Tuesday 30 April 2013

தேசிய இனப் பிரச்சினையும் சுயநிர்ணய உரிமையும்



[நம் நாட்டில் கம்யூனிசத்தின் மீது பலகாலமாக சொல்லப்பட்டுவரும் குற்றச்சாட்டு கம்யூனிஸ்டுகள் இன ஒடுக்குக்கு முறைக்கு எதிராக குரல்கொடுப்பதில்லை, மொழியை வெறும் ஊடக சாதனம் என்ற வகையில் தான் புரிந்து வைத்துள்ளனர். இதற்கு காரணம், தாம் சந்தித்த கம்யூனிஸ்டுகளின் கருத்து மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்தாக முடிவெடுத்ததேயாகும். அவர்கள் சந்தித்த கம்யூனிஸ்டுகளின் குறைபாட்டை கம்யூனிசத்தின் குறைபாடாக வெளிப்படுத்துகின்றனர். அக் கம்யூனிஸ்டுகளின் கருத்துக்கள் மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்தோடு முரண்படுகிறது. அதனால் அவர்கள் மொழி. இனம் போன்றவற்றின் மீதான கம்யூனிஸ்டுகளின் பார்வை என்னவென்பதை மார்க்சியத்தின் அடிப்படைகளை ஏற்ற மார்க்சியர்களிடமும் அல்லது முதலாசிரியர்களின் நூல்களிலும் உள்ளதை அறிந்தால் தான் உண்மையான மார்க்சிய கருத்துக்களை அறிந்திட முடியும்.]

தேசிய இனப் பிரச்சினை தோன்றுவதற்கான பொருளாதர அடிப்படைகள்

தேசியப் பிரச்சினையை இரண்டு காரணங்களால் தோன்றுகிறது. ஒரு பேரரசில் உள்ள முதலாளிகள் தனது பொருளாதார நலன்களின் அடிப்படையில் பிற நாடுகளை தன் ஆதிக்கத்துக்குள் கொண்டுவரும் நிலையில் அந்நாடுகள் உரிமைக்காகப் போராடும் போது தேசியப் பிரச்சினை எழுகிறது. மற்றொன்று, ஒர் அரசு தேசியமாக உருவாகின்ற போது ஒரே அரசின் கீழ் உள்ள பேரினத்தைச் சார்ந்த முதலாளிகள் தமது பொருளாதார விரிவாக்கத்தின் காரணமாக மற்ற சிறிய தேசியத்தின் பண்பாடு, கல்வி, நீதி, பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றை ஒடுக்கும் போது ஏற்பபடுகிறது.

கம்யூனிஸ்டுகள் இந்த தேசியப் பிரச்சினையை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கு மார்க்சிய முதலாசிரியர்களான மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றோர்கள், சர்வதேச கம்யூனிஸ்டுகளினுடைய விவாதத்தின் (அகிலம்) அடிப்படையில் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார வளாச்சி அடைகின்ற பொழுது தமது சரக்கைச் சந்தைப்படுத்தும் முனைப்பில் தனக்கு கீழ் உள்ள முதிர்ச்சியடையாத சிறிய தேசங்களை ஒருங்கிணைக்கும் போது ஏற்படுகிடுகின்ற பாதகமான சூழ்நிலையே தேசிய இனப்பிரச்சினையாக வடிவெடுக்கிறது. இவற்றில் தான் தேசிய இன இயக்கங்களின் தோற்றத்துக்கான பொருளாதார அடித்தளம் அமைந்திருக்கிறது. (பக்கம் 45)

லெனின்:-
"ருஷ்யாவில் தேசிய இன இயக்கங்கள் தோன்றியிருப்பது இதுதான் முதல் தடவையல்ல. இவை இந்த நாட்டுக்கு மட்டுமே பிரத்தியேகமானதும் அல்ல. உலகம் பூராவும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவம் அடையும் இறுதி வெற்றியின் காலப் பகுதி தேசிய இன இயக்கங்களுடன் இணைந்துள்ளது. சரக்கு உற்பத்தி முழு வெற்றியடைவதற்கு, முதலாளி வர்க்கம் உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்ற வேண்டும், ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசியல் வழியில் ஒற்றுமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் அதற்கு வேண்டும், அந்த மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்று விளங்கவும் குறுக்கே நிற்கும் தடைகள் யாவும் அகற்றப்பட வேண்டும் - இங்குதான் இந்த இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கிறது."
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 76

இங்கு லெனின், தேசிய இன இயங்கள் தோன்றுவது ரஷ்யாவுக்கு மட்டும் உரியது அல்ல, உலக முழுவதும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முழு வெற்றி அடைவதற்கான காலப் பகுதிகள் தேசிய இன இயக்கங்களுடன் இணைந்திருப்பதை சுட்டுகிறார். சரக்கு உற்பத்தியின் முழு வெற்றிக்கு முதலாளித்துவம் உள்நாட்டு சந்தையை முழுமையாக கைபற்ற வேண்டும், அதற்கு ஒரே மொழி, ஒரே அரசியல் வழியில் ஒருங்கிணைக்கப்பட்டதான பிரதேசம் அதற்குத் தேவைப்படுகிறது. இந்த ஒரே மொழி ஒரே பண்பாடு ஒரே அரசதிகாரம் போன்றவற்றை நிலைநாட்ட முற்படுகின்ற பொருளாதார நலன்களில் தான் தேசிய இன பிரச்சினைக்கான இயக்கங்கள் தோன்றுவதற்கான அடிப்படை அமைந்துள்ளது.


இந்த விடுதலை இயக்கங்கள் மேற்கு ஐரோப்பாவுக்கு மட்டுமல்லாது, நாகரிகம் பெற்றுவரும் அனைத்து நாடுகளுக்கும் உரியது. அதனால் இந்த தேசிய இனப் பிரச்சினை என்பதற்கான தீர்வை, சட்ட வரையறைகளை வைத்துக் கொண்டு ஜாலவித்தை புரிவதும், சூக்குமமான புதுப்புதுப் புனைவுகளால் தோற்றுவிக்க முனைவதும், இதன் பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் கொள்ளாது எடுக்கப்பட்ட முடிவாகும் என்கிறார் லெனின்.

லெனின்:-
".. ஒவ்வொரு தேசிய இன இயக்கத்தின் போக்கும் தேசிய இன அரசுகளை நிறுவும் திசையிலானதாகும். அவ்வரசுகளின் கீழ் நவீன முதலாளித்துவத்தின் இந்தத் தேவைகள் மிகவும் நன்றாக பூர்த்தி செய்யப்படும். மிகவும் தீர்க்கமான பொருளாதாரக் காரணிகள் இந்த லட்சியத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன. எனவே, மேற்கு ஐரோப்பா முழுவதற்கும் ஏன் நாகரிக உலகம் முழுமைக்குமே முதலாளித்துவ காலப் பகுதியில் தேசிய இன அரசு மாதிரிப் படிவமானது இயல்பானது.

