Monday 31 August 2020

தத்துவமும் மதமும்

(நிசான் கார் தொழிற்சாலையில் (Renault nissan automotive india Pvt ltd) பணிபுரியும் தோழர்கள் மத்தியில்சூம்” (zoom) இணைய வழியில்தத்துவமும் மதமும்என்ற தலைப்பில் பேசினேன். கலந்து கொண்டவர்கள் பல கேள்விகளைக் கேட்டனர். தொழிலாளர்களிடம் உரையாடியது மகிழ்வைத் தந்தது. அவர்களது ஆர்வம் நம்பிக்கையை ஊட்டுகிறது.)



1) தத்துவத்திற்கும் மதத்திற்கும் உள்ள ஒற்றுமையும் வேறுபாடும்

தத்துவம் - மதம் பற்றிய சிறு அறிமுகத்தைத் தான் இன்று கொடுக்கப் போகிறேன். இந்த அறிமுகத்தின் போது தத்துவம் மதம் பற்றிய புதிய கலைச் சொற்களையும் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். புரியாத கலைச் சொற்கள் வந்தால் கவலைப்பட வேண்டாம். இன்று காதில் விழுகின்ற கலைச் சொற்காள் நாளை பிறர் பேசும் போதோ, நீங்களாகவே படிக்கும் போதோ படிப்படியாக புரிந்து கொள்ளலாம்.

தத்துவத்திற்கும் மதத்திற்கும் ஒற்றுமையும் இருக்கிறது வேற்றுமையும் இருக்கிறது. தத்துவத்தில் உள்ள ஒரு பிரிவுக்கும், மதத்திற்கும் நெருக்கம் இருக்கிறது. அதனால் தான் முதலில் தத்துவத்தைத் தெரிந்து கொண்டு, அடுத்து மதத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

தத்துவமும் மதமும் மேலை நாடுகளில் தனித்தனியாகப் பிரிந்து காணப்படுகிறது. நம் நாட்டில் தத்துவமும் மதமும் இணைந்து காணப்படுகிறது.

மேலைநாடுகளில் தத்துவாதிகள் என்றால் அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்றவர்களும், மதம் என்றால் அதனை நிலைநிறுத்திய ஏசுநாதர், நபிகள் நினைவுக்கு வருவார்கள்.

இந்தியாவில் அத்வைத தத்துவத்தை நிலைநிறுத்திய சங்கரரே சனாதன மதத்துக்கும் தலைவராகவும் இருக்கிறார். அதே போல வைணவ மதத்தின் தலைவராக ராமானுஜரும், அந்த மதத்தின் தத்துவமான விசிட்டாத்வைதத்திற்குத் தலைவரும் அவரே ஆவார். தமிழகத்தில் உள்ள சைவ மதமும் இதே போலத்தான். இந்த மதத்தைச் சைவம் என்றும் இதன் தத்துவத்தைச் சைவ சித்தாந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இந்தச் சைவ மதத்திற்கு ஒத்த தவலைவரை முன்னிருத்துவதில்லை. ஆனால் சைவ தத்துவமான சைவ சித்தாந்தத்திற்கு மெய்கண்ட தேவர் முன்னிருத்தப்படுகிறார்.

மதமும் தத்துவமும் இணைந்து காணப்படுவது இந்தியாவில் மட்டும்தான். மேலை நாடுகளில் அவ்வாறு இல்லை. இந்த வேறுபாட்டை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

தத்துவமும் மதமும் ஒன்றிணைந்து காணப்பட்டாலும் இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. அதில் முக்கியமானது உலகைப் படைத்தவரை ஒரு உருவமாகப் பார்ப்பது மதம், உலகைப் படைத்தவரை உருவமற்ற சக்தியாகப் பார்ப்பது தத்துவம்.

இங்கே சக்தி என்பது நம் நாட்டில் பிரம்மம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதற்கு absolute என்று அழைக்கப்படுகிறது.

மதத்தில் உருவக் கடவுளிடம் "இது வேண்டும்" "அது வேண்டும்" என்று பிரார்த்தனை இடம் பெறும். தத்துவத்தில், சில பயிற்சியின் மூலம் தத்துவம் கூறுகிற நிலையை அடைவது பற்றி இருக்கும்.

2) ஆன்மீகத் தத்துவம் – கருத்துமுதல்வாதம்

இதுவரை நாம் பேசிக் கொண்டிருப்பது ஆன்மீக தத்துவம், இதனைக் கருத்துமுதல்வாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆன்மீகத்தை மறுக்கிற தத்துவமும் இருக்கிறது அதன் பெயர் பொருள்முதல்வாதம்.

தத்துவத்தில் பல போக்குகள் இருக்கிறது. எவ்வளவு போக்குகள் இருந்தாலும் அதனை இரண்டு பிரிவுக்குள் அடக்கிவிடலாம். ஒன்று ஆன்மீகவாதம் அதாவது கருத்துமுதல்வாதம், மற்றொன்று ஆன்மீகத்தை மறுக்கின்ற பொருள்முதல்வாதம். இந்தப் பொருள்முதல்வாதத்தை நாத்திகவாதம் என்றும் கூறலாம். ஆனால் பொருள்முதல்வாத தத்துவத்தில் நாத்திகம் மட்டுமே கூறப்படவில்லை. பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளது.

தத்துவத்தில் உள்ள இந்த இருபெரும் பிரிவுகளைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

3) கருத்துமுதல்வாதம் – பொருள்முதல்வாதம்

உலகம் படைக்கப்பட்டதா? இல்லை அது இயற்கையிலேயே என்றும் உள்ளதா? என்ற கேள்விக்கு இரண்டுவிதமான பதில் கிடைக்கிறது. அந்தப் பதிலைக் கொண்டே ஒன்றை கருத்துமுதல்வாதம் என்றும் மற்றொன்றை பொருள்முதல்வாதம் என்றும் கூறுகிறோம்.

உலகம் படைக்கப்படவில்லை, அது என்றும் உள்ளது. மாற்றத்திற்கு உட்பட்டு மாறிக் கொண்டே இருக்கிறது என்று கூறுவது பொருள்முதல்வாதம்.

உலகம் எதாவது ஒரு வகையில் படைக்கப்பட்டது என்று கூறுகிற அனைத்தும் கருத்துமுதல்வாதம். அதாவது எதோ ஒரு சக்தியினால் இந்த உலகம் படைக்கப்பட்டது என்று கூறுவது கருத்துமுதல்வாதம். இதில் பல பிரிவுகள் இருக்கிறது. அதில் முக்கியமான இரு பிரிவுகளை மட்டும். இப்போ இங்கே பார்க்கலாம்.

