Tuesday 7 May 2013

கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்


     ஆதிபொதுவுடைமை சமூகம் சிதைந்தது முதல் சமூகத்தில் காணப்படும் வர்க்க முரணை போக்குவதற்கு பல அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து அளித்து வந்துள்ளனர். இவைகளில் காணப்படும் கருத்துக்கள் சமூக வளர்ச்சியின் நியதிகளுக்கு உட்பட்ட வகையில் விளக்காமல், தன்னுடைய சித்தத்தினுடைய முடிவுகளின்படி வகுத்தளித்தனர். இந்த சித்தத்தின் முடிவுகள் நடைமுறைக்கு வரலாமல் போனது. இதன் தொடர்ச்சியாக சில மேதைகளும் தோன்றினர் அவர்களை மார்க்சியம் கற்பனாவாத சோஷலிசவாதிகள் என்றழைக்கிறது. மேதைகள் என்று அழைத்தும் அவர்களின் சோஷலிசத்தை ஏன் கற்பனாவாதம் என்று கூறப்படுகிறது என்றால், இந்த மேதைகளின் கருத்துக்களும் நடைமுறையில் கொண்டுவர முடியவில்லை என்பதனால் தான். கற்பனாவாத சோஷலிசம் என்பது தனிமனிதர்களின் சித்தத்திலிருந்து தோன்றியது, விஞ்ஞான சோஷலிசம் என்றால் சமூக வளர்ச்சியின் நியதிப்படி சோஷலிசத்தை அடைவதை குறிப்பிடுவது.

கற்பனா சோஷலிசம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மூன்று மாமேதைகள் கற்பனாவத சோஷலிசவாதிகளாகத் திகழ்ந்தனர். அவர்கள் சான் சிமோன், ஃபூரியே, ஓவன் ஆகியோராவர்.  முதலாளித்துவம் வளர்ச்சி பெற்றுவரும் நாட்டில் இம்மூவரும் தோன்றினர். இவர்கள் தமது கருத்துக்களை வழங்கிய காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான பகைமை அரைகுறை வளர்ச்சியில் இருந்தது.

                        முதலாளித்துவ உற்பத்தியின் பெருக்கத்தைப் பார்க்கும் போது சமூக தேவைகள் நிறைவு பெற்றுவிடும் என்றே முதலில் பொதுவாக நம்பப்பட்டது. ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தொழில் வளர்ச்சி உழைப்பாளி மக்களுக்கு வறுமையையும், பெரும் துயரத்தையுமே வழங்கியது. மனிதனுக்கு இடையேயான தொடர்பு வெறும் பணப்பட்டுவாடாக முதலாளித்துவ சமூகம் மாற்றிவிட்டது.

                        வணிகம் மேன்மேலும் மோசடியாக நடைபெற்றது, சமூகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. ரகசியமாக நடைபெற்ற ஒழுக்கக்கேடுகள் அப்பட்டமாக, வெளிப்படையாக செழித்தோங்கியது. முதலாளித்துவ புரட்சி ஏற்பட்ட போது ஒலித்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற முழக்கங்கள் முதலாளிகளின் போட்டா போட்டியின் சூழ்ச்சிகளிலும், சூதிலும், சண்டைச் சச்சரவுகளிலும் காணாமல் போனது.

                        இதனை கண்ணுற்ற கற்பனாவாத மேதைகள், நவீன சமூக அமைப்புமுறையை கண்டித்தனர், அதன் மறைவைப் பற்றி கனவு கண்டனர், அதற்கு மாற்றாக புதிய ஒரு சமூக அமைப்பை வடிவமைத்துக் கொண்டனர். 

சுரண்டல் என்பது அநியாயமானது என்பதை ஆட்சியாளர்களுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் புரிய வைத்தால் போதும் சமூகத்தில் அமைதியும் நல்வாழ்வும் கிட்டும் என்று அப்பாவித்தனமாக எண்ணிக்கொண்டனர்.

                        முதலாளிகள் சமூக தர்மகர்ததாக்களாக, அனைவருக்கும் பொது அதிகாரிகளாக மாறவேண்டும் என்று  சான்சிமோன் விரும்பினார்.

                        இம்மேதைகள் முதலாளித்துவ சமூகத்தின்மீது வைத்த விமர்சனம் மிகவும் கடுமையானது. முதலாளித்துவத்துக்கு முந்திய சமூகங்கள் எப்படி குறைபாடுடையதாக இருந்ததோ அதேபோலவே முதலாளித்துவ சமூகமும் குறைபாடோடு காணப்படுகிறது. எப்படி முந்திய சமூகம் தூக்கி எறியப்பட்டதோ அதேபோன்று இந்த நவீன சமூகமும் தூக்கி எறியப்படும் என்று இவர்கள் கருத்துரைத்தனர்.

