Friday 9 September 2016

வன்முறை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி டாக்டர் அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கர் எழுதிய “புத்தரா, காரல் மார்க்சா?” என்ற இச்சிறுகட்டுரை எட்டு உட்தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. ஆறாவது உட்தலைப்பில் கம்யூனிசத்தை நிறுவுவதற்கு கம்யூனிஸ்டுகளுக்கு வன்முறை, பாட்டாளிகளின் சர்வாதிகரம் இரண்டு வழிமுறைகள் தான் உள்ளன என்பதாக விவரிக்கிறார்.
கம்யூனிஸ்டுகள் பின்பற்றும் வழிவகையாகவே வன்முறையை அம்பேத்கர் குறிப்பிடுகிறார். கம்யூனிஸ்டுகள் வன்முறை பிரியர்கள் கிடையாது. அராஜவாதிகளின் வன்முறையைக் கம்யூனிஸ்டுகள் எதிர்த்தார்கள். கம்யூனிஸ்டுகள் வன்முறையைச் சமூகத்தில் திணிப்பதில்லை என்பதே உண்மையாகும்.

தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா? என்ற கேள்வியை எழுப்பி எங்கெல்ஸ் பதிலளிக்கிறார்:-

"தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே. இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள். புரட்சிகள் திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக அவை எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும் அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.

ஆனால், அதே வேளையில், ஏறத்தாழ எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பலவந்தமாக அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள் தங்களின் முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும் கம்யூனிஸ்டுகள் காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைப் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்." (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்)

கம்யூனிஸ்டுகள் வன்முறையை ஆராதிப்பதில்லை, வன்முறையினால் விளைகின்ற கேடுகளைக் கம்யூனிஸ்டுகள் அறிந்திருக்கின்றனர். வன்முறை தன்னிச்சையாகப் புரட்சியின் போது கையாளப்படுவதில்லை. அந்த நிலையினைத் தீர்மானிப்பது புறநிலைமைகளே. அதேநேரத்தில் பாட்டாளி வர்க்கம் இறுதியில் வன்முறையை நோக்கித் தள்ளப்படுமாயின், சொல் மூலம் கொடுக்கப்படும் பாதுகாப்பு, செயல் மூலமும் கொடுக்கப்படும் என்று உறுதியாக எங்கெல்ஸ் கூறியுள்ளார். ருஷ்யப் புரட்சியைக் குறைவான ரத்தம் சிந்தப்படுவதற்கு ஏற்றவகையில் புரட்சியின் தருணத்தை லெனின் தேர்ந்தெடுத்தார். புரட்சியின் போது சிந்திய ரத்தத்தைவிடப் புரட்சியைக் காப்பதற்குதான் அதிகம் ரத்தம் சிந்தப்பட்டது.

புரட்சிகரச் சூழ்நிலை இல்லாத போது பலத்தைப் பிரயோகிப்பது முட்டாள் தனமானது என்றும் புரட்சிகரச் சூழல் இருக்கும் போது பலத்தைப் பயன்படுத்த தயங்குவது கோழை தனமானது என்றும் எங்கெல்ஸ் கூறுகிறார்.

"ஒரு சில சந்தர்ப்ப நிலைமைகளின் கீழ் ஒருவன் சதிச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பானாகில் அவன் ஒரு கோழை என்றே கருதப்படுவான். அதே போல வேறுவிதமான சந்தர்ப்ப நிலைமைகளின் கீழ் அவ்வாறு செயல்பட்டான் என்றால் ஒரு முட்டாள் என்று கருதப்படுவான்."

அராஜகவாதிகளின் சதி திட்டத்திற்கும், மார்க்சிய வழிப்பட்ட புரட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் லெனின்:-
“புரட்சி எழுச்சி வெற்றிக்கு வழிவகுக்க வேண்டுமானால் அது சதியாலோசனை மீதோ மற்றும் ஒரு கட்சியினையோ நம்பிச் சார்ந்திருக்கக் கூடாது. மாறாக முன்னேற்றமான வர்க்கத்தின்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதுவே முதல் நிபந்தனை.

புரட்சி எழுச்சி மக்களின் புரட்சிகரமான கிளர்ச்சியைச் சார்ந்திருக்க வேண்டும். இது இரண்டாவது நிபந்தனை.

புரட்சி எழுச்சி வளர்ந்து வரும் புரட்சியின் வரலாற்றின் திரும்பு முனையைச் சார்ந்திருக்க வேண்டும். அப்பொழுது மக்களின் முன்னேற்றமான அணிகளின் செயல்பாடு அதன் உச்சத்தில் இருக்கும், எதிரியின் அணிகளிலும் புரட்சியின் பலவீனமான அரை-மனது மற்றும் உறுதியற்ற நண்பர்களின் அணிகளிலும் ஊசலாட்டங்கள் ஆக வலுவாக இருக்க வேண்டும். இது மூன்றாவது நிபந்தனை.” (மார்க்சியமும் கிளர்ச்சியும்)

புரட்சியை மக்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் தோற்றுவிப்பதில்லை. அதற்கான புறச்சூழ்நிலையின் விளைவாகத்தான் நடத்துகின்றனர். இந்த அக-புற நிலைமைகளை மார்க்சியம் தெளிவாகவே முன்வைத்துள்ளது.