4) புறநிலை கருத்துமுதல்வாதம் - அகநிலை கருத்துமுதல்வாதம்

கருத்துமுதல்வாதம் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது. பல பிரிவுக்குள், ஒரு முக்கியமான இரண்டு பிரிவு இருக்கிறது. ஒன்று புறநிலை கருத்துமுதல்வாதம் மற்றொன்று அகநிலை கருத்துமுதல்வாதம்.

உலகப் படைப்புக்குக் காரணமான அந்தச் சக்தி புறத்தில், இந்த உலகிற்கு அப்பால் இருப்பதாகக் கருதுவது புறநிலை கருத்துமுதல்வாதம். படைக்கிற சக்தி பௌதீக உலகிற்கு அப்பால இருப்பதாகக் கூறுவதால், இதற்குப் புறநிலைக் கருத்து முதல்வாதம் என்று பெயர். அதனால் தான் கருத்துமுதல்வாதத்தை ஆங்கிலத்தில் Metaphysics என்று அழைக்கப்படுகிறது. Meta என்றால் "அடுத்து" அல்லது "அப்பால்" என்று பொருள். அதாவது பௌதீக உலகத்திற்கு அப்பால்.

படைப்பு சக்தியை இந்த உலகிற்குப் புறத்தில் உள்ளதாகக் கருதுவதால் இந்தத் தத்துவத்திற்குப் புறநிலைக் கருத்துமுதல்வாதம் என்று பெயர். அந்தச் சக்தியை புறத்தில் காணாது அகத்தில், அதாவது மனதில் இருப்பதாகக் கொள்வது அகநிலைக் கருத்துமுதல்வாதம்.

நாம் நினைப்பதே புறத்தில் தோன்றுகிறது. புறத்தில் எதுவும் இருப்பதில்லை, நமது மனமே புறத்தைப் படைக்கிறது. இது தான் அகநிலை கருத்துமுதல்வாதம்.

புறநிலைக் கருத்துமுதல்வாதத்திற்கு ராமானுஜரின் விசிட்டாத்வைதத்தையும் அகநிலைக் கருத்துமுதல்வாதத்திற்கு ஆதி சங்கரருடைய அத்வைதத்தையும் குறிப்பிடலாம். பொதுவாக உலகம் முழுவதும் காணப்படுவது புறநிலை கருத்துமுதல்வாதமே. இந்தியாவிலும் நடைமுறையில் கடைப்பிடிப்பது புறலைநிலைக் கருத்துமுதல்வாதமே.

5) தத்துவத்தின் இரு பிரிவுக்குக் காரணம்

தத்துவத்தை ஏன் இப்படி இரண்டு பிரிவாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்? என்ற கேள்வி எழுப்புவது இயல்பானது.

கருத்துமுதல்வாதம் இந்த உலகப் பிரச்சினைகளை விளக்குவதோடு நின்றுவிடுகிறது. பணக்காரணமாக இருப்பதற்கும், ஏழையாக இருப்பதற்கும் அவரவர் போன ஜென்மத்தில் செய்த செயல்களே காரணம் என்று விளக்கம் மட்டுமே கொடுக்கிறது கருத்துமுதல்வாதம்.

ஆனால் பொருள்முதல்வாதம் இந்த உலகப் பிரச்சினைகளுக்குக் காரணத்தைக் கூறுவதோடு அதனை மாற்றுவதற்கான வழியினையும் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறது.

சமூக மாற்றத்தைக் கோருவது பொருள்முதல்வாதம், சமூகத்தை இருக்கும் நிலையிலேயைக் காக்க விரும்புவது கருத்துமுதல்வாதம்.

6) தத்துவத்தின் சார்பு

பொருள்முதல்வாதத்தை ஏன் தொழிலாளர்களின் தத்துவம் என்று கூறுகிறோம். சமூக மாற்றம் என்பது உழைப்பாளர்களின் நலனை பிரதிபலிப்பதனால் பொருள்முதல்வாதத்தைத் தொழிலாளர்களின் தத்துவம் என்று கூறப்படுகிறது.

இந்த யதார்த்த சமூகத்தைத் தக்க வைப்பதற்குப் போராடுவதனால், இந்தக் கருத்துமுதல்வாதத்தை ஆளும் வர்க்கத்திற்கு உரியதாகக் கூறப்படுகிறது.

இந்த வகுப்பு தத்துவ அறிமுகம் என்பதனாலே, இந்த வேறுபாட்டை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். வேறொரு வகுப்பில் விரிவாக இதனைக் காணலாம். தத்தவம் பற்றிய அறிமுகத்திற்குத் தேவைப்படுவதை மட்டும் இன்று பார்ப்போம்.

7) இயக்கவியல் பொருள்முதல்வாதம்- வரலாற்றியல் பொருள்முதல்வாதம்

மார்க்சிய தத்துவமான பொருள்முதல்வாதம் இரண்டு உட்பிரிவு கொண்டுள்ளது. ஒன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம், மற்றொன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

இந்த உலகமும் இயற்கையும் எப்படி எல்லாம் நிலைபெற்று இருக்கிறது, எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை ஆராய்வது இயக்கவியல் பொருள்முதல்வாதம்.

சமூகம் எவ்வாறு தோன்றியது, எவ்வாறு நிலைபெறுகிறது, எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பதை ஆராய்வது வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

இயக்கவியல் பொருள்முதல்வாதம் - வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பதை இரண்டு தனித்தனியான வகுப்புகளில் பார்க்கப்பட வேண்டியவை. இங்கே சுருக்கமாகவே பார்க்கிறோம்.

8) மதம்

அடுத்து மதம். இதுக்கு முன்னால் கருத்துமுதல்வாதம் பற்றிப் பேசினோம், அந்தத் தத்துவத்திற்கு நெருக்கமானது மதம். கருத்துமுதல்வாதம் இந்தப் பிரபஞ்சம் ஒரு சக்தியினால் தோற்றுவிக்கப்பட்ட என்று கூறுகிறது. மதம் அந்தச் சக்தியை ஒரு கடவுளாக உருவகம் செய்கிறது. அந்தச் சக்திக்கு மனித உருவம் கொடுக்கிறது.

சைவ மதம் அந்த இறைவனைச் சிவபெருமான் என்கிறது, வைணவம் நாராயணன் என்கிறது. கிறித்துவத்தில் கர்த்தர் அல்லது ஏசு என்று கூறப்படுகிறது. இஸ்லாத்தில் அல்லா என்று கூறப்படுகிறது. ஆனால் இஸ்லாத்தில் இறைவனுக்கு உருவம் கொடுப்பதில்லை. அந்த அல்லாவின் சக்தியைப் பற்றி தான் பேசப்படுகிறது

இந்த உலகம் அந்த இறை சக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று மதம் கூறுகிறது. அந்தக் கட்டுப்பாட்டை மீறி இந்த உலகத்தில் ஒன்றையும் செய்திட முடியாது. அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது. இது தான் மதத்தின் அடிப்படைக் கருத்தாகும்.

