Friday 17 May 2013

மார்க்சியத்தின் தோற்றம்



முரண்பட்ட சமூகத்தை மாற்றுவதற்கு மார்க்ஸ் எந்தவித குறுங்குழுவாத கோட்பாட்டையும் உறுவாக்கிக்கொள்ளவில்லை.  மனித சமூகத்திலுள்ள முன்னணி சிந்தனையாளர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அவர் விடை அளித்தார். அந்த  விடையும் உலக சிந்தனையாளர்களிட்ம் இருந்து விலகி தனித்த போக்கில் படைத்திடவில்லை, அந்த சிந்தனையாளர்களின் நாகரீக வளர்ச்சியின் வழியிலேயே வந்தடைந்தார்.

மார்க்சும் அவரது உற்ற தோழருமான எங்கெல்சும் நமக்கு அளித்த அடிப்படை கருத்துக்களே மார்க்சியம் ஆகும். அந்த மார்க்சியம் என்னும் கோட்பாட்டை சுமார் பத்துவரிகளுக்குள் நமக்கு லெனின் தொகுத்தளித்திருக்கிறார்.

மார்க்சியம், தற்காலச் சமுதாயத்தின்  மிகவும் முனனேறிய வர்க்கத்துககு அறிவொளி ஊட்டி அதை ஒழுங்குமைக்க நேரடியாய் உதவுவதும், இந்த வர்க்கத்தின் முன்னுள்ள கடமைகளைச் சுட்டிக்காட்டுவதும், தற்போதுள்ள அமைப்பு, பொருளாதார வளர்ச்சி காரணமாய், தவிர்க்க முடியாதபடி வீழ்த்தப்பட்டு அதனிடத்தில் ஒரு புதிய அமைப்பு தோன்றுமென்பதை நிரூபிக்கிறது என்று லெனின் மிகச்சுருக்கமாக கூயிருக்கிறார்.

இதனை விரித்து புரிந்து கொண்டால் மார்க்சியத்தின் உட்பிரிவுகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் என்ற துறைகளின் முதன்மைத்துவமும், அதன் உட்பிணைப்பையும் அறிந்து கொள்ளலாம்.

லெனின் கூறிவற்றில் தற்காலச் சமுதாயத்தின்  மிகவும் முனனேறிய வர்க்கத்துககு அறிவொளி ஊட்டி அதை ஒழுங்குமைக்க நேரடியாய் உதவுவ வேண்டும் என்ற பகுதி விஞ்ஞான கம்யூனிசத்தையும்.

இந்த வர்க்கத்தின் முன்னுள்ள கடமைகளைச் சுட்டிக்காட்டுவதும் என்ற பகுதி அறிவொளி ஊட்ட வேண்டிய பாட்டாளி வர்க்கத்தின் தத்துவக் கண்ணோட்டத்தின் கடமையையும்,

தற்போதுள்ள அமைப்பு, பொருளாதார வளர்ச்சி காரணமாய், தவிர்க்க முடியாதபடி வீழ்த்தப்பட்டு அதனிடத்தில் ஒரு புதிய அமைப்பு தோன்றுமென்பதை நிரூபிக்கிறது என்ற பகுதி தத்துவம், விஞ்ஞான கம்யூனிசம் ஆகியற்றின் தோற்றத்துக்கு அடித்தளமான பொருளாயத பின்புலத்தை அறிவுறுத்தும் அரசியல் பொருளாதாரத்தின் போக்கையும் நமக்கு லெனின் வகுத்து, தொகுத்து, சுருக்கி தந்துள்ளார்.

மார்க்சியத்தின் இந்த மூன்று தோற்றுவாய்களும் அதன் உள்ளடக்கக் கூறுகளையும் புரிந்து கொண்டால் மார்க்சியத்தின் அடிப்படைகளை அறிந்துகொள்ள ஏதுவாய் இருக்கும்.

