Friday 28 December 2018

கருத்துநிலை மறுவார்ப்பு (ideological remoulding) – ஜார்ஜ் தாம்ஸன்


சரக்கு உற்பத்தியுடனும் வர்க்கச் சுரண்டலுடனும் தொடர் புடைய கருத்துகள் நம் மனத்தில் ஆழமாக வேர்பிடித்துள்ளதால், இடைவிடாத அரசியல் போராட்டத்தின் மூலமே அவற்றை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். எனவேதான், சோசலிசப் புரட்சியின் போதும் அதன் பிறகும், அனைத்து வர்க்கங்களுக்கும் கருத்துநிலை மறுவார்ப்புத் தேவைப்படுகிறது. இது பழைய சுரண்டல் வர்க்கங்களுக்கு மட்டுமல்ல, அறிவாளிகள், பாட்டாளி வர்க்கம் உள்ளிட்ட புரட்சியை ஆதரிக்கும் வர்க்கங்களுக்கும் தேவைப்படுகிறது:

“வர்க்கப் போராட்டத்திலும் இயற்கைக்கு எதிரான போராட்டத்திலும் பாட்டாளி வர்க்கம் சமுதாயம் முழுவதையும் மறுவார்ப்புச் செய்கிறது, அதே சமயம் தன்னையும் மறுவார்ப்புச் செய்து கொள்கிறது”. (MFE 105.)

கட்சியால் வழி நடத்தப்படும் பாட்டாளிவர்க்கம் அறிவாளி களுக்குத் தலைமை தாங்கி, அவர்கள் தங்களைத் தாங்களே மறுவார்ப்புச் செய்து கொள்வதன் மூலமே அவர்களால் புதிய சமுதாயத்திற்குத் தமது பங்களிப்பை முழுமையாக வழங்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும்:

“நமது இலக்கிய, கலைத்துறைச் செயல்பாட்டாளர்கள் இந்தக் கடமையை நிறைவேற்றித் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்; அவர்கள், தொழிலாளர்கள், உழவர்கள், போர்வீர்கள் பக்கம் மெல்ல மெல்ல வந்து சேர வேண்டும். அவர்கள் நடுவே செல்வதன் மூலமும் நடைமுறைப் போராட்டங்களுக்குச் செல்வதன் மூலமும் மார்க்ஸியம், சமுதாயம் ஆகியனவற்றைக் கற்பதன் மூலமும்தான் அவர்கள் இவ்வாறு வந்து சேர முடியும். (MSW 3.78.) பெருந்திரளான அறிவாளிகள் சிறிது முன்னேற்றம் அடைந் திருக்கிறார்கள். ஆனால் இதை கொண்டு அவர்கள் திருப்தி அடைந்துவிடக்கூடாது. அவர்கள் தொடர்ந்து தம்மை மறுவார்ப்புச் செய்துகொள்ள வேண்டும். தமது பூர்ஷ்வாக் கண்ணோட்டத்தைப் படிப்படியாகக் கைவிட்டு பாட்டாளி வர்க்க, பொதுவுடைமைக் கண்ணோட்டத்தைப் பெற வேண்டும். அப்போதுதான் அவர்களால் புதிய சமுதாயத்தின் தேவைகளுக்குத் தம்மைப் பொருத்தமானவர்களாக்கிக் கொள்ளவும் தொழிலாளர்களுடனும் உழவர்களுடனும் ஒன்றுபடவும் முடியும். உலகக் கண்ணோட்டத்தில் ஏற்படும் இந்த மாற்றம் அடிப்படையானதொரு விஷயமாகும். இன்றுவரை நமது அறிவாளிகளில் பெரும்பாலோர் தமது உலகக் கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளதாகச் சொல்ல முடியாது. அவர்கள் இந்த விஷயத்தில் தொடர்ந்து முன்னேற்றமடைவார்கள் என்றும், வேலைகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்வதனூடாக அவர்கள் படிப் படியாக பொதுவுடைமைக் கண்ணோட்டத்தைப் பெற்று, மார்க்ஸியம் - லெனினியத்தை முன்பைக் காட்டிலும் நன்கு கிரகித்துக்கொண்டு, தொழிலாளர்களுடனும் உழவர் களுடனும் பிரிக்கமுடியாதபடி ஒன்றுபடுவர் என்றும் நாம் நம்பிக்கை கொள்ளலாம்.” (MFE 108.)

அறிவாளிகளின் உலகக் கண்ணோட்டத்தை மாற்றும் இயக்கம் பாட்டாளிவர்க்கத்தின் தலைமையின் கீழ் நடத்தப்படு கிறது. ஆனால், இந்த இயக்கத்திற்கு அறிவாளிகள் தாமாகவே முன் வந்து இசைவு தரவும் அதில் முழு நம்பிக்கை பெறவும் செய்கையில்தான் இது வெற்றியடையும்:

“சுதந்திரம் என்பதைக் கட்சித் தலைமையுடனும் ஜனநாயகம் என்பதை மையப்படுத்தப்பட்ட வழிகாட்டுதலுடனும் இணைத்தே கடைப்பிடிக்க வேண்டும் என்னும் கருத்தை நாம் பரிந்துரைக்கையில், அதன் பொருள் கருத்துநிலைப் பிரச்சனைகளையோ, மக்களிடம் சரியானது எது, தவறானது எது என்பதைப் பாகுபடுத்தும் பிரச்சனைகளையோ தீர்ப்பதற் குப் பலவந்த முறைகளைக் கையாள வேண்டும் என்ப தாகாது. கருத்துநிலைப் பிரச்சினைகளையோ, சரியானதா தவறானதா என்னும் பிரச்சினைகளையோ தீர்ப்பதற்கு நிர்வாக ஆணைகளையோ பலவந்த நடவடிக்கை களையோ பயன்படுத்தச் செய்யப்படும் எல்லா முயற்சிகளும் பயனற் றவை மட்டுமின்றி ஊறு விளைவிக்கக் கூடியவையுமாகும். நிர்வாக ஆணைகள் மூலமாக நம்மால் மதத்தை ஒழிக்கவோ, மதத்தில் நம்பிக்கை வைக்காதிருக்கும்படி மக்களைக் கட்டாயப்படுத்துவவோ முடியாது. கருத்து முதல்வாதத்தைக் கைவிடும்படி மக்களை நம்மால் எப்படிக் கட்டாயப்படுத்த முடியாதோ அவ்வாறே மார்க்ஸியத்தில் நம்பிக்கை வைக்கும் படி அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. கருத்துநிலைத் தன்மைவாய்ந்த பிரச்சினைகளையோ மக்களிடையே நிலவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளையோ தீர்ப்பதற்கான ஒரே வழி ஜனநாயக முறையாகும்; விவாதித்தல், விமர்சித்தல் நமது கருத்துகளுக்கு அவர்களை. இணங்கச் செய்தல், கல்வி புகட்டுதல் என்னும் முறையே யன்றி கட்டாயப்படுத்துதல், ஒடுக்குதல் என்னும் முறையல்ல.” (MFE 86.)

