Monday 4 July 2016

சமூகத்தை மாற்றி அமைப்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு

லெனின்:-
"நாம் முற்றிலும் மார்க்சியக் கோட்பாட்டின் முறையிலான நிலைபாட்டை எமது அடிநிலையாய்க் கொண்டு நிற்கிறோம் ...புரட்சிகர சோஷலிடுக் கட்சியின் முன்னுள்ள மெய்யான பணி...... சமூகத்தைத் திருத்தியமைப்பதற்குத் திட்டங்கள் வரைவதல்ல, தொழிலாளர்களுடைய நிலைமையை மேம்படச் செய்வது குறித்து முதலாளிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவதல்ல இப்பணி, பாட்டாளி வாக்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வெல்வதையும் சோஷலிசச் சமூகம் ஒழுங்கமைக்கப்படுவதையும் இறுதிக் குறிக்கோளாய்க் கொண்ட இந்த வாக்கப்போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதுமே இப்பணி என்று அது தெளிவுபடுத்திற்று."
(நமது வேலைத்திட்டம்).

    இயற்கையைப் போன்றே சமூகத்திலும் புறநிலை விதிகளின் அடிப்படையில் வளர்ச்சி நடைபெறுகிறது என்பதை  மார்க்சியம்  நமக்கு விளக்குகிறது, ஆனால் முதலாளித்துவ அறிஞர்கள் சமூகம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டத்தை  விதிவாதத்துக்கு ஆட்பட்டதாக விமர்சிக்கின்றனர்.  சமூக வரலாற்று நிகழ்வுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றன என்று  மார்க்சியம் கருதுவதாக விமர்சிக்கினறனர். இதன் அடிப்படையில் முதலாளித்துவ அறிஞர்கள் முதலாளித்துவ சமூகத்தைத் தொடர்ந்து சோஷலிச சமூகம் வரும் என்பதை மறுக்கின்றனர். மேலும் அவர்கள், சூரியன் உதிப்பதற்கு எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் இயற்கைக்கு தேவைப் படாதது போல், சமூகம் புறநிலை  விதிப்படி செயற்படும்  என்றால் சோஷலிச சமூகத்துக்காக கம்யூனிஸ்ட் கட்சி ஏன் போராட வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

       வரலாற்று விதிகள் மக்களது நடவடிக்கையின் வழியே செயற்படுகின்றன என்பதே, இயற்கைக்கும் சமூக விதிக்கும் உள்ள வேறுபாடு என்பதை அறிந்திருக்கிறது மார்க்சியம். மக்களே செயல்முனைப்போடு வரலாற்றைப் படைக்கின்றனர். மக்கள் உணர்வு பூர்வமாகவே தமது குறிக்கோளை அமைத்து, அதன்படியே செயற்படுத்துகின்றனர். இந்த உணர்வுபூர்வமான செயற்பாட்டை தன்னிச்சையாக அவர்கள் அமைத்துக் கொள்வதில்லை, மாறாக புறநிலை விதிகளின் தாக்கத்தின் விளைவாக உருவாக்கிக் கொள்கின்றனர். இவைகள் வர்க்கங்களின் நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது.

இன்றைய முதலாளித்துவ சமூகம் உழைப்பாளிகளை சுரண்டி வளர்கிறது என்பது கண்கூடான ஒன்றாகும். உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் தனி முதலாளியின் அபகரிப்பு முறைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டின் உச்சமே இன்றைக்கு பாட்டாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையே வர்க்கப் போராட்டமாக காட்சியளிக்கிறது.

உழைப்பாளிகளைச் சுரண்டி தனது செல்வங்களைப் பெருக்கிக் கொள்ளும் முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உழைப்பாளிகளுக்கென்று தனித்த இயக்கம் தேவைப்படுகிறது. இந்த இயக்கத்தை நடத்திச் செல்லும் கம்யூனிஸ்டுகள் தமக்கென எந்த குறுங்குழுவாத கண்ணோட்டத்தையும் வைத்திருக்கவில்லை. கம்யூனிஸ்டுகள் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர்த்து வேறு நோக்கம் எதனையும் கொண்டவர்கள் அல்ல. முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் சந்திக்க வேண்டிய வளர்ச்சிக் கட்டங்களை அறிந்து அதற்கான போராட்ட உத்திகளை வகுத்து அதனை நடைமுறைப்படுத்துகின்றனர்.