இந்த மூன்று கோட்பாடுகளும் மூன்று நாடுகளில் தோன்றின. ஜெர்மனியில் செம்மை ஜெர்மன் தத்துவம், இங்கிலாந்தில் அரசியல் பொருளாதாரம், பிரான்சில் பிரெஞ்சு சோஷலிம். இந்த மூன்று கோட்பாடுகளையும் மார்க்ஸ் தொடர்ந்து ஆராய்ந்து அவற்றை முழுநிறைவடையச் சொய்தார்.

Tuesday 14 May 2013

வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் கம்யூனிஸ்ட் இயக்கமும்



     இன்றைய முதலாளித்துவ சமூகம் உழைப்பாளிகளை சுரண்டி வளர்கிறது என்பது கண்கூடான ஒன்றாகும். உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் தனி முதலாளியின் அபகரிப்பு முறைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டின் உச்சமே இன்றைக்கு பாட்டாளிகளுக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையே வர்க்கப் போராட்டமாக காட்சியளிக்கிறது.

    உழைப்பாளிகளைச் சுரண்டி தனது செல்வங்களைப் பெருக்கிக் கொள்ளும் முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உழைப்பாளிகளுக்கென்று தனித்த இயக்கம் தேவைப்படுகிறது. இந்த இயக்கத்தை நடத்திச் செல்லும் கம்யூனிஸ்டுகள் தமக்கென எந்த குறுங்குழுவாத கண்ணோட்டத்தையும் வைத்திருக்கவில்லை. கம்யுனிஸ்டுகள் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர்த்து வேறு நோக்கம் எதனையும் கொண்டவர்கள் இல்லை. முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் சந்திக்க வேண்டிய வளர்ச்சிக் கட்டங்களை அறிந்து அதற்கான போராட்ட உத்திகளை வகுத்து அதனை நடைமுறைப்படுத்துகின்றனர்.

       கம்யூனிஸ்டுகள் தாம் நடத்தும் போராட்ட வழிமுறைகளை, மார்க்ஸ் வகுத்துக் கொடுத்த வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் உடனடி போராட்டத்தையும் இறுதி குறிக்கோளையும் அமைத்துக் கொள்கின்றனர். புரட்சிகரமான கோட்பாடு இல்லையேல் புரட்சிகரமான இயக்கம் இல்லை என்று லெனின் கூறியதற்கு இணங்க, தங்களுக்கான புரட்சிகரமான கோட்பாட்டை பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைத்துக்கொள்கின்றனர்.

        முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளின் முன்னணிப்படையாக கம்யூனிஸ்ட் இயக்கம் செயல்படுகிறது. முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவதற்கும், அதனிடத்தில் தொழிலாளி வர்ககத்தின் ஆட்சியை அமைப்பதற்கும், தொழிலாளிகளை ஒன்றிணைக்கும் சக்தியாக கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் உறுதியோடு செயற்பட மார்க்சியம் உதவிடுகிறது.

       உற்பத்தியின் வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. இந்த உற்பத்திச் சக்தியின் புரட்சிகர மாற்றம் உழைப்புக் கருவிகளின் வளர்ச்சியில் அடங்கியிருக்கிறது. உற்பத்திச் சக்திகள் எத்தகையதோ, அத்தகையதாக உற்பத்தி உறவுகள் அமைகிறது. உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் முன்னதாகவே வளர்ச்சியை எட்டுகிறது. இதன் விளைவாக புதிய உற்பத்திச் சக்திகள் பழைமையாகிவிட்ட உற்பத்தி உறவுகளிடம் முரணை அதிகப்படுத்துகிறது.

பழைய உற்பத்தி முறைக்குள்ளே புதிய உற்பத்தி முறை முதிர்வது மனிதர்களின் உணர்வை சாராமல் நிகழ்கிறது. இந்நிகழ்வு உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியால் ஏற்படுகிறது. சமரசப்படுத்த முடியாத இசைவின்மை வாக்கப் போராட்ட நிகழ்வில் உச்சத்தை அடைகிறது. இந்த சமூகப் பிணக்கு சமூகப் புரட்சியின் மூலமே தீர்க்கப்படுகிறது.