இதன் விளைவாக, சட்ட வரையறைகளை வைத்துக் கொண்டு ஜாலவித்தை செய்வதன் மூலமோ, சூக்குமமான இலக்கணங்களைப் "புனைவது" மூலமோ, அன்றி தேசிய இன இயக்கங்களின் வரலாற்று, பொருளாதார நிலைமைகளை ஆராய்வதன் வாயிலாக தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பதன் பொருளை நாம் புரிந்து கொள்ள விரும்பும் பட்சத்தில், இந்தத் தேசிய இனங்கள் அன்னிய தேசிய இனமான தேசிய இன அரசாக உருப்பெறுவதே தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தின் பொருள் என்ற முடிவுக்குத் தவிர்க்க முடியாத வகையில் வந்து சேருவோம்"
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 76-77

முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாற்றில் தேசிய இனப் பிரச்சினை இரண்டு போக்குகளைக் கொண்டிருக்கிறது. முதலாவது, முசிர்ச்சியடையாத சிறிய தேசிய இனங்களை ஒருங்கிணைக்கும் போக்கின் போது ஏற்படுகின்ற தேசிய இன இயக்கங்களின் தொடக்கம். அனைத்து விதமான தேசிய இன ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டம் தோன்றுவதும், தேசிய இன அரசிகள் உருவாவதும் முதல் போக்கு.

முதிர்ச்சிய அடைந்த தேசிய இனங்களிடையே ஒட்டுறவு வளர்ந்து மேலும் மேலும் விரைவடைதலும், தேசிய இனப் பிரச்சினையின் சுவர்கள் தகர்க்கப்படுதலும், மூலதனத்தின் பொதுவாகப் பொருளாதார வாழ்வின் அரசியல் விஞ்ஞானம் முதலானவற்றின் சர்வதேச ஒற்றுமை உண்டாக்கப்படுதல் என்பது இரண்டாம் போக்கு.

இவ்விரண்டு போக்குகளும் முதலாளித்துவத்துக்கு உரிய உலகுதழுவிய விதியாகும். முதல் போக்கு முதலாளித்துவ வளர்ச்சியின் தொடக்க ஆதிக்க நிலையில் காணப்படுவது. இரண்டாம் போக்கு முதிர்ச்சி அடைந்துள்ள சோஷலிச சமூகமாக உருமாற்றம் பெறுவதை நோக்கிச் செல்லுகின்ற முதலாளித்துவத்தின் வளர்ச்சியினை வெளிப்படுத்துவதாகும் என்கிறார் லெனின். (பக்கம்- 32-33)

இந்த இரு போக்குகளின் அடிப்படையில் தான் கம்யுனிஸ்டுகளின் தேசிய வேலைத்திட்டம் அமைகப்பட்டது.

மேலும் லெனின் கூறுகிறார்:-
"மார்க்சியர்களின் தேசிய இன வேலைத்திட்டம் இவ்விரு போக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, பின்வருவனவற்றுக்காகப் பாடுபடுகிறது. முதலாவதாக, தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்துக்காகவும், இங்கு எந்தவிதமான தனியுரிமைகைளும் அனுமதிக்கபடலாகாது என்பதற்காகவும், இரண்டாவதாக, சர்வதேசியவாதம் என்னும் கோட்பாடுக்காவும், முதலாளித்துவ தேசியவாதத்தால் - மிகமிக நயமானதாலுங்கூட - பாட்டாளி வர்க்கம் நச்சுப்படுத்தப்படுவதை எதிர்த்து இணக்கத்துக்கு இடமில்லாப் போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காவும்."
தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் - பக்கம் - 32-33

கம்யூனிஸ்டுகளின் தேசிய இன வேலைத்திட்டம் இந்த இரண்டுத் தன்மைகளின் அடிப்படையில் அமைத்து பாடுபடுகிறது. முதலானதில், தேசிய இனப்பிரச்சினை எழுந்துள்ள நிலையில், தேசிய இனங்களின் மொழிகளின் சமத்துவத்துக்காவும், ஒடுக்கும் தேசிய இனத்தின் தனியுரிமை எதிர்ப்பதற்காகவும் அமைக்கப்பட்டது. அதாவது, பெரும்தேசிய இனத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களின் உரிமைக்காகவும் போராடுவதைக் குறிக்கிறது. இரண்டாவதில், முதலாளித்துவ தேசியவாதத்தால் பாட்டாளி வர்க்கம் மழுங்கடிக்காமல் இருப்பதற்காகவும் அமைக்கப்பட்டது. அதாவது, ஒடுக்கப்பட்ட தேசிய இன பாட்டாளிகள் முதலாளித்துவ தேசியவாத்துக்கு ஆட்படாமல் காப்பாற்றும் நோக்கில் போராடுவதைக் குறிக்கிறது.

தேசிய இனப் பிரச்சினையும் சுயநிர்ணய உரிமையும்
ஒரு நாடு மற்றொரு வல்லரசால் அடக்கி தனதாட்சிக்கு கீழ் கொண்டுவரும் நிலையில், ஒரே நாட்டில் உள்ள சிறிய தேசிய இனங்களை பெரும்தேசிய இனம் தமக்குகீழ் அடிக்கி ஒடுக்குகின்ற சூழ்நிலையில் கம்யுனிஸ்ட் கட்சியின் நிலைபாடு பற்றி ஆராய்ந்ததின் விளைவே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடாகும்.

ஒடுக்கு முறை எங்கு நடைபெற்றாலும் அதனை எதிர்ப்பது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். அந்தக் கடமையை குருட்டாம் போக்கில் செய்திடாமல் வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்கின்ற கோட்பாட்டை வகுத்தனர். இதன் அடிப்படையில் தான் அகிலத்தில் இதுபற்றிய விவாதங்கள் நடைபெற்றது.

லெனின் மகாருஷ்யர்களால் ஒடுக்கப்படும் அனைத்து தேசிய இனங்களுக்கு முழுமையான சுயநிர்ணய உரிமையை வழங்க வேண்டும் என்கிறார். இந்த ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் மாகாருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு மிகவும் தேவையானதாகும். இதனைக் குறிப்பிடும் போது மார்க்ஸ் ஆங்கிலேயத் தொழிலாளர்களின் சோஷலிச இயக்கத்தின் நலன்களுக்காக அயர்லாந்தின் சுதந்திரத்தையும் தேசிய  விடுதலையையும் கோரியதை சுட்டுகிறார்.