கம்யூனிஸ்டுகள் தாம் நடத்தும் போராட்ட வழிமுறைகளை, மார்க்ஸ் வகுத்துக் கொடுத்த வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் உடனடி போராட்டத்தையும் இறுதி குறிக்கோளையும் அமைத்துக் கொள்கின்றனர். புரட்சிகரமான கோட்பாடு இல்லையேல் புரட்சிகரமான இயக்கம் இல்லை என்று லெனின் கூறியதற்கு இணங்க, தங்களுக்கான புரட்சிகரமான கோட்பாட்டை பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைத்துக்கொள்கின்றனர்.

முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளிகளின் முன்னணிப்படையாக கம்யூனிஸ்ட் இயக்கம் செயல்படுகிறது. முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவதற்கும், அதனிடத்தில் தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சியை அமைப்பதற்கும், தொழிலாளிகளை ஒன்றிணைக்கும் சக்தியாக கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் உறுதியோடு செயற்பட மார்க்சிய சித்தாந்தம் உதவிடுகிறது.

உற்பத்தியின் வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. இந்த உற்பத்திச் சக்தியின் புரட்சிகர மாற்றம் உழைப்புக் கருவிகளின் வளர்ச்சியில் அடங்கியிருக்கிறது. உற்பத்திச் சக்திகள் எத்தகையதோ, அத்தகையதாக உற்பத்தி உறவுகள் அமைகிறது. உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் முன்னதாகவே வளர்ச்சியை எட்டுகின்றன. இதன் விளைவாக புதிய உற்பத்திச் சக்திகள் பழைமையாகிவிட்ட உற்பத்தி உறவுகளிடம் முரணை அதிகப்படுத்துகின்றன.

பழைய உற்பத்தி முறைக்குள்ளே புதிய உற்பத்தி முறை முதிர்வது மனிதர்களின் உணர்வை சாராமல் நிகழ்கிறது. இந்நிகழ்வு உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியால் ஏற்படுகிறது. இந்தப் புறநிலையே வர்க்கப் போராட்டத்துக்கான பொருளாயாத சக்தியாக இருக்கிறது. அதாவது இப்புறநிலை வர்க்கப்போராட்டத்தில் பிரதிபலிக்கிறது. இறுதியில் வார்க்கப் போராட்டம் உச்சத்தை எட்டுகிறது. இந்த உற்பத்தி முரண் சமூகப் புரட்சியின் மூலமே தீர்க்கப்படுகிறது.

இங்கு வரலாற்றின் பொது விதியை மட்டுமே எடுத்துரைத்திருக்கிறது. இதனை அப்படியே வரலாற்றின் மீது திணிக்க முடியாது. ஒவ்வொரு நாட்டின் பொருள் உற்பத்தியின் நிலையினையும், அதனால் ஏற்படுகிற வர்க்க உறவுகளின் முரணையும், உள்ளடக்கிய பல்வேறு வளர்ச்சிப் போக்கின் தனித்த தன்மைகளையும் அறிந்து செயற்பாட்டைத் தீர்மானிக்க வேண்டும்.

        அந்தந்த நாட்டினுடைய வளர்ச்சியின் புறநிலை விதிகளை அறிந்து, அதனை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றின்  திசைவழியை தெரிந்து, அதனடிப்படையில் தனது செயல்தந்திரத்தை அமைத்து கம்யூனிஸ்ட் இயக்கம் செயற்பட வரலாற்றியல் பொருள்முதல்வாதம் வழிகாட்டுகிறது.

புறநிலை  விதி என்கிற, சமூக வளர்ச்சியின் போக்கை உணர்ந்து அதன் வழியில் செல்வதையே அவசியத்தை அறிந்து செயற்படுவதாகக் கூறுகிறது மார்க்சியம். புறநிலை அவசியத்தைப் பற்றிய அறிவு மக்களுக்கு வரலாற்றில் செயற்பாட்டுச் சுதந்திரத்தைக் கொடுக்கிறது. இதனை அறிந்து கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமை தனது செயற்பாட்டை வகுத்துக் கொள்கிறது.