        இந்த சமூக வளர்ச்சியின் புறநிலை விதிகளை அறிந்து, அதனை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றின்  திசைவழியை தெரிந்து, அதனடிப்படையில் தனது செயல்தந்திரத்தை அமைத்து கம்யூனிஸ்ட் இயக்கம் செயற்பட வரலாற்றியல் பொருள்முதல்வாதம் வழிகாட்டுகிறது.

       இயற்கையைப் போன்றே சமூகத்திலும் புறநிலை விதிகளின் அடிப்படையில் வளாச்சி நடந்தேறுவதை மார்க்சியம்  நிறுவுகிறது. ஆனால் முதலாளித்துவ அறிஞர்கள் சமூகம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம்  விதிவாதத்துக்கு ஆட்பட்டதாக விமர்சிக்கின்றனர்.  சமூக வரலாற்று நிகழ்வுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மார்க்சியம் கருதுவதாக விமர்சிக்கினறனர். இதன் அடிப்படையில் முதலாளித்துவ அறிஞர்கள் முதலாளித்துவ சமூகத்தைத் தொடர்ந்து சோஷலிச சமூகம் வரும் என்பதை மறுக்கின்றனர். மேலும் அவர்கள், சூரியன் உதிப்பதற்கு எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் இயற்கைக்கு தேவைப் படாதது போல், சமூகம் புறநிலை  விதிப்படி செயற்படும்  என்றால் சோஷலிச சமூகத்துக்காக கம்யூனிஸ்ட் கட்சி ஏன் போராட வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

       வரலாற்று விதிகள் மக்களது நடவடிக்கையின் வழியே செயற்படுகின்றன என்பதே, இயற்கைக்கும் சமூக விதிக்கும் உள்ள வேறுபாடு என்பதை அறிதிருக்கிறது மார்க்சியம். மக்களே செயல்முனைப்போடு வரலாற்றைப் படைக்கின்றனர். மக்கள் எந்த செயற்பாட்டையும் உணர்வு பூர்வமாகவே தமது குறிக்கோளை அமைத்து, அதன்படியே செயற்படுத்துகின்றனர். இந்த உணர்வுபூர்வமான செயற்பாட்டை தன்னிச்சையாக அவர்கள் அமைத்துக் கொள்வதில்லை, புறநிலை விதிகளின் தாக்கத்தின் விளைவாக உருவாக்கிக் கொள்கின்றனர். இவைகள் வர்க்கங்களின் நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது.

புறநிலை  விதி என்கிற, சமூக வளர்ச்சியின் போக்கை உணர்ந்து அதன் வழியில் செல்வதே அவசியத்தை அறிந்து செயற்படுவதாக கூறுகிறது மார்க்சியம். புறிநிலை அவசியத்தைப் பற்றிய அறிவு மக்களுக்கு வரலாற்றில் செயற்பாட்டு சுதந்திரத்தைக் கொடுக்கிறது. இதனை அறிந்து கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமை தமது செயற்பாட்டை வகுத்துக் கொள்கிறது.

       முற்போக்கு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்றழைக்கின்ற இயக்கம், சில நேரங்களில் சமூகம் வழங்கிய வாய்ப்புகளை தவறவிட்ட நிகழ்வுகள் உண்டு. வரலாற்று அவசியத்தின் அடிப்படையில் சென்று, கம்யூனிஸ்ட் இயக்கம் வெற்றி பெறுவதற்கு, பாட்டாளி வாக்க உணர்வில் உறுதியும், அமைப்பின் கட்டுப்பாடும் பெற்றதாக இருக்க வேண்டும்.  

       இதனைக் காட்டிலும், கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு சமூக வளர்ச்சியைப் பற்றிய கண்ணோட்டத்தை அளித்திடும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் முதன்மையிடம் பெறுகிறது. தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்தவத்திடம் காண்கிறது என்று மார்க்ஸ் கூறுவார்.

பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் தான் பாட்டாளி வர்க்க உணர்வையும், கட்டுப்பாட்டையும் பெற்றுக்கொள்ள முடியும். மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து  விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாகயிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள் என்று லெனின் கூறுகிறார். இந்த மார்கசிய ஆசான்களின் வழிகாட்டுதலில் சென்றால் தான், முதலாளித்துவச் சுரண்டலின் காரணத்தையும், அதன் உள்முரண்பாட்டின் தீர்வாய், முதலாளித்துவம் தூக்கியெறியப்பட்டு சோஷலிச சமூகத்தை அமைக்கவும் முடியும்.

அதற்கு மார்க்சியம் ஒன்றே வழிகாட்டும்.

Sunday 12 May 2013

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி அவர்களின் ஜீனியர் விகடன் ஏட்டிற்கு அளித்த பதிலுக்கு எனது எதிர்வினை



இலங்கை தமிழர் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு மார்க்ஸ், லெனின் வழியில் இல்லை என்ற ஜீனியர் விகடனின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதத்தில் தான் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி அவர்களின் பதில் அமைந்திருக்கிறது: -

.வாசுகி அவர்கள் சோஷலிச தேசக் கட்டத்தில் கூறப்பட்ட ஒன்றாக சுயநிர்ணய உரிமையை குறைத்து, தவறான தகவலை மக்கள் முன் வைத்துள்ளார்.

அயர்லாந்து தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவும், இங்கிலாந்து தொழிலாளி தங்களுடைய சமூக விடுதலைக்காகவும், அயர்லாந்தைச் சுதந்திரநாடாகச் செய்வதற்கு ஆதரவு கொடுப்பது தான், சர்வதேசிய தொழிலாளர் ஸ்தாபனத்தின் தலையாய கடமையாகும் என்கிறார் மார்க்ஸ்.  மார்க்சும் எங்கெல்சும் அயர்லாந்து தேசிய இனப்பிரச்சினையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தங்களது முடிவினை வைக்கவில்லை. அவர்கள் பல்வேறு நாடுகளின் தேசிய இனங்களின் பிரச்சினையை அறிந்தவர்களே.

இதன் அடிப்படையில் தான் லெனின், ஸ்டாலின் போன்ற கம்யூனிஸ்டுகளும் அகிலத்தில் விவாதிக்கப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக பிரிந்து போவதுடன் கூடிய சுயநிர்ண உரிமையை ஆதரித்தனர்.

லெனின் 1896ஆம் ஆண்டு லண்டன் சர்வதேசக் காங்கிரசின் தீர்மானத்தை குறிப்பிடுவதை கீழே காணுங்கள்.

இத்தீர்மானம் கூறவதாவது:- (1896 ஜீலை 27 முதல் ஆகஸ்ட் 1 வரை லண்டனில் நடந்த சோஷலிஸ்டுத் தொழிலாளர் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் சர்வதேசக் காங்கிரசின் முடிவுகளும் குறிப்பேடுகளும்)

எல்லாத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணயத்துக்கான முழு உரிமை உண்டு என்பதை, தான் ஆதரிப்பதாக இந்தக் காங்கிரஸ் அறிவிக்கிறது, ராணுவ, தேசிய இன இல்லது இதர வரம்பற்ற அதிகாரத்தின் நுகத்தடியின் கீழ் துயருறும் எல்லா நாடுகளின் தொழிலாளர்களுக்கும் இது தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது, சர்வதேச முதுலாளித்துவத்தை முறியடிப்பதற்காகவும், சர்வதேச சமூக-ஜனநாயகத்தின் (கம்யூனிசத்தின்) லட்சியங்களை அடைவதற்காகவும் ஒன்று சேர்ந்து போராடுவதற்காக உலகம் முழுவதுமுள்ள வர்க்க உணர்வு கொண்ட (தமது வர்க்க நலன்களைப் புரிந்து கொள்வோர்) தொழிலாளர்களின் அணிகளில் சேர வருவமாறு அனைத்து நாடுகளின் தொழிலாளர்களையும் இக்காங்கிரஸ் அழைக்கிறது

நாம் ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருப்பது போல, நமது சந்தர்ப்பவாதிகளான செம்கோவ்ஸ்கி, லீப்மன், யுர்க்கேவிச் ஆகியோருக்கு இந்தத் தீர்மானம் இருப்பதே தெரியாது. ”
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை


.வாசுகி அவர்கள், ஏகாதிபத்திய இங்கிலாந்தின் நுகத்தடியில் இருந்து அயர்லாந்து பிரிந்து போவது பற்றி மார்க்ஸ் குறிப்பிட்டதை இன்று அப்படியே நகல் எடுத்து பொருத்த முடியாது என்கிறார். மார்க்ஸ் அயர்லாந்து பிரச்சினையை தேசிய இனப்பிரச்சினையாகத் தெளிவாகவே புரிந்து நமக்கு விளக்கியிருக்கிறார். ஆனால் உ.வாசுகி அவர்கள் ஏகாதிபத்திய நுகத்தடியில் இருந்து பிரிவது பற்றி பேசியிருப்பதாக கூறி பிரச்சினையை  திசை திருப்புகிறார்.

அயர்லாந்து தேசிய இனப்பிரச்சினையை மார்க்ஸ் ஸ்தூலமான நிலைமைகளில் இருந்து ஆராய்ந்தார், ஆனால் அதற்கான அணுகுமுறையை அதாவது மார்க்சிய வழிப்பட்ட கண்ணோட்டத்தை பல்வேறு நாடுகளில் தோன்றிய தேசிய இனப் பிரச்சினைகளின் அடிப்படையில் தான் உருவாக்கியிருக்கிறார்.

இதனை குறிப்பிட்டு லெனின் எழுதுகிறார்:-
"அயர்லாந்துககுச் சாதகமான மார்க்சின் பிரகடனங்களுக்குக் கடந்து செல்லுமுன் தேசிய இனப் பிரச்சினை பற்றிய மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் கண்ணோட்டம் பொதுவாகக் கறாராய் விமர்சன பூர்வமானது என்பதையும், அவர்கள் அதன் ஒப்பீட்டு வரலாற்று முக்கியத்துவத்தை மதிப்பிட்டு உணர்திருந்தார்கள் என்பதையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும்." (இதனைத் தொடர்ந்து மார்க்சும் எங்கெல்சும் பல்வேறு தேசிய இனப்பிரச்சினைப் பற்றி விவாதித்ததை லெனின் தொகுத்தளித்துள்ளார்)
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை

லெனின் கூறுகிறார்,
"எப்பொழுதும் நமக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர் மார்க்ஸ் தான், அவர் இங்கிலாந்தில் பல பத்தாண்டுகள் வாழ்ந்து, பாதி ஆங்கிலேயராக மாறி, ஆங்கிலேயத் தொழிலாளர்களின் சோஷலிச இயக்கத்தின் நலன்களுக்காக அயர்லாந்துக்குச் சுதந்திரமும் தேசிய விடுதலையும் கோரினார்."
மகாருஷ்யர்களின் தேசியஇனப் பெருமிதம் பற்றி

லெனின் மார்க்ஸ் வழியில் செல்கிறார், மார்க்சிஸ்ட் கட்சி தேசிய இனப்பிரச்சினையில்  மார்க்ஸ் லெனின்  வழியில் தொடரவில்லை.

இனப்பிரச்சினை மேலோங்கிய நிலையில் அங்கு வர்க்கப் போராட்டம் நடத்துவதற்கு தடையாக இருக்கின்ற தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். பிரிந்து போகும் சுதந்திரம் என்ற இடைநிலைக் காலத்துக்குப் பிறகுதான் தேசிய இனங்களின் இரண்டரக் கலத்தல் சாத்தியமாகும் என்பதே மார்க்சிய வழி தீர்வாகும்.