9) மார்க்சியப் பார்வையில் மதம்

ஆனால் மதத்தைப் பற்றி நமது பார்வை வேறுபட்டது., அதாவது தொழிலாளர்களது பார்வை வேறுபட்டது.

மதம் ஒரு காலத்தில் தோன்றியது என்பதே மார்க்சியப் பார்வை. அப்படி என்றால் மதம் தோன்றாக் காலம் என்று ஒன்று உண்டா? ஆம் இருந்தது. அந்தச் சமூகம் பழங்குடி சமூகம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து நாகரீக சமூகமும் இந்தப் பழங்குடி சமூகத்தைக் கடந்து தான் வந்துள்ளது. நேரடியாக எந்தச் சமூகமும் நாகரீகம் பெற்றுவிடவில்லை.

அந்தப் பழங்குடி சமூகத்தில் கடவுளோ, மதமோ கிடையாது. இந்த இரண்டும் இல்லாத அந்தச் சமூகம் எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம்.

அந்தப் பழங்குடி சமூகத்தில் மக்கள் தங்களுக்குள் வேறுபாடு இன்றி வாழ்ந்தார்கள். அவர்களிடம் பணக்காரன் - ஏழை என்ற வேறுபாடு கிடையாது. அப்படி இருந்தும் அந்த வாழ்க்கை மிகவும் கடினமானதாகத் தான் இருந்தது. வேட்டையில் எந்த உணவும் கிடைக்காமல் சில நாட்கள் பட்டினி கிடக்க வேண்டிய சூழ்நிலை அவ்வப்போது ஏற்பட்டது. அந்நிலைமைகளில் பூமியில் உள்ள கிழங்குகளைத் தோண்டி எடுத்து உண்பார்கள். அதுவும் கிடையாத சூழ்நிலையையும் அன்றைக்கு அவர்கள் சந்தித்தார்கள்.

அந்தப் பழங்குடி சமூகத்தில் பணக்காரர் - ஏழை என்ற வேறுபாடு தான் கிடையாது. ஆனா அவர்கள் கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று சொல்லிவிட முடியாது.

வேட்டை ஆடுவதற்கு அன்றைக்கு அவர்களிடம் இருந்த கருவிகள் மிகவும் சாதாரணமானது. அதை வைத்துக்கொண்டு அன்றாட உணவுத் தேவையை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. உணவுகளைத் தேடுவது மட்டுமே அன்றைக்கு வேலையாக இருந்ததும், முழு நாள் தேடியும் உணவு அவர்களுக்குச் சொற்பமாகத் தான் கிடைத்தது.

பழங்குடி மக்கள் சேர்ந்து தான் வாழ்ந்தார்கள், ஆனால் அது ஒரு சிறிய கூட்டமாகத்தான் இருந்தது. விலங்கிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளச் சேர்ந்தே வாழ வேண்டிய, சூழ்நிலை தான் அப்போது இருந்தது. மேலும் அந்தச் சிறு குழு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளச் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயமும் இருந்தது.

ஒவ்வொருவரும் அந்தக் கூட்டத்தில் இருக்கிற அனைவருக்காகவும் உழைப்பார்கள். கிடைக்கிற அனைத்தையும் சமமாகப் பங்கிட்டார்கள். அன்றைய நிலையில் அவர்கள் ஒரு கூட்டு வாழ்க்கை முறையில் தான் வாழ்ந்தார்கள். இந்தக் கூட்டு வாழ்க்கைக் காரணமாக அன்றைய பழங்குடி சமூகத்தை ஆதி பொதுவுடைமை சமூகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு தனிநபரும் அந்தக் கூட்டத்துக்கு அவசியமாக இருந்ததால், ஒவ்வொரு தனிநபரையும் காப்பாற்ற வேண்டி வந்தது. எந்த ஒரு நபரையும் இழக்காமல் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையே அன்னைக்கு இருந்தது. அன்றை சிந்தனைகளும் கருத்துக்களும் இந்தச் சூழ்நிலைக்குத் தக்கபடி இருந்தது. அவர்களின் கூட்டு வாழ்க்கைச் சிந்தனையை, அவர்வர்களின் இந்தச் சூழ்நிலையே ஏற்படுத்திக் கொடுத்தது.

மிகமிகச் சிறிய கூட்டமாகத் தொடக்கத்தில் இருந்தால், பிற இன மக்களோடு சண்டை ஏற்படும் போது, தோல்வி அடைந்த பிற பழங்குடி மக்களை, தம் இனத்தோடு சேர்த்துக் கொள்ளாமல், அவர்களைக் கொலை செய்துவிடுவார்கள். இருக்கிற உணவு பற்றாக் குறையினால் போர் கைதிகளைப் பராமறிக்க முடியவில்லை. அதனால பிடிபட்டவர்களை அன்றைக்குக் கொலை செய்துவிடுவார்கள். இது தொடக்கல கால நிலைமை.

இனக் குழு பெருகிய போது, தோல்வி அடைந்த இன மக்களை, முன்பு போலக் கொலை செய்யாமல், அவர்களை அடிமையாக வைத்துக் கொண்டார்கள்.

இந்தப் பழங்குடிகளிடம் மதம் தோன்றவில்லை என்று கூறினோம். ஆனா அந்த மக்களிடம் ஒண்ணு இருந்தது. அதை ஆங்கிலத்தில் Magic என்று கூறுவார்கள். இதைத் தமிழில் மாயவித்தை என்று சொல்லாம். தங்களுக்கு உணவாக எதுவும் கிடையாக்காத போது, அந்த நிலைமைகளைச் சமாளிப்பதற்கு உருவானதே இந்த மாயவித்தை.

இயற்கையைச் செயற்பட வைக்க உதவக்கூடிய ஒரு பொய்த்தோற்ற உத்தியே மாயவித்தை. பொய்த் தோற்றம் என்று கூறுவதால் இது ஒரு மதப் போக்காகப் பார்க்கக்கூடாது. இது ஒரு மன கிளர்ச்சிக்காக அந்த மக்கள் செய்தனர். இதை எப்படிச் செய்தனர் என்பதைப் பார்ப்போம்.

மழை பெய்யாத காலங்களில், அதனால் ஏற்பட்ட அசாதரணச் சூழ்நிலையில், அவர்கள் கூட்டாக மழை வேண்டி நடனம் ஆடுவார்கள். மழை பெய்தது போலவும், அதன் விளைவாகக் கிழங்குகள் நிறையக் கிடைத்த போலவும் நடிப்பார்கள். இந்த நடிப்பு ஒரு வகையில் மனக் கிளர்ச்சி ஏற்பட்டு, அந்த அசாதாரணச் சூழ்நிலையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார்கள்.

இது தொடக்கலாம்.