பாட்டாளிவர்க்கத்திற்கும் அறிவாளிகளுக்குமிடையே உள்ள பகைத்தன்மையற்ற முரண்பாட்டை மேற்சொன்ன வகையில் கையாண்டால் அது வெற்றிகரமாகத் தீர்க்கப்படும் என்பதைக்கடந்த கால் நூற்றாண்டாக சீனப் பொதுவுடைமைக் கட்சி பெற்றுள்ள அனுபவம் காட்டுகிறது.
(மனித சாரம் - IX அறிவாளிகளும் பாட்டாளிவர்க்கமும்
தமிழில்-எஸ்.வி.ராஜதுரை)




சரக்காகிவிடும் கலை – ஜார்ஜ் தாம்ஸன்


'முதலாளிய உற்பத்தி, அறிவு உழைப்பின் சில பிரிவு களுக்கு, எடுத்துக்காட்டாக, கவிதைக்கும் கலைக்கும் பகையானது (TSV 1.285). அறிவியல் உற்பத்திச் சக்தியாவது போல, கலை சரக்காகிறது. இந்தச் சரக்கு ஒரு நுகர்வுப்பொருளாக இருந்தபோதி லும் மற்ற சரக்குகளிலிருந்து இது ஒரு விஷயத்தில் வேறுபடுகிறது. அதாவது, இதனுடைய மதிப்பு, மோஸ்தரில் ஏற்படும் மாற்றங்கள், கலைப்படைப்புகளைச் சேகரிக்கும் செல்வந்தர்கள், இதையே தொழிலாகக் கொண்டவர்களின் நிதி, ஊகவாணிபம் போன்ற எதேச்சையான காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில், கலைஞன் இதர வினைஞர் களைப் போல சமூக வாழ்வில் ஒரு அடக்கமான ஆனால் பாது காப்பான இடத்தைப் பெற்றிருந்தான். அவன் தனது பிரபுவுக்குக் கட்டுண்டு கிடந்தபோதிலும் அவனுக்கும் பிரபுக்கும் இருந்த உறவு தனிப்பட்ட மனிதர்கள் சம்பந்தப்பட்ட ஒன்றேயன்றி வர்த்தக உறவு அல்ல. சரக்கு உற்பத்தியின் வளர்ச்சியுடன், இந்த மகிழ்ச்சியான எளிய உறவுகளுக்குப் பதிலாக பண உறவுகள் தோன்றின.

சென்ற அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்டதுபோல இந்த மாற்றத்தை வியென்னாவைச் சேர்ந்த மாபெரும் இசை அமைப் பாளர்களின் வாழ்க்கையில் காணலாம். பீதோவெனின் காலத்தில், இசைச் செயல்பாடுகளின் மையம் மேட்டுக்குடியினரின் வரவேற்பு அறையிலிருந்து இசை-அரங்குக்கும் புரவலரிடமிருந்து இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறவருக்கும் சென்றது. பீதோவென் இந்த மாற்றங்களை வரவேற்றபோதிலும், தானும் சந்தைக்காக உற்பத்தி செய்கிறவர்தான் என்னும் வேதனைமிக்க உணர்வையும் கொண்டிருந்தார்:

“இந்த உலகில் கலைக்கான ஒரு பெரும் களஞ்சியம் இருக்க வேண்டும். கலைஞன் அங்கு சென்று தனது படைப்புகளைச் சேர்க்க வேண்டும். பிறகு தனக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இப்போதோ, கலைஞன் பாதி வர்த்தகனாகவும் இருக்க வேண்டியுள்ளது - இதை எவ்வாறு பொறுத்துக்கொள்வது?” (l.etters, ed. Ander Son, 1.47.)

முதலாளியச் சமுதாயத்தில் கலைஞனின் சுதந்திரம் என்பது சந்தையின் சுதந்திரம்தான் (LCW 10.48).

ஏகபோக முதலாளிய யுகத்தில் இந்த சுதந்திரமும்கூட வெட்டிக் குறுக்கப்படுகிறது. ஏகபோக முதலாளிகளைப் பொருத்த வரை சிறு எண்ணிக்கையிலான மேட்டுக்குடியினருக்கான பொழுது போக்கு என்பதைத் தவிர கலைகளுக்கு எந்தப் பயனும் இல்லை. பிற ஏகபோக முதலாளிகளோ இலாபம் ஈட்டுவதற்கும் மக்கள் மனங்களில் ஒழுக்கக்கேடுகளை விதைக்கவும் ஆன்மீகரீதியான கறைகளை ஏற்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். இந்தத் தீமையின் விளைவை எல்லாவிடங்களிலும் பார்க்கலாம். ஆனால் எல்லா வற்றையும்விட, ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம் இன்னும் நிலவுகின்ற நாடுகளில்தான் பாரம்பரிய வெகுமக்கள் கலைவடிவங்கள் திட்ட மிட்டு அழிக்கப்பட்டுவருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் கலைஞன் ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று, அவன் ஒரு சரக்கு - உற்பத்தியாளன் என்னும் தகுதியை ஏற்றுக் கொண்டு வர்த்தகரீதியான வெற்றியைத் தேடிச் செல்லவேண்டும்; அப்படிச் செய்வானேயாகில் ஒரு கலைஞனுக்குள்ள நேர்மையை அவன் இழந்துவிடுவான். அல்லது, வர்த்தக மதிப்பீடுகளை நிராகரித்து கலைப்படைப்பு சுய - வெளிப்பாட்டுக்கான ஒரு சுயாதீனமான் செயற்பாடு என்னும் கோட்பாட்டில் - கலை கலைக்காகவே என்னும் கோட்பாட்டில் - தஞ்சம் புக வேண்டும். ஆனால் இந்தக் கோட்பாடு வர்த்தக மதிப்பீடுகளிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறையை வழங்குவதில்லை. மாறாக, இந்தக் கோட்பாடே சரக்கு உற்பத்தியில் உள்ளார்ந்த சுயநலம் சார்ந்த தனிமனிதவாதத்தின் வெளிப்பாடுதான். தனது சமூகப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதன் மூலம் அவன் தனக்கு உள் உந்துதல் தரும் மூலாதாரங்களிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்கிறான். பிறருக்கு உள் உந்துதல் தரக்கூடிய ஆற்றலை அவன் மீண்டும் பெறவேண்டுமானால், அவன் மக்களிடமிருந்து உள்உந்துதல் பெற வேண்டும். மக்களோடு ஐக்கியப்படுவதன் மூலமே, தனது கலை, அது தரும் மகிழ்ச்சிக்காக மதிக்கப்படுமேயன்றி சந்தையில் பெறும் விலைக்காக அல்ல என்பதை அவனால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
(மனித சாரம் - IX அறிவாளிகளும் பாட்டாளிவர்க்கமும்
தமிழில்-எஸ்.வி.ராஜதுரை)