                        இந்தக் கற்பனாவாத சோஷலிஸ்டுகளின் சிந்தனை தனிமுதலான உண்மை, அறிவு, நீதி ஆகியவற்றின் அடிப்படையில் உருவானது. இந்த உண்மையை யாராவது கண்டுபிடித்து சொன்னால் போதும் அது அனைத்து உலகத்தையும் மாற்றி வெற்றி கண்டுவிடும் என்று நினைத்தனர்.

                        ஒரு சிறந்த சமூக அமைப்பைப் பற்றிய சிந்தனை செய்ய வேண்டும், அவ்வாறு கற்பனை செய்யப்பட்ட அமைப்பின் சிறப்புகளைப் பற்றி அனைவரிடமும் கூறி நம்பவைக்க வேண்டும். அவ்வாறு நம்ப வைத்தால் அந்த சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அமைப்பு பற்றிய கருத்தை அனைவரும் ஏற்றுச் செயல்படுவர் என்ற மாயையான கருத்தில் அம்மாமேதைகள் இருந்தனர்.

                        விஞ்ஞான சோஷலிசத்தின் வேர்கள் இவர்களிடம் கருகொண்டிருந்தால் இவர்கள் மாமேதைகளே. சான்சிமோன் அரசியல், பொருளுற்பத்தியைப் பற்றிய விஞ்ஞானமாகும் என்று பறைசாற்றுகிறார், அரசியல் முழு அளவுக்குப் பொரளாதாரத்தால் உட்கவரப்பட்டுவிடும் என்று முன்னறிந்து கூறியிருக்கிறார். பொருளாதார நிலைமைகள் அரசியல் நிறுவனங்களுக்கான அடிப்படையாகும் என்ற அறிவு அதாவது பொருளாதார நிலைமைகளே அரசியல் நிறுவனங்களை நிர்ணயிக்கிறது என்பதை இங்கு கருவடியில் காணமுடிகிறது.

                        அதே போல் ஃபூரியே நாகரிக கட்டத்தில் மீமிகை வளத்திலிருந்தே வறுமை பிறக்கிறது என்று கூறியுள்ளார். இது போன்ற கருக்கள் விஞ்ஞான சோஷலிச சித்தாந்தவாதிகளான மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் எங்கெல்ஸ் இவர்களைப் பற்றி கூறும்போது எச்சரித்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், அது என்னவென்றால், இந்த முன்னோடிகள் கற்பவனாவாதி என்ற காரணத்தை வெளிப்படுத்தி நிராகரிக்க முடியாது, ஆனால் அவர்கள் செய்த தவறுகளை மறுபடியும் செய்வதையாவது நாம் குறைந்தபட்சமாகத் தவிர்க்க முடியும், அப்படிப்பட்ட தவறுகளை நாம் செய்வது மன்னிக்க முடியாததாகும்.

முதலாளித்துவம் வளரும் தறுவாயில் இருந்ததால் அவர்களின் அறிவு எல்லைக்குட்பட்டதாகவும் வரம்பிடப்பட்டதாகவும் இருந்தது. இன்றைய வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் கற்பனாவாதம் என்பது மன்னிக்க முடியாத தவறாகும் என்கிறார் எங்கெல்ஸ்.

                        மார்க்சும் எங்கெல்சும் முதலாளித்துவம் ஒரளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில் தமது விஞ்ஞானக் கருத்துக்களை உருவாக்கிக் கொண்டனர். கற்பனாவாத சோஷலிசத்தில் உள்ள குறைபாடாக, மூலதனத்தின் ஆதிக்கம், முதலாளித்துவத்தின் சுரண்டலின் ஊற்று ஆகியவற்றை அறிந்து கொள்ளாமை என்று கருதினர்.

                        இதற்கான காரணத்தை எங்கெல்ஸ் முதிர்ச்சியற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிலைமைகளுக்கும் முதிர்ச்சியற்ற வர்க்க நிலைமைகளுக்கும் இணைவாய் முதிர்ச்சியற்ற கோட்பாடுகளை அவர்கள் முன்வைத்தனர் என்றார். சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வளர்ச்சியுறாத பொருளாதார  நிலைமைகளில் புதையுண்டு இன்னும் மறைந்தே  கிடந்தது. இந்தத் தீர்வினைக் கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள். சமூகத்தில் எங்கும் கேடுகள் நிறைந்திருந்தன, இவற்றை நீக்குவது அறிவுக்குரிய பணியாகும். ஆகவே குறைபாடுகளின்றிச் சிறப்பான ஒரு புதிய சமூக ஒழுங்குமுறைக்கான அமைப்பைக் கண்டுபிடித்து பிரசாரத்தின் மூலமாகவும் சாத்தியமான இடங்களில் எல்லாம் முன்மாதிரியான சோதனை முயற்சிகளின் மூலமாகவும் அதை வெளியிலிருந்து சமூகத்தின் மீது இருத்துவது அவசியமாகும். இந்தப் புதிய சமூக அமைப்புகள் கற்பனாவாத அமைப்புகளாக இருக்கும்படி முன்கூட்டியே விதிக்கப்பட்டவை. எவ்வளவு விவரமாக முழு வடிவில் வகுக்கப்பட்டனவோ, அவ்வளவு தவிர்க்க முடியாதவாறு அவை பரிசுத்தக் கற்பனைப் புனைவுகளாய்த் தடம் புரண்டு சென்றன என்று எங்கெல்ஸ் கூறினார்.