இதனை லெனின் கூறுகிறார்:-
"மகாருஷ்யர்களின் தேசிய இனப் பெருமிதத்தின் நலன்களும் (அடிமைப்பொருளில் அல்ல) மகாருஷ்ய (இன்னும் இதர) பாட்டாளிகளின் சோஷலிச நலன்களுக்கும் முற்றிலும் பொருந்தியவைதான். எப்பொழுதும் நமக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர் மார்க்ஸ் தான், அவர் இங்கிலாந்தில் பல பத்தாண்டுகள் வாழ்ந்து, பாதி ஆங்கிலேயராக மாறி, ஆங்கிலேயத் தொழிலாளர்களின் சோஷலிச இயக்கத்தின் நலன்களுக்காக அயர்லாந்துக்குச் சுதந்திரமும் தேசிய விடுதலையும் கோரினார்."
மகாருஷ்யர்களின் தேசியஇனப் பெருமிதம் பற்றி பக்கம் - 178

மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதங்களைக் (1864 நவம்பர் 4, 1866 ஜீன்7, ஜீன் 20) குறிப்பிட்டு லெனின் கூறுகிறார்:-
"மார்க்சின் இந்த விமர்சனக் குறிப்புகளிலிருந்து இயல்பாக எழும் முடிவு தெளிவானது:-

தேசிய இனப் பிரச்சினையையை குருட்டு வழிபாடு ஆக்குவது தொழிலாளி வர்க்கத்துக்கு உகந்த செயல் அல்ல. ஏனெனில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி எல்லா தேசிய இனங்களையும் கட்டாயமாக சுதந்திரமான வாழ்வை நோக்கி எழுச்சியுறச் செய்வது கிடையாது. ஆனால் மக்கள் திரளின் தேசிய இன இயக்கங்களை அவை தொடங்கிய பிறகு ஒதுக்கித் தள்ளுவதும், அவற்றினுள் முற்போக்கானதாக இருக்கும் அம்சங்களை ஆதரிக்க மறுப்பதும் நடைமுறையில் தேசியவாதத் தப்பெண்ணங்களுக்கு இடமளிப்பதாகும், அதாவது "சொந்த" தேசிய இனத்தை  "மாதிரி தேசிய இனம்" (அதற்கு மட்டுமே ஓர் அரசை நிறுவிக் கொள்ளும் தனிமுழு உரிமை இருக்கிறது என்பதைச் சேர்த்துக் கூறுவோம்) என்று ஏற்றுக் கொள்வதாகும்"

      மார்க்சின் விமர்சனக் குறிப்புகளிலிருந்து லெனின், தேசிய இன போராட்டம் இயக்கமாக தொடங்கிய பிறகு அதனை ஒதுக்கித் தள்ளுவதும் அதனுள் காணப்படும் முற்போக்கான அம்சங்களை ஆதரிக்காமல் இருப்பதும் தேசியவாதத் தப்பெண்ணங்கள் தோன்றுவதற்கு இடம் வகுத்துவிடும் என்று எச்சரிக்கிறார். இதனை குறிப்படும் போது லெனின் கூறுகிறார், தொழிலாளிகளின் வர்க்கப் போராட்டத்தோடு ஒப்பிடும் போது தேசிய இனப் பிரச்சினை என்பது இரண்டாம் இடமே மார்க்ஸ் கொடுக்கிறார், ஆனால் அவரது கோட்பாடு தேசிய இன இயக்கங்களைப் புறக்கணித்ததே கிடையாதென்பதையும் சேர்த்து வலியுறுத்துகிறார்.

மேலும் லெனின் கூறுவதைக் கேளுங்கள்:-
"பாட்டாளிகளின் ஒற்றுமையின் நலன்களும் அவர்களது வர்க்க ஒருமைப்பாட்டின் நலன்களும் தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகிறது."
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 152

                இதன் அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கான கம்யூனிஸ்டுகளின் வேலைத்திட்டத்தை லெனின் தொகுத்துத் தருகிறார். அதில் எந்த தேசிய இனத்துக்கும். எந்த மொழிக்கும் தனி உரிமை என்பது கிடையாது, தேசிய இனங்களின் அரசுகள் பிரிவடைவது ஜனநாய வழியில் நடத்தப்பட வேண்டும். தேசிய இனச் சிறுபான்மையினரது உரிமைகளுக்கு ஊறு ஏற்படாமல் காப்பது என்பதையும் வலியுறுத்துகிறார்.

சுயநிர்ணய உரிமையும் பிரிவினைவாதமும்

தேசிய இனச் சிக்கலின் தோற்றம் கட்டாயப் பிரதேச இணைப்பில் தான் அடங்கிருக்கிறது. ஒரு தேசிய இனம் பிறிதொரு தேசிய இனத்தை பலாத்தாரத்தால் ஐக்கியப்படுத்துவதையே கட்டாயப் பிரதேச இணைப்பு என்று கூறப்படுகிறது.

கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்ட பிரதேசங்களின் எழுச்சியை ஆதரிக்க மறுக்கப்பதானது, அது புறநிலை ரீதியில் கட்டாயப் பிரதேச இணைப்பை ஆதரிப்பதாகிவிடும். சோஷலிசத்துக்கு துரோகம் செய்யாமல் இருக்க வேண்டுமானால் சுயநிர்ணய உரிமைக்கு போராடும் எழுச்சிக்கு அதரவு அளிக்க வேண்டும் என்கிறார் லெனின். (பக்கம் 223)

      இந்த ஆதரவு என்பது பிரிந்து சென்று தனியான அரசை அமைத்துக் கொள்கின்ற சுயநிர்ணய உரிமையைத் தவிர வேறு எந்த அர்த்தத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இதனை மேலும் லெனின் விளக்குகிறார், மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள ஆதிக்கம் செய்யும் தேசிய இனம், அரசு ரீதியாக பிரிந்து செல்ல விரும்புகின்ற தேசிய இனத்தின் மீது செலுத்தப்படுகிற பலப்பிரோகத்தை நிபந்தனயைற்ற வகையில் எதிர்க்க வேண்டும். பிரிந்து செல்ல வேண்டும் என்று விரும்புகின்ற, பிரிச்சினைக்கு உரிய பிரதேசத்தின் மக்கள் எல்லோரும் நேரடியாக, சமமான மதிப்பைக் கொண்ட வாக்குகளின் மூலம் ரகசிய வாக்கெடுப்பு முறையில் தங்களது கருத்தை பதிவதை அடிப்படையாகக் கொண்டு தீர்க்க வேண்டும். தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு அனுமதிக்கின்ற, தேசிய இனங்களின் சுயநிரிணய உரிமையை மறுப்பதை ஆதரிக்கின்ற, மிதவாத முதலாளித்துவக் கண்ணோட்டத்தில் உள்ள கட்சிகளை உறுதியாக எதிர்த்துப் போராட வேண்டும் என்று லெனின் கூறுகிறார். (தேசிய இனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள் பக்கம் 87-88-89)

                ஒடுக்குதலுக்கு ஆளான தேசிய இன மக்கள் தங்களுக்கான அரசை பொதுவாக்கின் மூலமாக தீர்க்க வேண்டும். ஒரு மத்திய பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதல்ல இதன் பொருள். பிரிந்து போகும் சிறுபான்மையினருடைய பாராளுமன்றத்தில் அல்லது சபையில் அல்லது அவர்களுக்கு இடையில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் தீர்வு காண வேண்டும் என்பதே அதன் பொருளாகும். 1905ல் ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்த போது நார்வே மட்டும் தான் வாக்களித்து முடிவெடுத்தது. (பக்கம் 13)

சுயநிர்ண உரிமையை அங்கீகரிப்பது மிகவும் கடைக்கோடி முதலாளித்துவ தேசியவாதத்துக்கே உதவும் என்கிற கூற்று சிறுபிள்ளைத்தனமான மடமை என்கிறார் லெனின். ஏனெனில், இந்த உரிமையை அங்கீகரிப்பதானது, பிரிவினையை எதிர்த்துப் பிரசாரம், கிளர்ச்சி செய்வதையோ அல்லது முதலாளித்துவ தேசியவாத்தை அம்பலப்படுத்துவதையோ எவ்வகையிலும் விலக்குவதில்லை. இதற்கு மாறாக பிரிந்து போகும் உரிமையை மறுப்பது தான் மிகக் கடைக்கோடி தேசியவாதத்திற்கு உதவுவதாகிவிடும் என்பதே மறுக்க முடியாத உண்மை என்கிறார் லெனின்.