முதலாளியத்திற்கான சேவையில் அறிவியல்– ஜார்ஜ் தாம்ஸன்


முதலாளியச் சமுதாயத்தில் அறிவியல், உழைப்பிலிருந்து மாறுபட்ட ஒரு உற்பத்திச் சக்தியாக மாறி மூலதனத்திற்கான சேவையில் ஈடுபடுத்தப்படுகிறது (C 1.361) ஏகபோக மூலதனக் காலகட்டத்தில், முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிகமாக அறிவியல் உயர்ந்த அளவில் ஒழுங்கமைக்கப்படுகிறது. ஆனால் இப்படி அது ஒழுங்கமைக்கப்படுவதன் முதன்மை நோக்கம் தனியாருக்கு இலாபத்தை ஈட்டித் தருவதுதான். அறிவியலின் தனித்தனியான குறிப்பிட்ட துறைகளிலோ அல்லது அவற்றின் பிரிவுகளிலோ மட்டுமே அறிவியல் அறிஞர்கள் பயிற்றுவிக்கப் படுவதால், அவர்களால் இயற்கை அறிவியல் முழுவதையும் கோட்பாட்டுரீதியாக உட்கிரகிப்பது கடினமாகி வருவதுடன், சமுதாயம் பற்றிய ஆய்வில் அவர்கள் பயிற்சி ஏதும் பெறுவ தில்லை. இதற்கு மறுதலையாக, சமூக, வரலாற்று அறிவியல்கள் இயற்கை அறிவியலிலிருந்து மட்டுமின்றி, ஒன்றிலிருந்து மற்றொன்றும் துண்டிக்கப்படுகின்றன. வரலாறு என்பது, அது ஏதோ அறிவியலின் ஒரு பிரிவு அல்ல என்பது போலக் கற்பிக்கப் படுகிறது. இயற்கை அறிவியலில் மாணவன் மார்க்ஸியம் குறித்து எதனையும் தெரிந்துகொள்வதில்லை. ஆயினும், குறைந்தபட்சம் இயற்கையிலுள்ள இயங்கியல் வளர்ச்சியைப் புரிந்துகொள்கிறான் - இயங்கியல் என்னும் பெயர் அவனுக்குத் தெரியாமல் இருந்த போதிலும். வர்க்கப் போராட்டத்தை புரிந்துகொள்ளக்கூட அறியாத பூர்ஷ்வா வரலாற்றறிஞனைப் பொருத்தவரை இயங்கியல் என்பதற்கு அர்த்தமே இல்லை.

பூர்ஷ்வாக் கல்வி முறையில் இயற்கை பற்றிய ஆய்வுக்கும் மனிதனைப் பற்றிய ஆய்வுக்கும் இடையிலான முரண்பாடு, ஒரு உற்பத்திச் சக்தி என்னும் வகையில் அறிவியலை வளர்க்க வேண்டிய தேவைக்கும் மூலதனத்துக்கும் உழைப்புக்குமுள்ள உண்மையான உறவை மூடிமறைக்க வேண்டிய தேவைக்கும் இடையிலான முரண்பாடு பூர்ஷ்வா உணர்வில் ஏற்படுத்தும் மோதலைப் பிரதிபலிக்கிறது.

சில பூர்ஷ்வா அறிவியல் அறிஞர்கள் தங்களது நிலையை நியாயப்படுத்துவதற்காக, தங்களது அக்கறை அறிவை அறிவுக் காகவே மேம்படுத்துவதானேயன்றி தமது பணியின் சமூகப் பின்விளைவுகளல்ல என்று கூறுகின்றனர். ஆனால், சமுதாயப் பிரச்சினைகள் கடுமையாகும்போது சுய மரியாதையை இழக்காமல் இந்த நிலைப்பாட்டை அவர்களால் தொடர்ந்து மேற்கொள்ள முடியாது. இது ஒருபுறமிருக்க, அவர்களில் வேறு சிலருக்குத் தொழிற்சாலைகளின் மூலம் தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் வர்க்கப் போராட்டத் திற்குள் இழுக்கப்படுகிறார்கள். இவ்வாறுதான் அவர்கள், சோசலிசப் புரட்சியின் மூலமே, மக்களுக்கான சேவை கருதி பயன் - மதிப்பு களை உற்பத்தி செய்ய ஈடுபடுத்தப்படும் ஒரு சக்தியாக அறிவியல் உழைப்புடன் மீண்டும் ஐக்கியப்படுத்தப்படும் என்பதை அறிந்து கொள்கின்றனர்.
(மனித சாரம் - IX அறிவாளிகளும் பாட்டாளிவர்க்கமும்
தமிழில்-எஸ்.வி.ராஜதுரை)


புரட்சிகர அறிவாளிகள் – ஜார்ஜ் தாம்ஸன்


பொதுவாகவே, சமுதாயத்தின் அறிவாற்றல் துறை ஆளும் வர்க்கத்தின் கருத்து நிலையின் (ideology) ஆதிக்கத்துக்குட் பட்டிருக்கிறது:

“ஆளும் வர்க்கத்தின் கருத்துகளே ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆளும் கருத்துகளாகவும் இருக்கின்றன. அதாவது, சமுதாயத்தில் பொருள்வகையில் எந்த வர்க்கம் ஆளும் சக்தியாக உள்ளதோ, அதே வர்க்கம்தான் அதே சமயம் அறிவாற்றல் துறையில் ஆளும் சக்தியாகவும் விளங்குகிறது. பொருள்வகை உற்பத்திச் சாதனங்களைத் தன் கைவசம் வைத் திருக்கும் வர்க்கமே, அக்காரணத்தாலேயே, பொதுவாகச் சொல்லப்போனால் சிந்தனைப் படைப்புச் சாதனங்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. இதனால் சிந்தனைப் படைப்புச் சாதனங்கள் இல்லாதவர்களின் கருத்துகள் ஆளும் வர்க்கத்திற்குக் கட்டுப்பட்டவையா கின்றன. ஆளும் கருத்துகள் என்பன உண்மையில் ஆதிக்கம் செலுத்தும் பொருள்வகை உறவுகளின் கருத்து வெளிப்பாடே யன்றி வேறல்ல” (GI 60.)

ஆயினும், புரட்சிக் காலகட்டங்களில், பழைய சமுதாயத் தின் கட்டுமானம் சிதையத் தொடங்குகையில், ஆளும் வர்க்கத்தி லுள்ள ஒரு பிரிவு அதிலிருந்து பிரிந்து வெளியேறிப் புரட்சி வர்க்கத்துடன் சேர்ந்துகொள்கிறது:

“வர்க்கப் போராட்டம் தனது இறுதியான, தீர்மானகரமான நேரத்தை நெருங்கி வருகையில், ஆளும் வர்க்கத்திற் குள்ளேயே நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிதைவு இயக்கம் - உண்மையில் சொல்லப்போனால் பழைய சமுதாயம் முழு வதிலும் நடைபெற்றுவரும் சிதைவு இயக்கம் - ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பிரிவு தன்னை அதிலிருந்து துண்டித்துக் கொண்டு வெளியேறி புரட்சிகர வர்க்கத்துடன், எதிர்காலத்தைத் தனது கைகளில் வைத்துள்ள வர்க்கத்திடம் சேர்ந்துகொள்ளும் அளவுக்குக் கட்டுமீறியதாகவும் கண்ணை உறுத்துவதாகவும் அமைகிறது. எனவே, இதற்கு முந்திய காலகட்டத்தில் பிரபுக்குலத்தினரில் ஒரு பகுதியினர் பூர்ஷ்வா வர்க்கத்துடன் சேர்ந்து கொண்டதைப் போல், இப்போது பூர்ஷ்வா வர்க்கத்தின் ஒரு பகுதியினர் - குறிப்பாக பூர்ஷ்வா வர்க்க கருத்துநிலைவாதிகளில் ஒரு பகுதியினர் - பாட்டாளி வர்க்கத்திடம் போகின்றனர். இப்பகுதியினர் வரலாற்று இயக்கம் முழுவதையும் கோட்பாட்டு ரீதியாகப் புரிந்து கொள்ளும் அளவிற்குத் தங்களை உயர்த்திக் கொண்டவர் களாவர்.” (ME 1.1 17, cf. LCW 5.375.)