விஞ்ஞான சோஷலிசம்

                        1840க்களில் முதலாளித்துவம் முதர்ச்சியடையத் தொடங்கியது. மார்க்சிய முதலாசிரியர்களால் முதலாளித்துவத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் வகையில் வளர்ந்திருந்தது. முதலாளித்துவத்தைப் பற்றிய விமர்சனமும் விடிவும் கற்பனையில் அறிந்து கொள்ள வேண்டிய நிலையிலிருந்து கம்யூனிசத்தை அடைவதற்கு விஞ்ஞான வழிப்பட்ட கோட்பாடாக மாற்றுவதற்கான சமூக பொருளாதரம் வளர்ச்சி பெற்றுவிட்டது.

                        மார்க்சின் சோஷலிசம் விஞ்ஞானத் தன்மை பெற்றதற்கு, வரலாற்றியல் பொருள்முதல்வாதம், உபரிமதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் ரகசியம் புலப்படுத்தப்படல் ஆகிய இருமாபெரும் கண்டுபிடிப்புகளை எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்.

                        மேலும் எங்கெல்ஸ் எல்லாச் சமூக மாறுதல்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான இறுதிக் காரணங்களைப் பொருளுற்பத்தி, வினியோக முறைகளின் மாறுதல்களில் கண்டறிய வேண்டமே தவிர மனித மூளையில் அல்ல. அந்தந்தச் சகாப்தத்தின் பொருளாதாரத்தில் கண்டிறிய வேண்டுமே தவிர, தத்துவத்தில் அல்ல என்று கூறினார்.

மார்க்சிய விஞ்ஞான சோஷலிசம், வரலாற்று வழியில் வளர்ச்சியுற்ற முதலாளிக்கும், பாட்டாளிக்கும் இடையே நடைபெறும் வர்க்கப் போராட்டத்தில் இருந்து தோன்றிய அவசியமான விளைவே தவிர எந்த மேதாவிகளின் மூளையில் உதித்தக் கருத்தல்ல.

                        கற்பனாவாதிகளைப் போல் சமூக விடுதலைக்கான கருத்தை மூளையில் இருந்தோ, வெற்று தத்துவத்தில் இருந்தோ மார்க்சியம் உருவாக்கவில்லை. பொருளாதார வளர்ச்சியின் தொடர்ச்சியில் சமூக பொருளாதார அமைப்புகளின் மாற்றத்தை கண்டார் மார்க்ஸ்.

                        அப்படி என்றால் மார்க்சிய தத்துவமும், விஞ்ஞான கம்யூனிசமும் முக்கியமானது இல்லையா என்ற கேள்வி எழுவது இயற்கையே. மார்க்சியத்தின் மூன்று உள்ளடத்தில் காணப்படும் உள்ளிணக்கத்தை அறிந்து கொள்ளும் போது இதற்கான பதில் கிடைக்கும்.

                        மார்க்சியம் என்து காரல் மார்க்ஸ் தமது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எழுதிய கருத்துக்கள் முழுவதையும் குறிப்பதாகும். இதில் தத்துவம், அரசியல் பொருரதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்ற மூன்றும் உள்ளிணைப்பைக் கொண்ட உட்பிரிகளாகும்.

                        தத்துவம் என்பது இயற்கை, சமூகம் பற்றிய  அறிதலின் பொதுவான விதிகளை பற்றிய விஞ்ஞானமாகும்.

                        அரசியல்  பொருளாதாரம் என்பது மனிதச் சமூக வாழ்வின் அடித்தளமான பொருளாயதச் செல்வ உற்பத்தியை எடுத்துரைக்கிறது. அதாவது உறபத்தியின் சமூக அமைப்பு, உற்பத்தி நிகழ்வின் போது மனிதர்களுக்கிடையே ஏற்படுகிற பொருளாதார உறவுகள், மனித சமூக வளர்ச்சியில் தோன்றுகின்ற பொருளாயத நலன்கள், மற்றும் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை நிர்வகிக்கும் விதிகளை ஆராய்கிறது.

                        விஞ்ஞான சோஷலிசம் என்பது அரசியல் பொருளாதாரத்தையும், தத்துவத்தையும், ஆதாரமாகக் கொண்டு முதலாளித்துவ சமூக நிலைமைகளையும், முரணையும், அது இறுதியில் அழிந்து போவது பற்றியும், அதன் தொடர்ச்சியாக நிகழும் சோஷலிச புரட்சியினை எட்டும் நியதிகளையும் வெளிப்படுத்துகிறது.

