதமறுப்பை மக்களிடம் எடுத்துச் செல்லத் தயங்குகின்றனர். karanam .. yen tholar.

    ReplyDelete
  4. Anonymous @ நிங்கள் சொல்கின்ற பதில்கள் மார்க்சியர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது. பெரியார்வாதிகள் தான் ஏற்றுக் கொள்வார்கள். அப்படி மார்க்சியர்கள் ஏற்றுக் கொண்டதாக நீங்கள் காட்டுபவர்கள் பெரியார் மார்க்சியவாதியாக இருப்பார்கள் இவர்களின் கதம்பபோக்கை எதிர்த்தே இது எழுதப்பட்டுள்ளது.

    ReplyDelete
  5. deniyalsasi@ இங்குள்ள மார்க்சியர்களில் பெரும்பான்மையினர் தாங்களே பொருள்முதல்வாதியாக முழுமைய் மாறாததால் ஏற்படுகின்ற விளைவே இது. லெனின் கூறுகிற ஆன்மீக வாதிகளை புண்படுத்தும்படியாக விமர்சிக்கக் கூடாது என்று கூறியதை மட்டும் முன்வைத்து, மத மறுப்பு, கடவுள் மறுப்பு போன்றவற்றை மக்களிடம் எடுத்துச செல்லவில்லை. மார்க்சிய வழியிலான நாத்திக பிரச்சாரத்தை முழுமையாக கைவிட்டனர்

    ReplyDelete
    Replies
    1. Its a wow reply comrade. Also need of the time to expose the real identity of Periyar.

      Delete