       முற்போக்கு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்றழைக்கின்ற கட்சி, சில நேரங்களில் சமூகம் வழங்கிய வாய்ப்புகளை தவறவிட்ட நிகழ்வுகள் உண்டு. வரலாற்று அவசியத்தின் அடிப்படையில் சென்று, கம்யூனிஸ்ட் இயக்கம் வெற்றி பெறுவதற்கு கட்சியானது, பாட்டாளி வர்க்க உணர்வில் உறுதியும், அமைப்பின் கட்டுப்பாடும் பெற்றதாக இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

       கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு சமூக வளர்ச்சியைப் பற்றிய கண்ணோட்டத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாதம் அளித்திடுகிறது. தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்தவத்திடம் காண்கிறது என்பார் மார்க்ஸ்.

பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில்தான் பாட்டாளி வர்க்க உணர்வையும், கட்டுப்பாட்டையும் பெற்றுக்கொள்ள முடியும். மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து  விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாகியிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள் என்று லெனின் கூறுவார். இந்த மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதலில் சென்றால்தான், முதலாளித்துவச் சுரண்டலின் காரணத்தைப் புரிந்து கொண்டு,  அதன் உள்முரண்பாட்டின் தீர்வாய், முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்துவிட்டு சோஷலிச சமூகத்தை அமைக்க முடியும்.


அதற்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதமே கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழிகாட்டும்.

Saturday 2 July 2016

உலகப் புரட்சிக்கான புறநிலை என்பது கம்யூனிச சித்தாந்தத்தை வீழ்த்துமா? நிரூபிக்குமா?


    தோழர் பிரபாத் பட்நாயக்கின் கட்டுரையின் சுறுக்கம் (இடது பாதையில்தடைக்கற்கள்- தி இந்து – 19-06-2016) தமக்குள் முரண்பட்ட கருத்தையே பதிந்துள்ளது. லெனினால் எழுதப்பட்ட “ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்” என்ற நூலையைப்பற்றி பிரபாத் பட்நாயக் குறிப்பிடும்போது நூறு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது, உண்மையில் மிக முக்கியமான நூல், மக்களால் இன்னும் அது வாசிக்கப்படவில்லை என்று எதோ வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார் என நினைத்தால் “புரட்சிகளின் சகாப்தம் வந்து சேர்ந்துவிட்டதாக அந்தப் புத்தகம் வாதிட்டது. புரட்சிகளின் சகாப்தத்துக்கான காரணம் எது என்பதையும் அது விளக்கியுள்ளது” என்று அதன் வாதத்தையும் அடுத்தப் பத்தியில் விளக்கப்பட்டுள்ளதையும் பேசுகிறார், இவர் இதனை ஏற்றுக் கொண்டாரா? அல்லது மறுக்கிறாரா? என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஏன் என்றால் கம்யூனிசத்தின் பின்னடைவுக்கு (பட்நாயக்கைப் பொருத்தளவில் இது தகர்வு) “உலகப் புரட்சி வந்து கொண்டிருப்பதாக அளித்த வாக்குறுதியின் மீது கட்டமைக்கப்பட்டிருப்பது தான்” என்கிறார்.

"உலகப் புரட்சி சமீபத்தில் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. ஆனால் புரட்சி பின்வாங்கிவிட்டது" என்கிறார். ஆக இதற்கான லெனினது விளக்கத்தைப் பிரபாத் பட்நாயக் ஏற்கவில்லை என்பது உறுதியாகிறது. மறுப்பதோடு லெனினிய திருப்புமுனையான சம்பவங்கள் காலாவதியாகிவிட்டது, அதனால் கம்யூனிசம் நடைமுறைக்குப் பொருத்தமானதாகத் தொடர்ந்து இருப்பதற்காக லெனினிய திருப்புமுனைக்கு முந்தைய கட்டத்துக்கு இணையான நிலைக்கு அது வரவேண்டும் என்கிறார். அத்தோடு லெனினியத்துக்குப் பிறகான தொடர் இணைப்பான சம்பவங்களைக் கம்யூனிசத்தின் இயலாமையால் எதிர்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த இயலாமையே லெனினியத்தைப் புறக்கணித்ததின் விளைவு என்பதே மெய்யான உண்மையாகும். இந்த இயலாமை லெனினியத்தை உள்வாங்காமை, இன்றைய நிலைமைக்கு அதனைக் கடைப்பிடிக்காமை என்பதில் தான் அடங்கியிருக்கிறது.