                        இம்மூன்றில் பொருளாதாரம் முதன்னிலை பெறுகிறது. ஏன் என்றால் பொருளாதார முறையே சமூக வளர்ச்சியின் அடித்தளம் என்றும், இந்த அடித்தளமே மேற்கட்டமைப்பான தத்துவம், அரசியல், மதம், சட்டம் போன்றவற்றை நிர்ணயிக்கிறது என்றும் மார்க்சியம் கூறுவதால் பொருளாதாரமே முதன்மையாகவும், இம்மூன்றினில் அடிப்படையானதாகவும் இருக்கிறது.

                        இங்கு கூறப்பட்ட மார்க்சியம் என்ற கருத்தில் இருந்து, விஞ்ஞா சோஷலிசம் என்பது இயக்கவியல் பொருள்முதல்வாதம், மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றியது என்பதை அறிந்துகொள்ளலாம்.

                        இதனை லெனின் மார்க்சின் தத்துவப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அதுவரை உழன்று கொண்டிருந்த அறிவுசார் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கதிற்குக் காட்டியிருக்கிறது. மார்க்சின் பொருளாதாரக் கோட்பாடு ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வாக்கத்தின் உண்மை  நிலையை விளக்கியுள்ளது என்று கூறுகிறார்.

                        மார்ச்சிய தத்துவமான வரலாற்றியல் பொருள்முதல்வாதம் இன்றைய சமூகத்தில் முதலாளிக்கும் பாட்டாளிக்கும் இடையேயான பகைமையில் காணப்படும் முரணில் உருவான வர்க்கப் போராட்டத்தை எடுத்துரைக்கிறது. மார்க்சும் எங்கெல்சும் தொழில்துறை பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தை கண்ணுற்றதால் அவர்களை உணர்வுபூர்வமாக ஆதரித்து அதன் வழியில் தமது கோட்பாட்டை வகுத்துக் கொண்டனர்.

                        சோஷலிசத்தை கற்பனாவாத நிலையிலிருந்து விஞ்ஞான வகைப்பட்டதாக மாற்றுவதற்கு தொழில்துறை பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க நிலைமைகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்பதை முழுமையா உணர்ந்தனர்.

முதலாளித்துவ சமூகம் வளர்ச்சியுற்று இறுதியில் தன்னை நிலைநிறுத்த முடியாமல் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தால் எவ்வாறு வீழும் என்பதை மார்க்சும் எங்கெல்சும் கூறியதை சுருக்கமாகப் பார்ப்போம்.

நவீனத் தொழில்துறை மேன்மேலும் முழு அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ள இன்றைய நிலையில், முதலாளித்துவம் தன்னை நெறியாண்மை செய்திட முடியாமல் தினறுவதை அவ்வப்போது சந்திக்கும் பொருளாதார நெருக்கடி நமக்கு சுட்டிக்காட்டுகிறது. வளர்ச்சியடைந்துள்ள புதிய உற்பத்திச் சக்திகளை பயன்படுத்திக் கொள்ளுவதற்கு முதலாளித்துவ அமைப்பு பொருந்தா வண்ணம் விஞ்சி வளர்ந்துவிட்டது. இதன் அடிப்படையில் தான் இன்றைய வர்க்கப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த வர்க்கப் போராட்டம் என்ற மோதல் மனிதனின் மனதில் உதித்தெழுந்தது அல்ல, நமக்கு புறத்தே, புறநிலை உண்மையாக, எதார்த்த நிலவரமாக, இதை மூண்டெழச் செய்தோரது சித்தத்தை சாராமல் தன்னியல்பாக உருவானது. விஞ்ஞான சோஷலிசம் இந்த எதார்த்த உண்மையில் இருந்தே தோன்றியது. இந்த மோதலால் நேரடியாக வருத்தப்படும் வர்க்கமாகிய தொழிலாளி வர்க்கத்தின் மனத்தில் உண்டாகும் பிரதிபலிப்பே விஞ்ஞான சோஷலிசம் ஆகும்.

இந்தப் புறநிலைமைகள் நமக்கு தெரிவிப்பது என்னவென்றால், சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்திக்கும், முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமை முழுவதும் வெளிபடுகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் பாட்டாளிகள் நடத்தும் வார்க்கப்போராட்டம் பொருளியல், அரசியல், மற்றும் சித்தாந்தம் என்கிற மூன்று வழிகளில் நடைபெறுகிறது.

     முதலாளிகள், அதிக ஆதாயம் பெறுவதற்கும், அதனைத் தக்க வைப்பதற்கும்  தேவைப்படுகின்றவற்றில் எதைவேண்டுமானாலும் செய்வதற்கு முனைப்பாக இருக்கிறார்கள், இந்நிலையில், பாட்டாளிகள் தங்களது அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்காக நடத்தப்படும் போராட்டம், பொருளியல் போராட்டமாகும். அதாவது பாட்டாளிகளின் பொருளியல் நிலைமைகளை மேப்படுத்துவதற்கும், சுரண்டலிருந்து தங்களை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் குறைத்துக் கொள்வதற்கும், இருப்பதைவிட மேம்பட்ட உழைக்கும் சூழ்நிலைகளுக்கும், ஊதிய உயர்விற்கும், வேலைநேரக் கட்டுப்பாடிற்கும் ஆன போராட்டமாகும். குறிப்பாக சொன்னால் பாட்டாளி தங்களது நலவுரிமைக்கும், பாதுகாப்பிற்கும் நடத்தப்படும் போராட்டமாகும்.  பாட்டாளிகள், தங்களது உடனடி பொருளாதார நலன்களை முன்னிருத்தி போராடுகின்றனர். இதற்கு அவர்கள் சங்கம் அமைத்துக் கொள்கின்றனர். இது வர்க்கப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாகும். 