ரோஸா லுக்சம்பர்க் செய்த நகைக்கும்படியான தவற்றின் சாரம் இதில் தான் இருக்கிறது. தன்னாட்சிக் கோரிக்கையை விதிவிலக்காகப் போலந்துக்கு மட்டும் எழுப்பக் கூடியதாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் அதிவினோத தவறினை புரிகின்றார். இதனை லெனின் கூறுகிறார்:-
".. சிறப்புக்குரிய நமது ரோஸா லுக்சம்பர்க் எழுதுவதைப் படிக்கையில் நகைக்காமல் இருப்பதற்கில்லை, கருத்தார்த்த பாவனையோடு, "தூய மார்க்சியத்" தொடர்களைக் கையாண்டு, தன்னாட்சிக் கோரிக்கையானது போலந்துக்கு மட்டும்தான் பொருத்தமானது, அதுவும் விதிவிலக்காக மட்டும்தான் என்று அவர் நிரூபிக்க முயலுகிறார் !"
தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் - பக்கம் 64-65

மேலும் ரோசா லுக்சம்பர்க்கைப் போன்றோருக்கு தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பது பற்றி லெனின் கூறுகிறார்:-
"மார்க்சிய வேலைத்திட்டத்தின் "தெளிவின்மையை" ஏளனஞ்செய்து இப்பிரச்சினையையே அவர்கள் அசட்டை செய்து விட்டார்கள், தேசிய இனங்களின் சுயநர்ணய உரிமை பற்றி, 1903ம் ஆண்டு ருஷ்ய வேலைத்திட்டத்தில் மட்டுமின்றி, 1896ல் நடைபெற்ற லண்டன் சர்வதேசக் காங்கிரசின் தீர்மானத்திலேயே கூறப்பட்டுள்ளது என்பதை பேதமை காரணமாக அவர்கள் அறியவில்லை போலும். சம்பந்தப்பட்ட இந்தப் பிரிவின் சூக்குமமான, இயக்க மறுப்பியல் எனும் பாவத்துக்குச் சரணடைந்துவிட்டாரே என்பதுதான் இதைவிட அதிக ஆச்சரியமானது.

பிரிந்து போகும் உரிமையை ஆதரிப்பது, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் முதலாளித்துவ தேசியவாதத்தை ஆதரிப்பதாகக் கூறுகின்றவர்களைப் பார்த்து லெனின் கூறுவதாவது.
"ஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்களின் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு உதவி விடுவோமோ என்ற அச்சத்தில் சில ஆட்கள் ஒடுக்கும் ஒடுக்கும் தேசிய இனத்தின் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு, அதற்கும் மேலாகக் கறுப்பு நூற்றுவர் வகை தேசியவாதத்திற்கு உதிவி விடுகிறார்கள்.- பக்கம் 15

                தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவது ஜனநாயக சக்தி என்ற முறையில் பாட்டாளி வர்க்கத்துக்கு உள்ள கட்டாய கடமையாகும். இக் கடமை பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு நிச்சமாக உகந்ததாகும். எப்படி என்றால் தேசிய இனப் பிரசச்சினைத் தொடர்பான பூசல்கள் வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கின்றன. அதாவது, சிறிய தேசிய இன மக்கள் மீதான இனரீதியான ஒடுக்குதல் நடைபெறும் போது கம்யூனிஸ்டுகள் அவர்களை ஆதரிக்காவிட்டால் ஒடுக்கு முறைக்கு எதிரானவர்கள் கம்யூனிஸ்டுகள், அனைத்து ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதின் மீதான நம்பிக்கை போய்விடும். இந்த நம்பிக்கை இழந்த நிலையில் அவர்களை வர்க்க ரீதியாக கம்யூனிஸ்டுகள் ஒன்றிணைப்பது இயலாத செயலாக மாறிவிடும்.

      இதனைத் தொடர்ந்து ஒர் எச்சரிக்கை வைக்கிறார் லெனின், அது என்வென்றால் ஒடுக்கத்துக்கு ஆளான தேசிய இனத்துக்கு கொடுக்கப்படும் ஆதரவின் வரம்பை தாண்டுவது முதலாளித்துவத்தின் தேசியவாதப் பக்கம் சாய்ந்து, பாட்டாளி வர்க்த்துக்கு துரோகம் புரிவதில் போய் முடிந்துவிடும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

லெனினது எச்சரிக்கையின்படியே கவனமாக செயற்பட வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். தேசிய இனப் பிரச்ச்சினையில் முற்போக்கான ஜனநாயகப் போராட்டத்தோடு நின்றுவிட வேண்டும், அதற்கு மேல் அதில் வீழ்ந்து கிடந்தால் முதலாளித்துவ தேசியவாதத்தை ஏற்றுக்கொண்டதாகிவிடும்.

      முதலாளித்துவ தேசிய வெறி பலநேரங்களில் தேசத்தை துண்டாடும் நோக்கிலேயே செயல்படுகிறது. இதனையும் பாட்டாளி வர்க்க கண்ணோட்டமான பிரிந்து செல்வதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையையும் ஒன்றென தவறாக புரிந்து கொள்கின்றனர். பிரிவினைவாதம் வேறு சுயநிர்ணய உரிமை என்பது வேறு. பிரிவினை வாதம் தேசத்தை துண்டாட வேண்டும் தனித்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தோன்றுவது.

பாட்டாளின் சுயநிர்ணய உரிமை என்பது பல்வேறு தேசங்களில் உள்ள தொழிலாளர்கள் நெருக்கமாக ஒன்றிணைத்து முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான வழியாக உருவாக்கப்பட்டது.