லெனின்:- “புரட்சிகரச் சூழ்நிலை இல்லையேல் புரட்சி சாத்தியமன்று, அதேபோது புரட்சிகரச் சூழ்நிலை ஒவ்வொன்றும் புரட்சியை எழச் செய்ய வேண்டுமென்பதும் இல்லை- மார்க்சியவாதிக்கு இது மறுக்க முடியாத ஒன்று. பொதுவாகப் பேசுமிடத்து, புரட்சிகரச் சூழ்நிலை என்பதற்கான அறிகுறிகள் யாவை? எந்தத் தவறும் இழைக்கவில்லை என்கிற நிச்சயத்துடன் நாம் பின்வரும் மூன்று பிரதான அறிகுறிகளைக் குறிப்பிடலாம்.

1) ஆளும் வர்க்கங்கள் தமது ஆட்சியை எந்த மாற்றமும் இன்றித் தொடர்ந்து நடத்திச் செல்வது சாத்தியமற்றதாகுதல், “மேல் வர்க்கங்களிடையே” ஏதேனும் ஒரு வடிவத்தில் நெருக்கடி ஏற்பட்டு, ஆளும் வர்க்கத்தினுடைய கொள்கை நெருக்கடிக்கு உள்ளாகி, இதன் விளைவாய் வெடிப்பு உண்டாகி ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய அதிருப்தியும் ஆத்திரமும் இவ்வெடிப்பின் வழியே பீறிட்டெழுதல். புரட்சி நடைபெறுவதற்கு, பழைய வழியில் வாழ “அடிமட்டத்து வர்க்கங்கள் விரும்பாதது” மட்டும் சாதாரணமாகப் போதாது, பழைய வழியில் வாழ “மேல் வர்க்கங்களுக்கு முடியாமல் போவதும்” அவசியமாகும்.

2) ஒடுக்கப்படும் வர்க்கங்களுடைய துன்பதுயரமும் வறுமையும் வழக்கமாக இருப்பதைக் காட்டிலும் மேலும் கடுமையாகிவிடுதல்.

3) மேற்கண்ட காரணங்களின் விளைவாய் மக்கட் பெருந்திரளினரது செயற்பாடு கணிசமாய் அதிகரித்துவிடுதல், மக்கட் பெருந்திரளினர் “சமாதான காலத்தில்” தாம் சூறையாடப்படுவதற்கு முறையிடாமலே இடமளிப்பவர்களாயினும், கொந்தளிப்பான காலங்களில், வரலாறு படைக்க வல்ல சுயேச்சைச் செயலில் இறங்கும்படி நெருக்கடி நிலைமை யாவற்றாலும் மற்றும் “மேல் வர்க்கங்களாலுங்கூட” இழுத்து விடப்படுகிறார்கள்.

தனிப்பட்ட குழுக்கள், கட்சிகளின் சித்தத்தை மட்டுமின்றி, தனிப்பட்ட வர்க்கங்களின் சித்தத்தையும் சார்ந்திராத இந்த எதார்த்தப் புறநிலை மாறுதல்கள் இல்லாமல், பொதுவாகப் புரட்சி சாத்தியமன்று. இந்த எதார்த்தப் புறநிலை மாறுதல்கள் யாவும் சேர்ந்த ஒட்டுமொத்தமே புரட்சிகரச் சூழ்நிலை எனப்படுவது.” (இரண்டாவது அகிலத்தின் தகர்வு)

முதலாளித்துவச் சமூகத்திலிருந்து கம்யூனிச சமூகத்தை எட்டுவதற்கு இடையே ஒர் இடைக்கட்டம் தேவை என்பதை மார்க்ஸ் உணர்ந்தார். அதனைக் கோத்தா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனம் எழுதிய போது முதன்முறையாக வெளிப்படுத்தினார். அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகத்தான் இருக்க முடியும் என்பதையும் அறிவிக்கிறார்.

"முதலாளித்துவச் சமூகத்துக்கும் கம்யூனிச சமூகத்துக்கும் இடையில் ஒன்று மற்றொன்றாகப் புரட்சிகர மாற்றம் அடையும் கட்டம் உள்ளது. இதற்கு இணயாக அரசியல் இடைக்காலக் கட்டம் ஒன்றும் இருக்கிறது, இந்த இடைக்காலத்தில் அரசு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரம் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது"

கம்யூனிச சமூகத்தை அடைவதற்கான இந்த இடைக்காலக் கட்டமான முதல்கட்டத்தைச் சோஷலிச சமூகம் என்றும் அடுத்தக் கட்டத்தைக் கம்யூனிச சமூகம் என்றும் அழைக்கப்படுகிறது.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதில் உள்ள சர்வாதிகாரத்தை எப்படி நேர்பொருளில் எடுத்துக் கொண்டு, அதனை அறநெறியில் விமர்சிப்பது தவறானதோ. அதே போல முதலாளித்துவச் சமூகத்தில் கூறப்படும் ஜனநாயகம் என்பதை அதன் நேர் பொருளில், அனைவருக்குமான ஜனநாயகமாய் புரிந்து கொள்வது தவறானதாகும். முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பற்றி லெனின் கூறுவதைப் பார்ப்போம்.