இத்தகைய அறிவாளிகள் முதலாளி வர்க்கத்திடம் தாம் கொண்டிருந்த பற்றுறுதியை இப்போது பாட்டாளிவர்க்கத்தின் மீது வைக்கத் தொடங்குகின்றனர். ஏனெனில், முதலாளியச் சமுதாயத் தின் வரலாற்றுச் சாதனைகள் ஒருபுறமிருப்பினும், அச்சமுதாயம் அறிவுக்கு மாறானது, ஒழுக்கக்கேடானது என்பதை அவர்கள் தம் அனுபவத்திலிருந்தே அறிந்துகொள்வதுதான்.
(மனித சாரம் - IX அறிவாளிகளும் பாட்டாளிவர்க்கமும்
தமிழில்-எஸ்.வி.ராஜதுரை)


Tuesday 20 November 2018

சாதியமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்


மார்க்ஸ்:- “முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை உறைந்து இறுகச் செய்தோ, குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் காரணமாய் சாதி அமைப்புக்கு ஒவ்வாத முறையில் வேறுபாடுறும் தன்மை தனிஆளிடம் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்தோ வந்த போக்கிற்கு ஒத்ததே ஆகும். தாவரங்களும் மிருகங்களும் இனங்களாகவும் ராசிகளாகவும் வகைபிரிவதை முறைப்படுத்துகிற அதே இயற்கை விதியின் செயலிலிருந்தே, சாதிகளும் கைவினைச் சங்கங்களும் பிறக்கின்றன, ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்ததும் சாதி மூலமான பரம்பரைத் தன்மையும் கைவினைச் சங்கம் மூலமான பிரத்தியேகத் தன்மையும் சமுதாயச் சட்டத்தின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன என்பதே
மூலதனம் I பக்கம் 461


வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொண்டவர்களால் தான் சாதியத்தை மார்க்சிய வழியில் அணுகமுடியும். ஒன்றின் தோற்றத்தையும் அதன் இருப்பையும், மறைவையும் பற்றிப் பேசும் போது அதற்கான பொருளாயத நிலைமையைக் கொண்டே பொருள்முதல்வாதி முடிவெடுப்பர். அரசு தோன்றுவதற்கான பொருளாயத நிலைமை இருக்கிறது அந்தப் பொருளாயத நிலைமை இருக்கும் வரை அரசு இருக்கும் அந்தப் பொருளாயத நிலைமை மறைந்திடும் போது அரசு உலர்ந்துவிடும். மதமும் அப்படியே. ஆனால் இது தானாகவே அதாவது பொருளாயத நிலைமை மாறினால் தானாக நிகழ்ந்துவிடக்கூடியது அல்ல. அதற்கான போராட்டம் முடிவு வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். இறுதியில் போராட்டம் உச்சத்தைத் தொடும்.

சாதியத்தையும் இவ்வாறு தான் அணுக வேண்டும். சாதியத்தை யாரும் கருத்தியல் கொண்டு படைத்திடவில்லை. அதனால் அதனைக் கருத்தியலைக் கொண்டே அதனை அழித்திடவும் முடியாது. சாதியத்தின பொருளாதார நிலைமைகளை முடிவுக்குக் கொண்டிவருவதுடன் தான் அது முழுமையாக இறுதி முடிவுக்கு வரும். அதுவரை கருத்தியலான போராட்டம் தேவைப்படாது என்று பொருளில்லை. அதன் எல்லையை உணர்ந்து போராட வேண்டும்.

தலித்திய எழுச்சி என்பதே அந்தப் பொருளாயத நிலைமைகளின் நெகிழ்வினால் உருவானது தான். தலித்துக்கள் பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கப்படும போது இது போன்ற எழுச்சி ஏற்படவில்லை. தலித்துகள் பழைய உற்பத்தி முறையில் இருந்து விடுபட்டதின் காரணமாகவே அவர்களால் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து, பல கல்விகளைப் பெற முடிகிறது. இது ஒரு நெடியப் போராட்டம். சாதியப் பிடியல் இருந்து விடுபடும்போது இன்றைய வர்க்கபிடிக்குள் அகப்படுகின்றனர். சாதியத்தில் இருந்து விடுபட்டாலும் வர்க்க ஒடுக்கு முறையில் இருந்து விடுபட நெடியப் போராட்டம் நடத்த வேண்டுடியுள்ளது.

சாதியமும் பழைய உற்பத்தி முறையின் வர்க்க வடிவங்களே.

மூலதனத்தின் வளர்ச்சியே முதலாளித்துவ வர்க்கத்தையும் பாட்டாளி வர்க்கத்தையும் தோற்றுவிக்கிறது. அதே போல் சாதியம் என்கிற பழைய வர்க்கத்தையும் அன்றைய பொருளாதார நிலைமைகளே தோற்றுவித்தது. எப்படி இன்று முதலாளித்துவ அடிவருடி பேரறிஞர்கள் முதலாளிததுவத்துககாக வக்காலத்து வாங்குகிறார்களோ, அதே போல் அன்றைய பார்ப்பனர்களும் அவர்களை ஒத்த பிற அதிக்க வர்க்கத்தினரும் சாதியத்தை நிலைநிறுத்துவதற்கு எழுதினர். வர்ணாஸ்ரம் என்பது நிகழும் சாதியத்தை விளக்க முயற்சிக்கிறதே தவிர அதனை முழுமையாக விளக்கிடவில்லை. அதனை விளக்குவதில் தோல்வி கண்டவர்கள் படைப்பாளிகளாக இருக்க முடியுமா?. பார்ப்பனர்கள் தான் தமது கருத்தின் அடிப்படையில் சாதியத்தைப் படைத்தார்கள் என்றால், ஆன்மீகத்தில் மூழ்கியவர்கள் பார்ப்பனர்களைச் சிறப்பித்து மயங்குவது போல் சிறப்பிக்காமல் மயங்குகின்றனர்.

எந்தச் சிறந்த தனி நபராலும் சமூகம் படைக்கப்படுவதில்லை. மக்கள் தான் வரலாற்றைப் படைக்கின்றனர். அவர்கள் தாம் நினைத்தபடி எல்லாம் சமூகத்தைப் படைத்திடவில்லை. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியோடு இணைந்து சமூகத்தை மாற்றுகின்றனர்.

எங்கெல்ஸ்:- “சில நபர்கள் தம் வசதிக்காக் கற்பனை செய்ய முயல்வதைப் போல, பொருளாதார  நலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லை.

மனிதர்கள் தம்முடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள் ஆனால் குறிப்பிட்ட சூழலில் (அந்தச் சூழல் அவர்களைத் தகவமைக்கிறது) ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கின்ற மெய்யான உறவுகளின் அடிப்படையில், இந்த மெய்யான   உறவுகளில் பொருளாதார உறவுகள் (இவற்றின் மீது மற்ற உறவுகள்  அரசியல் மற்றும் சித்தாந்த உறவுகள்  எவ்வளவு அதிகமாகத் தாக்கம் செலுத்தினாலும்) முடிவில் இன்னும் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன, அவை சமூக வளர்ச்சி முழுவதும் இழையோடியிருக்கின்றன, அவை மட்டுமே இவ்வளர்ச்சியைப் புரிந்து கொள்ள இட்டுச் செல்லும்"
(எங்கெல்ஸ் வொ.போர்கியுசுக்கு எழுதிய கடிதம், லண்டன், ஜனவரி 25, 1894)

பொருளாதார நிலைமைகள் தாமே செய்துவிடும் என்று கூறிடவில்லை, அகிலத்தைத் தோற்றுவித்ததும், கட்சி அமைத்தும் பொருளாதார  நிலைமைகளோடு சேர்ந்து போராடுவதற்கே.

இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும் என்றே அறிக்கை பறைசாற்றுகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தன் நோக்கம், போராட்டத்தைக் கைவிடுவதல்ல, போராட்டத்தைப் புரிந்து போராடுவதற்கே.

