Friday 9 September 2016

அரசு உதிர்ந்து போதல் பற்றி டாக்டர் அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கர் எழுதிய “புத்தரா, காரல் மார்க்சா?” என்ற இச்சிறுகட்டுரை எட்டு உட்தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. எட்டாவது உட்தலைப்பு அரசு உதிர்ந்து போதல்

முதலில், அம்பேத்கர் அரசு உதிர்ந்து போதல் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். கம்யூனிச கோட்பாட்டின்படி அரசு என்பது ஒரு நிரந்திரமான சர்வாதிகாரமாகும். இதனைக் கம்யூனிஸ்டுகளே பலவீனமான அரசியல் கோட்பாடாக உணர்வதால், அரசு உலர்ந்து உதிரும் என்று கூறி அதன் கீழாகப் புகலிடம் தேடுகிறார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள் இரண்டு கேள்விக்குப் பதிலளிக்க வேண்டி இருக்கிறது. முதலாவது அரசு எப்போது உதிர்ந்து போகும்? அரசு உதிர்ந்து போகும் போது அதன் இடத்துக்கு எது வரும்? முதல் கேள்விக்குக் கம்யூனிஸ்டுகளால் நிச்சயமாகப் பதில் எதுவும் அளிக்கமுடியாது. இரண்டாவது கேள்விக்குக் கம்யூனிஸ்டுகள் இதற்குத் திருப்திகரமான பதில் கூறப்படவில்லை. இதைவிட வேறொரு முக்கியமான கேள்வி இருக்கிறது, அரசு உதிர்ந்து பின் அராஜகம் வருமா? வரும் என்றால் கம்யூனிஸ்ட் அரசை உருவாக்குவது பயனற்ற செயலாகும் என்றே அம்பேத்கர் கருதுகிறார். வன்முறையினால் தான் அந்த அரசை தாங்கிப் பிடிக்க முடியும், அதற்கு அதாரமாக இருக்கும் வன்முறையை விலக்கிக் கொண்டால் அராஜகம் தோன்றும். அப்படி என்றால் கம்யூனிஸ்ட் அரசினால் என்ன நன்மை? -என்பதாகவே அம்பேத்கரின் புரிதல் இருக்கிறது. 


காட்மண்டில், உலகப் பவுத்த கவுன்சில் மாநாட்டின் போது 1956 ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அம்பேத்கர் “புத்தரா அல்லது காரல் மார்க்சா” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். இது அவரது இறுதிகாலத்தில் ஆற்றிய உரையாகும். “புத்தரா, காரல் மார்க்சா?” என்ற நூலில் என்ன கூறினாரோ அதனையே இவ்வுரையில் வெளிப்படுதியுள்ளார். மார்க்சைப் பற்றிய அவரது நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை.

அந்தப் புத்த மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையின் நோக்கம், அன்றைய சோஷலிச முகாம் உலகின் பாதியை பிடித்துள்ள நிலையில். பவுத்த நாடுகளில் உள்ள ஏராளமான மாணவர்கள் கம்யூனிசப் பிடியில் சிக்கியுள்ளதை கவலையோடு நோக்கி, கம்யூனிச வாழ்க்கை முறையை விடச் சிறந்த வாழ்க்கை முறையைப் பவுத்தம் வழங்குகிறது என்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது.

“பவுத்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இளம் தலைமுறையினரைச் சமாளிப்பதும் பவுத்தம் கம்யூனிசத்துக்கு ஒரு மாற்றாக இருக்க முடியும் என்பதை அவர்களுக்கு எடுத்துரைப்பதும் அவசியம். அப்போதுதான் அது நிலைத்து நிற்க முடியும் என்று பவுத்தம் நம்பிக்கை கொள்ள முடியும். இன்று ஐரோப்பாவின் பெரும்பாலான மக்களும் ஆசியாவின் பெரும்பாலான இளம் மக்களும் மார்க்ஸ் ஒருவர்தான் நாம் வழிபடக்கூடிய ஒரே தீர்க்கதரிசி என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அவர்கள் பவுத்த சங்கத்தின் பெரும்பகுதி மஞ்சள் ஆபத்தே தவிர வேறல்ல என்று கருதுகின்றனர். இதனைப் பிக்குகள் கவனத்தில் கொள்ள வேண்டும். காரல் மார்க்சுடன் ஒப்பிடும் அளவுக்கு அவர்கள் தங்களைச் சீர்திருத்திக் கொள்ள வேண்டும, அப்போது பவுத்தம் அதனுடன் போட்டியிட முடியும்.”