“முதலாளித்துவச் சமூகத்தில், மிகவும் சாதகமான நிலைமைகளில் அது வளர்வதாய்க் கொள்வோமாயின், ஜனநாயகக் குடியரசில் ஓரளவு முழுமையான ஜனநாயகம் இருக்கக் காண்கிறோம். ஆனால் இந்த ஜனநாயகம் எப்பொழுதும் முதலாளித்துவச் சுரண்டலால் எழுப்பப்படும் குறுகலான வரம்புகளால் இறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இது நடைமுறையில் எப்பொழுதும் சிறுபான்மையோருக்கான ஜனநாயகமாகத்தான், சொத்துடைத்த வர்க்கங்களுக்கு மட்டுமேயான, செல்வந்தர்களுக்கு மட்டுமேயான ஜனநாயகமாகத்தான் இருக்கிறது.

முதலாளித்துவச் சமூகத்தில் சுதந்திரமானது பண்டைக் கிரேக்க குடியரசுகளில் இருந்ததே, எறத்தாழ அதேபோல அடிமையுடைமையாளர்களுக்கான சுதந்திரமாகத்தான் எப்பொழுதுமே இருந்து வருகிறது. முதலாளித்துவச் சுரண்டலின் நிலைமைகள் காரணமாய்த் தற்காலக் கூலி அடிமைகள் பட்டினியாலும் வறுமையினாலும் நசுக்கப்பட்டு “ஜனநாயகம் குறித்துத் தொல்லைப்பட முடியாதபடி”, “அரசியல் குறித்துத் தொல்லைபட அடியாதபடி” அவல நிலையில் இருத்தப்பட்டிருக்கிறார்கள்.” (அரசும் புரட்சியும் – பக்கம்-116)

மேலும் லெனின் கூறுகிறார்:-      
“மிகச் சொற்பமான சிறுபான்மையோருக்கு ஜனநாயகம், செல்வந்தர்களுக்கு ஜனநாயம் (இதுதான் முதலாளித்துவச் சமூத்தில் நிலவும் ஜனநாயகம். முதலாளித்துவ ஜனநாயகத்தின் கட்டமைவை மேலும் நெருங்கிச் சென்று பார்த்தோமாயின், வாக்குரிமையின் “அற்ப”- அற்பமானவை என்று சொல்லப்படுகிற) விவரங்களிலும், பிரதிநிதித்துவ உறுப்புகளின் செயல்முறையிலும், கூட்ட உரிமைக்கு நடைமுறையில் இருந்துவரும் தடங்கல்களிலும், நாளேடுகளின் முற்றிலும் முதலாளித்துவ முறையிலான ஏற்பாட்டிலும், இன்ன பிறவற்றிலும் எங்கும் ஜனநாயகத்துக்குக் கட்டுக்குமேல் கட்டுப்போடப்பட்டிருப்பதைத் தான் காண்கிறோம். ஏழைகளுக்கு இடப்பட்டுள்ள இந்தக் கட்டுகளும் விலக்குகளும் ஒதுக்கல்களும் தங்கல்களும் அற்பசொற்பமாகவே தோன்றும்,

முக்கியமாய் இல்லாமையை நேரில் அறிந்திராதோருக்கும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடன் அவற்றின் வெகுமக்கள் வாழ்வில் என்றுமே நெருங்கிய தொடர்பு கொண்டிராதோருக்கும் இப்படித்தான் அற்பசொற்பமாகவே தோன்றும். ஆனால் ஒட்டுமொத்தத்தில் இந்தக் கட்டுகள் ஏழைகள் அரசியலில் இருந்து, ஜனநாயகத்தில் நேரடியாய் பங்கு கொள்வதில் இருந்து ஒதுக்கி வெளியே தள்ளிவிடுகின்றன.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் இந்தச் சாரத்தை மார்க்ஸ் மிக நன்றாய் உணர்ந்திருந்தார். கம்யூனுடைய அனுபவத்தை ஆராய்கையில் ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கும் வர்க்கத்தின் எந்தப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் நமது பிரதிநிதிகளாய் அமர்ந்து தம்மை அடங்கி ஒடுக்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தீர்மானிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.” (அரசும் புரட்சியும் – பக்கம்-117-118)

லெனின் பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தில் ஜனநாயகம் பெருவாரியான மக்களுக்கு விரிவாக்கப்படுவதைக் குறிப்பிடுகிறார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது மக்களின் மீதான சர்வாதிகாரம் கிடையாது. மக்கள் அரசின் மீது எதிர்ப்பை செலுத்துகிற எதிராளிகளின் மீதான சர்வாதிகாரம்:-
“பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது, அதாவது ஒடுக்குமுறையாளர்களை அடகுவதற்காக ஒடுக்கப்பட்டவர்களுடைய முன்னணிப்படை ஆளும் வர்க்கமாய் அமையும் ஒருங்கமைப்பானது ஜனநாயகத்தை விரிவாக்குவதோடு மட்டும் நின்றுவிடக் கூடியதல்ல. ஜனநாயகத்தைப் பிரம்மாண்டமான அளவில் விரிவாக்குவதுடன், பணமூட்டைகளுக்கான ஜனநாயகமாய் இராது. முதன்முதலாய் ஏழைக்களுக்கான ஜனநாயகமாய், மக்களுக்கான ஜனநாயகமாய் ஆக்குவதுடன் கூடவே ஒடுக்குமுறையாளர்களும் சுரண்டலாளர்களும் முதலாளிகளுமானோரின் சுதந்திரத்துக்குப் பட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் வரிசையாகப் பல கட்டுகளை விதித்திடுகிறது.