எங்கெல்ஸ்:-
“வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப் போராட்டங்களும், அவை அரசியல், மத, தத்துவஞான அல்லது வேறு ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் அவை அநேகமாகச் சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே, இந்த வர்க்கங்கள் இருப்பதும் அதன் காரணமாக இவற்றுக்கிடையே ஏற்படுகின்ற மோதல்களும் கூட அவற்றின் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்பது அந்த விதியாகும். இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றம் பற்றிய விதிக்கு உள்ள அதே முக்கியத்துவம் வரலாற்றில் இந்த விதிக்கு உண்டு.”
(லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் - எங்கெல்சின் முன்னுரை)

பார்ப்பனர்கள் தான் சாதியத்தை உருவாக்கினார்கள் என்று கருதுபவர்களால், வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ்" என்று எங்கெல்ஸ் கூறுவதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களுக்கு இது ஒரு விதிவாதமாகப் படுகிறது.

வரலாற்றியல் பொருள்முதல்வாதமே கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டி, அதன்படியே அனைத்து முரண்பாட்டையும் அணுகுவர்.

Thursday 18 January 2018

02. ஸ்டாலின் அவதூறு பற்றி….. - கே.என்.சிவராமன்

(சிவந்த மண்- மார்க்சிய கோட்பாடுகளுடன் ரஷ்ய – சீன புரட்சியின் வரலாறு- என்ற நூலில் இருந்து)

01. ஸ்டாலின் அவதூறு பற்றி….. - கே.என்.சிவராமன்
“ஆக தோழர் ஸ்டாலின் பற்றி பேசுபவர்கள் இதுபோன்ற ஏகாதிபத்திய கூலிக்காசுக்கு எழுதிய எழுத்தாளர்களிடம் இருந்துதான் விவரங்களை எடுத்துக்கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.

அதே சமயம் பொய்களை அம்பலப்படுத்தி உண்மையை எழுதிய எழுத்தாளர்களும் இருந்தார்கள். இவர்கள் யாரும் கம்யூனிஸ்டுகளோ, ஸ்டாலின் ஆதரவாளர்களோ இல்லை. முதலாளிய ஜனநாயகவாதிகள்தான். ஆனால், நேர்மையான பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் டக்ளஸ் டோட்டில், லூயிஸ் பிக் ஷர், டி.என்.பிரீத் அன்னா லூயி ஸ்ட்ராங், மைக்கேல் சேயர்ஸ், ஆல்பர்ட் ஐ கான், ஹெச்.ஜி.வெல்ஸ், ஹென்றி பார்பஸ். என நீளும் பட்டியல் இதற்கு உதாரணம்.

அடுத்த 'குற்றச்சாட்டுக்கு' வருவோம். ஸ்டாலின்-இட்லர் ஒப்பந்தம் சரியானதா? இதையே இப்படி கேட்கலாம். இட்லர் கொடுங்கோலர் என்பது ஸ்டாலினுக்கு தெரியாதா? பிறகு ஏன் ஒப்பந்தம் போட்டார்?

இதற்கான பதில் வரலாற்றுப் பக்கங்களை புரட்டுவதுதான். இனவெறியைத் தூண்டி குளிர்காய நினைத்த இட்லரின் நடவடிக்கைகளை எதிர்க்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஓர் ஒப்பந்தம் போட ஸ்டாலின் அழைத்தார்.

இதற்கு மேலே குறிப்பிட்ட மூன்று ஏகாதிபத்திய நாடுகளும் சம்மதிக்கவில்லை. குறிப்பாக பிரிட்டன், தந்திரமாக காய்களை நகர்த்த ஆரம்பித்தது. அதன் ஒருபகுதியாக சோவியத் ரஷ்யாவை தாக்கும்படி இங்கிலாந்தை தூண்டியது. இதன் வழியாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க திட்டமிட்டது.

எப்படி தெரியுமா? சோவியத் ரஷ்யாவை வீழ்த்துவது அவ்வளவு சுலபமல்ல. தன் முழு பலத்தையும் இட்லர் இறக்கியாக வேண்டும். இந்த போரில் இட்லர் நிச்சயம் தனது பலத்தை முழுமையாக இழந்துவிடுவார். அத்துடன் சோவியத்தின் கம்யூனிச அபாயமும் அழியும். பிறகு பிரிட்டன் மட்டும்தான் ஐரோப்பாவின் மாபெரும் சக்தியாக இருக்கும்!

இந்த எண்ணத்துடன் தான் ஸ்டாலினின் ஒப்பந்த கோரிக்கையை ஏற்க மறுத்தது.

இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உலக நாடுகளை அச்சுறுத்தும் பாசிசத்தின் போக்கை கண்டும் உலக நாடுகளை காக்கும் பொருட்டும் உழைக்கும் மக்களின் ரத்தத்தையும் வியர்வையையும் கொண்டு கட்டியெழுப்பிய சோஷலிச சமூகத்தை காக்கும் பொருட்டும்தான் ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் ஸ்டாலின் ஒப்பந்தம் கோரினார்.

இது சாத்தியமற்று போனதால் இட்லரிடம் நேரடியாக ஓர் இடைக்கால ஒப்பந்தம் போட்டுக் கொள்ள ஸ்டாலின் தயாரானார்.

கவனிக்க, இந்த இடைக்கால அவகாசம் என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சம் இடைக்கால ஒப்பந்தம் என்பது பல்வேறு சாதக பாதகங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு வகுக்கப்பட்ட ஒரு செயல் தந்திரம்.

உலக யுத்த சூழலில் சோவியத் ரஷியாவை தற்காத்துக் கொள்ளவும் செம்படையை பாசிசத்துக்கு எதிராக தயார் படுத்தவும் ஓர் இடைக்காலம் தேவை என்பதாலேயே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

அன்றைய சூழலில் இட்லர் போர்வெறி கொண்டு அலைபவராக, மாபெரும் பலத்துடன் இருந்தார். அப்போதைக்கு அவருடன் மோதி வெல்வது சாத்தியமற்றதாக இருந்தது. காரணம் சோவியத் படைகள் அவ்வளவு பலத்துடன் இல்லை. எனவே தன்னை தயார் படுத்திக்கொள்ள ஒரு சிறு இடைவெளி ரஷியாவுக்கு தேவைப்பட்டது. அதனால்தான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தால் இட்லர் படையெடுப்பார். ரஷியா அழியும் என்ற ஏகாதிபத்தியங்களின் கனவு தகர்ந்தது. ஒப்பந்தப்படி ரஷியா 1939லிருந்து 1941 வரை போரில் ஈடுபடவில்லை.

செம்படை தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்த நிலையில் - யுத்தத்துக்கு ரஷியா தயாராக இல்லாத நிலையில் - திடீரென்று இட்லர் படையெடுத்தார். ரஷியாவை தாக்கத் தொடங்கினார். இரண்டாவது உலகப்போர் உக்கிரமாக நடந்தது. அப்போது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் அனைத்தும் இட்லருக்கு பயந்து ஒடி ஒளிந்தது. ஸ்டாலின் தலைமையிலான செம்படைதான் பாஸிசத்தை வீழ்த்தி உலகை காத்தது.

இந்த வரலாற்று உண்மைகளையும், புறச் சூழல்களையும் வேண்டுமென்றே கவனிக்க மறுத்து ஸ்டாலின் மீதும் சோவியத் ரஷ்யா மீதும் அவதுறை பரப்புகின்றனர். இட்லருடன் ஒப்பந்தம் போட்டார் என நா கூசாமல் பேசுகின்றனர் எழுதுகின்றனர். கடுமையான விமர்சனத்துக்கு ஆட்பட்ட ஸ்டாலின் வாழ்ந்த காலம் - "சோஷலிச ரஷ்யாவின் குழந்தைப் பருவ காலம். ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்ற சில ஆண்டுகளிலேயே மாமேதை லெனின் மரணமடைந்து விட்டார். அவர் மறைவுக்கு பின் லெனினுடைய பொறுப்புகள் அனைத்தும் ஸ்டாலினிடம் வந்தன.