ஆகப் பவுத்தம் கம்யூனிசத்துக்கு ஒரு மாற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்துவற்கு ஆற்றப்பட்டதே இந்தச் சொற்பொழிவு. அரசு உலர்ந்து உதிரும் என்பது எப்போது நடைபெறும் என்று கேட்டால் கம்யூனிஸ்டுகளிடம் பதில் இல்லை என்று கூறியவர் அம்பேத்கர், ஆனால் புத்தத்திலும் அதே நிலையிருப்பதை இவ்வுரையில் கூறியுள்ளார்.

“பவுத்த பாதை தாமதமானதாக, சுற்றி வளைத்து அழைத்துச் செல்லக்கூடியதாக, சிரமங்கள் நிறைந்ததாக இருந்தாலும் அது உங்களைப் பத்திரமான இடத்துக்கு இட்டுச் செல்லும். நீங்கள் கடைப்பிடிக்கும் லட்சியங்கள் அங்கு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையை நிரந்தரமாக வடிவமைத்துக் கொள்ளத் துணைநிற்கும். எனவே, அவசரப்பட்டுக் குறுக்கு வழிகளில் செல்லுவதைவிட மெதுவாகச் செல்லும் பாதையில், சுற்றி வளைத்துச் செல்லுவது எவ்வளவோ நல்லது என்பது என் கருத்து. வாழ்க்கையில் குறுக்கு வழியில் செல்லுவது எப்போதும் அபாயகரமானது, மிகவும் ஆபத்தானது.”

பவுத்தம் சுற்றி வளைத்த லட்சியத்தை அடையும் என்கிறார் அம்பேத்கர். அதற்கு முன்பே அடையும் வழி கம்யூனிசம் என்கிறார், ஆனால் அது குறுக்கு வழி என்பதாகக் குறிப்பிடுகிறார். பவுத்தத்தின் லட்சிய வழியைவிட கம்யூனிச வழி விரைவில் அடையும் என்பதை ஒப்புக்கொண்டுவிட்டார். 

  கம்யூனிச சமூகத்தை அடைவதை லட்சியமாக கருத்துநிலையில் கம்யூனிசம் முடிவெடுக்கவில்லை, சமூக வளர்ச்சியின் விதியின் அடைப்படையில் எடுத்த முடிபாகும். எந்த ஆண்டில் அடையும் என்பதை குறிப்பிடாவிட்டாலும் அது அடைந்தேதீரும் என்பதை இன்றைய சமூக வளர்ச்சியின் அடிப்படையில் நிறுவுகிறது.


மார்க்ஸ் கூறுகிற “மதம் மக்களுக்கு அபின்” என்பது மறுவுலகைப் பற்றிப் பேசுகிற கிறித்துவத்துக்குப் பொருந்தும், புத்தத்திற்குப் பொருந்தாது என்று கூறியவர், இந்த உரையில் சர்வம் அநித்யம் என்பது புத்தர் போதனையாகக் கூறுகிறார். யதார்த்த உலகை அநித்தியம் என்று கூறிவிட்டு நித்தியத்தைத் தேடுவது ஆன்மீகமே. 

அரசு பற்றிய மார்க்சிய கண்ணோட்டத்தை அறிந்து கொள்ளாமல் இதற்கான விடையைப் புரிந்து கொள்வது கடினமாகும். சுருக்கமாக அரசு பற்றி மார்க்சிய பார்வையைத் தொகுப்போம்.