இதனை லெனின் "தேசிய இன ஒடுக்குமுறை இருக்கும் நிலைமையில் தேசிய இன விடுதலைப் பணிகளைப் புறக்கணிப்பது சோஷலிஸ்டுக் கருத்துப்படி நிச்சயம் தவறாகும்" என்கிறார். (தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை)

லெனின்:-
ஓர் அரசின் எல்லைகளுக்குள் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பலவந்தமாகப் பிடித்து நீடித்து வைத்துக்கொண்டிருக்கப்படுவதற்கு எதிராகப் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும், அதாவது சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டும். "தங்களது" தேசிய இனத்தினால் ஒடுக்கப்படும் காலனிகளுக்கும் தேசிய இனங்களுக்கும் அரசியல் ரீதியில் பிரிந்து போகும் சுதந்திரம் தரப்பட வேண்டும் என்று பாட்டாளிகள் கோர வேண்டும். இல்லாவிட்டால் பாட்டாளி வாக்கச் சர்வதேசியவாதம் என்பது வெற்று வார்த்தை, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கும் தேசிய இனத்தின் தொழிலார்களுக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையோ அல்லது வர்க்க ஒருமைப்பாடோ அப்பொழுது சாத்தியமில்லை,
...
எவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் காலத்திற்குப் பிறகுதான் வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ அதே போல, ஒடுக்கப்படும் எல்லாத் தேசிய இனங்களுக்கும் முழுவிடுதலை என்ற - அதாவது, பிரிந்து போகும் சுதந்திரம் என்ற - இடைநிலைக் காலத்துக்குப் பிறகுதான் தேசிய இனங்கள் தவிர்க்க முடியாத வகையில் இரண்டறக் கலத்தல் என்ற நிலையை அடைய முடியும்.
சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்

.வாசுகி அவர்கள் "இலங்கை அரசு இன ஒடுக்குமுறையை மட்டுமல்ல, வர்க்க ஒடுக்கு முறையையும் கட்டவிழ்த்திருக்கிறது" என்று எதோ ஆராய்ச்சி முடிவு போல் கூறுகிறார். இன ஒடுக்குதல் நிகழாத முதலாளித்துவப் பகுதியைக் காட்ட முடியும், வர்க்க ஒடுக்குதல்  நிகழாத முதலாளித்துவ பகுதியை எங்கு தேடுவது. வர்க்க போராட்டத்தை முன்னிருத்தி இனப் போராட்டத்தை தவிர்ப்பதற்கு எதேதோ பேசுகிறார்.

இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சினை என்பது புலிகளின் அணுகுமுறையால் தோன்றியதாக கூறுகிறார், அதாவது இலங்கை இனப்பிரச்சினையை புலிகளின் சமாதான ஒத்துழைப்பின்மையால் தோன்றியதாகவே பார்க்கிறார். இனப்பிரச்சினைக்கான வரலாற்று சூழலை அவர் பரிசீலிக்கவே இல்லை. அதனால் யதார்த்த சூழல், இன்றைய மக்களின் விருப்பம் என்று பிரச்சினையை நிகழ்காலக் கண்ணோட்டத்தில்லேயே முடிவெடுத்துள்ளார். பிரச்சினையினை வரலாற்றுப்பூர்வமாக பார்க்காமல், சந்தர்ப்ப சூழ்நிலையினையே முன்னிருத்தி, தொலை தூர திட்டமேதும் இன்றி, மார்க்சிய அணுகுமுறையான சுயநிர்யண உரிமையை மறுக்கிறார். இன ஒடுக்குதல் நிகழ்கின்ற சூழ்நிலையில் வர்க்கப் போராட்டம் நடத்துவதில் உள்ள சிக்கல் உ.வாசுகி அவர்களுக்கு புரியவில்லை.

இனப் பிரச்சினை என்பது முதலாளித்துவத்தின் திசை திருப்புகின்ற வேலை என்று உ.வாசுகி அவர்கள் கூறுகின்றார். இன ஒடுக்குதல் பாட்டாளி வர்க்க நலனுக்கு தீங்குபயக்காமல் கையாளுவதற்கே பிரிவுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை முன்வைத்தனர் மார்க்சிய மூதலாசிரியர்கள்.

மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் தேசிய இனப்பிரச்சினை மேலோங்கிய இடத்தில் வர்க்கப் போராட்டம் மழுங்கடிக்கப்படுகிறது அதனால் இனப்பிரச்சினையை முதலில் தீர்க்க வேண்டும் என்கின்றனர். தேசிய இனப்பிரச்சினை என்பது சமூக வளர்ச்சியில் பொருளாதார காரணங்களின் அடிப்படையில் உருவாவது. அதனால் தான் லெனின் இந்தப் பிரச்சினை என்பது மேற்கு ஐரோப்பா முழுவதற்கும் மட்டுமல்லாது நாகரிக உலகம் முழுமைக்கும், முதலாளித்துவ காலப் பகுதியில் தேசிய இன அரசு தோன்றுவது இயல்பானது என்று கூறியிருக்கிறார். (தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை)

தேசிய இனப் பிரச்சினைக்கான அடிப்படைப் பொருளாதாரக் காரணங்களையும் அதன் அரசியல் போராட்டத்தையும் கணக்கில் கொள்ளாமல், இனப் பிரச்சினையை அரசின் திசைதிருப்பும் வேலையாக குறைத்து மதிப்பிட்டுள்ளார் உ.வாசுகி அவர்கள்.

சுயநிர்ணய உரிமையை தவறு என்று மறுப்பது, நடைமுறையில் ஆதிக்கம் வகிக்கும் தேசிய இனங்களின் தேசிய வெறியை ஆதரிப்பதாகும் என்று லெனின் எச்சரிக்கிறார். சுயநிர்ணய உரிமை என்பது ரஷ்யாவுக்கு மட்டுமானதல்ல என்பதையும் அகிலத்தில் பல்வேறு கம்யூனிஸ்டு கட்சிகளினுடைய விவாதத்தின் முடிவாகும் என்பதை கீழ் காணும் லெனின் கூற்றில் அறியலாம்.

லெனின்:-
"சில சிறு தேசிய இனங்களின் கண்ணோட்டத்தை, குறிப்பாக, தேசியவாதக் கோஷங்களால் மக்களை ஏமாற்றும் போலிஷ் பூர்ஷ்வாக்களை எதிர்த்துப போராடுகின்ற காரணத்தினால் சுயநிர்ணயத்தையே தவறான முறையில் மறுக்கும் போலிஷ் சமூக-ஜனநாயகவாதிகளின் (கம்யூனிஸ்டுகளின்) கண்ணோட்டத்தை அகிலத்தில் புகுத்துவது தத்துவார்த்த ரிதியாக தவறாகும், இது மார்ச்சியத்தை விட்டுவிட்டு புரூதோனியவாதத்தை ஏற்றுக் கொள்வதாகும், நடைமுறையில், அதிக்கம் வகிக்கும் தேசிய இனங்களில் மிகவும் ஆபத்தான தேசிய வெறியையும் சந்தர்ப்பவாதத்தையும் நம்மையும் அறியாமல் ஆதரிப்பதாகும். "
சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்

ஈழம் பிரிந்து போவது சாத்தியமில்லை என்ற சிந்தனையின் அடிப்படையில் சுயநிர்ணய உரிமையை நோக்குகிறார் .வாசுகி. மேலும் இறுதி தீர்வு தனி ஈழம் என்பது தமிழகத்தில் உள்ள சில கட்சிகளின் கருத்து என்கிறார். ஈழத்தில் அதுபோன்ற சிந்தனை இல்லாதாது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார். இலங்கையில் மார்க்சிய வழிப்பட்ட தேசிய இன சுயநிர்ணய உரிமைக் கண்ணோட்டத்தில் பலர் அமைப்பாக பேசிவருவதையும் தடிதடிப்பான நூல்களாக வெளி வந்திருப்பதையும் பற்றி மவுனம் சாதிக்கிறார். தேசிய இனப்பிரச்சினைப் பற்றி லெனின் சொல்வதை கீழே பாடியுங்கள்


ஓர் அரசின் எல்லைகளுக்குள் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பலவந்தமாகப் பிடித்து வைத்திருப்பற்கு எதிராகப் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும், அதாவது சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டும்.
சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும் 