லெனின் கூறுகிறார்:-
"ருஷ்யாவின் பகுதியாக உருவெடுத்துள்ள எல்லா தேசங்களும் தடங்கலின்றிப் பிரிந்து போகவும் சுதந்திரமான அரசுகளை உருவாக்கிக் கொள்ளவுமான உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அவற்றுக்கு இந்த உரிமையைத் தர மறுப்பதோ அல்லது அது நடைமுறையில் செயலுருப் பெறுதை உத்தரவாதம் செய்யும் நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவதோ நாடு பிடித்தல் அல்லது பிரதேசக் கைப்பற்றல் கொள்கையினை ஆதரிப்பதற்குச் சமமாகும். தேசங்களின் பிரிந்து போகும் உரிமையினைப் பாட்டாளி வர்க்கம் அங்கீகரிப்பது மூலம் மட்டுமே, பல்வேறு தேசங்களிலும் உள்ள தொழிலாளிகளிடையே முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த முடியும், தேசங்களை உண்மையிலேயே ஜனநாயகமான வழிகளில் மேலும் நெருக்கமாக ஒன்றிணைக்க முடியும்."
தேசிய இனப் பிரச்சினை தீர்மானம்- பக்கம் 276-277

      இங்கு லெனின் கூறுவதை உணர்ந்தால் தேசங்களின் பிரிந்து போதல் என்ற உரிமை பாட்டாளிகளின் முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிபடுத்துவதற்கு துணைபுரியும். அத்தோடு தேசங்கள் ஜனநாயகமான வழிமுறையில் மேலும் நெருங்கி ஒன்றிணைந்து கலக்க முடியும்.

பிரிவினைவாதம் என்று மார்க்சியம் எதைக் குறிப்பிடுகிறது என்பதைப் பார்ப்போம்.

                யாருடனும் ஒன்றாத தனித்திருத்தலை முன்வைத்து, தேசிய குறுகிய மனப்பான்மையால் உருவான இனவெறியாலும், தேசியவெறியாலும் கோருகின்ற பிரிவை பிரிவினைவாதம் என்கிறது மார்க்சியம். அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பிரிவினையை கோருகின்றனர், அதாவது இன வேறுபாட்டால் உருவான மனவேறுபாட்டை முன்னிருத்து கின்றனர். தனக்கென்று ஒரு நாட்டை, அதாவது யாருடனும் நெருங்காத வகையில் தனித்திருக்க விரும்புதல். மற்றும் தனது மொழிக்கென ஒரு நாட்டை எங்கேயேனும் கட்டியமைக்க வேண்டும் என்ற போக்கில் தனிநாடு கோருதலை மார்க்சியம் பிரிவினைவாதம் என்கிறது.

அது மட்டுமல்லாது முதலாளிகள் பாட்டாளி வர்க்க ஒற்றுமையை குலைப்பதற்கு தேசிய வெறியை ஊட்டுகின்றனர். அதனால் தான் மார்க்சியவாதிகள் சர்வதேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஒரு தேசிய இனம் மற்றொரு தேசிய இனத்தோடு சேர்ந்து இருப்பதற்கும் அல்லது  பிரிந்து போவதற்கும் தாம் விரும்பும் வேறொரு தேசிய இனத்தோடு இணைந்து கொள்வதற்குமான முயற்சியை வலியுறுத்துகின்றனர்.

தேசியத்தை ஒடுக்குகின்ற நிலைமையின் விளைவாகத் தான் தேசத்தை பிரிக்க வேண்டியதாகிறது என்பதே மார்க்சியம். சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து போவதற்கான உரிமையை வலியுறுத்துகிறது அவ்வளவே. இதனை தெளிவுபடுத்துவதற்கு லெனின் விவாகரத்து சட்டத்தை உதாரணத்துக்கு எடுத்து விளக்குகிறார்.

பிரிந்து செல்லும சுதந்திரத்தை வலியுறுத்துவோர், பிரிவினையைத் தூண்டுவதாக குற்றம் சாட்டுவது, விவாகரத்தை ஆதரிப்போர் குடும்ப உறவுகளை அழிப்பவராக குற்றஞ்சாட்டுவது போன்றது. குடும்ப உறவில் விரிசல் இருக்குமாயின், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பில்லா அளவுக்கு பிணக்கு இருக்குமாயின் அவர்கள் சமதான பூர்வமாக -சட்ட பூர்வமாக- பிரிந்து போக அனுமதிப்பது என்பது இருவரும் அந்யோன்யமாக இருக்கும் சூழ்நிலையில் அவர்களிடம் விவாகரத்து என்ற உரிமை எவ்வாறு அவர்களின் பிரிவை தூண்டும். அதே போல் தான் பிரிந்து போகும் உரிமை என்பது பிரிவினையைத் தூண்டுவதில்லை.

முதலாளித்துவ அரசில் சுயநிர்ண உரிமையை நிராகரிப்பது, ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளை ஆதரிப்பதற்கு சமம் என்பதை லெனின் எச்சரிக்கையை யோடு நமக்கு விளக்குகிறார்.

லெனின்:-
சுயநிர்ணய சுதந்திரத்தை, அதாவது பிரிந்து போகும் சுதந்திரத்தை ஆதரிப்போர் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது விவாகரத்துச் சுதந்திரைத்தை ஆதரிப்போர் குடும்ப பந்தங்கள் அழிக்கப்படுவதை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது போலவே முடடாள்தானமானது, வஞ்சனையானது. பூர்ஷ்வா சமூகத்தில் பூர்ஷ்வா திருமண முறை சார்ந்து நிற்கும் தனியுரிமை மற்றும் ஊழல் நடத்தைகளைத் தாங்கி ஆதரிப்போர் எவ்வாறு விவாகரத்துச் சுதந்திரத்தை எதிர்க்கிறார்களோ அதே போல முதலாளித்துவ அரசில் சுயநிர்ணய உரிமையை நிராகரிப்பதானது, அதாவது தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையினை நிராகரிப்பதானது, ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளையும் ஜனநாயக முறைகளையும் தாங்கி ஆதரிப்பதே தவிர வேறெதுவுமல்ல.”
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 118-119

      விவாகரத்து உரிமை இருப்பதினால் விவாகரத்து நடைபெறுவதில்லை, கணவன் மனைவி ஆகியோர்களுக்கிடைய உள்ள நீக்க முடியாத பிணக்கே விவாகரத்துக்குக் காரணம் என்ற உதாரணத்தைப் போலவே, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பெற்றிருப்பதனால் தேசங்களிடையே பிரிவு நிகழ்வதில்லை, தேசிய இனங்களை ஒடுக்குகின்ற கொள்கையே தேசிய இன அரசைத் தோற்றுவிக்கிறது. தேசியவாத பிரிவினையை மார்க்சியம் பாட்டாளி வர்க்கத்தின் ஒருமைப்பாட்டை குலைக்கும் பிரிவினைவாதமாகவே கருதுகிறது. அதனால் சுயநிர்ணய உரிமையை பிரிவினையைத் தூண்டும் கருத்தாக பார்க்க முடியாது. மேலும் லெனின் கூறுகிறார், ஒரு குறிப்பிட்ட தேசிய இன அரசின்  பிரிவு தேவையான ஒன்றா? இல்லையா? என்று ஸ்தூலமான நிலைமைகளை ஆராந்து முடிவெடுப்பதை கம்யூனிஸ்டுகள் நிராகரிப்பதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