மனிதனை மனிதன் சுரண்டுதல் அற்ற ஒரு நிலையினை மனித இனம் சந்தித்ததுண்டு. அது ஆதிப்பழங்குடி சமூகமாகும். அந்தச் சமூகத்தல் உற்பத்தி சக்திகள் சிறிதளவிற்கே வளர்ச்சியடைந்து இருந்ததால் ஒருவராலும் தனியாகத் தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. எளிய கருவிகளைப் பயன்படுத்தினர். ஒவ்வொருவரும் இனக்குழுவில் உள்ள அனைவருக்காகவும் உழைத்தனர். இவ்வகையான இனக்குழு சமூகத்தில் உழைப்பு கூட்டாகச் செயல்பட்டது, உணவு சேகரிப்பதில் அனைவரும் சமமாக ஈடுபட்டனர். சேகரித்த உணவுகள் இனகுழு முழுமைக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எளிய கூட்டுறவு செயல்பாடாக அன்றைய சமூக உறவுகள் இருந்தன.

அன்றைய சமூகப் பொருளாதாரத்தில் ஏற்றதாழ்வு நிலை உருவாகவில்லை. மக்கள் வர்க்கமாகப் பிளவுபடாமலும், சொத்து என்று எதையும் தனிநபர்களிடம் சேராமாலும், அதாவது வர்க்க மற்ற, தனிச்சொத்துடைமையற்ற சமூகமாக, ஒன்றுபட்ட தொன்மை கம்யூனிச சமூக அமைப்பாகக் காணப்பட்டது. இந்தக் கட்டத்தில் வன்முறையால் மக்களைக் கீழ்ப்படுத்தும் முறையான தனி இயந்திரம் இருக்கவில்லை. அதாவது அரசு என்பது தோன்றவில்லை. அப்போது அரசு தேவைப்படவும் இல்லை.

உற்பத்திச் சாதனங்கள் சிலரிடம் சேகரமாதலும், சமூகத்திற்குத் தேவையானதைவிட உபரியாக உற்பத்தி செய்திட முடிந்தமையும், சமூகத்தின் வேலைப் பிரிவினை ஆகிய புறநிலைக் காரணங்கள் வர்க்கங்களின் தோற்றத்திற்குக் காரணமாகிறது. இதனால் உருவான சமூகத்தில் உடைமையுள்ளவருக்கும், உடைமையற்றவருக்கும் இடையேயுள்ள சமரசப்படுத்தமுடியாத முரண்காரணமாக அரசு தோற்றம் பெற்றது. மக்களின் எழுச்சியை அடக்குவதற்கு, ஆயுதம் தாங்கிய காவற்படைகளும், ராணுவமும், சட்ட நீதிகளும், சிறை தண்டனைகளும், சுரண்டலுக்கு ஆளான மக்களின் மீது ஏவப்படும் வன்முறை கருவியாக அரசு உருவாகியது.

இந்த அரசு உருவாக்கத்தைப் பற்றி எங்கெல்ஸ் தமது “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலில் எழுதியுள்ளார்.

“சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக் கட்டத்தின் விளைவே அரசு. இந்தச் சமூகம் தன்னுடனான தீராத முரண்பாட்டில் சிக்கிக் கொண்டுவிட்டது, இணக்கம் காண முடியாத பகை சக்திகளாய்ப் பிளவுண்டுவிட்டது. இந்தப் பகைமை நிலையை அகற்றத் திறனற்றதாகிவிட்டது என்பதை ஒப்புக் கொள்வதன் விளைவே அரசு. ஆனால் இந்தப் பகை சக்திகள், முரண்பட்டு மோதிக் கொள்ளும் பொருளாதார நலன்களைக் கொண்ட இந்த வர்க்கங்கள், தம்மையும் சமூகத்தையும் பயனற்ற போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்கும் பொருட்டு, மோதலைத் தணித்து “ஒழுங்கின்” வரம்புகளுக்குள் இருத்தக்கூடிய ஒரு சக்தியை, சமூகத்திற்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியை நிறுவுவது அவசியமாயிற்று.”