தேசங்கள் தடங்கலின்றிப் பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமையை, ஒரு குறிப்பிட்ட தேசம் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் பிரிந்து போவது உசிதமா இல்லையா என்பதோடு போட்டுக் குழப்பக்கூடாது
தேசியப் பிரச்சினை தீர்மானம்

சோஷலிசத்தை அடையும் முன்னர் பிரிந்து போகும் வாய்ப்பு ஆயிரத்தில் ஒன்றுதான் என்றாலும்கூட சுயநிர்ணய உரிமை தனிமுழுமையான கோரிக்கையாக முன் வைத்தார் லெனின். (சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு)

ஏகாதிபத்தியம், வளரும் நாடுகளைத் துண்டாடச் செய்யும் முயற்சியைப் பற்றி மட்டும் .வாசுகி பேசிவிட்டு, இதற்கு மார்க்சிய வழியில் வைக்கப்பட்ட தீர்வான பிரிந்து போவதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையைப் பற்றிய மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோகளின்  கோட்பாடுகளுக்கு எதிராக கருத்துரைக்கிறார்.

ஏகாதிபத்தியம் தேசிய இனப் பிரச்சினையில் தலையிட்டு, நாட்டைத் துண்டாடுவதைத் தடுப்பதற்கே,  மார்க்சியம் பிரிவுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை முன்வைக்கிறது. தனித்தனியாக  சிறுசிறு அரசுகளாக துண்டாடப்பட்டு தனிமைப்பட்டு நிற்பதற்காக அல்ல. ஒடுக்கப்படும் தேசிய இனம் தனது அரசியல் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கே சுயநிர்ணய உரிமையை மார்ச்சியம் வலியுறுத்துகிறது.

பிரிவினைவாதத்துக்கும், பிரிந்து போவதுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ளவதில் உள்ள சிக்கலே தவறுகளுக்கு இடம் கொடுக்கிறது.

இதனை தெளிவுபடுத்துவதற்கு லெனின் விவாகரத்து சட்டத்தை உதாரணத்துக்கு எடுத்து விளக்குகிறார்.

விவாகரத்து உரிமை இருப்பதினால் விவாகரத்து நடைபெறுவதில்லை, கணவன் மனைவி ஆகியோர்களுக்கிடைய உள்ள நீக்க முடியாத பிணக்கே அவர்களைப் பிரிக்கிறது. இது போன்றே, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பெற்றிருப்பதனால் தேசங்களிடையே பிரிவு நிகழ்வதில்லை, தேசிய இனங்களை ஒடுக்குகின்ற கொள்கையே தேசிய இன அரசைத் தோற்றுவிக்கிறது.

எதிர்கால ஐக்கியத்துக்கே பிரிதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை மார்க்சியம் கோருகிறது, சோஷலிச சமூகத்தில் தேசிய இனங்கள் பிரிந்து போதல் என்ற உரிமையுடன் கூடிய ஐக்கியத்தை முன்வைத்தல் என்பதே லெனின் வழிகாட்டுதலாகும். (சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்)

சுயநிர்ணய உரிமை என்பதை சோஷலிச சமூகத்துக்கு உரிய கோட்பாடாகத்தான் லெனின் உருவாக்கினார் என்று தவறான தகவல்களின் அடிப்படையில் மார்க்சியத்தின் உயிரோட்டமான அடிப்படைகளை மறுதலித்துவிட்டு, மார்க்சியம் வறட்டுச் சூத்திரமல்ல என்ற முழுக்கத்தை முன்வைத்து .வாசுகி, அவரது கட்சியின் முடிவுகளுக்கு ஏற்ப, மார்க்ஸ், லெனின் ஆகியோர்களின் கருத்துக்களுக்கு தவறான வியாக்கியானம் செய்கிறார்.

(தேசிய இனப் பிரச்சினையின் காரணமாக, தொழிலாளர்களின் ஒற்றுமை குலைவதையும், தேசிய இன வெறிக்கு ஆட்படுவதையும் தடுப்பதின் நோக்கில், தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக மார்கசியம் கூறும் சுயநிர்ணய உரிமை என்ற நிலைப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவது இன்றைய தேவையாகிறது)