லெனின்:-
"சமூக-ஜனநாயகவாதிகள் எல்லா தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரமளிப்பதனால் ஒவ்வொரு தனியான உதாரணத்திலும் அந்தத் தேசிய இனத்தின் அரசின் பிரிவு அவசியமானதுதான என்பதை சுயேச்சையாக மதிப்பிடுவதை சமூக-ஜனநாயகவாதிகள் நிராகரிக்கிறார்கள் என்பது பொருளல்ல என்பது நிச்சயானது ஆகும்"
தேசிய இனப் பிரச்சினைப் பற்றி ஆய்வுரைகள் (1913 ஜீன் 26) - பக்கம் 89

பாட்டாளி வாக்க சர்வதேசியவாதமும் முதலாளித்துவ தேசியவாதமும்

அயர்லாந்து தேசிய இனப்பிரச்சினையினால் ஏற்படுகின்ற, இங்கிலாந்து பாட்டாளிகளுக்கும் அயர்லாந்து பாட்டாளிகளுக்கும் இடையேயான  பிணக்கை, இங்கிலாந்து முதலாளி வர்க்கத்தின் தேசியவாதம் தமக்கு சாதகமாக்குகிறது. அதனால் ஆங்கிலேய பாட்டாளிகளிடையே காணப்படும் இந்தப் போக்கை தடுக்க வேண்டும்.

 உலக சந்தையை தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் இங்கிலாந்தில் புரட்சி நடைபெறுவதற்கு ஏற்ற வளர்ச்சியடைந்த தேசமாக காணப்படுகிறது. இந்த சமூகப் புரட்சியை விரைவுபடுத்துவதற்கு சர்வதேச பாட்டாளிகளின் சங்கம் அயர்லாந்தை சுதந்திர நாடாக்கும் முயற்சிக்கு உதவுது முக்கியமானது என்று கருதுகிறது.

அயர்லாந்து விடுதலை என்பது நீதியை நிலை நாட்டுவதற்கோ அல்லது மனிதாபிமான உணர்ச்சியின் அடிப்படையிலோ கோராப்படுவதில்லை, இங்கிலாந்தின் சமூக விடுதலைக்கு முதல் நிபந்தனையான கடமையாகும் என்கிறார் மார்க்ஸ்.

சுயநிர்ண உரிமையை கோருவது எந்த வகையிலும் சர்வதேசிய வாதத்துக்கு எதிரானது அல்ல என்பதை மார்க்ஸ், லெனின் ஆகியோர்களின் கருத்தால் அறிந்து கொள்ளலாம்.

மார்க்ஸ்:-
"..அயர்லாந்து பற்றி ஆங்கிலேய தொழிலாளி வர்க்கத்தின் கண்ணோட்டம் என்னவென்று பொதுச்சபை விவாதித்து அது பற்றி தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதேபித்திருக்கிறேன், ஒடுக்கப்பட்டிருக்கும் அயர்லாந்துக்குச் சாதகமாகவும், அவர்களை ஒடுக்கி வருகிறவர்களை எதித்தும் உரத்த குரலில் பேசுவதோடு, நான் பகிரங்கமாகக் கூறியிருக்கும் இரண்டு விஷயங்களுக்கும் வேறு நோக்கங்கள் இருக்கின்றன.

மேன்மேலும் ஒரு விஷயம் என்னுள்ளத்தில் ஆழமாக வேரூன்றிவிட்டது, ஆங்கிலேய தொழிலாளி வர்க்கம் இதை ஏற்றுக் கொள்ளும்படி செய்வதுதான் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. அதாவது ஆங்கிலேய வர்ககம் அயர்லாந்து தொடர்பாக தன்னுடைய கொள்கையை ஆளும் வர்க்கங்களின் கொள்கையிலிருந்து தனியே பிரித்துக் கொள்வது வரையிலும், அயர்லாந்து மக்களின் லட்சியத்தைத் தங்கள் பொதுலட்சியமாக ஏற்றுக் கொள்வதோடு, 1801ம் ஆண்டில் ஏற்படுத்திய இணைப்பைக் கலைத்து அதற்குப் பதிலாக சுதந்திரமான கூட்டாட்சி உறவை அமைப்பதற்கு தாமே முன்முயற்சி எடுத்துக் கொள்வதுவரையிலும் இங்கு, இங்கிலாந்தில் ஆங்கிலேய தொழிலாளி வர்க்கம் முக்கியத்துவம் பெற்ற எதையும் செய்யவே முடியாது.

அயர்லாந்துக்கு அனுதாபம் காட்டும் முறையில் இதைச் செய்யக்கூடாது, ஆங்கிலேய பாட்டாளி மக்களின் நல உரிமையைப் பேணிபாதுக்காக்கும் கோரிக்கையாகக் கருதி இதைச் செய்ய வேண்டும். இதைச் செய்யவில்லையென்றால் ஆங்கிலேய மக்கள் ஆளும் வர்க்கங்களின் தலையாய கயிறுகளால் கட்டிப் பிணைக்கப்பட்டே கிடப்பார்கள், இதைச் செய்யவில்லையென்றால், அயர்லாந்துக்கு விரோதமாக பொது அணியில் அவர்களோடு ஆங்கிலேய தொழிலாளி வர்க்கம் ஒன்று சேரவேண்டியிருக்கும். இங்கிலாந்தில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் கணிசமான பகுதியினர் அயர்லாந்து தொழிலாளர்களாக இருப்பதால், அயர்லாந்தோடு போடும் சண்டை. இங்கிலாந்தில் அது நடத்தும் ஒவ்வொரு இயக்கத்தையும் உடைத்தெறியும்.

ஆங்கிலேய தொழிலாள வர்க்கம் இங்கு விடுதலை பெறுவதற்கு மிக முக்கியமான நிபந்தனையாக இருப்பது ஆங்கிலேய நிலப்பிரபுத்து ஒரு சிலராட்சியை வீழ்த்துவதாகும், அதைச் செய்யமுடியாது. ஏனென்றால் அயர்லாந்தில் அதன் புறக்காவல் நிலையங்கள் பலமாக இருக்கும்பொழுது அதை இங்குத் தாக்கி வெற்றிவெறுவது சாத்தியமல்ல. ஆனால். அங்கு சகல அதிகாரங்களையும் அயர்லாந்து மக்களே தங்கள் கையில் எடுத்துக் கொண்டால் சட்டம் இயற்றுகிறவர்களையும், அட்சியாளர்களையும் தானே அது நியமித்தால், சுயாட்சியை அது பெற்றால், நிலப்பிரபுத்துவ சிலராட்சியை வீழ்த்துவது இங்க இருப்பதைக் காட்டிலும் அங்கு எளிதான செயலாக இருக்கும். (பெரும் அளவிற்கு ஆங்கிலேய நிலப்பிரபுக்களைப் போன்ற அதே நபர்கள் தான் அங்கும் இருக்கிறார்கள்) மேலும், அயர்லாந்தில இதுவெறும் பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமல்ல, அதே நேரத்தில் ஒரு தேசியப் பிரச்சினையாகவும் இருக்கிறது,.."
எல்.கூகெல்மானுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதம் (லண்டன், நவம்பர் 29, 1869)
பக்கம் - 145-146

பாட்டாளி வர்க்கச் சர்வதேசியவாதத்தோடு சுயநிர்ணய உரிமை என்பது முரண்படுவதில்லை என்பதை லெனின் எவ்வாறு விளக்குகிறார் என்பதை பார்ப்போம்.