அதற்கு அடுத்த, சமூக வளர்ச்சி கட்டத்தில் "மழையே வா" என்று கட்டளை இட்டார்கள். இது அவங்களோட இயலாமையை வெளிப்படுத்தினாலும், எந்த இயற்கைக்கு மீறிய சக்தியிடமும் வழிபடவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால் தான் இதை மதம் என்று சொல்வதில்லை.

இந்தப் பழங்குடி சமூகத்தில் மதம் தோன்றவில்லை என்பதைத் தெரிந்து கொண்டோம். அப்படி என்றால் எந்தச் சமூகத்தில் மதம் தோன்றியது.

இந்தப் பழங்குடி சமூகத்தின் ஆதித வளார்ச்சிக் கட்டத்தில் மதம் தோன்றியது.

அந்த நேரத்தில் உற்பத்திக் கருவிகள் சற்று மேம்பாட்டு இருந்தது, அதனுடன் உழைப்புப் பிரிவினை ஏற்பட்டுவிட்டது. இந்த உழைப்புப் பிரிவினை தான் அன்றைய வளர்ச்சிக்கு முக்கியமானது.

குறிப்பிட்ட சிலர் வேட்டையாடுவதும், மற்ற சிலர் ஆடு, மாடுகளை மேய்ப்பதுமான வேலைப் பிரிவினை முதலில் தோன்றியது. இந்த வேலைப்பிரிவினையினால் உணவு உற்பத்தியில் சற்று உபரி ஏற்பட்டது. இந்த உபரி அன்றைய சமூகத்தின் தேவையை முழுமையாக நிறைவேற்றிவிட வில்லை என்றாலும், பழைய நிலைமையை ஒப்பிடும்போது சற்று உபரியாகக் காணப்பட்டது.

இந்த உபரியை பயன்படுத்திக் கொள்வதில் புதிய மாற்றம் ஏற்பட்டது. முன்பு கூட்டாக உழைத்தனர், கிடைப்பதை சமமாகப் பங்கிட்டனர். இப்போது வேலைப்பிரிவினைக்கு ஏற்ப பங்கீடு மாறியது. சமமான பங்கீடு என்ற முறை கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.

கூட்டாகச் செய்த மாயவித்தை இப்போது ஒருசிலரால் மட்டுமே செய்யப்பட்டது. அதில் தனிச்சிறப்பும் தேர்ச்சியும் வளர்ந்தது. பழங்குடிகளுக்கு இடையே இணைப்பு ஏற்பட்டது, இந்த இணைப்பு போர்களாலும், வேறு சில காரணங்களாலும் ஏற்பட்டது. அவ்வாறு ஏற்படும் போது அவர்கள் செய்து வந்த தொழிலையே அவர்கள் தொடர்ந்து செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டது. இந்த உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் தான் சாதி தோன்றியது. சாதி தோன்றியதற்குப் பல காரணங்களில் இதுவும் ஒன்று.

வேலைப் பிரிவினையின் வளர்ச்சியினால், உடல் உழைப்பை செலுத்துபவர்களுக்கும் அதனை நிர்வகிப்பவர்களுக்கும் இடையே வேறுபாடு தோன்றத் தொடங்கியது. இந்த உடல் உழைப்பு இல்லாதவர்கள் உபரியை கையக்கப்படுத்தினர். இந்தக் கையப்படுத்துவதற்கு நியாயம் கற்பிக்கவே மதம் தோன்றியது. உடலால் உழைப்பவர்களை இழிவாகப் பார்க்கும் போக்குத் தொடங்கியது. மூளை உழைப்பு உயர்ந்ததாகக் கருதப்பட்டது.

உழைப்பை செலுத்துவர்களுக்கும் உழைப்பை வாங்குபவர்களுக்கும் இடையே உள்ள கோபதாபங்களை மூடிமறைக்கவே மதம் தோன்றியது. மதமும் அரசும் ஒரே காரணத்தின் அடிப்படையில் தான் தோன்றியது

10) வர்க்கம் தோன்றிய போது மதம் தேவைப்பட்டது

மதத்தில் சுரண்டும் வர்க்கத்தின் நலன்கள் பிரதிபிக்கிறது. மதமும், அரசும் அனைவருக்கும் பொதுவானது என்று கூறப்பட்டது. ஆனால் அதன் வர்க்கத் தன்மையை மார்க்சியமே வெளிப்படுத்தியது.

சமூகத்தில் சிலர் பணக்காரர்களாகவும், பலர் ஏழைகளாகவும் இருப்பதற்குக் காரணத்தைக் கூறுவதில் மதத்தின் வர்க்க சார்பு அடங்கி இருக்கிறது. பணக்காரர்கள் இன்று பணக்காரர்களாக இருப்பதற்குக் காரணம், போன ஜென்மத்தல் அவர்கள் செய்த புன்னியக் காரியமே, என்று மதம் கூறுகிறது. உழைப்பாளிகள் நாள் முழுதும் உழைத்தும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்காததற்கு, போன ஜென்மத்தில் இவர்கள் செய்த பாவ காரியம் என்று மதம் கூறுகிறது.

அத்தோடு நிற்கவில்லை. அடுத்த ஜென்மத்தில் நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமானால் இந்த ஜென்மத்தில், பலனை எதிர் பார்க்காமல் உழைக்க வேண்டும். இருப்பதைக் கொண்டு தியாக உணர்வோடு, இந்த ஜென்மத்தில் வாழ்ந்தால், அடுத்த ஜென்மத்தில் நலமாக வாழலாம். இது ஒரு சாதாரணக் கருத்தாகத் தெரியலாம், ஆனால் இதில் தான் மதத்தின் வர்க்கத் தன்மை அடங்கி இருக்கிறது.

11) மதத் தோற்றத்திற்கு இரண்டு காரணங்கள்

மதத்தின் தோற்றத்துக்கு மார்க்சியம் இரண்டு காரணத்தைக் கூறுகிறது. ஒன்று கல்லாமை மற்றொன்று இல்லாமை.

கல்லாமை என்பது இயற்கைப் பற்றிய அச்ச உணர்வால் ஏற்பட்டது.

இல்லாமை என்பது சமூகத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுக்குக் காரணத்தை அறியாமலும், பொருளாதாரப் போக்கைப் புரிந்து கொள்ளாமையினால் உருவான அச்ச உணர்வினால் தோன்றியது.

இயற்கைப் பற்றிய அறியாமையினால் உருவான அச்சமும், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் பற்றிய அறியாமையினால் ஏற்படுகிற அச்ச உணர்வும் மதம் தோன்றுவதற்குக் காரணமாகிறது.