பிரபாத் பட்நாயக்கின் கட்டுரையின் அனைத்து உட்தலைப்புகளும் லெனினியத்தையும் கம்யூனிசத்தையும் கேள்வுக்குள்ளாக்குவதாகவே இருக்கிறது. முதலில் லெனினியத்தைப் பார்ப்போம். ஏகாதிபத்திய காலத்தில் ஏற்பட்ட போரின் போது இரண்டாம் அகிலத்தின் சந்தப்பவாதத்துடன் மோதலில் தோன்றிய லெனினியப் பகுதியைப் பற்றி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்துடனான மோதல்களில் தான் லெனினியம் வளர்ச்சியுற்றது. ஒருபுறத்தில் மார்க்ஸ் எங்கெல்சுக்கும் மறுபுறத்தில் லெனினுக்கும் இடையில், இரண்டாம் அகிலத்தினுடைய சந்தர்ப்பவாதத்தன் கடிவாளமற்ற ஆதிக்கம் மேலோங்கியிருந்த ஒரு முழுநிறைவான காலம் இருந்ததை நாம் கட்டாயம் மறந்துவிடக் கூடாது என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதனையே பிரபாத் பட்நாயக் மறக்க அல்லது மறைக்கப் பார்க்கிறார்.

"போரும் ருஷ்ய சமூக-ஜனநாயகமும்" என்ற நூலில் லெனின் அனைத்து நாடுகளின் அரசுகளும் முதலாளித்துவக் கட்சிகளும் பல பத்தாண்டுகளாக ஆயத்தம் செய்துவந்த ஐரோப்பியப் போர் மூண்டுவிட்டதையும், முன்னேற்றமடைந்த நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியின் ஆகச் சமீப கட்டமான ஏகாதிபத்திய கட்டத்தில் சந்தைகளுக்கான போராட்டம் தீவிரமடைந்துவிட்டதையும் சுட்டிக்காட்டி ஏகாதிபத்திய போர் தவிர்க்க முடியாமையினை விவரித்துளளார். மேலும், ஏகாதிபத்திய நாடுகள் தமது நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்கு உழைக்கும் மக்கள் திரளின் கவனத்தைத் திசைத்திருப்புதல், தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குலைத்தல், தேசியவாதத்தை முன்வைத்துப் பாட்டாளி வார்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தைப் பலவீனப்படுத்துதல் என்பவையே இந்தப் போரின் ஒரே மெய்யான குறிக்கோள் என்று எழுதியிருக்கிறார்.
"ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்" என்ற நூலில், இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்தை லெனின் சுட்டிக்காட்டுகிறார். உயர்வான ஊதியத்தினைப் பெற்ற, மேட்டுக்குடி உழைப்பாளர்கள் குட்டிமுதலாளித்துவ மனப்பான்மையைப் பெற்றுள்ளனர். அவர்களே இரண்டாவது அகிலத்தின் பிரதானத் தூண்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையில் நடைபெறும் உள்நாட்டுப் போரில், தவிர்க்க இயலாதபடி, பெரிய எண்ணிக்கையில் முதலாளித்துவ வர்க்கத்தின் தரப்பை ஏற்றனர்.

போல்ஷிவிக் கட்சி மட்டுமே ஏகாதிபத்திய போரை எதிர்த்து உறுதிகுலையாமல் நின்றது. மற்றொரு போக்காக நடுநிலைவாதிகள் தோன்றினர். ஜெர்மனியில் காவுத்ஸ்கியின் தலைமையிலும், பிரான்சில் லோங்கேயின் தலைமையிலும், ருஷ்யாவில் டிராட்ஸ்கியின் தலைமையிலும் தங்களது தடுமாற்றத்தை நடுநிலை போக்காகக் கடைப்பிடித்தனர்.

தாய்நாட்டைக் காப்போம்” என்ற சந்தர்ப்பவாத முழக்கத்திற்கு எதிராக லெனின் ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக, உள்நாட்டு முதலாளித்துவத்துக்கும் எதேச்சதிகார அரசுக்கும் எதிராகத் திருப்பும்படி கோரிக்கை விடுத்தார். இதுவே தொழிலாளர்களின், விவசாயிகளின், மக்களின் நலன்களை வெளிப்படுத்துவதாக இருந்தது.