     பொருளாதார அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் போராட்டம், பாட்டாளிகளை, சுரண்டலிருந்து முழுமையாக விடுவிக்கவில்லை. ஏனென்றால் இந்தப் போராட்டங்களின் மூலம், கிடைத்திடும் பலன் அவர்களது வாழ்க்கைச் சாதனங்கள் அனைத்திற்கும் வழியமைத்து தருவதில்லை, மற்றும் தங்களது வாழ்வின் முழு பாதுகாப்பிற்கும் வழி கிடைக்கவில்லை.  இதன் மூலம் முதலாளிகளிடமிருந்து சில சலுகைகளை மட்டுமே பெறமுடிகிறது. அவர்களது வாழ்க்கைத் துன்பங்களுக்கு, முழு விடுதலை என்பது கிடைத்திடவில்லை.  இந்தச் சலுகைகளை பெறுவதற்கே பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது.  பொருளாதாரப் போராட்டத்தின் போது பாட்டாளிக்கள் தங்களது கூட்டம் கூடுவதற்கும், சங்கம் நடத்துவதற்கும், தமக்கான பத்திரிகை நடத்துவதற்கும் ஆன உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு போராட வேண்டிவருகிறது. இவ்வாறு பாட்டாளிகளின் போராட்டம் அரசியல் போராட்டமாக வடிவெடுக்கிறது.

போராடிப் பெற்ற சிறு சலுகைகளை தக்க வைப்பதற்கும், இதனை சட்டமாக்குவதற்கும், அதாவது அரசியல் போராட்டதிற்காக, தங்களது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டி வருகிறது, இதன் மூலம் பொருளாதாரப் போராட்டம் அவர்களை அரசியல்  போராட்டத்திற்கு இட்டுச்செல்கிறது.

தன்னியல்பான பொருளாதாரப் போராட்டத்துடன், அரசியல் போராட்டமும் இணையும் போது, பாட்டாளிகளின் அரசியல் உணர்வு மேலோங்குகிறது. அரசியல் கோரிக்கைகள் அவர்களின் கம்யூனிச உணர்வை வளர்த்துவிடுகிறது.  முதலாளிக்கு எதிரான போராட்டத்தில், பாட்டாளிகள் சங்கமாய் இணைந்து போராடும் போது, பாட்டாளிகள் ஒரு வர்க்கமாய் சேகரமாகிறார்கள். வர்க்கமாய் தமது போராட்டத்தை நடத்தும் போது, முதலாளியை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம், முதலாளித்துவ வர்க்கத்தை நோக்கிய போராட்டமாக - வர்க்கப்போராட்டமாக - உருமாறுகிறது. இந்தப் போராட்டத்தில் முதலாளித்துவம், பாட்டாளி வர்க்கத்தை நோக்கி சட்டமுறைகளிலும், சட்டத்திற்கு எதிரான வழிகளிலும் ஒடுக்க முற்படுகிறது. அப்போது முதலாளித்துவ அரசிற்கு எதிரான போராட்டம், முதலாளித்துவ நாடாளுமன்றத்திற்கு எதிராகவும், முதலாளித்துவ அமைப்பு முழுமைகு எதிரான போராட்டமாகவும் மாறுகிறது. பொருளாதாரப் போராட்டத்தை, அரசியல் போராட்டமாக தொடரச் செய்யும் போது, உருவான நோக்கங்கள், குறிக்கோள்கள், போராட்ட முறைகள் ஆகியவை பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்தமாக திரட்டப்படுகிறது.

முதலாளித்துவ சித்தாந்தத்தை எதிர்கொள்ளும் வகையில், பாட்டாளிகள் தங்களது சித்தாந்ததை உருவாக்க வேண்டியிருக்கிறது. சுரண்டும் வர்க்கமான முதலாளித்துவத்தை, சங்கம் அமைத்து எதிர்க்கும் போது, சமூகத்தில் உள்ள அனைத்து தொழிலாளிச் சங்கங்களையும் இணைத்து வழிநடத்துவதற்கு, பாட்டாளிகளுக்கு புரட்சிகரமான கட்சி தேவைப்படுகிறது.