மதத்தை வெறும் மூட நம்பிக்கையாக, மார்க்சியம் பார்க்கவில்லை. மதம் தோன்றுவதற்கான புறநிலைக் காரணம் இருக்கிறது. அந்தப் புறநிலை இருக்கும் வரை மதமும் அதே போல அரசும் இருக்கும். புறநிலை மறையும் போது மதமும் அரசும் மறைந்து போகும். மதம் தோன்றுவதற்கான முக்கியமான புறநிலைமைகளே அரசு தோன்றுவதற்குக் காரணமாகிறது.

12) கல்லாமை மறைந்துவிட்டது

மதம் தோன்றுவதற்கான இரண்டு காரணங்களில் ஒன்று, இன்றைய நிலையில் மறைந்து விட்டது என்று சொல்லலாம், இயற்கைப் பற்றிய புரிதல் இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக வளர்ந்து இருக்கிறது. படிப்பறிவு குறைந்த, அல்லது விஞ்ஞானப் படிப்பு அறிவு இல்லாதவர்களிடமே இந்தக் காரணங்கள் இன்றும் நீடிக்கிறது. அதனால் இயற்கைப் பற்றிய அறியாமை இன்றைய நிலையில் நீங்கிவிட்டதாகக் கூறலாம்.

ஆனால் பொருளாதார ஏற்றத் தாழ்வினால் ஏற்படுகிற அச்சவுணர்வு இன்னும் நீடிக்கிறது. சமூகத்தில் படிப்பறிவு பெற்றவர்களிடையிலும் இன்று மத உணர்வு இருப்பதற்குக் காரணம் இதுவே ஆகும். விஞ்ஞானிகளிடமும் கூட மத உணர்வு இருக்கிறது.

2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருதார நெருக்கடிகள் தோன்றியதற்குக் காரணத்தை அறிந்து கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளுக்கு மேல் வளர்ச்சி அடைந்த வங்கிகள் சில நாட்களுக்குள் சரிந்து வீழ்ந்தன. இதற்கான காரணத்தை அறியாமல் இருந்தவர்களுக்கு, இதனால் ஏற்படுகிற அச்ச உணர்வு, அவர்களை இயற்கை மீறிய சக்தியிடம் தஞ்சம்புக வைக்கிறது.

13) மதத்தின் மறைவு

மதத்தின் மறைவு என்பது வர்க்க சமூகத்தின் மறைவோடு இணைந்துள்ளது. அப்போது அரசும் உலர்ந்துவிடும், மதமும் தேவையற்றுப் போய்விடும். அந்த வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் ஏற்றத்தாழ்வுக்கு இடமே இருக்காது. வர்க்கங்கள் முழுமையாக ஒழிந்து போய்யிருக்கும். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மறைந்து போய்யிருக்கும்.

பொருளாதாரக் காரணங்களால் மக்களிடையே வேறுபாடு இல்லாத அந்தக் காலத்தில் மதம் தேவைப்படப் போவதில்லை. வர்க்க வேறுபாடு இல்லாத அந்தச் சமூகத்தில். வர்க்க ஒடுக்கு முறைக்குக் காரணமான மதம், அரசு ஆகியவை தேவை இல்லாமல் மறைந்து போகிறது. இந்த நிலைமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலாளித்துவச் சமூகத்தைக் கடந்து, கம்யூனிச சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகிய இரண்டையும் படித்தறிய வேண்டும்.

இங்கே சுருக்கமாக அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மேல் விளங்கங்களுக்கு மார்க்சிய தத்துவத்தைப் படித்தறிய வேண்டும். கண்டிப்பாக அரசியல் பொருளாதாரத்தையும் இத்துடன் இணைந்து கற்க வேண்டும்.

இன்று அறிமுகமாகப் பெற்றது, மார்க்சிய தத்துவம், மார்க்சிய பொருளாதாரம் பற்றிய புரிதல் கிடைக்கும் போது, இந்த அறிமுகத்தைக் கடந்து தெளிவைப் பெறலாம்.


Friday 14 August 2020

துக்ளக் குருமூர்த்தியின் கருத்துக்கு எதர்வினை

 

-த.ந.தனராமன் - புதுச்சேரி

 

"பொருளாதார, தத்துவ குறிப்பேடு 1844" புத்தகத்தில் பெண்கள் பொது வேசியாக்கப்படவேண்டும், பொது உடைமையாக்கப்படவேண்டும் என்று மார்க்ஸ் கூறியுள்ளதாக 5.9.2020 துக்ளக் இதழில் அதன் ஆசிரியர் திரு. குருமூர்த்தி, மார்க்ஸை விவாதப் பொருளாக்கியுள்ளார்.

இது கம்யூனிசத்துக்கு எதிரான பரப்புரை. கம்யூனிஸ்டுகள் மீது பொழியும் அவதூறு. இன்றைக்கு 2020-ம் ஆண்டில் 1844-ம் ஆண்டு எழுதியதாக குறிப்பிடப்படுவதற்கு பதில் சொல்ல வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த திரு. குருமூர்த்திக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். பொதுவுடைமை பற்றி குறிப்பாக திருமண முறை, குடும்பம், பொதுவுடைமை மற்றும் பெண்கள் பொதுவுடைமை (பொது வேசி) பற்றி புரிய வைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த அக்கப்போர் புகார் கூறுபவர்கள் அவர் காலத்தில் இருந்தனர். அவர்களைப் UPALITETU "uninformed reviewer who tries to hide his complete ignoratice and intellectual poverty" அதாவது, விவரம் அறியாததையும், அறிவு வறுமையையும் மறைக்கவே இவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்று குருமூர்த்தி போன்று அவர் காலத்தில் புருனோபாவர் என்பவர் கூறியதற்கு பதிலாக இவ்வாறு மார்க்கம் கூறியுள்ளார். (பார்க்க = "1844-பொருளாதார, தத்துவ குறிப்பேடு” நூல் பக் 18 1974 பதிப்பு)

மார்க்சைப் பற்றியும் விஞ்ஞான கம்யூனிசத்தைப் பற்றியும் "இந்துத்வா”வின் சித்தாந்த குருக்களில் ஒருவரான குருமூர்த்திக்கு எந்தளவுக்கு அறிவு வறுமை உள்ளது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்துத்துவா என்பது மத அரசியல். கம்யூனிசம் என்பது விஞ்ஞானம். மத கண்ணாடி கொண்டு விஞ்ஞானத்தை பார்க்கக் கூடாது. விஞ்ஞானம் முன்னோக்கி பார்க்கக்கூடியது. மதம் பின்னோக்கி பார்க்கக்கூடியது.   

பெண்களை பற்றிய மார்க்சிய பொருளாதார அம்சம்:

ஒவ்வொரு உற்பத்தி முறையும் ஒரு சமூக வடிவத்தை உருவாக்குகிறது. சமூக உற்பத்தி முறை அடிப்படை. திருமண முறை சமூக மேல் கட்டுமானம். ஒவ்வொரு திருமண முறையும் ஒவ்வொரு சமூக வடிவத்துக்கு உகந்ததாக அதற்கான சட்டத்திட்டங்களுடன் அமைத்து கொள்ளப்படுகின்றன.