      பாட்டாளி வர்க்கச் சர்வதேசியவாதம் வெற்று வார்த்தையாகப் போகாமல் இருக்க வேண்டுமானால், பலவந்தமாக ஒரு தேசிய இனத்தை பிடித்து வைத்திருப்பதற்கு எதிராக போராட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், ஒடுக்கும் தேசிய இனத்தின் தொழிலார்களுக்கும் ஒடுக்கத்துக்கு ஆளான தொழிலாளர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும் ஒருமைப்பாட்டும் சாத்தியமற்றுப் போகும். மார்க்ஸ் கூறியப்படியே லெனினும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுதந்திரத்தின்

லெனின்:-
ஓர் அரசின் எல்லைகளுக்குள் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பலவந்தமாகப் பிடித்து நீடித்து வைத்துக்கொண்டிருக்கப்படுவதற்கு எதிராகப் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும், அதாவது சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டும். "தங்களது" தேசிய இனத்தினால் ஒடுக்கப்படும் காலனிகளுக்கும் தேசிய இனங்களுக்கும் அரசியல் ரீதியில் பிரிந்து போகும் சுதந்திரம் தரப்பட வேண்டும் என்று பாட்டாளிகள் கோர வேண்டும். இல்லாவிட்டால் பாட்டாளி வாக்கச் சர்வதேசியவாதம் என்பது வெற்று வார்த்தை, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கும் தேசிய இனத்தின் தொழிலார்களுக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையோ அல்லது வர்க்க ஒருமைப்பாடோ அப்பொழுது சாத்தியமில்லை,.."
சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்
பக்கம்-187
லெனின்:-
"எவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் காலத்திற்குப் பிறகுதான் வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ அதே போல, ஒடுக்கப்படும் எல்லாத் தேசிய இனங்களுக்கும் முழுவிடுதலை என்ற - அதாவது, பிரிந்து போகும் சுதந்திரம் என்ற - இடைநிலைக் காலத்துக்குப் பிறகுதான் தேசிய இனங்கள் தவிர்க்க முடியாத வகையில் இரண்டறக் கலத்தல் என்ற நிலையை அடைய முடியும்.”
சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்
பக்கம்-186

      வர்க்கப் போராட்டத்துக்காகவும். சர்வதேசிய ஒற்றுமையினை வளர்த்தெடுப்பதற்காகவும் கம்யூனிஸ்டுகள் அகிலத்தின் தீர்மானமான சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டிருப்பதை லெனின் உறுதிப்படுத்துகிறார். மேலும் ஒடுக்கும் தேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிப்பதற்கு ஒடுக்கும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரம் அளிக்க வேண்டியதையும் வலியுறுத்துகிறார்.

லெனின்:-
"தேசிய இன ஒடுக்குமுறை இருக்கும் ஒரு நிலைமையில் தேசிய இன விடுதலைப் பணிகளைப் புறக்கணிப்பது சோஷலிஸ்டுக் கருத்துப்படி நிச்சயம் தவறாகும்.

இந்தக் கருத்துநிலையிலுள்ள மிகவும் இன்றியமையாத, அடிப்படையான அறுதியுரைகளை அகிலத்தின் தீர்மானம் திரும்பவும் வழங்குகிறது, ஒரு புறம் எல்லாத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக, அறவே நேரடியாக ஐயத்திற்கிடமின்றி ஏற்றுக் கொள்வது, மறுபுறம் தொழிலாளர்களிடம் அவர்களது வாக்கப் போராட்டத்துக்காக சர்வதேசிய ஒற்றுமையை வளர்க்கும்படி  இதே போல தெட்டத்தெளிவாக வேண்டுகோள்  விடுவது."
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 134-135

லெனின்:-
"ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்துபோகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதிகள் (கம்யூனிஸ்டுகள்) அத்தகைய பிரசாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறியவர் ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றும் கருதுவது நமக்கு உரிமையும் கடமையுமாகும். சோஷலிசத்தை அடையுமுன்னர் பிரிந்து போகும் வாய்ப்பு ஆயிரத்தில் ஒன்றுதான் என்றாலும்கூட இது ஒரு தனிமுழுமையான கோரிக்கை."
சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு - பக்கம் - 245-246

      சர்வதேச வர்க்க ஒருமைப்பாட்டை குலைக்கின்ற தேசிய இன முதலாளி வர்க்கத்தின் தனியுரிமையினை எதிர்க்காமல் போனால் பாட்டாளி வாக்கத்தின் இடையே அவநம்பிக்கையை அது ஏற்படுத்திவிடும். பிரிந்து போகும் உரிமையை மறுப்பதானது முதலாளி வர்க்கம் மகிழும்படி தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி விடும் என்று லெனின் நேரடியாக எச்சரிக்கிறார்.

லெனின்:-
"எந்த ஒரு தேசிய இனத்தின் பாட்டாளி வாக்கமாவது அதன் "சொந்த" தேசிய இன முதலாளி வர்க்கத்தின் தனியுரிமைகளுக்குச் சிறிதேனும் ஆதரவு கொடுக்குமானால் இன்னொரு தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்தின் மத்தியில் அது அவநம்பிக்கையைத் தவிர்க்க முடியாத வகையில் தோற்றுவிக்கும், இது தொழிலாளிர்களின் சர்வதேச வர்க்க ஒருமைப்பாட்டைப் பலவீனப்படுத்தும். முதலாளி வர்க்கம் மகிழும் முறையில் தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும், சுயநிர்ணய உரிமையையோ பிரிந்துபோகும் உரிமையையோ மறுப்பதானது ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளை ஆதரிப்பது என்றே தவிர்க்க முடியாதபடி பொருள்படும்"
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 122

இன ஒடுக்குதல் அற்ற சூழ்நிலையில் ஒரு தேசம் பெரிய அளவாய் இருப்பதையே உணர்வு படைத்த பாட்டாளி வர்க்கம் விரும்பும். அதுமட்டுமல்லாது பெரியதாய் உள்ள பிரதேசயத்தையும் அதில் மிக நெருக்கமான பொருளாதார செயற்பாடுகள் இணைந்திருப்பதையும் பாட்டாளி வர்க்கத்துக்கு சாதகமாகும். ஏனெனில் முதலாளித்துவ வர்க்கத்ததின் மீதான தமது எதிர்ப்பை விரிவான வகையில் செலுத்த முடியும்.

தேசிய இனங்களின் மனப்பூர்மான ஒற்றுமையை மார்க்சியம் வலியுறுத்துகிறது. மனப்பூர்வமான ஒற்றுமைக்காகத் தான் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் தேசிய குறுகிய மனப்பான்மையும், தனித்திருத்தலையும் ஒதுங்கி வாழ்வதையும் எதிர்த்துப் போராடுகிறது.