இதனை லெனின், தொழிலாளிகளிடையே சமூக-ஜனநாயகவாத கம்யூனிச உணர்வு இருந்திருக்க முடியாது என்று சொன்னோம். அது வெளியிலிருந்துதான் அவர்களுக்கு கொண்டுவரப்படவேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாகத் தொழிற்சங்க உணர்வு மட்டுமே -அதாவது, தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிரத்துப் போராடுவது, இன்றியமையாத தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முயல்வது, முதலியவற்றின்  இன்றியமையாமைப் பற்றிய துணுபு மட்டுமே -  வளர்த்துக்கொள்ள முடிகிறது என்று எல்லா நாடுகளின் வரலாறு புலப்படுத்துகிறது. ஆனால் சோஷலிஸத்தின் கொள்கை, மெய்யறிவுவகைப்பட்ட, வரலாறுவழிப்பட்ட, பொருளாதார வகைப்பட்ட கொள்கைகளிலிருந்து வளர்ந்ததாகும், சொத்துள்ள வர்க்கங்களின் பிரதிநிதிகள், அறிவுத்துறையினர், அவற்றை வகுத்து விளக்கினர். நவீன விஞ்ஞான சோஷலிஸத்தின் மூலவர்களான மார்க்சும், எங்கெல்சும் முதலாளி வர்க்கப் போக்கான படிப்பாளிப்பகுதினரைச் சேர்ந்தவர்கள் என்று லெனின் கூறுகிறார்.    
                                  
இக்கட்சி புரட்சிகரமாக செயற்படுவதற்கு, புரட்சிகரமான கொள்கை தேவைப்படுகிறது. அந்தச் சித்தாந்தத்தை மார்க்சின் பொருள்முதல்வாதம் அளிக்கிறது. குறிப்பாக மார்க்சிய தத்துவயியலில் உள்ள வரலாற்றியல் பொருள்முதல்வாதம், பாட்டாளி வர்க்கத்திற்குரிய விஞ்ஞான கம்யூனிச சித்தாந்தம் என்கிற புரட்சிகர கொள்கைகளை வகுத்தளிக்கிறது.

விஞ்ஞான கம்யூனிச சித்தாந்தத்தை எங்கெல்ஸ் தமது டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில் எளிமையாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறார். ஆதனை கீழே சுருக்கமாக பார்வையிடுவோம்.

சந்தையின் தேவையை நோக்கி பல்வேறு உற்பத்தியாளர்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த திட்டம் ஏதுமில்லாமல் சரக்கை உற்பத்தி செய்திடுகின்றனர். இதனால் உற்பத்தியில் அராஜகம் (ஹயேசஉரல டிக ஞசடினரஉவடைே) ஏற்படுகின்றது. குறிப்பிட்ட சரக்கின் தேவை சந்தையில் உருவாவதைக் காணும் போது, பல்வேறு முதலாளிகள் அப்பொருளையே உற்பத்தி செய்திட முனைகின்றனர். கால ஓட்டத்தில் அப்பொருளின் தேவைவிட அதிகமாக உற்பத்தியாகிவிடுகிறது, அதனால் உற்பத்தியான சரக்கு சந்தையில் விற்பனையாகமல் தேங்கிவிடுகின்றன. இது போன்ற நேரங்களில் விலையில் கடுமையான இறக்கம் காண்கிறது. அதானல் உற்பத்தியாளர், அச்சரக்கின் உற்பத்தியை குறைத்துக்கொள்கிறார், அல்லது முழுவதுமாக நிறுதிவிட்டு, வேறொரு சரக்கை உற்பத்தி செய்ய முயல்கிறார்.

ஆதாயம் பெருகுவதையே நோக்கமாக கொண்ட முதலாளிகளுக்கிடையே உள்ள  போட்டா போட்டியின் விளைவாக மிகுதியான சரக்குகள் உற்பத்தி செய்து விடுகின்றனர், அதற்கான சந்தையின் தேவையைப் பற்றி கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இவ்வாறு மிகுஉற்பத்தி (டிஎநசயீசடினரஉவடைே) என்னும் சிக்கலில்  முதலாளித்துவச் சமூகம் வீழ்கிறது

முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் பொறியமைவு முழுதுமே அதனாலேயே தோற்றுவிக்கப்பட்ட உற்பத்தி சக்திகளால் நெரிக்கப்பட்டுக் குலைந்து போகிறது. பெருவாரியான இந்தப் பொருளுற்பத்தி சாதனங்களை அதனால் மூலதனமாக மாற்ற முடியவில்லை. முதலாளித்துவ சமூகம் செயலற்று முடங்கி போய்விடுகின்றன. 483

பொருளுற்பத்தி முறை பரிவர்த்தனை முறையினை எதிர்த்துக் கலகம் புரிகிறது, பொருளுற்பத்தி சக்திகள் எதை மீறி வளர்ந்து விடடனவோ அந்தப் பொருளுற்பத்தி முறைக்கு எதிராகக் கலகம் செய்கின்றன.