எடுத்த எடுப்பிலேயே ஒரு தார மண குடும்ப முறை ஏற்பட்டுவிடவில்லை, இரத்த உறவுக் குடும்பம், புனலுவா குடும்பம், இணை குடும்பம் என்கிற முறைக்குப் பிறகு தான் ஏற்படுகிறது. ஒரு தார குடும்ப முறை சொத்துடையினால் நிலைநிறுத்தப்படுகிறது.

மாடு மேய்த்தல், பயிரிடுதல் என்று வேலைப்பிரிவினை சொத்து உறவை உருவாக்குகிறது. சொத்து உறவுதான் ஒருதார குடும்பம், அரசு ஆகியவற்றின் மூலாதாரம். சொத்து என்ற உறவு ஏற்பட்ட உடன் ஆண், பெண்களை அடிமைப்படுத்துவது ஆரம்பமாகியது. ஏனெனில் தன் உழைப்பால் விளைந்த சொத்தை தன் வாரிசுக்கு சேரவேண்டும் என்ற ஆணாதிக்கத்தால் குடும்பத்திற்குள் பெண்கள் அடிமையானார்கள். சொத்து உறவு பலதார மணமுறையிலிருந்து (இரத்த உறவுக் குடும்பம், புனலுவா குடும்பம், இணை குடும்பம்) ஒருதார மணமுறைக்கு மாறியதில் பெரும்பங்கு வகித்தது.

நிலவுடைமை சமுதாயத்தில் ஒருதார மணமுறையும், தேவதாசி எனும் பெண் பொதுவுடைமையும் அக்கம் பக்கமாகவே இருந்து வந்தது. 20-ம் நூற்றாண்டில்தான் தேவதாசி முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். 

நிலவுடைமை சமுதாயத்திலிருந்து தொழில் உற்பத்தி முறை, முதலாளித்துவ சமுதாயம் தோன்றும் பொழுது, உலகம் முழுவதும் தொழில், முதலாளித்துவமயமாகிறது. கூடவே, நவீன ஆலைத்தொழிலாளி வர்க்கமும் உருவாகிறது. தனிச்சொத்து வடிவம் நிலத்திலிருந்து ஆலை வடிவத்தில், தொழில் மூலதனமாக மாறுகிறது. பெண்களை உற்பத்தி கருவிகளாக, மனித பண்டங்களாக மூலதனம் பார்க்கிறது. ஆகவே விபசாரத்தை தொழிலாக அங்கீகரித்து வைசன்சு கொடுத்து லாபம் பார்க்கிறது.

தனியார் உடைமை என்பது உலக வர்த்தகத்தினால் யுனிவர்சல் தனியார் உடைமையாக மாறிவிட்டது. உற்பத்தி சமூகமயமாகிவிட்டது. உற்பத்தியின் லாபம் தனியார் மயமாகவே உள்ளது. தனியார் சுவிகரிப்பை உலகமுழுவதும் சமூகமயமாக்கிவிட்ட தொழிலாளர்கள், தொழில் மூலதனத்தை சமூகமயமாக்க பொதுவுடைமையாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். முதலாளி வர்க்கத்திற்கு, அதனை ஆதரிக்கும் சிந்தனையாளர்களுக்கு உற்பத்தி சாதனங்களை பொதுவுடைமை ஆக்கக்கூடாது, எல்லாம் தனியார்மயமாக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு பொதுவுடைமை கோரிக்கையை எதிர்க்கவும். தனியார் மயத்தை ஆதரிக்கவும் ஒரு சித்தாந்தம் தேவைப்படுகிறது. அதுவே இந்தியாவில் இந்துத்துவ சித்தாந்தம்.

பொதுமக்கள் அபிப்ராயத்தை திசை திருப்ப இக்கால கட்டத்தில் பெண்களை பொதுவுடைமையாக்க, பொது வேசியாக்கப்பட வேண்டும் என்று "பொருளாதார, தத்துவ குறிப்பேடு 1844"  நூலில் மார்க்ஸ் எழுதியுள்ளார் என்று குருமூர்த்தி 5.8.20 துக்ளக் இதழில் எழுதுகிறார். திரு. குருமூர்த்தி குறிப்பிடும் நூலின் பகுதி "தனியார் சொத்தும் கம்யூனிசமும் என்ற தலைப்பில் பக்கம் 87-90 வரை உள்ள பக்கத்தில் (1974 மாஸ்கோ பதிப்பு) மார்க்க கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


"Finally, Communism is the positive expression of annulled private property at first as Universal Private property. By embracing this relation as a whole, communism is:


1. In its first form only a generalization and consummation (of this relation). ............ Finally, this movement of opposing universal private property to private property finds expression in the beastly form of opposing to marriage (certainly a form of exclusive private property) the Community of Women, in which a woman becomes a piece of Communal and Common Property. It may be said that this idea of the Community of Women gives away the secret of this as yet completely crude and thoughtless communism.

திருமணம் என்பது தனியார் சொத்து வடிவத்தில் ஒன்று. தனியார் சொத்து universal தனியார் சொத்தாக மாறும் பொழுது பெண்களும் universal தனியார் சொத்தாக மாறுதலடைவதாக கொச்சை கம்யூனிசம், சிந்தனையற்ற கம்யூனிசம் (Crude & Thoughtless Communism) கருதுகிறது என்பதே இதன் சுருக்கமான பொருள். சீதனம், வரதட்சணை, திருமண கௌரவம், சொத்தில் பெண்களுக்கு உரிமை மறுப்பு, பாகப்பிரிவினையில் பாதகம் ஆகிய இவை எல்லாம் திருமண உறவுக்குள் அடங்கியுள்ள சொத்து உறவுகளாகும்.

கொச்சை கம்யூனிசத்திலிருந்து தான் கற்பனா சோசலிசம், விஞ்ஞான கம்யூனிசம் என்ற கட்டங்களாக கம்யூனிச கருத்து வளர்ச்சி அடைகிறது என்ற கருத்தில் Universal private property passes private prostitution to a state of uriversal prostitution with the community என்று கூறுகிறார். குடும்பம், திருமணம் ஆகியவை எல்லாம் புனிதமானவை, தனியார் சொத்து புனிதமானது என்பதெல்லாம் முதலாளி வர்க்க சிந்தனை.