ரஷியாவை சதி செய்து கவிழ்த்து மீண்டும் முதலாளித்துவத்தை கொண்டு வருவதற்கு ஏகாதிபத்தியங்கள் காத்துக்கிடந்தன. ரஷியாவை கொத்திக்குதற தலைக்கு மேல் சுற்றி வட்டமிட்ட ஏகாதிபத்திய வல்லூறுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை ஒருபுறமும்

கட்சிக்குள் இருந்துகொண்டே சீர்குலைவு வேலைகளை செய்து கொண்டிருந்த ஏகாதிபத்திய விசுவாசிகளை கையாள்வது மறுபுறமுமாக - ஸ்டாலின் இரண்டையும் சமாளித்தார். இந்த உண்மைகளும் நிதர்சனமும்தான் இவரது ஆட்சிக்காலம். எனவே இதையெல்லாம் சேர்த்துத்தான், கருத்தில் கொண்டுதான், ஸ்டாலின் குறித்து மதிப்பிட வேண்டும்.

அதற்காக ஸ்டாலின் செய்தவை அனைத்தும் சரியே என வாதிடவில்லை. இவர் மீதும் விமர்சனங்கள் இருக்கின்றன. உண்மையான மார்க்சியவாதிகள் ஸ்டாலின் மீது நேர்மையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள்.

சுயபரிசீலனை கோரும் இந்த விமர்சனங்கள் வேறு. முதலாளித்துவ ஊடகங்கள் பரப்பும் அவதூறுகள் வேறு இந்த அடிப்படை வேறுபாடுகளை நாம் எப்போதும் மறக்கக்கூடாது.

இதன் ஒரு பகுதியாக ஸ்டாலின் தலைமையிலான சோவியத் தின் சாதனைகளைப் பார்க்கலாம்.

இரண்டாம் உலக யுத்தத்தில் பாசிஸ் கருத்தியல்களை பரப்பிய இட்லரை வீழ்த்தினார் ஸ்டாலின். இந்தப்போரின் காரணமாக மிகப்பெரும் சேதத்தை சோவியத் ரஷ்யா சந்தித்தது. இரண்டு கோடிக்கும் அதிகமான ரஷிய மக்கள் போரில் கொல்லப் பட்டார்கள் இரண்டரை கோடி மக்கள் வீடுகளை இழந்தனர். 1710 நகரங்கள் மற்றும் நகர்ப்புற குடியிருப் புகள், 70 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்கள், சுமார் 32 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் 98 ஆயிரம் கூட்டுப்பண்ணைகள், ஐயாயிரம் அரசு பண்ணைகள். ஆகியவற்றை இட்லர் தலைமையிலான நாஜிக்கள் அழித்தொழித்தார்கள்.

சோஷலிச கட்டமைப்பின் இரண்டாவது புத்துயிர்ப்புக்காகசரியான தொலைநோக்குத் திட்டங்களை முன்வைத்து - போருக்கு முன் இருந்த தொழில் வளத்தை விட அதிகமான தொழில் வளத்தில் சோஷலிச ரஷியாவை ஸ்டாலின் முன்னெடுத்துச் சென்றார். சோவியத் யூனியன் இனி மீள்வது மிகவும் கடினம், தொழிற்துறையின் மீது நாஜிக்கள் நடத்திய தாக்குதல்களில் இருந்து மீள்வதற்கு மட்டுமே சில பத்தாண்டுகள் தேவைப்படலாம் என்று சில முதலாளித்துவ எழுத்தாளர்கள் மதிப்பிட்டு எழுதினார்கள்
ஆனால், வெறும் மூன்றே ஆண்டுகளில் - 1948 தொழிற்துறை உற்பத்தி 1940ன் உற்பத்தியை விட மிஞ்சியது. 1940ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 1949ம் ஆண்டில் தொழில்சாலை மற்றும் அலுவலக தொழிலாளர்களுக்கான வருவாய் 24 சதவிகிதம் அதிகரித்தது.

இப்படி சோவியத்தின் சாதனைகள் என்று நிறைய சொல்லலாம். எனினும் கல்வி தொடர்பான சோவியத் யூனியனின் இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கு பார்ப்போம்.

ஜார் ஆட்சி காலத்தில் ரஷியாவில் கல்வி கற்றவர்களின் சதவிகிதம் காலனியாட்சி கால இந்தியாவை விட குறைவு. புரட்சிக்கு பின்னர் இருபதே ஆண்டுகளில், குறிப்பாக ஸ்டாலின் ஆட்சி காலத்தில், ரஷியாவில் கல்வி கற்றிருந்தோரின் சதவிகிதம், இதியாவை காலனியாக்கி வைத்திருந்த உலகிலேயே கல்வியில் முதல் இடத்தில் இருந்த பிரிட்டனை விட பத்து மடங்கு அதிகமாக உயர்ந்திருந்தது.

அதே போன்று காங்கிரஸ் தலைவர் காமராஜர் ரஷியாவுக்கு பாயிருந்த போது - ஒரு நாள் இரவு ஒன்பது மணியை போல வெளியே போய் சும்மா ஒரு நடை நடந்து விட்டு வரலாமா என்று தனக்கு துணையாக வந்திருந்த கைடிடம் கேட்டிருக்கிறார்.
வாருங்கள் போகலாம் என்று அவரை அழைத்துக் கொண்டு விதியில் இறங்கி நடந்திருக்கிறார் அந்த கைடு அப்போது அவர்கள் ஒரு கட்டிடத்தை கடந்து சென்றார்கள் உள்ளிருந்து 'கசமுசா“ என சத்தம் வந்தது. உடனே காமராஜர் அங்கேயே நின்று அது என்ன சத்தம்? என்று கேட்டார்.

மக்கள் படிக்கிறார்கள். இது இரவுப் பள்ளி என்றார் கைடு. உள்ளே சென்று பார்க்க முடியுமா? அதற்கென்ன வாருங்கள். என கைடு கட்டிடத்துக்குள் அழைத்துச் சென்றார். உள்ளே பார்த்தால் - அனைவரும் வயதானவர்கள் அதிர்ந்து விட்டார் காமராஜர் இவர்கள் எல்லாம் இப்போதுதான் படிக்கிறார்களா?

இல்லை. இவர்களுக்கு தாய்மொழியான ரஷ்யன் தெரியும். இப்போது பிரெஞ்சு கற்கிறார்கள்... கைடின் பதிலைக் கேட்டு காமராஜர் வியந்தார். சோவியத்தின் வளர்ச்சிக்கு இதுபோல ஆயிரம் சம்பவங்களை உதாரணங்களாக சொல்லலாம்.

சோவியத் ரஷியாவின் உழைக்கும் மக்கள் முன்னால் - போருக்கு பிந்திய தொழிற்துறையின் அதிவேக முன்னேற்றத்தை சாதித்த தொழிலாளர்கள் + விவசாயிகளின் முன்னால் - ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி என்று புலம்பி தீர்ப்பவர்களின் கூச்சல்கள் காணாமல் போகும்.