இந்தக் கடமையை ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகள் நிறைவேற்றிட தவறிவிட்டனர். அகிலத்தில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் சோஷலிசத்திற்குப் பதில் தேசியவாதத்தைக் கைக்கொண்டனர். தமது சொந்த நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் தேசியவெறிக்கு அடிபணிந்து போரை நியாயப்படுத்த முனைந்தனர். அகிலத்தின் தலைவர்கள் சோஷலிசத்திற்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர் என்று லெனின் கடிந்துகொண்டார்.

உற்பத்திச் சக்திகள் சமூகமயமாகிவிட்ட நிலையில் இந்த புல்லுருவித்தனமான ஏகாதிபத்தியம் அழுகிவிழ வேண்டியநிலையில் இருக்கிறது என்று புரட்சிக்கான புறநிலை காணப்படுவதாக லெனின் இந்நூலில் கூறியிருக்கிறார். ஆனால் அகநிலையாக உலக கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பப் போக்கினாலும் அதன் புரட்சிகரப் போர்குணம் தேசியவெறியாக மாறிப் போனதாலும் இந்த செயற்கைத் தன்மையால் ஏகாதிபத்தியம் தூக்கியெறியப்படுவது தாமதம் ஆகலாம்.

சமூகப் புரட்சிக்கான புறநிலையாக அடித்தளம் வளர்ச்சி பெற்றிருந்தாலும், மேற்கட்டமைப்பின் சந்தர்ப்பவாதப் போக்கினால் புரட்சிகர வாய்ப்பு தவறிப் போகலாம் என்று லெனின் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தான் இரண்டாம் அகிலத்தின் இறுதி நிலை, அகிலத்தின் இந்தச் சந்தர்ப்பப் போக்கை சொல்லாமல் பிரபாத் பட்நாயக் அகிலம் கம்யூனிச நிறுவனத்துக்கான கருத்துரீதியான அடித்தளத்தை வங்கியதாகக் கூறுகிறார். மேலும் ‘லெனினிய திருப்புமுனை’ என்று ஒருவர் அழைக்கக்கூடிய இந்த நிலைமையிலிருந்து இரண்டாம் உலகப் போரின் முடிவில் உலகம் விலகிப்போய்விட்டது. பளீரென்று மின்னிய கம்யூனிஸத்தின் வெற்றிகளின் தருணம்தான் அதன் பின்னடைவுக்கான ஆரம்பமாகவும் இருந்தது என்பது முரண் என்று கூறி லெனினியத்தோடு முரண்படுறார். ஆனால் லெனின் மார்க்ஸ் கூறிய புரட்சிகரப் புறநிலை அடிப்படையில் இருந்துதான் ஏகாதிபத்தியத்தை வரையறுத்திருக்கிறார்.

வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்தி சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது- என்கிற மார்க்சின் புரட்சியின் புறநிலையை, லெனின் பின்பற்றி உலகப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார். ஆனால் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதப் போக்கால், புறநிலைக்கான அகநிலை போக்கில் பின்னடைவு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே ஒரு நாட்டின் புரட்சி என்கிற புதிய கோட்பாட்டைத் தோற்றுவிக்கிறார். இதுவும் லெனினியத்தின் ஓரங்கமாகும்.

ஏகாதிபத்திய காலக்கட்டத்தின் புறநிலைமைகளையும் அகநிலைமைகளையும் கணக்கில் கொண்டு லெனின் மார்க்சியப் புரட்சிகரப் போதனையை விரிவுபடுத்தினார். சோஷலிசப் புரட்சிக்குத் தேவையான பொருளாயத சக்தியான புறநிலைமைகள் பக்குவப்பட்டிருக்கின்றன. மூலதனத்தின் தொடர் ஒடுக்குமுறையால் பாட்டாளி வர்க்கமும் ஒன்று திரண்டு காணப்படுகிறது. காலனிய நாடுகளின் விடுதலைப் போராட்டமும் தீவிரம் கண்டுள்ளது. வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகளில் சோஷலிசப் புரட்சிக்கான சூழல் தோன்றியிருந்தது, இந்தச் சூழ்நிலையைப் புரட்சியாக மாற்ற வேண்டிய அகநிலை சக்திகள் செயலில் இறங்க வேண்டும். ஆனால் போல்ஷிவிக்குகளின் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர மேலைநாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் “தாய்நாட்டின் விடுதலை என்று சந்தர்ப்வாதமாகச் சுரண்டும் வர்க்கத்தோடு சேர்ந்துகொண்டன. இந்நிலையில் லெனின் புரட்சி பற்றிய மார்க்சியக் கோட்பாட்டைப் புறநிலைக்கு ஏற்ப மாற்றினார்.