ஒருபுறத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறை தொடர்ந்து இந்த உற்பத்தி சக்திகளை நெறியாண்மை புரியத் திறனற்றது என்பது நிரூபிக்கப்படுகிறது. மறுபுறத்தில் இந்த உற்பத்தி சக்திகள் தற்போது நிலவும் முரண்பாட்டை நீக்குவதற்காக, மூலதனம் என்ற முறையில் தமக்குள்ள இயல்பை ஒழிப்பதற்காக, சமூகப் பொருளுற்பத்தி சக்திகள் என்ற முறையில் தமக்குள்ள தன்மை நடைமுறையில் அங்கீகரிக்கப்படுவதற்காக மேலும் மேலும் கூடுதலான ஆற்றலுடன் போராடி முன்னேறிச் செல்கின்றன.

அதனால் முதலாளித்துவச் சமூகத்தின் உறுதியான திட்டம் ஏதும் இல்லாத பொருளுற்பத்தியானது வரப்போகும் சோஷலிச சமூகத்தின் உறுதிவாய்ந்த திட்டவழியிலான பொருளுற்பத்திடம் சரணடைகிறது.

பாட்டாளி வர்க்கம் சமூகப் புரட்சியின் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. முதலாளி வர்க்கத்தின் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்தி சாதனங்களை இவ்விதம் அது பொதுச் சொத்தாக்குகிறது.

உற்பத்தி சாதனங்களைச் சமூகம் கைப்பற்றிக் கொண்டதும், பரிவர்த்தனைப் சரக்கு உற்பத்திக்கு முடிவுகட்டுகிறது. இதனுடன் கூடவே உற்பத்தியாளரை உற்பத்திப் பொருள் அடக்கி ஆளுமை செலுத்தவதும் ஒழித்துவிடுகிறது. சமூகப் பொருளுற்பத்தியில் அராஜகம் ஒழிக்கப்பட்டு, திட்டப் பொருத்தமுடைய, உணர்வு பூர்வமான ஒழுங்கமைப்பு உண்டாக்கப்படுகிறது. தனி மனிதனின் பிழைப்புப் போராட்டம் மறைகிறது.

மனிதனது சுற்றுச் சார்பாய் அமைந்து, இது காறும் மனிதனை ஆட்சி செய்து வந்த வாழ்நிலைமைகள் இப்பொழுது மனிதனுடைய ஆதிக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டு விடுகின்றன. முதன்முதலாய் மனிதன் இயற்கையின் மெய்யான உணர்வு பூர்வமான அதிபதியாகிறான்.

நவீன காலத்தில் சமூக மாற்றத்தை நிகழ்த்த இருக்கும் பாட்டாளி வாக்கத்துக்கு தம் நிலைமைகளையும் செய்து முடிக்க வேண்டிய சகாப்தகரமான இந்தப் பணியின் முக்கியத்துவத்தை முழு அளவில் தெரியப்படுத்துவது தான் பாட்டாளி வாக்க இயக்கத்தின் கோட்பாட்டு வெளீயிடாகிய  விஞ்ஞான சோஷலிசத்தின் கடமையாகும்.

பொருளாதார நிலைமைகளில் இருந்தே இந்த வர்க்க மோதலுக்கு முடிவு கட்டுவதற்கான சக்தியாக பாட்டாளி வர்க்கத்தை மார்க்சியம் இனம் காட்டுகிறது. இதனை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கீழ்காணும் வகையில் கூறுகிறது.

இன்று முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் எல்லா வர்க்கங்களிலும் பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் மெய்யாகவே புரட்சிகரமான வர்க்கமாகும். ஏனைய வர்க்கங்கள் நவீனத் தொழிலினது வளர்ச்சியின் முன்னால் நலிவுற்றுச் சிதைந்து முடிவில் மறைந்து போகின்றன, பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் நவீனத் தொழிலுக்கே உரித்தான அதன் நேரடி  விளைவாய் அமைகிறது.

இதனை எங்கெல்ஸ் மிகவும் சுருக்கமாக கூறுவார், கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைமைகள் பற்றிய போதனை. கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையே உள்ள உறவு இதன் அடிப்படையில் தான் அமைந்துள்ளது.

கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் உள்ள நலன்களைத் தவிர வேறு தனிப்பட்ட நலன்கள் எவையும் கொண்டவர்கள் இல்லை. பாட்டாளி வர்க்கத்தை வழிநடத்தும் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு இருக்க வேண்டிய திறமைகளை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிப்படுத்துவதைப் பார்ப்போம்.

வெவ்வேறு நாடுகளில் தேச அளவில் பாட்டாளிகள் நடத்தும் போராட்டங்களில் அவர்கள் தேசிய இனம் கடந்து பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் உரித்தான பொதுநலன்களைச் சுட்டிக்காட்டி முன்னிலைக்கு கொண்டு வருபவர்கள் கம்யூனிஸ்ட்கள். முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கப் போராட்டம் கடந்து செல்ல வேண்டியிருக்கும் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும் அவர்கள் எப்போதும் எங்கும் இயக்கம் அனைத்துக்குமான நலன்கைளப் பிரதிநிதித்துவப் படுத்துபவரே கம்யூனிஸ்டுகள்.