தோழர் ஸ்டாலினுடைய புகழை அவதூறு அலைகள் வீசியெறிய முடியாது என்பதற்கு - சோவியத் மக்களோடு நின்று அவர் கட்டியெழுப்பிய சோஷலிச கோட்டையை உடனே தகர்க்க முடியாமல் 40 வருட போராட்டத்துக்கு பிறகே ஏகாதிபத்தியம் 1991ல் தகர்த்தது என்பதே போதுமான சான்றுதான்.”


01. ஸ்டாலின் அவதூறு பற்றி….. - கே.என்.சிவராமன்

(சிவந்த மண்- மார்க்சிய கோட்பாடுகளுடன் ரஷ்ய – சீன புரட்சியின் வரலாறு- என்ற நூலில் இருந்து)

“வரலாற்றுச் சிறப்புமிக்க ரஷ்ய புரட்சியை நினைவு கூரும்போது அடிமைத்தனத்துக்கும் சுரண்டலுக்கும் எதிரான சோஷலிச குடியரசை கட்டி எழுப்ப நடந்த போராட்டத்தில் தோழர் லெனினோடு தோழர் ஸ்டாலினையும் நினைவு கூராமல் இருக்க முடியாது.

இது குறித்து விரிவாக "ஸ்டாலின் சகாப்தம்'' என்ற ஆவணப் படத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஸ்டாலினின் இளமைக்காலம், புரட்சிகர பாதைக்கு அவர் வந்து சேர்ந்தது, ரஷ்யப் புரட்சியில் அவரது பங்கு உழைக்கும் மக்களின் தலைவராக அவர் உருவானது, ஸ்டாலின் ஆட்சியில் சோஷலிசத்தின் சாதனைகள், மார்க்ஸிய லெனினியத்தை திரித்த புரட்டல்வாதிகள், ஸ்டாலின் மீதான அவதூறுகளை பரப்பிய துரோகிகள் இரண்டாம் உலகப் போரில் உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய பாசிசத்தை செம்படை வீழ்த்துதல், போருக்குபின் மறுநிர்மானம்.... என அனைத்தையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும் ஏன் ஸ்டாலின் பெயரை கேட்டாலே முதலாளிகள் அலறுகிறார்கள்? அவர் இறந்து இத்தனை வருடங்கள் கடந்த பிறகும் எதற்காக பொய்களும், அவதூறுகளும் பரப்பப்படுகின்றன? ஸ்டாலின் சர்வாதிகாரி கொலைகாரன், கொடுங்கோலன், அவரது ஆட்சியின் கீழ் லட்சக்கணக்கான ரஷிய மக்கள் உரிமைகள் ஏதுமின்றி மந்தைகளை போல கொல்லப்பட்டார்கள், சோஷலிச கொள்கையை மக்கள் மீது திணிக்கும் பொருட்டு உக்ரைனில் மாபெரும் படுகொலைகளும், பேரழிவும், பஞ்சமும் ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது.

இவை எல்லாம் இப்போதும் பரபரப்பாக பேசப்படும் விஷயங்கள். எனவே இது குறித்து விளக்கமாக பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

ஸ்டாலின் குறித்து உலகெங்கும் பரப்பப்படும் அவதூறுகளை பொதுவில் கீழ்க் கண்ட வகைகளில் தொகுக்கலாம்.

ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி, கொடுங்கோலன். அவரது ஆட்சியின் கீழ் மக்களுக்கு எந்த உரிமைகளும் இருக்கவில்லை. கட்சி ஊழியர்களே வாய் திறக்கமுடியவில்லை. இரும்புத்திரையின் சர்வாதிகாரம் ஆட்சி செய்தது. ஸ்டாலின் - ஹிட்லர் இரண்டு பேரும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள்.

இவை எல்லாம் உண்மையா? ஸ்டாலினை கண்டு அஞ்சுபவர்கள் யார்?

உழைக்கும் மக்கள் அஞ்சவில்லை. ஏனென்றால் அவர்களுக்கெல்லாம் அவர் அன்புக்குரிய தோழர் சுரண்டும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள்தான் அவரைக் கண்டு பீதியடைகிறார்கள்

அதற்காக தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்களே இல்லை என்று பொருளில்லை. உழைக்கும் வர்க்கத்தின் சுதந்திரத்துக்காக போராடும் அனைவரிடமும் அவர் மீது விமர்சனங்கள் இருக்கின்றன.

ஆனால், முதலாளித்துவம் முன்வைக்கும் விமர்சனங்களுக்கும் அவதூறுகளுக்கும் -
கம்யூனிஸ்ட் தோழர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கும் மலையளவு வித்தியாசம் இருக்கின்றன. ஸ்டாலின் குறித்து தொடர்ச்சியாக மேற்கத்திய நாடுகள் பரப்பிவரும் அவதூறுகளுக்கு அடிப்படை ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட எழுத்தாளர்களிடமிருந்து பிறந்தவை. ராபர்ட் கான்குவிஸ்ட் சோல்சனிட்சன் என்று தொடங்கி ராபர்ட் ஹெர்ஸ்ட் ஹிட்லர், அமெரிக்கா, பிரிட்டன் என இந்த தொடரின் மர்மங்கள் நீளம் தமிழகத்தை சேர்ந்த ஒரு சிலரும் இவர்கள் எழுதிய ஆங்கில நூல்கள் / கட்டுரைகளில் இருந்துதான் தங்களுக்கான தரவுகளை எடுத்து ஸ்டாலினுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள்.

இதில் பிரதானமானது - உக்ரைன் பஞ்சம், உக்ரைன் படுகொலைகள் உக்ரைனில் மட்டும் ஸ்டாலின் 30 லட்சம் பேரை கொன்று குவித்தாராம். இதை புத்தகங்களிலும் மேலை நாடுகளின் பாட நூல்களிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்த வாதம் தமிழகத்திலும் ஸ்டாலின் தொடர்பாக வைக்கப்படுகிறது.

உண்மை என்ன? உலகையே அச்சுறுத்தி வந்த ஹிட்லர், உக்ரைனை தனது போர்வாளில் வென்றெடுக்க கனவு கண்டார் ஜெர்மனியர்கள் வாழ்வதற்கு புவிப்பரப்பில் மிகவும் முக்கியமான பகுதியாக உக்ரைன் இருந்தது.

உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்றால் அதற்கெதிராக போர் தொடுக்கவேண்டும். அதற்கு முன் கூட்டியே சில தயாரிப்பு பணிகளை செய்ய வேண்டி இருந்தது. இந்த நோக்கத்துடன் நாஜி கோயபல்ஸ் தலைமையில் சோஷலிசத்துக்கு எதிரான பிரசார இயக்கம் ஜெர்மனியால் தொடங்கப்பட்டது.

'உக்ரைனில் சோஷலிச கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஸ்டாலினுடைய செம்படை கொலை செய்தது. பேரழிவு பஞ்சத்தை உருவாக்கியது. பெருந்திரள் படுகொலைகளை போல்ஷ்விக்குகள் நடத்தினார்கள். இதன் காரணமாக மட்டுமே ஸ்டாலின் ஆட்சியில் உக்ரைனில் மட்டும் சுமார் 60 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்...."

இதன் வழியாக சோவியத்திடம் இருந்து உக்ரனை விடுவிக்க வேண்டும் என்கிற பொதுக் கருத்தை உலக மக்களிடம் உருவாக்க முயன்றார்கள். அதன் பிறகு உள்ளே நுழைந்து உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மற்ற நாடுகள் கேள்வி கேட்காது என்பது ஹிட்லரின் திட்டம்.

எதிர்பார்த்த அளவுக்கு இந்த பிரசாரம் வெற்றி பெறவில்லை. இச்சூழலில் நாஜிக்களுக்கு உதவ அமெரிக்காவிலிருந்து தானாகவே ஒரு கோடீஸ்வரர் முன்வந்தார். அவர் தான் ரடால்ப் ஹெர்ஸ்ட்

அமெரிக்காவின் மிகப்பெரிய பத்திரிக்கை முதலாளியான இவர் 1930களிலேயே உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக விளங்கினார்.

1934ம் ஆண்டு ஜெர்மனிக்கு இவர் சென்றபோது தனது விருந்தாளியாகவும் நண்பராகவும் ஹிட்லர் வரவேற்றார். இந்த சந்திப்புக்கு பிறகு சோவியத் ரஷியாவில் நடக்கும் அட்டூழியங்கள், பெருந்திரள் படுகொலைகள் திட்டமிட்ட பட்டினி சாவுகள். போன்ற கட்டுரைகள் ஹெர்ஸ்டின் நாளேடுகளில் தினமும் வெளி வரத் தொடங்கின.

குறிப்பாக ஹிட்லரின் நண்பரான கோயரிங் - ஸ்டாலின் பற்றிய அவதூறு கட்டுரைகளை அடுத்தடுத்து ஹெர்ஸ்ட் வெளியிட்ட நாளிதழ்களில் எழுதினார். ஸ்டாலினை கொலைகாரராக சித்தரிக்ககையில் கத்தியுடன் இருக்கும் அவரது கேலிச் சித்திரங்களும் தவறாமல் இடம்பெற்றன. பரபரப்புக்காக தொடர்ச்சியாக உக்ரைன் விஷயம் எழுதப்பட்டது.

இந்த செய்திகளை எல்லாம் ஜெர்மனியின் உளவுப்படையான கெஸ்டபோ”தான் நேரடியாக வழங்கியது.

இந்த தொடர் பிரசாரத்தின் மூலம் உலக அரங்கில் ஒரு பொதுக்கருத்தை சோவியத்துக்கு எதிராக திருப்புவதில் நாஜிக்கள் ஹெர்ஸ்டின் உதவியால் வெற்றியும் பெற்றார்கள்.

"ஸ்டாலின் உக்ரைன் மக்களை கொன்ற சர்வாதிகாரி என்ற பிம்பம் இப்படித்தான் கட்டமைக்கப்பட்டது.

ஆனால், இவை எல்லா எவ்வளவு பெரிய பொய்கள் என்பதை கனடா நாட்டு பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட உலகுக்கு அம்பலப் படுத்தினார்.

ராபர்ட் கான்குவெஸ்ட கீார்ஜ் ஆர்வெல், இஸ்லர் பெட்ரண்ட் ரஸ்ஸல், சோல்சனிட்சன் எல்லாம் யார்?

இவர்கள் அனைவரும் பெரிய மனிதர்கள். மாபெரும் அறிவாளிகள். பேராசிரியர்கள். இது இவர்களின் ஒரு பக்கம் தான். இன்னொரு பக்கம் என்ன தெரியுமா? இவர்கள் அத்தனை பேரும் கூலிக்காக எழுதியவர்கள்!

ராபர்ட் கான்குவெஸ்ட், கலிபோரினிய பல்கலைக்கழகத்தின பேராசியரியர். இவர் ஸ்டாலின் பற்றியும் சோவியத் பற்றியும் பல புத்தங்களை எழுதியுள்ளார். இரண்டாம் உலகப்போர் பற்றியும், ஸ்டாலின் எல்லா பொய் கதைகளையும் உருவாக்கியதில் இவர்தான் முதன்மையான முக்கியமான நபர்.

உக்ரைன் படுகொலைகள், பட்டினிச்சாவுகளை 60 லட்சம் என்றார் ஹெரஸ்ட். இவரோ தனது கணக்குக்கு அதை 150 லட்சமாக உயர்த்திக் கொண்டார்.

சோவியத் மீது படையெடுத்து சாராகும்படி அமெரிக்க மக்களை அறைகூவி அழைக்கும் தனது தேர்தல் பிரசாரத்துக்கு உரை எழுதித் தரும்படி 1988ல் ரீகன் இவரிடம்தான் கேட்டுக் கொண்டார் அதன் பிறகுதான் கான்குவெஸ்டின் முழுகைக் கூலித்தனமும் வெளிச்சத்துக்கு வந்தது. அத்துடன் ராபர்ட் கான்குவெஸ்ட், இங்கிலாந்தின் ரகசிய உளவுப்படையின் ஒர் அங்கமான ‘பிரசாரத்துறை’யின் ஏஜென்ட் என்பதை பிரெஞ்சு பத்திரிகையான ‘கார்டியன்’ அம்பலப்படுத்தியது.

ஜார்ஜ் ஆர்வெல், கீஸ்லர், பெட்ரண்ட் ரஸ்ஸல் ஆகியோரும் சோவியத்துக்கு எதிராகவும் தோழர் ஸ்டாலினுக்கு எதிராகவும் பொய்களை மட்டுமே எழுதி வந்தவர்கள்தான். இவர்கள் அனைவரும் கம்யூனிச எதிர்ப்பு பிரசாரம் செய்வதற்காக பிரிட்டிஷ் உளவுத்துறையிடமிருந்து பணம் பெற்றிருக்கிறார்கள். இந்த உண்மை 1996ல் பிரிட்டிஷ் ஆவணக்காப்பகத்தை திறந்து காட்டியபோது வெளிச்சத்துக்கு வந்தது.

சோல்சனிட்சன் யார்? எழுத்தாளர்தான். சோவியத்தையும், ஸ்டாலினையும் மிக முர்க்கத்தனமாக எதிர்த்தவர்தான். இவரது முகமூடி கிழிந்தது வியட்நாம் போர் சமயத்தில்தான்.

வியட்நாமில் நுழைந்து, அங்கே வாங்கிய அடியால் வாலை சுருட்டிக்கொண்டு மீண்டும் தன் நாட்டுக்கே அமெரிக்க ராணுவ வீரர்கள் திரும்பியபோது – உலகமே இந்தக் காட்சியை மகிழ்ச்சியோடு பார்த்தது. அப்போது இந்த சோல்சனிட்சன் என்ன சொன்னார் தெரியுமா? அமெரிக்கா மீண்டும் வியட்நாமை தாக்க வேண்டும்!

இத்துடன் நிறுத்தினாரா..? இல்லை. அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகமான பீரங்கி மற்றும் போர் விமானங்களை சோவியத் யூனியன் வைத்திருக்கிறது. அதே போல அணு ஆயுதங்களையும் பதுக்கியிருக்கிறது. அதாவது அமெரிக்காவில் இருப்பதை விட மூன்று அல்லது ஐந்து மடங்கு அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோவியத் யூனியன் வைத்துள்ளது. எனவே அதற்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும்.

இப்படியெல்லாம் எழுதியவர் சாட்சாத் இந்த சோல்சனிட்சன் தான். இது போன்ற கைக்கூலித் தனங்களுக்காகத்தான் சோல்சனிட்சனுக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

இதுதான் ஸ்டாலின் குறித்த "உண்மைகளை புட்டுப்புட்டு வைத்த மேற்கத்திய எழுத்தாளர்கள், அறிவுஜீவிகளின் லட்சணம். இது தெரியாமல் இவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதை அப்படியே மொழியாக்கம் செய்து தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் கம்யூனிசத்துக்கு எதிரானவர்கள் வெளியிடுகிறார்கள். அவதூறை பரப்புகிறார்கள்.”