"முதலாளித்துவ குடும்பத்தின் உடன் நிகழ்வு மறைந்து போகும் போது கூடவே முதலாளித்துவக் குடும்பமும் இயல்பாகவே மறைந்து விடும். மூலதனம் மறையும் போது இரண்டும் (முதலாளித்துவ உடன் நிகழ்வு திருமண முறை, முதலாளித்துவ குடும்பம்) மறைந்துவிடும் என்று உலகத்திற்கு 1848-ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பத்தி 102-ல் ஏற்கனவே அறிவித்துள்ளது. “அறிக்கையில்" பத்தி 105 விருந்து 112 வரை மார்க்ஸ், திருவாளர் குருமூர்த்திக்கு பதில் கூறியுள்ளார். பார்க்க : பக்கம் 50, 51 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, தேவ. பேரின்பன் மொழி பெயர்ப்பு, 2008 பதிப்பு. அப்பக்கங்களை அவர் மீண்டும் ஒருமுறை படித்து அறிவது அவசியம். அவருக்கு பதில் சொல்ல எல்லா கம்யூனிஸ்ட்களும், ஜனநாயகவாதிகளும் மீண்டும் "அறிக்கையை” அறிந்து கொள்வது அவசியம். திருமண முறையை பொருளாதார அம்சமாக பார்க்கும் மார்க்சின் பார்வை இதுதான்.

பெண்களை பற்றிய மார்க்ஸிய தத்துவார்த்த அம்சம் :

இந்தியாவில் மதவடிவத்தில் தேவதாசி முறை இருந்து வந்தது போல் 19-ஆம் நூற்றாண்டு முதல் பாதிவரை பிரெஞ்சு ரகசிய சங்க உறுப்பினர்கள் மத்தியில் மத வடிவத்தில் பொது மகளிர் பற்றிய கருத்துகள் நிலவி வந்தன. 19 ஆம் நூற்றாண்டின் பின்பாதியில் பெண்களை பொதுவாக அனுபவிப்பதே கம்யூனிசம் என்று எந்த கம்யூனிஸ்டும் கருதவில்லை. அவ்வாறான கருத்துக்களை சிந்தனையற்ற, கொச்சை கம்யூனிசம் (Thoughtless, Crude Communism) என்று “1844 குறிப்பேட்டில்” மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

ஏங்கெல்ஸ் “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்" எனும் கேள்வி-பதில் வடிவ நூலில் 21-வது கேள்வி-பதிலில் கம்யூனிச சமுதாயத்தில் குடும்பத்தின் மீது கம்யூனிசத்தின் செல்வாக்கு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு கீழ்க்கண்டவாறு பதில் அளிக்கிறார்:-


"இருபாலினருக்கான உறவு இரு நபர்களின் தனிப்பட்ட சொந்த விடயமாக கம்யூனிச சமுதாயத்தில் இருக்கும். கம்யூனிச சமுதாயம் அவர்களுடைய தனிப்பட்ட உறவில் தலையிடாது. நடப்பிலுள்ள திருமணம் இரண்டு அடிப்படைகளின் மேல் கட்டப்பட்டுள்ளது. ஒன்று தனிச்சொத்துரிமை, இன்னொன்று குழந்தை வளர்ப்பு. இந்த இரண்டும் சமுதாயமயமாகிவிட்டால், அரசு பொறுப்பாக ஆகிவிட்டால் இன்றைய முதலாளித்துவ திருமணத்தின் அடிப்படை தகர்ந்துவிடுகிறது. இதனால் மனைவி கணவனையும், குழந்தைகள் பெற்றோர்களையும் நம்பி இருப்பது இல்லாமல் போகிறது. கம்யூனிசத்தில் பெண்கள் பொதுவாக்கப்படுவார்கள் என்று ஒழுக்கம் பேசும் குறுமதியாளர்களுக்கான விடை இதிலே அடங்கியுள்ளது தெளிவாகும். பொது பெண்டிர் முறை (தேவதாசி, விபசாரம்) முதலாளி வர்க்க சமுதாயத்தில் நடைமுறையில் உள்ள உண்மையாகும். தனியார் சொத்தின் வேரிலிருந்து முளைப்பதுதான் பொது பெண்டிர்முறை. தனியார் சொத்து பொதுச்சொத்தாக மாற்றப்படும் பொழுது பொது பெண்டிர் தனி பெண்டிராக விடுதலை பெறுகின்றனர். முதலாளித்துவ திருமணம், குழந்தை வளர்ப்பு என்பவை முதலாளித்துவ வடிவத்திலிருந்து பொது சமூகமயமாக்கப்பட்டு பொது பெண்டிர் முறை ஒழிக்கப்படுகிறது.”

இதேபோல் மார்க்கம் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

"மனிதனுக்கு மனிதன் கொண்டுள்ள, நேரடியான, இயற்கையான, தேவையான உறவுதான் ஆண் பெண்ணோடு கொண்டுள்ள உறவு இது இயற்கையான மனித ஜீவராசி உறவு (Species-being fatural relationship). இந்த உறவு இயற்கையானது, இயற்கை மனிதன் மூலம் வெளிப்படுகிறது. மனிதன் இயற்கையை வெளிப்படுத்துகிறான். மனித சாராம்சம் இயற்கை மூலமாகவும், இயற்கையின் சாராம்சம் மனிதன் மூலமாகவும் காணமுடிகிறது. இதற்கு மாறாக ஆண், பெண்ணை போகப் பொருளாக, போரில் கைப்பற்றப்பட்ட, கொள்ளை அடிக்கப்பட்ட பொருள்களில் ஒன்றாக, தனக்கு அடிமையாக, வேலைக்காரியாக கருதுவது, ஆண் தன்னைத்தானே கீழ்மைப்படுத்திக் கொள்வதாகும். ஆண் பெண்ணை எப்படி நடத்துகிறானோ அந்தளவிற்கு அவன் தரம் வெளிப்படுகிறது. தன்னை ஒரு ஜீவராசியாக கருதினால் பெண்ணையும் தன்னைப்போல் ஒரு ஜீவராசியாக கருத வேண்டும். அப்பொழுது தான் அது இயற்கையான உறவாகவும், நடத்தையாகவும் இருக்கமுடியும். இயற்கையான நடத்தையாக அவன் நடத்தை இருக்கும் பொழுதுதான் அவன் மனித ஜீவியாக இருக்கமுடியும். இதை ஆண் உணரும் பொழுது மனித சாராம்சத்தை, மனித மதிப்பை, இயற்கை சாராம்சத்தை, இயற்கை மதிப்பை, தன்னைத்தானே உணர்ந்தவன் ஆகிறான். மனித ஜீவி என்ற நிலையிலிருந்து இயற்கை மனிதனாகிறான். இயற்கை மனிதன் முழு மனிதனாகிறான். ஆணுக்கு பெண் தேவை என்று உணரும் போது ஒருவரின்றி ஒருவர் வாழ முடியாது என்றும் ஒருவருக்கு ஒருவர் தேவை என்பதும் சமூக தேவையாகிறது. இந்த சமூக தேவையை உணரும்போதுதான் தான் தனிநபர் அல்ல, தனியாக வாழமுடியாது, தான் ஒரு சமூக ஜீவி என்று உணர்கின்றான். அவ்வாறு உணர ஆரம்பிக்கும் போதுதான் தனிச்சொத்து (Private Property) சமூக ஜீவிக்களுக்கான (Universal Public Property) ஆக மாற்றப்படவேண்டும் என்ற சிந்தனை உருவாகுகிறது. இவ்வாறான சிந்தனையின் தொடக்கத்தில் பெண்களை உடைமையாக கருதிய 14-ஆம் நூற்றாண்டின் முற்பாதி வரை பொது பெண்டிர் என்ற கருத்து ஆரம்ப கால சிந்தனையற்ற, கொச்சை கம்யூனிசமாக அரும்பியது என்று "பொருளாதார தத்துவ குறிப்பேடுகள் 1844" (பக்கம் 89, 1974 பதிப்பு) நூலில் மார்க்ஸ் கூறுகிறார்.