ஆகவே நடைமுறையில் கம்யூனிஸ்டுகள் எல்லா நாடுகளிலும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளது மிகவும் முன்னேறிய, மிகவும் வைராக்கியமான பகுதியாய், ஏனைய எல்லோரையும் முன்னோக்கி உந்தித் தள்ளும் பகுதியாய் இருக்க வேண்டும். கோட்பாட்டில் கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வழிநடப்பையும் நிலைமைகளையும் பொதுவான இறுதிவிளைவுகளையும் தெளிவாய்ப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தை, பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத அனுகூலத்தைப் பெற்றிருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சியை நடத்தும்  கம்யூனிஸ்டுகளுக்கு இருக்க வேண்டிய திறத்தை அறிக்கை இவ்வாறு வெளிப்படுத்துகிறது.

அந்தந்த நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள் தமது நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியின் நிலையினைப் புரிந்து, அதற்கு ஏற்ற வகையில் போர்தந்திரங்களை அமைத்துக் கொண்டு பாட்டாளி வர்க்த்தின் முன்னேற்றத்துக்கு உரிய முன்னணிப்படையாக செயற்பட வேண்டும்.

இதனை ஸ்டாலின் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி ஒர் உண்மையான கட்சியாக விளங்க வேண்டும் என்றால், உற்பத்தியின் வளர்ச்சி விதிகளைப் பற்றியும், சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி விதிகளைப் பற்றியும், அந்தக் கட்சி அறிவு பெற்றிருக்க வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக இதில் அறிவு பெற்றிருத்தல் அவசியம். எனவே, தனது கொள்கையில் தவறிழைக்காமல் இருக்க வேண்டும் என்றால், பாட்டாளி வர்ககத்தின் கட்சி தனது வேலை திட்டத்தை வகுத்துக் கொள்வதிலும், நடைமுறை வேலைகளைச் செய்வதிலும், முதன் முதலில் எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்உற்பத்தியின் வளர்ச்சியைப் பற்றிய விதிகளிலிருந்துதான், சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய விதிகளிலிருந்து தான் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஸ்டாலின் கூறுவது போல் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலை திட்டத்தில், கொள்கை முறையிலான தவறை செய்திடாமல் இருக்க வேண்டும் என்றால் வெறும் மார்க்சிய கருத்துக்களை வெளிப்படுத்தும் முழுக்கத்தினை மட்டும் படித்துவிட்டு கட்சியில் ஈடுபடாமல், அரசியல் பொருளாதாரத்திலும், பொருள்முதல்வாதத்திலும் திறம் பெற்றவர்களாக திகழவேண்டும்.  

3 comments:

  1. VeeraBalu எனக்கு அனுப்பிய தகவல்

    http://www.facebook.com/veera.balu

    படித்தேன் தோழர்
    விஞ்ஞான சோசலிசத்துக்கும் கற்பனை வாத சோசலிசத்துக்கும் உள்ள வேறுபாட்டை எளிமையாக புரிந்து கொள்ளும்படி எழுதுயிருந்தீர்கள்.அத்தோடு எப்படி பொருளாதார போராட்டத்தை அரசியல் படுத்துவது அதற் கான சித்தாந்தை பெருவது போன்றவைகளையும் எளிமையாக விளக்கி இருந்தீர்கள்.பகிர்தமைக்கு நன்றி.எனக்கு உங்களின் புத்தகங்கள் வேண்டும்.எப்படியாவது கிடைக்க வழிசெய்யுங்கள் தோழர்.நன்றி

    ReplyDelete
  2. உற்பத்தியின் வளர்ச்சி விதிகள் , பொருளாதார வளர்ச்சி விதிகள் அப்படினா என்ன ?

    ReplyDelete
  3. உற்பத்தியின் வளர்ச்சி விதிகள்:-

    உற்பத்தியின் வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. உழைப்புச் சக்தியின் வளர்ச்சி, முதன்மையாய் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியால் தோன்றுகிறது. உற்பத்தியைப் பெருக்குவதற்கு, உற்பத்திக் கருவிகளை செம்மைப்படுத்துவதும், தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் கூடவே மனிதர்களின் உழைப்புத் திறன் தேர்ச்சி பெறுகிறது, உற்பத்தி அனுபவம் வளமை அடைகிறது.

    பொதுவாக உற்பத்தியின் வளர்ச்சியையே பொருளாதார வளர்ச்சியாகவும் கூறப்படுகறிது.

    பொருளாதார அமைப்பின் வளர்ச்சி என்பது வேறு, 1 பண்டைய கூட்டுவாழ் கம்யூனிச சமூக உற்பத்திமுறை, 2 அடிமை சமூக உற்பத்திமுறை, 3 நிலப்பிரப்புத்துவ சமூக உற்பத்திமுறை, 4 முதலாளித்துவ சமூக உற்பத்திமுறை என்ற ஒவ்வொரு கட்டத்தையும் குறிகிறது.

    ReplyDelete