கம்யூனிஸ்டுகளின் சுயநிர்ணய உரிமையை மட்டுமே அறிந்து கொண்டு, தேசம் பிரிந்து போவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளதாக தவறாக பலர் புரிந்து வைத்துள்ளனர். ஒடுக்கத்துக்கு ஆளான தேசம் பிரிந்து போவதற்கான உரிமைக்கு போராடும்  கம்யூனிஸ்டுகள் தேசங்களின் ஒன்றுகலத்தலுக்காகவும் போராடுகின்றனர் இதனை லெனின் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். ஒடுக்கத்துக்கு ஆளான தேசங்களுக்காக்க போராடாதவர் மார்க்சியவாதி அல்ல, அதேநேரத்தில் மற்றொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மார்க்சியவாதி ஒன்றுகலத்தலுக்கு ஆதரவாக இருப்பதை குறிப்பிட்டு நிந்திப்பவர் தேசியவாத அற்பரே அந்தப் போலி மார்க்சியவாதி என்கிறார் லெனின்.

லெனின்:-
தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரிக்காத, அதற்காகப் போராடாத எவரும், எல்லாவிதமான தேசிய இன ஒடுக்குமுறையும் சமத்துவத்துக்கு இடமில்லாதது. ஆனால் பிறிதொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மார்க்சிவாதி ஒன்றுகலத்தலைஆதரித்து நிற்பதாகச் சொல்லி அவரை நிந்தனை செய்யும் போலி மார்க்சியவாதி தேசியவாத அற்பரே ஆவார் என்பதும அதே போல் சந்தேகத்துக்கு இடமில்லத்து தான்
தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் - பக்கம் - 34

தனித்தனி தேசிய இனங்களாக பிரிந்திருப்பதே அந்தந்த தேசங்களுக்கு சிறந்தாய் இருக்கும் என்ற நிலையை, சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இணக்க மற்ற நிலையில் பிரிந்து செல்வதையும் இணக்கமும் நெருக்கமும் உள்ள நிலையில் சேர்ந்திருத்தலையும் வலியுறுத்துகின்றனர் கம்யூனிஸ்டுகள்.

                தேசிய இனங்களின் பிரச்சினை என்பது, முதலாளித்துவ தேசத்தின் தொடக்கத்திலிருந்து, சோஷலிச சமூகத்தைக் கடந்து கம்யூனிச சமூகம் வரை தொடரும். இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு அரசின் தோற்றம் முதல் அதன் மறைவு வரையான அதாவது அரசு உலர்ந்து உதிரும் நிலைவரையான வரலாற்றியல் பொருள்முதல் பார்வையில் புரிந்திருப்பது அவசியமானதொன்றாகும்.

                சுயநிர்ணய உரிமையை மார்க்சியம் ஆதரிக்கிறது என்றவுடன், மார்க்சியவாதிகள் தேசிய இனக் கலாச்சாரத்துக்காக போராடுபவர்கள் என்று நினைத்திவிடக் கூடாது. கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்க சர்தேசக் கலாச்சாரத்தையே பின்பற்றுபவர்கள். இதில் எந்த தயக்கமும் கிடையாது. ஒரு இனம் தாம் சுயமாக செயற்படும் போது தான் சர்வதேசிய பாதையை நோக்கி தடையில்லாமல் செல்ல முடியும்.

                தேசிய இனக் கலாசாராம் என்பது நிலப்பிரபுக்கள், மதக் குருமார்கள், மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தினுடையது என்கிறது மார்க்சியம். இந்த தேசியக் கலாச்சாரத்தில் உள்ள ஜனநாகயக மற்றும் சோஷலிசக் கூறுகளை மட்டும் தான் பாட்டாளிவர்க்கம் எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு தேசிய இனத்துக்கு உரிய முதலாளித்துவ கலாசாரத்தையும் முதலாளித்துவ தேசிவாதத்தையும் எதிர்ப்பதற்காகவே அவற்றை எடுத்துக் கொள்கிறது.

லெனின்:-
"தேசிய இனக் கலாசாரம் என்ற கோஷத்தின் உட்பொருள், குறிப்பிட்ட நாடடிலும் உலகின் எல்லா நாடுகளிலும் எல்லா வர்க்கங்களுக்கும் இடையிலான புறநிலை எதார்த்த உறவுகளால் நிர்ணணிக்கப்படுகிறது. முதலாளி வர்க்கத்தின் தேசிய இனக் கலாசாரம் கண்கூடான உண்மை ஆகும்.
..
ஆக்கிரமிப்பு வாய்ந்த பூர்ஷ்வா தேசியவாதமானது, தொழிலாளர்களை முதலாளி வர்க்கத்தாருக்கு அடிபணிந்து நடக்க வைப்பதற்காக அவர்களை மதிமயங்கச் செய்கிறது, அசட்டு  ஏமாளிகளாக்குகிறது, ஒன்றுசேராதவாறு பிளவுறுத்துகிறது- இது தான் இக்காலத்தின் அடிப்படையான உண்மை.
..
தேசிய இனக் கலாசாரம் என்ற கோஷத்தை ஆதரிப்போர் இருக்க வேண்டிய இடம் தேசியவாதக் குட்டி முதலாளித்துவப் பகுதியோர் மத்தியிலே அன்றி, மார்க்சியவாதிகள் மத்தியில் அல்ல.

ஸ்தூலமான ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம், மாருஷ்ய மார்க்சியவாதியான ஒருவர் தேசிய இன மாருஷ்ய கலாசாரம் என்ற கோஷத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாது. ஏற்றுக் கொள்கிறவர் எவரும் தேசியவாதிகளது அணிகளில் இருக்க வேண்டுமே அன்றி, மார்க்சியவாதிகளது அணிகளில் அல்ல."
தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் - பக்கம் - 28-29

      தேசிய இனத் தனியியல்புகளை இழந்து வேறொரு தேசிய இனமாக மாற்றமுறுவது அதாவது சர்வதேசிய இனமாக மாறுவது என்பது வரலாற்றில் நிகழக்கூடிய ஒன்றாகும்எதிர்காலத்தில் நடைபெறப் போகின்ற இந்த ஒன்றுகலத்தல் என்பதை கணக்கில் கொண்டே மார்க்கியம் தமது சர்வதேசிய கண்ணோட்டத்தை அமைத்துக் கொண்டுள்ளது. எப்படி ஆதி பழங்குடியோடு நாகரீக சமூகத்தின் வரலாறு நின்றுவிடவில்லையோ, அதேபோன்று இன்றைய தேசிய இனக் கலாச்சாரத்தோடு நின்றுவிடப்போவதில்லை. உலக சமூகத்தின் சர்வதேச கலாச்சாரம் தோன்றும்.
     
                தேசங்கள் இருக்கும் வரை தேசிய இனங்கள் ஒன்றுகலத்தல் நிகழ்வு நிறைவடையும் வரை தேசிய இனங்களின் பிரச்சினைகளை உலகம் சந்தித்து வரவேண்டிவரும்.