இக்கருத்தை வளர்ச்சி அடைந்த விஞ்ஞான கம்யூனிச கருத்தை உருவாக்கிய மார்க்ஸ் தன் கம்யூனிச கருத்தாக கூறினார் என்று கூறுவதை அறிவு மோசடி (Intellectual Fraud) என்று கூறலாம்.

சொத்தையும், செல்வத்தையும் பெறுவதற்காக ஒரு ஆண் முதலாளியின் ஆலையில் கூலி உழைப்பைச் செய்வதும் விபச்சாரம் தான். சொத்து, செவ்வம், குழந்தைகள் ஆகிய இல்லாதிருப்பதன் காரணமாக, மனைவி கணவனுடன் கொள்ளும் உறவும் அவள் தன்னைத்தானே கணவனுடன் விபசாரத்தில் ஈடுபடுத்திக் கொள்வதுதான். ஆனால் ஒட்டுமொத்த சமுதாயத்தால் குழந்தைகள் பராமரிக்கப்படும் நிலையும் சமுதாய உறுப்பினர்களிடையே சமத்துவமும் ஏற்படுகையில், பெண்களைப் பொதுவாக அனுபவித்தல், ரகசியமாக அனுபவித்தல் (விபசாரம், சோரம், பொதுப்பெண்டிர், தேவதாசி முறை) சமுதாயத்தால் ஒழித்துக் கட்டப்படும்.

"மார்க்சின் குறிப்பேடுகள்" , "ஏங்கெல்சின் கோட்பாடுகள்", "புனிதகுடும்பம்", "ஜெர்மன் தத்துவம்", "தத்துவத்தின் வறுமை", "அறிக்கை", "டூரிங்குக்கு மறுப்பு”, "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" ஆகிய படைப்புகளில் குடும்பம், திருமணம் பற்றி மார்க்சிய ஆசான்கள் கூறிய கருத்துகளைச் சுருக்கமாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (2014 பதிப்பு, பக்கம் 273) தமிழாக்கத்தில் ஆசிரியர் எஸ்.வி. இராஜதுரை பின்வருமாறு அருமையாக வகைப்படுத்தியுள்ளார்.


1. தமது காலத்திய முதலாளித்துவ திருமணத்தில் இருந்த மாய்மாலத்தையும் மனிதத்தன்மையற்ற நிலையையும் எடுத்துக்காட்டுவது:

 

2. இந்த முதலாளித்துவ குடும்ப வடிவம் என்பது மானுட குல வரலாற்றில் என்றென்றும் நிலவி வந்த, மாற்றமே இல்லாத குடும்ப வடிவம் என்பதை மறுத்து, பல்வேறு வகைக் குடும்ப வகைகள் உற்பத்திமுறைக்கேற்ற திருமண முறை குடும்ப அமைப்பு முறை - (உதாரணம், இன்றைய நிதி மூலதன அமைப்பு முறைக்கேற்ற Compationship எனும் சேர்ந்து வாழும் திருமணமல்லாத குடும்ப அமைப்பு முறை) இருந்து வந்தது, இருந்து வரும் என்பதை தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுவது:


3. கம்யூனிச சமுதாயத்தில் ஆண்-பெண் உறவு சொத்தை அடிப்படையாக கொள்ளாமல் வேறு எத்தகையாக இருக்கும் என்பது பற்றிய சில கருத்துக்களைக் கூறுவதும் குடும்பம் என்பது சேர்ந்து வாழ்தல் என்பது போல் ஏதேனும் அச்சமுதாயத்தில் இருக்குமானால், அது முதலாளிகளால் விமர்சிக்கப்படும் முதலாளித்துவ உறவின் (தனிச்சொத்துடைமை உறவின்) சாயலைக் கடுகளவு கூடக் கொண்டிராது, மனிதநேய உறவுகள் அடிப்படையில் ஆண் பெண் உறவுகள் அமைந்திருக்கும் என்பதைச் சொல்வது என வகைப்படுத்தலாம்.

திருமணத்திற்கு முன்னால் பெண் தந்தைக்கு அடிமை, திருமணத்திற்கு பின்னால் பெண் கணவனுக்கு அடிமை, கணவனுக்கு பின்னால் ஆண் பிள்ளைக்கு பொன் அடிமை எனும் சனாதன திருமண, குடும்ப உறவுமுறையை இந்துத்துவா தூக்கி பிடிக்கிறது. சனாதன இந்துத்வா குடும்ப அமைப்பிலிருந்து பொது, தனி வேசி அமைப்பு ஒழிக்கப்பட முடியாது. ஒழியாது. சனாதன திருமண குடும்ப முறைக்கு எதிரானதாக கம்யூனிச திருமண, குடும்ப முறை அமையும். இதுவே எதிர்காலம். பொதுவுடைமை வந்தால் பொதுப்பெண்டிர் முறை தனிச்சொத்து உரிமையோடு ஒழிக்கப்படும் புதிய புரட்சிகரமான, சமத்துவமான ஆண்-பெண் உறவுமுறை சொத்து அடிப்படையில் இல்லாமல் உண்மையான அன்பு அடிப்படையில் திருமண முறையும் குடும்பமும் அமையும் என்பது சூரியனைப்போல் நிச்சயம்.

சுருக்கமாக, இன்றைய திருமண முறை, குடும்ப முறை, வேசி முறை, சோரம் முறை, தனிச்சொத்து சம்பந்தப்பட்டது. சொத்து வடிவம் மாறும் பொழுது இந்த முறைகள் குடும்ப திருமண முறையும், குழந்தை வளர்ப்பு முறையும் உடன் நிகழ்வாக மாறிவரும். Universal private property - uriversal public property-ஆக மாறும் பொழுது தனிசோரமும் பொதுவிபசாரமும் சொத்து அடித்தளத்தை இழந்துவிடும். பொது விபசாரத்தின் மூலத்தையும் முடிவையும் "1844 குறிப்பேட்டில்" மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார் என்பதுதான் உண்மை.