மனிதகுலத்தைக் கூலி அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு இவைகளை நாம் அடக்கியாக வேண்டும். இவர்களுடைய எதிர்ப்பை வன்முறை கொண்டு நசுக்கியாக வேண்டும். அடக்கியாளுதல் இருக்கும்வரை, பலாத்காரம் இருக்கும்வரை சுதந்திரத்துக்கோ ஜனநாயகத்துக்கோ இடமில்லை என்பது தெளிவு.

பெபெலுக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸ் இதனை மிகச்சிறப்பான முறையில் எடுத்துரைத்தார். “பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு தேவைப்படுவது தனது எதிராளிகளை அடக்கி இருத்துவதற்காகவே அன்றிச் சுதந்திரத்தின் நலன்களுக்காக அல்ல, சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமாகியதும் அரசு அரசாய் இருப்பதற்கு முடிவு ஏற்படுகிறது” என்று இக்கடிதத்தில் எங்கெல்ஸ் கூறியது வாசகர்களுக்கு நினைவிருக்கும். .
       .......
கம்யூனிச சமூகத்தில்தான் – முதலாளிகளுடைய எதிர்ப்பு அடியோடு நசுக்கப்பட்டு, முதலாளிகள் மறைந்து போய், வர்க்கங்கள் இல்லாமற் போய்விடும் (அதாவது, சமூகத்தின் உறுப்பினர்களைடையே சமூக உற்பத்திச் சாதனங்களுடன் அவர்களுக்குள்ள உறவு சம்பந்தமாய் எந்தப் பாகுபாடும் இல்லாமற் போய்விடும்) அப்பொழுது மட்டும் தான் “அரசு… இல்லாமற் முடிவு ஏற்படுகிறது”, “சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமாகிறது.”

அப்பொழுதுதான் மெய்யாகவே முழுநிறைவான ஜனநாயகம், விதிவிலக்கு எதுவுமில்லாத ஜனநாயகம் சாத்தியமாகிக் கைவரப் பெறுகிறது. அப்பொழுதுதான் ஜனநாயகம் உலர்ந்து உதிரத் தொடங்கும். “முதலாளித்துவ அடிமை வாழ்வில் இருந்தும் முதலாளித்துவச் சுரண்டலின் சகிக்கமுடியாத கொடுமைகளில் இருந்தும் மிருகத்தனத்தில் இருந்தும் அபத்தங்களில் இருந்தும் இழுக்குகளில் இருந்தும் விடுபட்டு மக்கள் பலநூறு ஆண்டுகளாய் அரியப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அரிச்சுவடி நீதிவிளக்கங்களில் எல்லாம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வந்துள்ள சமூக ஒட்டுறவின் சர்வசாதாரண விதிகளைப் பற்றியொழுகச் சிறிதுசிறிதாய் பழகிக் கொள்வார்கள். பலாத்காரம் இல்லாமலே, பலவந்தம் இல்லாமலே. கீழ்ப்படிதல் இல்லாமலே, பலவந்தத்துக்கான அரசு எனப்படும் தனிவகை இயந்திரம் இல்லாமலே அவர்கள் இவ்விதிகளைப் பற்றியொழுகப் பழகிக் கொள்வார்கள்.” (அரசும் புரட்சியும் – பக்கம்-118-119)

கம்யூனிச சமூகத்தில் இருப்பவர்கள் இன்றைய முதலாளித்துவச் சமூக மக்களின் மனோநிலையில் இருப்பத்தில் இருந்து விடுபட்டவர்களாவர். அதனால் அரசு உலர்ந்து உதிர்ந்த பின்பு அங்கே அராஜகம் எழுவதில்லை, அதற்கான சூழல் அந்தச் சமூகத்தில் காணப்படுவதும் இல்லை.

அம்பேத்கர் அறநெறி சக்தி தோல்வியடையும் போது அதன் இடத்தில் விலங்கு சக்தி எடுத்துக்கொள்ளும் என்கிறார். மேலும் வர்க்க முரண்பாட்டை நீக்குவதற்கு எண்வழிப்பாதையே (அஷ்டாங்க மார்க்கம்) அதாவது நற்கருத்து, நற்நோக்கம், நற்பேச்சு, நற்நடத்தை, நற்வாழ்கைவழி, நற்முயற்சி, நற்மனவுணர்வு போன்றவையே போதுமானதாகக் கருதுகிறார். நல்லவைகளும் தீயவைகளும் மனிதனிடத்தில் எவ்வாறு தோற்றம் கொள்கின்றன என்ற புரிதல் இல்லாது நற்சிந்தனையே முரண்பாட்டை ஒழிப்பதற்குப் போதுமானதாக் கருதுகிறார்.


மனிதர்கள் தமது செயற்பாட்டைக் குறிக்கோளாக அமைத்துக் கொண்டுதான் செயற்படுகின்றனர். இந்தக் குறிக்கோள் எவ்வாறு அமைத்துக் கொள்கின்றனர் என்பது பற்றிக் கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் வேறுபட்ட வழியில் முடிவெடுக்கின்றது. நல்ல நோக்கங்களில் இருந்து எடுக்கப்படுகிறதாகக் கருத்துமுதல்வாதம் கருதுகிறது. பொருள்முதல்வாதமோ மனிதர்கள் தமது குறிக்கோளை சமூக வாழ்நிலையில் இருந்து தோற்றம் பெறுவதாகக் கூறுகிறது. அவரவர் சார்ந்து இருக்கிற வர்க்க நலன்களில் இருந்து இவை தோன்றுவதாகப் பொருள்முதல்வாதம் கூறுகிறது. அதாவது சிந்தனையின் தோற்றத்தை பொருள்முதல்வாதம் ஆராய்கிறது. இந்தப் பொருள்முதல்வாதப் பார்வை அம்பேத்கரின் பார்வையோடு அடிப்படையிலேயே வேறுபடுகிறது.

முழுமையாகப் படிக்க-

காரல் மார்க்சா? அம்பேத்கரின் புத்தரா?


அரசு உதிர்ந்து போதல் பற்றி டாக்டர் அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கர் எழுதிய “புத்தரா, காரல் மார்க்சா?” என்ற இச்சிறுகட்டுரை எட்டு உட்தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. எட்டாவது உட்தலைப்பு அரசு உதிர்ந்து போதல்

முதலில், அம்பேத்கர் அரசு உதிர்ந்து போதல் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். கம்யூனிச கோட்பாட்டின்படி அரசு என்பது ஒரு நிரந்திரமான சர்வாதிகாரமாகும். இதனைக் கம்யூனிஸ்டுகளே பலவீனமான அரசியல் கோட்பாடாக உணர்வதால், அரசு உலர்ந்து உதிரும் என்று கூறி அதன் கீழாகப் புகலிடம் தேடுகிறார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள் இரண்டு கேள்விக்குப் பதிலளிக்க வேண்டி இருக்கிறது. முதலாவது அரசு எப்போது உதிர்ந்து போகும்? அரசு உதிர்ந்து போகும் போது அதன் இடத்துக்கு எது வரும்? முதல் கேள்விக்குக் கம்யூனிஸ்டுகளால் நிச்சயமாகப் பதில் எதுவும் அளிக்கமுடியாது. இரண்டாவது கேள்விக்குக் கம்யூனிஸ்டுகள் இதற்குத் திருப்திகரமான பதில் கூறப்படவில்லை. இதைவிட வேறொரு முக்கியமான கேள்வி இருக்கிறது, அரசு உதிர்ந்து பின் அராஜகம் வருமா? வரும் என்றால் கம்யூனிஸ்ட் அரசை உருவாக்குவது பயனற்ற செயலாகும் என்றே அம்பேத்கர் கருதுகிறார். வன்முறையினால் தான் அந்த அரசை தாங்கிப் பிடிக்க முடியும், அதற்கு அதாரமாக இருக்கும் வன்முறையை விலக்கிக் கொண்டால் அராஜகம் தோன்றும். அப்படி என்றால் கம்யூனிஸ்ட் அரசினால் என்ன நன்மை? -என்பதாகவே அம்பேத்கரின் புரிதல் இருக்கிறது. 


காட்மண்டில், உலகப் பவுத்த கவுன்சில் மாநாட்டின் போது 1956 ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அம்பேத்கர் “புத்தரா அல்லது காரல் மார்க்சா” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். இது அவரது இறுதிகாலத்தில் ஆற்றிய உரையாகும். “புத்தரா, காரல் மார்க்சா?” என்ற நூலில் என்ன கூறினாரோ அதனையே இவ்வுரையில் வெளிப்படுதியுள்ளார். மார்க்சைப் பற்றிய அவரது நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை.

அந்தப் புத்த மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையின் நோக்கம், அன்றைய சோஷலிச முகாம் உலகின் பாதியை பிடித்துள்ள நிலையில். பவுத்த நாடுகளில் உள்ள ஏராளமான மாணவர்கள் கம்யூனிசப் பிடியில் சிக்கியுள்ளதை கவலையோடு நோக்கி, கம்யூனிச வாழ்க்கை முறையை விடச் சிறந்த வாழ்க்கை முறையைப் பவுத்தம் வழங்குகிறது என்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது.

“பவுத்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இளம் தலைமுறையினரைச் சமாளிப்பதும் பவுத்தம் கம்யூனிசத்துக்கு ஒரு மாற்றாக இருக்க முடியும் என்பதை அவர்களுக்கு எடுத்துரைப்பதும் அவசியம். அப்போதுதான் அது நிலைத்து நிற்க முடியும் என்று பவுத்தம் நம்பிக்கை கொள்ள முடியும். இன்று ஐரோப்பாவின் பெரும்பாலான மக்களும் ஆசியாவின் பெரும்பாலான இளம் மக்களும் மார்க்ஸ் ஒருவர்தான் நாம் வழிபடக்கூடிய ஒரே தீர்க்கதரிசி என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அவர்கள் பவுத்த சங்கத்தின் பெரும்பகுதி மஞ்சள் ஆபத்தே தவிர வேறல்ல என்று கருதுகின்றனர். இதனைப் பிக்குகள் கவனத்தில் கொள்ள வேண்டும். காரல் மார்க்சுடன் ஒப்பிடும் அளவுக்கு அவர்கள் தங்களைச் சீர்திருத்திக் கொள்ள வேண்டும, அப்போது பவுத்தம் அதனுடன் போட்டியிட முடியும்.”

ஆகப் பவுத்தம் கம்யூனிசத்துக்கு ஒரு மாற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்துவற்கு ஆற்றப்பட்டதே இந்தச் சொற்பொழிவு. அரசு உலர்ந்து உதிரும் என்பது எப்போது நடைபெறும் என்று கேட்டால் கம்யூனிஸ்டுகளிடம் பதில் இல்லை என்று கூறியவர் அம்பேத்கர், ஆனால் புத்தத்திலும் அதே நிலையிருப்பதை இவ்வுரையில் கூறியுள்ளார்.

“பவுத்த பாதை தாமதமானதாக, சுற்றி வளைத்து அழைத்துச் செல்லக்கூடியதாக, சிரமங்கள் நிறைந்ததாக இருந்தாலும் அது உங்களைப் பத்திரமான இடத்துக்கு இட்டுச் செல்லும். நீங்கள் கடைப்பிடிக்கும் லட்சியங்கள் அங்கு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையை நிரந்தரமாக வடிவமைத்துக் கொள்ளத் துணைநிற்கும். எனவே, அவசரப்பட்டுக் குறுக்கு வழிகளில் செல்லுவதைவிட மெதுவாகச் செல்லும் பாதையில், சுற்றி வளைத்துச் செல்லுவது எவ்வளவோ நல்லது என்பது என் கருத்து. வாழ்க்கையில் குறுக்கு வழியில் செல்லுவது எப்போதும் அபாயகரமானது, மிகவும் ஆபத்தானது.”

பவுத்தம் சுற்றி வளைத்த லட்சியத்தை அடையும் என்கிறார் அம்பேத்கர். அதற்கு முன்பே அடையும் வழி கம்யூனிசம் என்கிறார், ஆனால் அது குறுக்கு வழி என்பதாகக் குறிப்பிடுகிறார். பவுத்தத்தின் லட்சிய வழியைவிட கம்யூனிச வழி விரைவில் அடையும் என்பதை ஒப்புக்கொண்டுவிட்டார். 

  கம்யூனிச சமூகத்தை அடைவதை லட்சியமாக கருத்துநிலையில் கம்யூனிசம் முடிவெடுக்கவில்லை, சமூக வளர்ச்சியின் விதியின் அடைப்படையில் எடுத்த முடிபாகும். எந்த ஆண்டில் அடையும் என்பதை குறிப்பிடாவிட்டாலும் அது அடைந்தேதீரும் என்பதை இன்றைய சமூக வளர்ச்சியின் அடிப்படையில் நிறுவுகிறது.


மார்க்ஸ் கூறுகிற “மதம் மக்களுக்கு அபின்” என்பது மறுவுலகைப் பற்றிப் பேசுகிற கிறித்துவத்துக்குப் பொருந்தும், புத்தத்திற்குப் பொருந்தாது என்று கூறியவர், இந்த உரையில் சர்வம் அநித்யம் என்பது புத்தர் போதனையாகக் கூறுகிறார். யதார்த்த உலகை அநித்தியம் என்று கூறிவிட்டு நித்தியத்தைத் தேடுவது ஆன்மீகமே. 

அரசு பற்றிய மார்க்சிய கண்ணோட்டத்தை அறிந்து கொள்ளாமல் இதற்கான விடையைப் புரிந்து கொள்வது கடினமாகும். சுருக்கமாக அரசு பற்றி மார்க்சிய பார்வையைத் தொகுப்போம்.

மனிதனை மனிதன் சுரண்டுதல் அற்ற ஒரு நிலையினை மனித இனம் சந்தித்ததுண்டு. அது ஆதிப்பழங்குடி சமூகமாகும். அந்தச் சமூகத்தல் உற்பத்தி சக்திகள் சிறிதளவிற்கே வளர்ச்சியடைந்து இருந்ததால் ஒருவராலும் தனியாகத் தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. எளிய கருவிகளைப் பயன்படுத்தினர். ஒவ்வொருவரும் இனக்குழுவில் உள்ள அனைவருக்காகவும் உழைத்தனர். இவ்வகையான இனக்குழு சமூகத்தில் உழைப்பு கூட்டாகச் செயல்பட்டது, உணவு சேகரிப்பதில் அனைவரும் சமமாக ஈடுபட்டனர். சேகரித்த உணவுகள் இனகுழு முழுமைக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எளிய கூட்டுறவு செயல்பாடாக அன்றைய சமூக உறவுகள் இருந்தன.

அன்றைய சமூகப் பொருளாதாரத்தில் ஏற்றதாழ்வு நிலை உருவாகவில்லை. மக்கள் வர்க்கமாகப் பிளவுபடாமலும், சொத்து என்று எதையும் தனிநபர்களிடம் சேராமாலும், அதாவது வர்க்க மற்ற, தனிச்சொத்துடைமையற்ற சமூகமாக, ஒன்றுபட்ட தொன்மை கம்யூனிச சமூக அமைப்பாகக் காணப்பட்டது. இந்தக் கட்டத்தில் வன்முறையால் மக்களைக் கீழ்ப்படுத்தும் முறையான தனி இயந்திரம் இருக்கவில்லை. அதாவது அரசு என்பது தோன்றவில்லை. அப்போது அரசு தேவைப்படவும் இல்லை.

உற்பத்திச் சாதனங்கள் சிலரிடம் சேகரமாதலும், சமூகத்திற்குத் தேவையானதைவிட உபரியாக உற்பத்தி செய்திட முடிந்தமையும், சமூகத்தின் வேலைப் பிரிவினை ஆகிய புறநிலைக் காரணங்கள் வர்க்கங்களின் தோற்றத்திற்குக் காரணமாகிறது. இதனால் உருவான சமூகத்தில் உடைமையுள்ளவருக்கும், உடைமையற்றவருக்கும் இடையேயுள்ள சமரசப்படுத்தமுடியாத முரண்காரணமாக அரசு தோற்றம் பெற்றது. மக்களின் எழுச்சியை அடக்குவதற்கு, ஆயுதம் தாங்கிய காவற்படைகளும், ராணுவமும், சட்ட நீதிகளும், சிறை தண்டனைகளும், சுரண்டலுக்கு ஆளான மக்களின் மீது ஏவப்படும் வன்முறை கருவியாக அரசு உருவாகியது.

இந்த அரசு உருவாக்கத்தைப் பற்றி எங்கெல்ஸ் தமது “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலில் எழுதியுள்ளார்.

“சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக் கட்டத்தின் விளைவே அரசு. இந்தச் சமூகம் தன்னுடனான தீராத முரண்பாட்டில் சிக்கிக் கொண்டுவிட்டது, இணக்கம் காண முடியாத பகை சக்திகளாய்ப் பிளவுண்டுவிட்டது. இந்தப் பகைமை நிலையை அகற்றத் திறனற்றதாகிவிட்டது என்பதை ஒப்புக் கொள்வதன் விளைவே அரசு. ஆனால் இந்தப் பகை சக்திகள், முரண்பட்டு மோதிக் கொள்ளும் பொருளாதார நலன்களைக் கொண்ட இந்த வர்க்கங்கள், தம்மையும் சமூகத்தையும் பயனற்ற போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்கும் பொருட்டு, மோதலைத் தணித்து “ஒழுங்கின்” வரம்புகளுக்குள் இருத்தக்கூடிய ஒரு சக்தியை, சமூகத்திற்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியை நிறுவுவது அவசியமாயிற்று.”

இதனோடு லெனின் தமது “அரசும் புரட்சியும்” என்ற நூலில் சேர்த்துக் கூறுகிறார்:-
“வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவும் வெளியீடுமே அரசு. எங்கே. எப்பொழுது, எந்த அளவுக்கு வர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம் காண முடியாதவை ஆகின்றனவோ, அங்கே, அப்பொழுது, அந்த அளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர்முறையில் கூறுமிடத்து, அரசு ஒன்று இருப்பதானது வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவையாய் இருத்தலை நிரூபிக்கிறது.”

-மேலும் லெனின் கூறுகிறார், நாகரிக சமூகத்தில், ஒவ்வொரு புரட்சியும், அரசு இயந்திரத்தை அழிப்பதன் மூலம், வர்க்கப் போராட்டத்தை ஒளிவுமறைவின்றி நமக்குப் புலப்படுத்திக் காட்டுகிறது, ஆளும் வர்க்கம் தனக்குச் சேவை புரியக் கூடிய ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகைப் படைகளைப் புதுப்பிக்க எப்படி முயலுகிறது என்பதையும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஒடுக்குவோருக்குப் பதிலாய் ஒடுக்கப்பட்டோருக்குச் சேவை புரியக் கூடிய இப்படிப்பட்ட ஒரு புதிய ஒழுங்கமைப்பைத் தோற்றுவித்துக் கொள்ள எப்படி முயலுகிறது என்பதையும் நமக்குத் தெளிவாய்க் காட்டுகிறது.

பாட்டாளி வர்க்கத்தின் கம்யூனிச ஆட்சியில் அரசு எப்படி உலர்ந்து உதிர்ந்து போகிறது என்பதைப் பற்றி எங்கெல்ஸ் “டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

“பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு உற்பத்தி சாதனங்களை முதலாவதாக அரசு சொத்தாக மாற்றுகிறது. ஆனால் இதைச் செய்வதன் மூலம் அது பாட்டாளி வர்க்கம் என்ற தனது நிலைக்கே முடிவு கட்டிக் கொள்கிறது, எல்லா வர்க்க வேறுபாடுகளுக்கும் வர்க்கப் பகைமைகளுக்கும் முடிவுகட்டுகிறது, அரசு அரசாய் இருப்பதற்கும் முடிவு கட்டுகிறது. இதுவரை சமூகம் வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில் அமைந்திருந்ததால் அதற்கு அரசு தேவைப்பட்டது, அதாவது அந்தந்தக் காலத்தில் சுரண்டும் வர்க்கமாய் இருக்கும் குறிப்பிட்ட வர்க்கத்துக்கான ஒழுங்கமைப்பு ஒன்று தேவைப்பட்டது, அதன் பொருளுற்பத்தியின் புறநிலைமைகளைப் பராமரிக்கவும், இன்னும் முக்கியமாய்ச் சுரண்டப்படும் வர்க்கங்களை அந்தந்தப் பொருளுற்பத்தி அமைப்புக்கு பொருத்தான ஒடுக்கு முறை நிலையில் பலவந்தமாக வைத்திருப்பதற்கும் ஓர் ஒழுங்கமைப்புத் தேவைப்பட்டது.

இந்த அரசு சமூகம் முழுவதன் அதிகார பூர்வமான பிரதிநிதியாக, கண்கூடான அதன் உருவத் திரட்சியாக விளங்கிற்று. ஆனால் எந்த வர்க்கம் தன்னுடைய காலத்தில் சமூகம் முழுவதற்கும் தானே பிரதிநிதியாக இருந்ததோ அந்த வர்க்கத்தின் அரசாய் இருந்த அளவுக்குத்தான், அதாவது புராதன காலத்தில் அடிமையுடைமைக் குடிகளின் அரசாகவும், மத்திய காலத்தில் பிரபுக்களின் அரசாகவும், நாம் வாழும் இக்காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாகவும் இருந்த அளவுக்குத் தான், அரசால் இவ்வாறு விளங்க முடிந்தது. இறுதியில் அரசானது சமூகம் முழுமைக்கும் மெய்யான பிரதிநிதியாகும் போது, அது தன்னைத் தானே அவசியமற்றதாக்கிக் கொள்கிறது.
..
அரசானது மெய்யாகவே சமூகம் முழுதுக்கும் பிரதிநிதியாய் முன்வந்து புரிந்திடும் முதலாவது செயல்- அதாவது உற்பத்திச் சாதனங்களைச் சமூகத்தின் பேரால் உடைமையாக்கி கொள்ளும் இச்செயல் – அரசு என்ற முறையில் .சுயேச்சையாய் அது புரிந்திடும் இறுதிச் செயலாகவும் அமைந்து விடுகிறது. சமூக உறவுகளில் அரசின் தலையீடு ஒரு துறைக்குப்பின் இன்னொன்றாகத் தேவையற்றதாகிப் பிறகு தானாகவே தணிந்து அணைந்து விடுகிறது. ஆட்களின் ஆளுமை காரியங்களின் நிர்வாகமாய், பொருளுற்பத்தி வேலைகளது செயலாட்சியாய் மாறிவிடுகிறது. அரசு “ஒழிக்கப்படவில்லை”, அது உலர்ந்து உதிர்ந்து விடுகிறது.”

அம்பேத்கர் நினைப்பது போல் அரசு உலர்ந்து உதிர்ந்த இடத்தில் அராஜகம் ஏற்படப் போவதில்லை, ஆட்களின் ஆளுமை காரியங்களின் நிர்வாகமாய், பொருளுற்பத்தி வேலைகளது செயலாட்சியாய் மாறிப்போகும். அதாவது வன்முறைக் கருவிகாளான போலீஸ், ராணுவம், நீதித்துறை போன்றவை நீக்கப்பட்ட நிலையில், நிர்வாக வேலைகளை மட்டும் பார்க்கக்கூடிய அமைப்பாக மாறிப்போகும். எங்கெல்ஸ் மேலும் இது பற்றிக் கூறுவதாவது, தவிர்க்க முடியாததாய் அரசு மறைந்தவுடன், அரசு இயந்திரம் அனைத்தையுமே அதற்கு அப்பொழுது உரித்தாகிவிடும் இடத்தில், அதாவது தொல்பொருள் காட்சிக் கூடத்தில், கைராட்டைக்கும் வெண்கலக் கோடாரிக்கும் பக்கத்தில் கொண்டுபோய் வைக்கப்படும்.


அரசு உதிர்ந்து போதல் என்ற இந்த மார்க்சியக் கோட்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு அரசியல் தெளிவு மட்டும் போதாது, அரசியல் பொருளாதாரம், வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டம் ஆகியவை அவசியமாகும். இல்லை என்றால் இதனை மார்க்சிய வழியில் புரிந்து கொள்வது சிரமத்தை ஏற்படுத்தும்.

முழுமையாகப் படிக்க-

காரல் மார்க்சா? அம்பேத்கரின் புத்தரா?