இதனோடு லெனின் தமது “அரசும் புரட்சியும்” என்ற நூலில் சேர்த்துக் கூறுகிறார்:-
“வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவும் வெளியீடுமே அரசு. எங்கே. எப்பொழுது, எந்த அளவுக்கு வர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம் காண முடியாதவை ஆகின்றனவோ, அங்கே, அப்பொழுது, அந்த அளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர்முறையில் கூறுமிடத்து, அரசு ஒன்று இருப்பதானது வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவையாய் இருத்தலை நிரூபிக்கிறது.”

-மேலும் லெனின் கூறுகிறார், நாகரிக சமூகத்தில், ஒவ்வொரு புரட்சியும், அரசு இயந்திரத்தை அழிப்பதன் மூலம், வர்க்கப் போராட்டத்தை ஒளிவுமறைவின்றி நமக்குப் புலப்படுத்திக் காட்டுகிறது, ஆளும் வர்க்கம் தனக்குச் சேவை புரியக் கூடிய ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகைப் படைகளைப் புதுப்பிக்க எப்படி முயலுகிறது என்பதையும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஒடுக்குவோருக்குப் பதிலாய் ஒடுக்கப்பட்டோருக்குச் சேவை புரியக் கூடிய இப்படிப்பட்ட ஒரு புதிய ஒழுங்கமைப்பைத் தோற்றுவித்துக் கொள்ள எப்படி முயலுகிறது என்பதையும் நமக்குத் தெளிவாய்க் காட்டுகிறது.

பாட்டாளி வர்க்கத்தின் கம்யூனிச ஆட்சியில் அரசு எப்படி உலர்ந்து உதிர்ந்து போகிறது என்பதைப் பற்றி எங்கெல்ஸ் “டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

“பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு உற்பத்தி சாதனங்களை முதலாவதாக அரசு சொத்தாக மாற்றுகிறது. ஆனால் இதைச் செய்வதன் மூலம் அது பாட்டாளி வர்க்கம் என்ற தனது நிலைக்கே முடிவு கட்டிக் கொள்கிறது, எல்லா வர்க்க வேறுபாடுகளுக்கும் வர்க்கப் பகைமைகளுக்கும் முடிவுகட்டுகிறது, அரசு அரசாய் இருப்பதற்கும் முடிவு கட்டுகிறது. இதுவரை சமூகம் வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில் அமைந்திருந்ததால் அதற்கு அரசு தேவைப்பட்டது, அதாவது அந்தந்தக் காலத்தில் சுரண்டும் வர்க்கமாய் இருக்கும் குறிப்பிட்ட வர்க்கத்துக்கான ஒழுங்கமைப்பு ஒன்று தேவைப்பட்டது, அதன் பொருளுற்பத்தியின் புறநிலைமைகளைப் பராமரிக்கவும், இன்னும் முக்கியமாய்ச் சுரண்டப்படும் வர்க்கங்களை அந்தந்தப் பொருளுற்பத்தி அமைப்புக்கு பொருத்தான ஒடுக்கு முறை நிலையில் பலவந்தமாக வைத்திருப்பதற்கும் ஓர் ஒழுங்கமைப்புத் தேவைப்பட்டது.