வளர்ச்சி பெற்ற அனைத்து நாடுகளில் அல்லது பெரும்பான்மையான நாடுகளில் சோஷலிசப் புரட்சி ஏற்படும் என்று இதுவரை மார்க்சியவாதிகள் கருதிவந்தனர். லெனினும் இதே கருத்தை கொண்டிருந்தார். வளர்ச்சியடைந்த நாடுகளில் முதலாளித்துவத்தின் முதிர்ச்சி இந்த முடிவை எடுக்க வைத்தது என்பது உண்மையே. ஆனால் அன்றைய நிலையில் ஏகாதிபத்தியமாகச் சீரற்ற வளர்ச்சியின் விளைவாக ஏகாதிபத்தியத்தின் சங்கிலித் தொடரில் பலவீனமான கண்ணியில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று லெனின் முடிவெடுத்தார். அதாவது ஒரு தனிநாட்டில் புரட்சி ஏற்படுத்தி அதன் வெற்றியின் தொடர்ச்சியாகப் பிறநாடுகளில் புரட்சி வெடிக்கும் என்று விளக்கினார். அகிலத்தின் சந்தர்ப்பவாதிகளிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதால் ஒரு நாட்டில் மட்டுமே புரட்சி நடைபெற்றது. இது எந்தவகையிலும் மார்க்சுகு மாறானது கிடையாது. லெனினிய திருப்புமுனைக்கு முந்தைய கட்டத்துக்கு இணையான நிலைக்கு அது வர வேண்டும் என்கிற பிரபாத் பட்நாயக் அவர்களின் கருத்து மார்க்சிய லெனினியத்திற்கு மாறானதேயாகும். இன்றைய தேவை முந்தைய கட்டத்துக்குச் செல்வதல்ல, லெனினியத்தை உள்வாங்கி, இன்றைய நிலைமைக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.

லெனினிய கட்டம் காலாவதியாகிவிட்டது, இன்று நடைபெறுகிற போர்களுக்கான அடிப்படைக் காரணமாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான போட்டி அமையாது ஏன், துணைக் காரணமாகக்கூட அமையாது என்கிறார் பிரபாத் பட்நாயக். இரண்டாம் உலகப் போரும், அதனைத் தொடர்ந்து வந்திருக்கின்ற (2007-2008) பொருளாதார நெருக்கடியும் லெனினியத்தின் தேவையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
இந்த நெருக்கடியின் விளைவாக ஒரு மூன்றாம் உலகப் போர் மூளவில்லை என்பது உண்மை தான், அதனைத் தாங்கும் வலிமை இன்றைய ஏகாதிபத்திய நாடுகளுக்கு இல்லை. ஆனால் பல இடங்களில் வெளிப்படுகிற போர்கள் ஏகாதிபத்தியத்தின் நலன்களை வெளிப்படுத்துகவே இருக்கிறது. ஆனால் பிரபாத் பட்நாயக் அவர்களுக்கு இப்போர்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் போராகப்படுகிறது போல் தெரிகிறது. லெனினியத்தைவிட்டு விலகும் போது மார்க்சியத்தைவிட்டு விலகும் நிலைதான் ஏற்படும். ஆகப் பிரபாத் பட்நாயக் இடதுபாதையில் தடைக்கற்களாகக் கருதுவது லெனினியமே ஆகும் அதனால் இக்கட்டுரையின் நோக்கம் தடையை நீக்காமல் நீடிக்க வகைசெய்கிறது. முதலாளித்துவ உற்பத்தியின் உள்முரண்பாட்டிற்குத் தீர்வு சமூகப் புரட்சியே என்கிற மார்க்ஸ் லெனின் ஆகியோரின் கோட்பாட்டையே இன்றைய பொருளாதார நெருக்கடிகள் நிரூபிக்கின்றன.


உலகப் புரட்சிக்கான புறநிலை என்பது கம்யூனிச சித்தாந்தத்தை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இன்றைய அகநிலை மாற்றத்துக்கு லெனினியமே வழிகாட்டும்.