இந்த அரசு சமூகம் முழுவதன் அதிகார பூர்வமான பிரதிநிதியாக, கண்கூடான அதன் உருவத் திரட்சியாக விளங்கிற்று. ஆனால் எந்த வர்க்கம் தன்னுடைய காலத்தில் சமூகம் முழுவதற்கும் தானே பிரதிநிதியாக இருந்ததோ அந்த வர்க்கத்தின் அரசாய் இருந்த அளவுக்குத்தான், அதாவது புராதன காலத்தில் அடிமையுடைமைக் குடிகளின் அரசாகவும், மத்திய காலத்தில் பிரபுக்களின் அரசாகவும், நாம் வாழும் இக்காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாகவும் இருந்த அளவுக்குத் தான், அரசால் இவ்வாறு விளங்க முடிந்தது. இறுதியில் அரசானது சமூகம் முழுமைக்கும் மெய்யான பிரதிநிதியாகும் போது, அது தன்னைத் தானே அவசியமற்றதாக்கிக் கொள்கிறது.
..
அரசானது மெய்யாகவே சமூகம் முழுதுக்கும் பிரதிநிதியாய் முன்வந்து புரிந்திடும் முதலாவது செயல்- அதாவது உற்பத்திச் சாதனங்களைச் சமூகத்தின் பேரால் உடைமையாக்கி கொள்ளும் இச்செயல் – அரசு என்ற முறையில் .சுயேச்சையாய் அது புரிந்திடும் இறுதிச் செயலாகவும் அமைந்து விடுகிறது. சமூக உறவுகளில் அரசின் தலையீடு ஒரு துறைக்குப்பின் இன்னொன்றாகத் தேவையற்றதாகிப் பிறகு தானாகவே தணிந்து அணைந்து விடுகிறது. ஆட்களின் ஆளுமை காரியங்களின் நிர்வாகமாய், பொருளுற்பத்தி வேலைகளது செயலாட்சியாய் மாறிவிடுகிறது. அரசு “ஒழிக்கப்படவில்லை”, அது உலர்ந்து உதிர்ந்து விடுகிறது.”

அம்பேத்கர் நினைப்பது போல் அரசு உலர்ந்து உதிர்ந்த இடத்தில் அராஜகம் ஏற்படப் போவதில்லை, ஆட்களின் ஆளுமை காரியங்களின் நிர்வாகமாய், பொருளுற்பத்தி வேலைகளது செயலாட்சியாய் மாறிப்போகும். அதாவது வன்முறைக் கருவிகாளான போலீஸ், ராணுவம், நீதித்துறை போன்றவை நீக்கப்பட்ட நிலையில், நிர்வாக வேலைகளை மட்டும் பார்க்கக்கூடிய அமைப்பாக மாறிப்போகும். எங்கெல்ஸ் மேலும் இது பற்றிக் கூறுவதாவது, தவிர்க்க முடியாததாய் அரசு மறைந்தவுடன், அரசு இயந்திரம் அனைத்தையுமே அதற்கு அப்பொழுது உரித்தாகிவிடும் இடத்தில், அதாவது தொல்பொருள் காட்சிக் கூடத்தில், கைராட்டைக்கும் வெண்கலக் கோடாரிக்கும் பக்கத்தில் கொண்டுபோய் வைக்கப்படும்.


அரசு உதிர்ந்து போதல் என்ற இந்த மார்க்சியக் கோட்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு அரசியல் தெளிவு மட்டும் போதாது, அரசியல் பொருளாதாரம், வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டம் ஆகியவை அவசியமாகும். இல்லை என்றால் இதனை மார்க்சிய வழியில் புரிந்து கொள்வது சிரமத்தை ஏற்படுத்தும்.

முழுமையாகப் படிக்க-

காரல் மார்க்சா? அம்பேத்கரின் புத்தரா?


5 comments:

  1. வர்க்கங்களானது வரலாற்று விளைபொருள்களே. வரலாற்று விளைபொருளுக்கு ஒரு தோற்றமும் உண்டு. அழிவும் உண்டு. அரசும் ஒரு வரலாற்று விளைபொருளே. அரசின் தோற்றத்திற்கும் முன் நிலவியது குழு நிர்வாக அமைப்பே. குழு நிர்வாக அமைப்பு நிலவிய காலத்தில் வர்க்கங்களோ, ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை வன்முறைகொண்டு அடக்கி ஆள வேண்டிய தேவையோ இல்லை. பின்னர் வர்க்கங்கள் தோன்றியபோது, குழு நிர்வாக அமைப்பானது வர்க்கக் குரோதம்கொண்ட வன்முறைப் பிரிவையும் உள்ளடக்கிக்கொண்டு, அரசாக மாறியது. சமூக வளர்ச்சியின் ஒரு உச்சகட்டத்தில், வர்க்கங்கள் மறையும்போது, சமூக நிர்வாகத்தில் இணைக்கப்பட்ட வன்முறை அமைப்புக்குத் தேவையில்லாமல் வரலாற்றில் மறைகிறது. இதுவே அரசு உதிர்ந்து உலர்தல் என்ற கருத்தின் அடிப்படை! சமூகமும் நீடிக்கும், தனது உயர்ந்த ஒரு நிலையில்! சமூக நிர்வாக அமைப்பும் நீடிக்கும். ஆனால் அதில் வன்முறைப் பிரிவு இருக்காது. இங்கு வலியுறுத்த வேண்டிய ஒன்று.... அரசு தோன்றியதும் வர்க்கப் போராட்டங்களினால்தான்! அரசு உலர்ந்து உதிர்கிற ஒரு சூழலை உருவாக்குவதும் வர்க்கப் போராட்டங்களே! வர்க்கங்களை இல்லாமல் ஆக்குவதும் வர்க்கப் போராட்டங்களே! எனவே வர்க்கப் போராட்டம் என்ற ஒரு கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவது மிக அவசியமானது. அவ்வாறு இல்லாமல்... உற்பத்திசக்தியின் வளர்ச்சியைத் தடுக்கிற பழைய உற்பத்திமுறைக்கும், அந்த வளர்ச்சியை முன்வைக்கிற உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடானது, புதிய உற்பத்திமுறையை நிலைநாட்டும் என்று பொதுவாகக் கூறுவது கூடாது. பழைய உற்பத்தி உறவுக்கும் புதிய உற்பத்தி உறவுக்கும் இடையிலான முரண்பாடானது வர்க்கப் போராட்டத்தினால்தான் தீர்க்கப்படுகிறது என்பது வலியுறுத்தப்படவேண்டும். சோவியத் ரஷியாவில் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தின் வீழ்ச்சிக்கு ... சமூக ஏகாதிபத்தியத்தின் தோற்றத்திற்கு... வர்க்கப் போராட்டத்தைப் பாட்டாளி வர்க்கக் கட்சியானது சரியான வழியில் கொண்டுசெல்லாததே ஆகும். கட்சிக்குள்ளும் வர்க்கப் போராட்டம் சரியாக நடைபெறவில்லை. சமூகத்திலும் நடைபெறவில்லை. எனவே அரசு உதிர்ந்து உலர்தல் போன்ற விவாதங்களில் தொடர்ந்து வர்க்கப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவேண்டியது இனி தேவை.

    ReplyDelete
  2. //உற்பத்திசக்தியின் வளர்ச்சியைத் தடுக்கிற பழைய உற்பத்திமுறைக்கும், அந்த வளர்ச்சியை முன்வைக்கிற உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடானது, புதிய உற்பத்திமுறையை நிலைநாட்டும் என்று பொதுவாகக் கூறுவது கூடாது.// இந்த முரணின் வெளிப்பாடு தானே வர்க்கப் போராட்டம். வர்க்கப் போரில் வென்ற பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எவ்வாறு முரணைத் தீர்க்கிறது என்பதை தான் இது விளக்குகிறது. இதனைத் தொடர்ந்து வரும்

    “வன்முறை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி டாக்டர் அம்பேத்கர்”
    http://scientificcommunism.blogspot.in/2016/09/blog-post_9.html
    என்ற கட்டுரை வர்க்கப் போரை வலியுறுத்தியிருப்பதாக கருதுகிறேன். இதனையும் படித்து கருத்துரையுங்கள்.
    உங்களது மேலான கருத்திற்கு நன்றி

    ReplyDelete
  3. தோழர் மிகவும் பயனுள்ள பதிவு

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete