Tuesday 20 June 2023

மார்க்சும் மார்க்சியமும்

 ("தமிழ் மரபு அறக்கட்டளை" என்கிற பன்னாட்டு அமைப்பு நடத்திய இணையவிழ உரைத்தொடர் நிகழ்ச்சியில், மார்க்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு (06-05-2023) "மார்க்சும் மார்க்சியமும்" நிகழ்த்திய உரை)

 காணொளியில் காண

https://www.youtube.com/watch?v=9RLNh_COH4s&t=26s

https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/829396352117885



 காரல் மார்க்ஸ் 19ஆம் நூற்றாண்டில் பிறந்த மாமேதை. கடந்த ஐநூறு ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பல்வேறு மேதைகள் தோன்றியுள்ளனர். இந்த ஐநூறு ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களில் முதல் ஐந்து மேதைகளின் பட்டியலைத் தயார் செய்தால் அதில் ஒருவராக காரல் மார்க்ஸ் கண்டிப்பாக இருப்பார்.

 மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள டிரியர் என்கிற நகரில் பிறந்தார். நேற்று அவரது 205-வது பிறந்த நாள். அதைமுன்னிட்டு இன்று மார்க்சையும் அவரது படைப்பான மார்க்சியத்தையும் நாம் பார்க்கப் போகிறோம்.

 மார்க்சின் தகப்பனார் வழக்குரைஞராக பணிபுரிந்தார். மார்க்சின் குடும்பம் வசதியான - நாகரீகம் கொண்டதாக இருந்தது. ஆனால் புரட்சிகரமானதாகக் கூறிட முடியாது.

 பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மார்க்ஸ் கல்லூரியில் சட்டம் படித்தார். சட்ட படிப்புடன் வரலாறு - தத்துவம் ஆகிய இரண்டிலும் அதிகம் கவனம் செலுத்தினார். தனது டாக்டர் பட்டத்துக்கு எபிக்யூரசின் தத்துவத்தை ஆராய்ந்தார். அந்தக் காலத்தில் ஹெகல் என்கிற தத்துவ அறிஞர் மிகவும் புகழ்பெற்றவராக இருந்தார். இளம் மார்க்சிடம் ஹெகலின் தாக்கம் அதிகம் இருந்தது.

 பிரபஞ்சம், பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியால் படைக்கப்பட்டது என்கிற கருத்துமுதல்வாத கணோட்டத்தை உடையவராக ஹெகல் இருந்தார். மார்க்ஸ் படிப்படியாக கருத்துமுதல்வாதத்தில் இருந்து விடுபட்டு பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திற்கு வந்தடைந்தார். இருந்தாலும் ஹெகலிடம் காணப்பட்ட இயக்கவியலை மார்க்ஸ் பெரிதும் மதித்தார்.

 கிரேக்கத் தத்துவத்தின் தொடக்கத்தில் இயக்கவியல் காணப்பட்டது, ஆனால் பின்னால் அது தொடராமல் போய்விட்டது. ஹெகல் இயக்கவியலை மீண்டும் கொண்டுவந்ததை மார்க்ஸ் மிகவும் பாராட்டினார்.

 ஹெகலின் இயக்கவியல் கருத்துமுதல்வாத மயக்கத்தில் இருந்ததால் அதை அப்படியே எடுத்துப் பின்பற்றாமல், இயக்கவியலை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் வளப்படுத்தினார்.

 முனைவர் பட்டத்துக்கான ஆய்வு பணியை முடித்தப் பிறகு கல்லூரியில் பேராசிரியராக பணி புரிய வேண்டும் என்பதே மார்க்சின் விருப்பமாக இருந்தது. ஆனால் அப்போது ஜெர்மனியில் பிற்போக்காளர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அந்த அரசு முற்போக்கான பேராசிரியர்களை பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றியது. இந்த நிலையில்  பேராசிரியராக வேண்டும் என்கிற தனது விருப்பத்தை மார்க்ஸ் கைவிட்டார். பத்திரிகையில் பணிபுரியலாம் என்று முடிவெடுத்தார்.

 எதிர் கட்சி பத்திரிகையான ரைனிஷ் என்கிற பத்திரிகையில் மார்க்ஸ் தொடர்ந்து எழுதினார். 1842ஆம் ஆண்டில் அந்த பத்திரிகையின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸ் தலைமை ஏற்றப் பிறகு அந்த பத்திரிகை புரட்சிகரமானதும் ஜனநாயகப் போக்குடையதாகவும் மாறியது.

 இதனைக் கண்ட அரசு, அந்தப் பத்திகையை, இரட்டைத் தணிக்கைக்கும் மும்முறைத் தணிக்கைக்கும் உள்ளானது. இறுதியில் அந்தப் பத்திரிகை தடை செய்யப்பட்டது.

 பள்ளி பருவத்தில் நண்பராக இருந்த ஜென்னி என்கிற மங்கையரை 1843ஆம் ஆண்டு மார்க்ஸ் மணம்புரிந்தார்.  அப்போதைய பிற்போக்கான அரசில் ஜென்னியின் தமையனார் அமைச்சராக இருந்தார். ஜென்னியின் குடும்பம் பிற்போக்கனதாக இருந்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் முற்போக்கான மார்க்சுடன் முற்போக்காக ஜென்னி இறுதிவரை பயணித்தார்.

 ஜெர்மனியில் தொடர்ந்து வாழ முடியாத நிலையில் மார்க்ஸ் பாரிசுக்கு செல்கிறார். பாரிசுக்கு வந்த மார்க்ஸ் ஒரு பத்திரிகையை நடத்தினார். அந்தப் பத்திரிகை ஜெர்மனி நாட்டுக்குள் ரகசியமாக அனுப்பபட்டது. மார்க்ஸ் எந்த நாட்டுக்கு சென்றாலும் அவர் தமது நாட்டை மறக்காமலேயே இருந்தார். தான் ஒரு ஜெர்மானியன் என்பதை அவர் எப்போதும் மறந்ததே இல்லை.

 1844ஆம் ஆண்டு எங்கெல்ஸ் பாரிசுக்கு வந்தார். மார்க்சை சந்தித்தார். அதுமுதல் இந்த இரண்டு நபர்களும் சிறந்த நண்பர்களாக வாழ்ந்தனர். தங்களது இறுதிகாலம்வரை எழுத்துப் பணிகளை இருவரும் இணைந்து செய்தனர். எங்கெல்சும் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவரே. பாரிசில் உள்ள புரட்சிகர குழுக்களுடன் இருவரும் சேர்ந்து செயல்பட்டனர். அப்படி செயல்பட்டுக் கொண்டிருக் போது மார்க்ஸ் ஒர் ஆபத்தான புரட்சியாளர் என்று 1845ஆம் ஆண்டு பாரிசில் இருந்து நாடுகடத்தப்பட்டார். தனது சொந்த நாட்டைவிட்டு பாரிசுக்கு வந்திருந்தாலும் மார்க்சை பிரஷ்ய அரசாங்கம் கண்காணித்து வந்தது,

 தொடர்ந்து மார்க்சுக்கு நெருக்கடியை கொடுத்தது. மார்க்ஸ் பாரிசில் இருந்து பெல்ஜியம் சென்றனர்.

 1847ஆம் ஆண்டு மார்க்சும் எங்கெல்சும் “கம்யூனிஸ்ட்டுகளின் லீக்” என்கிற ரகசிய பிரச்சார சங்கத்தில் சேர்ந்தனர். இங்கிருக்கும் போதுதான் மார்க்சும் எங்கெசும் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” என்கிற புகழ்பெற்ற ஆவணத்தை எழுதினர். இந்த நூல் அனைத்து உழைக்கும் மக்களின் விடுதலைக்கான அடிப்படை ஆவணமாக இன்றும் காணப்படுகிறது.

 1848ஆம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சி காரணமாக மார்க்ஸ் பெல்ஜியத்தில் இருந்து நாடுகடத்தப்பட்டார். பெல்ஜீயத்தில் இருந்து பாரிஸ் சென்று - அங்கிருந்து ஜெர்மன் வந்தடைந்தார்.

 ஜெர்மனியில் “புதிய ரைனிஸ் பத்திரிகை” ஒன்றை தலைமையேற்று நடத்தினார். ஜெர்மனியில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. 1849ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

 மார்க்ஸ், மீண்டும் பாரிசுக்கு சென்றார், அங்கிருந்து மீண்டும் நாடு கடத்தப்பட்டு லண்டன் நகருக்கு வந்தடைந்தார்.  இத்துடன் நாடுகடத்தும் படலம் முடிவுக்கு வருகிறது.

 தொடக்கக் காலத்தில் மார்க்ஸ் பலமுறை நாடுகடத்தப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார். இங்கிலாந்தில் அவருக்கு பெரிய பிரச்சினை எதுவும் வரவில்லை, தனது எழுத்துப் பணியையும் அரசியல் பணியையும் தொடர்ந்து செய்துவந்தார். லண்டனில் மார்க்சின் குடும்பம் மிகவும் வறுமையில்தான் வாழ்ந்தது. வறுமையிலும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகவே மார்க்ஸ் இருந்தார். மார்க்ஸ்-ஜென்னி தம்பதியர்களுக்கு மொத்தம் ஏழு குழந்தைகள் பிறந்தன. மோசமன வறுமையினாலும், நோய்களினாலும் நான்கு குழந்தைகள் இறந்தன, மூன்று குழந்தைகள் மட்டுமே உயிர்பிழைத்து.

 நண்பரான எங்கெல்ஸ் பண உதவி செய்திடாமல் போயிருந்தால் மார்க்சும் வறுமையில் மடிந்திருப்பார் என்பதே உண்மையாகும்.

 1863ஆம் ஆண்டு லண்டன் நகரில் “சர்வதேசத் தொழிலாளர் சங்கம்” நிறுவப்பட்டது. இதுவே வரலாற்றில் முதலாவது அகிலம் என்று கூறப்படுகிறது. அகிலத்தில் மார்க்ஸ் தமது சித்தாந்தத்தை நிலைநிறுத்தினார். அவர் தமது கருத்துக்கு எதிராக இருந்த, குட்டி முதலாளித்துவ போக்குகளை முறியடித்தே தமது கருத்தை நிலைநிறுத்தினார்.

 உழைக்கும் மக்களின் விடுதலைக்கு அடித்தளமிட்ட மார்க்சின் பொருளாதார நூலான “மூலதனத்தின்” முதல் தொகுதி 1867ஆம் ஆண்டு வெளிவந்தது. மூலதனம் நூல் மூன்று தொகுதிகளைக் கொண்டது. மார்க்ஸ் முதல் தொகுதியை மட்டுமே அச்சுக்கு தயார் செய்து வைத்திருந்தார். இரண்டாம் மூன்றாம் தொகுதிகள் மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு எங்கெல்சால் வெளியிடப்பட்டது.

 1871ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூன் என்கிற தொழிலாளர் ஆட்சி ஏற்பட்டது. அது விரைவில் விழ்ச்சியும் அடைந்தது. இருந்தாலும் உலகிலேயே இதுதான் முதல் உழைப்பாளர்களின் அட்சி என்று மார்க்ஸ் பெருமையுடன் கொண்டாடினார். பாரிஸ் கம்யூனை ஆராய்ந்து “பிரான்சில் உள்நாட்டுப் போர்” என்ற பெயரில் மார்க்ஸ் ஒரு நூலை எழுதினார்.

 அகிலத்தில் வேலை செய்ததும், அரசியல் பொருளாதார ஆய்வை தொடர்ந்து செய்ததாலும் மார்க்சின் உடல் கடுமையாக பாதித்தது. 1881ஆம் ஆண்டு மார்க்சின் காதல் மனைவியான ஜென்னி மறைந்தார்.

 ஜென்னியின் மறைவு மார்க்சை மிகவும் பாதிக்கும் என்று எங்கெல்ஸ் உள்ளிட அவரது நண்பர்கள் கருதினர். அவ்வாறு கருதியது போலவே ஜென்னியின் இழப்பும் உடல் நோயும் மார்க்சை மிகவும் பாதித்தது. 1883 ஆம் ஆண்டு மார்ச் மாதம்14ஆம் தேதி இந்த உலகத்தைவிட்டு மார்க்ஸ் மறைந்தார்.

 மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது எங்கெல்ஸ் நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டது மிகவும் முக்கியமானதாகும். அங்கக இயற்கையின் (organic nature) வளர்ச்சி விதியை டார்வின் கண்டு பிடித்ததைப் போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார். மேலும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் சிறப்பு விதியையும் கண்டுபிடித்தார்.

 மார்க்ஸ் தமது வாழ்க்கையில் பலவற்றைக் கண்டுபிடித்தார். அதில் குறிப்பிடத்தக்கது என்று இங்கே இரண்டை மட்டும் எங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

 1) வரலாற்றியல் பொருள்முதல்வாதம்,

 2) உபரி மதிப்பின் மூலம் முதலாளித்துவ சுரண்டலை வெளிப்படுத்துதல்.

 வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பது மார்க்சிய ஆய்வுமுறைமை ஆகும்.  எந்தத் துறையை சார்ந்த, ஆய்வு மாணவனவனாக இருந்தாலும், பல்வேறு ஆய்வு முறைமைகளை அறிந்திருக்க வேண்டும். அதில் ஒன்றான மார்க்சிய ஆய்வு முறைமை மார்க்சிய தத்துவமான வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில் அடங்கியிருக்கிறது.

 மார்க்சின் மூலதனம் என்கிற பொருளாதார நூலும், இந்த அணுகுமுறையில்தான் எழுதப்பட்டது. அதனால் மார்க்சின் பொருளாதாரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும், அவரது வரலாற்றியில் பொருள்முதல்வாதம் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

 மார்க்சின் உடல்தான் மறைந்தது. ஆனால் அவர் படைத்தளித்த “மார்க்சியம்” என்கிற படைப்பு இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. இதுவரை மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுதியப் படைப்புகள் ஆங்கிலத்தில் 50 தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இன்னும் பல தொகுதிகள் வரயிருக்கிறது. தமிழில் கிட்டத்தட்ட 20 தொகுதிகள் வந்துள்ளது. மார்க்சிய அடிப்படையை அறிந்து கொள்வதற்கு இது போதுமானது ஆகும்.

 மார்க்ஸ் பிறந்த நாளில், பிறந்தார் - வாழ்ந்தார் - மறைந்தார் என்று கூறுவதுடன் அவர் படைத்தளித்த சித்தாந்தத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

 மார்க்சியத்தை அரசியல் செயல்பாடாக மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. கல்வி புலத்தில் பல துறைகளில் மார்க்சியம் கற்பிக்கப்படுகிறது. குறிப்பாக தத்துவம், பொருளாதாரம், சமூகவியல், அரசியல், தொல்லியல் போன்ற துறைகளில் மார்க்சியம் கற்பிக்கப்படுகிறது. மார்க்சிய தொல்லியல் (Marxist archaeology) என்று ஒரு தனிப்பிரிவே இருக்கிறது. இதை நம் நாட்டு தொல்லியல் துறையைச் சார்ந்தவர்களில் பெரும்பான்மையினர் அறிந்திருக்கவில்லை என்பது மிகவும் கவலைக்குரியதாகும்.

 இப்போது மார்க்சியத்தை பார்ப்போம்

 மார்க்சியம் மூன்று விஷயங்களைப் பேசுகிறது. தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம். மார்க்சியம் ஒரு தனித்த போக்குகிடையாது. அது வரலாற்றின் தொடர்ச்சியில்தான் வந்தது.

 மார்க்சின் தத்துவம் ஜெர்மனி தத்துவத்தின் தொடர்ச்சியாகும், மார்க்சின் அரசியல் பொருளாதாரம் ஆங்கிலேய அரசியல் பொருளாதாரத்தின் தொடர்ச்சியாகும், மார்க்சின் விஞ்ஞான கம்யுனிசம் பிரெஞ்சு சோஷலிசத்தின் தொடர்ச்சியாகும்.

 மார்க்சின் எழுத்துக்கள் அனைத்தும் தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் என்கிற மூன்று பிரிவுக்குள் அடங்கும். இந்த மூன்றையும் மிகமிக சுருக்கமாக இப்போது பார்ப்போம்.

 தத்துவம் என்பது பற்றி மக்களிடம் பலதரப்பட்ட கருத்து இருக்கிறது. தத்துவம் என்பது ஓய்வு பெற்றவர்கள், குடும்ப பொறுப்புகளை முடித்தவர்கள் - அறிந்து கொள்ள வேண்டியது.  மேட்டுகுடியினரால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியது. இது போன்ற கருத்துக்கள் மிகப்பெரும் தவறாகும். தத்துவக் கண்ணோட்டம் இன்றி, அதாவது ஒர் உலகக் கண்ணோட்டமில்லாத ஒரு நபரையும் சமூகத்தில் பார்த்திட முடியாது. தற்போது தமிழக அரசு அறிவித்து, பின்பு திரும்பப்பெற்ற 12 மணிநேர வேலை நாளைப் பற்றி செய்தி வரும் போது நமக்கு சில கருத்துக்கள் தோன்றியிருக்கும். அந்தக் கருத்துக்கள் நமது தத்துவத்தின் அடிப்படையில்தான் உருவானது.

       அதே போல ஒரு குறிப்பிட்ட செய்தியை, ஒவ்வொரு செய்தி தொலைக்காட்சியும் வெவ்வேறு முறையில் அணுகுகிறது என்றால் அதற்கு அந்தந்த தொலைக்காட்சி பின்பற்றுகிற தத்துவ அடிப்படையின் வேறுபாடே காரணமாகும். அதாவது அவர்களின் அரசியல் கணோட்டத்தை, அவர்களின் தத்துவமே உருவாக்குகிறது.

 தெரிந்தோ தெரியாமலோ தத்துவக் கண்ணோட்டம் உடையவர்களாகவே சமூகத்தில் அனைவரும் உள்ளனர். அதை அவர்கள் ஒழுங்குபடுத்தி செழுமைப்படுத்தி வளர்க்காமல் இருந்திக்கலாம், ஆனால் அனைவருக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. அந்தக் கண்ணோட்டம் தத்தவத்தின் அடிப்படையிலேயே அமைகிறது.

 அடுத்து, தத்துவத்தின் அடிப்படைக் கேள்வி என்னவென்பதைப் பார்ப்போம்.

 தத்துவம் ஒரு பெரிய துறையை சார்ந்தது. அது பல விஷங்களைப் பற்றி பேசுகிறது. அனைத்தையும் நாம் இங்கே பார்த்திட முடியாது. அடிப்படையானவற்றை மட்டும் பார்ப்போம். தத்துவத்தின் அடிப்படைக் கேள்வி என்னவென்றால்

 உலகம் படைக்கப்பட்டதா?

 அல்லது என்றும் நிரந்தரமாக இருந்து வருகிறதா?

        இதுதான் அடிப்படைக் கேள்வி

 தத்துவம் எவ்வளவு விஷயங்களைபேசினாலும், தத்துவத்தின் அடிப்படை இந்த கேளிவின் பதிலில்தான் இருக்கிறது.

 தத்துவங்களின் வேறுபாடு இந்த கேள்விகளுக்கு அளிக்கிற பதிலில் தான் அடங்கியிருக்கிறது.

 உலகம் படைக்கப்பட்டதா?

 அல்லது என்றும் நிரந்தரமாக இருந்து வருகிறதா?

 இந்த உலகம் எதோ ஒருவகையில் படைக்கப்பட்டது என்று கருதுவது கருத்துமுதல்வாதம்.

 இந்த உலகம் என்றும் உள்ளது, அது மாறிக் கொண்டிருக்கும் ஆனால் அழியாது என்று கூறுவது பொருள்முதல்வாதம்.

 கருத்துமுதல்வாதம் இரண்டு வகைப்படும் ஒன்று புறநிலைக் கருத்துமுதல்வாதம் மற்றொன்று அகநிலைக் கருத்துமுதல்வாதம். உலகுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியால் இந்த உலகம் படைக்கப்பட்டது என்று கூறுவது புறநிலை கருத்துமுதல்வாதம். படைக்கும் சக்தி இந்த உலகுக்கு அப்பால்----- புறத்தில் இருப்பதாக கருதுவதினால் இதற்கு புறநிலை கருத்துமுதல்வாதம் என்று பெயர்.

 அடுத்து அகநிலை கருத்துமுதல்வாதம் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.

 படைக்கும் சக்தி புறத்தில் இல்லை. நமது அகத்தில்தான் இருக்கிறது.  புறத்தில் காணப்படுவது அனைத்தும் அகத்தில் தோன்றியதே. புறத்தில் இருப்பது, அகத்தின் பிரதிபலிப்பு என்று கூறுவது அகநிலைக் கருத்துமுதல்வாதம்.

 பொதுவாக அனைத்து மதங்களும் புறநிலைக் கருத்துமுதல்வாதத்தையே பின்பற்றுகிறது.

 மத்துவரின் வைணவமும், ராமானுஜரின் வைணவமும், தமிழ்நாட்டில் காணப்படும் மெய்கண்டாரின் சைவ சித்தாந்தமும் புறநிலைக் கருத்துமுதல்வாதமாகும். கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களும் புறநிலை கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.

 மத்துவரும் ராமானுஜரும் புறநிலை சக்தியை, அதாவது இந்த உலகதைப் படைக்கிற புறநிலை சக்தியை பிரம்மம் என்கின்றனர், சைவ சித்தாந்தம் அந்த புறநிலை சக்தியை பதி என்கிறது. கிறித்துவம் அந்த சக்தியை பிதா என்கிறது, இஸ்லாம் அந்த சக்தியை அல்லா என்கிறது.

 ஆதி சங்கரரின் அத்வைதத் தத்துவம் அகநிலைக் கருத்துமுதல்வாதமாகும். அத்வைதம் புறநிலைக் கடவுளை மறுத்து நாமே கடவுள் – நானே கடவுள் என்கிறது. தத்துவமசி என்கிற உபநிடத மகாவாக்கியம் இதையே வலியுறுத்துகிறது.

 அத்வைதத்தைப் பொருத்தளவில் அகமே படைக்கும் சக்தி- அகமே கடவுள் ஆகும், அகமே பிரமம்.

 அடுத்து கருத்துமுதல்வாதத்துக்கும் பொருள்முதல்வாதத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்.

 தத்துவங்கள் அனைத்தும் உணர்வுநிலையையே முதன்மைப்படுத்துகிறது. ஆங்கிலத்தில் Consciousness என்று சொல்லப்படுவதையே தமிழில் உணர்வுநிலை என்று கூறப்படுகிறது.

 மனிதனது உணர்வுநிலையே அனைத்தையும் தீர்மானிக்கிறது என்று கருத்துமுதல்வாதம் கூறுகிறது.

 பொருள்முதல்வாதம் உணர்வுநிலைதான் முடிவெடுக்கிறது ஆனால் உணர்வுநிலை தானே சுயமாகச் சிந்தித்துக் கொள்வதில்லை. மனிதன் புறவுலகோடு ஏற்படும் தொடர்பால் உணர்வுநிலை உருவாகிறது.

 உணர்வுநிலை புறவுலகின் தொடர்பால் ஏற்படுகிறது, உணர்வுநிலையின் மாற்றங்கள் புறவுலகின் மாற்றத்தால் நிகழ்கிறது. கருத்துமுதல்வாதத்துக்கு உணர்வுநிலையே அடிப்படை. பொருள்முதல்வாதத்துக்கு உணர்வுநிலை தோன்றுவதற்குக் காரணமான புறநிலையே அடிப்படை.

 எந்த சூழ்நிலையில் வாழ்கிறானோ அந்த சூழ்நிலையின் அடிப்படையில் மனிதன் சிந்திக்கிறான் என்பது பொருள்முதல்வாதம்.  எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் தனது உணர்வுநிலைக்கு ஏற்பவே மனிதர் சிந்திக்கிறான் என்பது கருத்துமுதல்வாதம்.

 இதுவரை கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்கிற இரு பெரும் தத்துவப் பிரிவுகளைப் பார்த்தோம். மார்க்ஸ் எந்தத் தத்துவப் பிரிவைச் சேர்ந்தவர் என்றால், அவர் பொருள்முதல்வாதத்தைச் சேர்ந்தவர்.

 மார்க்ஸ் நவீன பொருள்முதல்வாதத்தைப் படைத்தார். மார்க்சுக்கு முன்பும் பொருள்முதல்வாதச் சிந்தனை இருந்தது. அதன் தொடர்ச்சியே – வளர்ச்சியே மார்க்சின் நவீன பொருள்முதல்வாதம்

 இந்தியாவிலும் உலகாயதம், சாங்கியம் போன்ற தொடக்கநிலை பொருள்முதல்வாத சிந்தனைப் பள்ளிகள் இருந்தது. அதன் தொடர்ச்சியாகவே மார்க்சின் பொருள்முதல்வாதத்தை நாம் பார்க்க வேண்டும். புதிய நிலைமைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப மார்க்ஸ் நவீனப் பொருள்முதல்வாதத்தைப் படைத்தார்.

 மார்க்சின் பொருள்முதல்வாதத் தத்துவம் இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றொன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

 இயற்கை பற்றியும் அதன் மாற்றத்தைப் பற்றியும் பேசுவது இயக்கவியல் பொருள்முதல்வாதம். சமூகம் - வரலாறு ஆகியவற்றின் தோற்றம் இருப்பு மாற்றம் போன்றவற்றைப் பேசுவது வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

 யக்கவியல் பொருள்முதல்வாதத்தையும் - வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

 இயக்கவியல் பொருள்முதல்வாதம் பலவற்றைப் பற்றி பேசுகிறது. அதில் குறிப்பிடத் தக்கவை, பருப்பொருள், அதன் இயக்கம், விசும்பு, காலம், உணர்வுநிலை, அறிவுத்தோற்றவியல்.

 இதனை இங்கே விரிவாகப் பார்ப்பதற்கு நேரம் இல்லை. இருந்தாலும் பருப்பொருள் இயக்கம், விசும்பு, காலம் பற்றி மட்டும் பார்ப்போம்.

 உணர்வுநிலையைப் பற்றி நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். அதனால் மற்றவற்றைப் பார்ப்போம். ஆங்கிலத்தில் Matter என்பதையே தமிழில் பருப்பொருள் என்கிறோம். நம்மைச் சாராமல் புறத்தில் இருக்கும் அனைத்தும் பருப்பொருள் ஆகும்.

 உலகில் காணப்படும் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது. முற்றிலும் இயக்கமோ, மாற்றமோ இல்லாத பொருள் - இந்த உலகில் எதுவும் இல்லை.

 இயக்கம் இன்றிப் பருப்பொருள் இல்லை. அதே போல பருப்பொருள் இன்றி இயக்கமும் இல்லை. சக்தி என்பது தனித்த பொருள் அல்ல, அது பொருளோடு இணைந்தே காணப்படுக்கிறது. இயக்கம் என்பது பருப்பொருளின் உள்ளேயும் பிற பருப்பொருளோடு சேர்ந்தும் இயங்குகிறது.

 பருப்பொருள் இல்லாமல் இயக்கமில்லை, இயக்கம் இல்லாமல் பருப்பொருள் இல்லை என்று பார்த்தோம்.

 இந்தப் பருப்பொருளின் இயக்கம் என்பது விசும்பிலும் காலத்திலும் நடைபெறுகிறது.

 ஆங்கிலத்தில் Space என்பதையே தமிழில் விசும்பு என்று கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் Time என்பதையே தமிழில் காலம் என்று கூறப்படுகிறது.

 விசும்பு என்பது பருப்பொருளின் இருத்தலையும், மற்ற பொருளுடன் அது கொண்டுள்ள உறவிலும் வெளிப்படுகிறது.

 ஒரு பொருள் இருக்கிறது என்றால் அது ஒர் இடத்தில் தான் இருக்கும், அந்த பொருள் தனித்து இருப்பதில்லை மற்ற பொருளோடு தொடர்பில் -  உறவில்தான் இருக்கும்.

 ஒரு பொருள் தொடர்ந்து இருக்கிறது என்றால் அது காலத்தில் நிகழ்கிறது. பொருளின் இயக்கம் மாற்றம் காலத்தில் தான் நடைபெறுகிறது.

 பருப்பொருளின் இருப்பும் தொடர்பும் - தொடர்ந்து செல்வது காலத்தில்தான்.

 நாம் பார்த்ததை நினைவு கொள்வோம்.

 பருப்பொருள் இல்லாமல் இயக்கம் இல்லை, இயக்கம் இல்லாமல் பருப்பொருள் இல்லை. பருப்பொருளின் இயக்கங்கள் -மாற்றங்கள் விசும்பிலும் காலத்திலும் நடைபெறுகிறது

 இது இயக்கவியல் பொருள்முதல்வாதம்.

 அடுத்துப் பார்க்கப் போவது வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

 இயக்கவியல் பொருள்முதல்வாதத்தில் உணர்வுநிலையின் தோற்றத்தைப் பற்றி பார்த்தோம் அல்லவா, அதன் தொடர்ச்சியே வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

 மனிதன் எந்தச் சூழ்நிலையில் வாழ்கிறானோ அந்த சூழ்நிலையில் இருந்து சிந்தனை தோன்றுகிறது என்பதுதான் வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

 பழங்குடிகள் அனைவர்களின் சிந்தனையும், அதே போல கிராமங்களில் உள்ள அனைவர்களின் சிந்தனையும், பொதுவாக ஒரே மாதிரிதான் இருக்கிறது. நகரங்களில் வாழ்பவர்களின் சிந்தனை நகர வாழ்க்கையை ஒட்டியே இருக்கிறது. இந்த சிந்தனைகளின் வேறுபாட்டுக்குக் காரணம் அந்தந்த இடங்களில் நிகழும் உற்பத்தி நிலைமைகளே என்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.

 சூழ்நிலை என்று பொதுவாகக் கூறினாலும் அது பொருளாதார சூழ்நிலைமைகளையே மார்க்சியம் குறிப்பிடுகிறது. அதாவது உற்பத்தியில் ஈடுபடுகின்ற சூழ்நிலையையே குறிப்பிடுகிறது.

 வாழ்நிலைமையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை என்பதே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை.

 அதாவது எந்தப் பொருளாதார உற்பத்தி முறையில் வாழ்கிறோமோ அந்தப் பொருளாதார உற்பத்தி முறைக்கு ஏற்பவே சிந்தனை ஏற்படுகிறது.

 சிந்தனைக்கு ஏற்ப - நமது வாழ்நிலை அமைத்துக் கொள்ள முடிவதில்லை, வாழ்நிலைமைக்கு ஏற்பவே சிந்தனை அமைகிறது என்பதையே மார்க்சியத் தத்துவம் வலியுறுத்துகிறது.

 வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் பற்றிய மார்க்சின் புகழ்பெற்ற ஒரு மேற்கோள் இருக்கிறது. அதை நாம் மேற்கோளாகப் பார்க்கப் போவதில்லை, அதில் கூறப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட மார்க்சின் வார்த்தைகளிலேயேப் பார்ப்போம்.

 

மனிதர்கள் தமது வாழ்க்கைக்கு தேவைப்படுவதை - உற்பத்தி செய்திடும் போது, தவிர்க்க முடியாத வகையில், திட்டவட்டமான உறவுக்குள் நுழைகிறார்கள். இந்த உறவுகள் மனிதர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து புறநிலையாக இருக்கிறது. 

 

இதுவரை வளர்ச்சியடைந்துள்ள  பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும்.

 

இந்த அடித்தளத்தின் மீது மதம், தத்துவம், சட்டம், அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது.

 

அடித்தளத்துக்கு பொருத்தமாக சமூக உணர்வின் வடிவங்கள் தோன்றுகின்றன.

 

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை,  அவர்களுடைய சமூக வாழ்நிலையே உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

 இதைத்தான் அந்த மேற்கோள் கூறுகிறது. அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டை மார்க்ஸ் இந்த இடத்தில் மிகவும் சிறப்பாக விளக்கி உள்ளார்.

 உற்பத்தியில் ஈடுபடுகிற பொருளாதார நிலைமைகளே சமூகத்தின் அடித்தளம் ஆகும், அடித்தளத்தை ஒடியே சிந்தனை என்கிற மேற்கட்டமைப்பு ஏற்படுகிறது- இதுவே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை ஆகும்.

 அடுத்து அரசியல் பொருளாதாரம்.

 அரசியல் பொருளாதாரம் என்பது, ஒர் உற்பத்தி முறையின் தோற்றம் - வளர்ச்சி - வீழ்ச்சி ஆகிவற்றைப் பற்றி பேசுகிறது.  ஐரோப்பாவைப் பொருத்தளவில் நான்கு உற்பத்தி முறைகளை அது சந்தித்துள்ளது,

 முதல் உற்பத்தி முறை பழங்குடி சமூகமான ஆதி கம்யூனிச சமூக உற்பத்தி முறை, 2) அடிமை சமூக உற்பத்தி முறை, 3) நிலப்பிரபுத்துவ சமூக உற்பத்தி முறை, 4) இன்றைய முதலாளித்துவ சமூக உற்பத்தி முறை.

 இந்தியாவில் இதே உற்பத்தி முறையின் வடிவங்களை நாம் பார்க்க முடியாது. கண்டிப்பாக ஆதி கம்யூனிச சமூகம்- என்கிற பழங்குடி சமூகம் காணப்பட்டுள்ளது.

 அடுத்து கூறப்பட்ட அடிமை சமூகம் உற்பத்தி முறை  என்பது இந்தியாவில் காணப்படவில்லை. அடிமைகள் இருந்ததற்கான சான்றுகள் நம் நாட்டில் கிடைத்துள்ளன. ஆனால் அதை ஒரு தனித்த உற்பத்தி முறையாகக் கூறிட முடியாது.

 இந்திய சாதி முறை ஒரு வகையில் அடிமை சமூக உற்பத்தி முறையை நினைவுபடுத்துகிறது என்று கூறலாம்.

 இந்தியாவில் இன்று நிலவும் உற்பத்தி முறை முதலாளித்துவ உற்பத்தி முறை ஆகும். இதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.

 அரசியல் பொருளாதாரம், ஒவ்வொரு உற்பத்தி முறையின் தோற்றம் வளர்ச்சி விழ்ச்சியைப் பற்றி விளக்குகிறது என்று பார்த்தோம். மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்கிற நூல் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சியைப் பற்றி பேசுகிறது. அரசியல் பொருளாதாரம் பற்றிய அறிமுகத்துக்கு இது போதும்.

 முதலாளித்துவம் எப்படி உழைப்பாளர்களை சுரண்டுகிறது என்பது பற்றியும் உபரி மதிப்பு பற்றியும் நாம் விவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய அறிமுகத்துக்கு இது போதும் என்று கருதுகிறேன்.

 அடுத்து விஞ்ஞான கம்யூனிசம்.

 ஆதி கம்யூனிச சமூகத்தின் சிதைவில் இருந்தே வர்க்க சமூகம் தோன்றுகிறது.

 பழங்குடிகளில் சிலர் பணக்காரர் என்றோ - பலர் ஏழை என்றோ இருப்பதில்லை. கிடைப்பதை அந்த சமூகத்தில் உள்ளவர்கள் சமமாகவே பங்கிட்டுக் கொண்டனர். அதனால் அங்கே பணக்காரன் ஏழை என்கிற பிரிவு தோன்றிவில்லை.

 பழங்குடி சிதைந்தப் பின்பு தோன்றிய சமூத்தில்தான் பணக்காரன் ஏழை என்கிற வர்க்க பேதம் தோன்றுகிறது. இந்த வர்க்க வேறுபாடுக்குக் காரணம் சொத்துடையே ஆகும். சொத்துடைமைதான் வர்க்க வேறுபாட்டை உருவாக்கியுள்ளது. இந்த வர்க்க வேறுபாட்டை ஒழிக்க வேண்டுமானால் சொத்துடையை ஒழிக்க வேண்டும். கம்யூனிசத்தின் இறுதிக் குறிக்கோள் சொத்துத்துடையை ஒழிப்பதே ஆகும்.

 இந்த சமூகத்தில் உள்ள அனைவரும் நல்ல நிலையில் சமமாக வாழ வேண்டும் என்று பல காலாமாக, பல அறிஞர்கள் நினைத்து வந்தனர். சமூகத்தில் வர்க்க வேறுபாடு தோன்றியதில் இருந்தே இந்தக் கருத்துக்கள் காணப்படுகிறது.

 ஆனால் அவர்கள் இந்த சொத்துடைமையை அழிக்காமல் பணக்காரரின் தயவில் அனைவரையும் வாழ வைத்திடலாம் என்று கருதினர். ஆனால் சொத்துடைமை சமூகத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதை எதார்த்த அனுபவம் நமக்குக் காட்டுகிறது.

 மார்க்சுக்கு முன்பு மூன்று கற்பனாவாத சோஷலிஸ்டுகள் இருந்தனர். 1) சான்-சிமோன், 2) ஃபூரியே 3) ராபர்ட் ஓவன். இம் மூவரும் ஒரு வகையில் மேதைகளே.

 தொடக்கக் காலத்தில், முதலாளித்துவ உற்பத்தியின் பெருக்கத்தைப் பார்க்கும் போது சமூக தேவைகள் நிறைவு பெற்றுவிடும் என்றே முதலில் பொதுவாக நம்பப்பட்டது. ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையிலான, தொழில் வளர்ச்சி, உழைப்பாளி மக்களுக்கு வறுமையையும், பெரும் துயரத்தையுமே தந்தது.

       இதனை பார்த்த கற்பனாவாத மேதைகள், முதலாளித்து சமூக அமைப்பு முறையை கண்டித்தனர், அதன் மறைவைப் பற்றி கனவு கண்டனர், அதற்கு மாற்றாக ஒரு புதிய சமூக அமைப்பை வடிவமைத்துக் கொண்டனர். 

       இம்மேதைகள் முதலாளித்துவ சமூகத்தின்மீது வைத்த விமர்சனம் மிகவும் கடுமையானது. முதலாளித்துவத்துக்கு முந்திய சமூகங்கள் எப்படி குறைபாடு உடையதாக இருந்ததோ அதைப் போலவே முதலாளித்துவ சமூகமும் குறைபாடு உடைதாகக் காணப்படுகிறது. எப்படி முந்திய சமூகம் தூக்கி எறியப்பட்டதோ அதேபோல இந்த முதலாளித்துவ சமூகமும் தூக்கி எறியப்படும் என்று கற்பனாவாதிகள் கருத்தினர்.

       கற்பனாவாதிகள் வாழ்ந்த காலத்தில் முதலாளித்துவம் வளரும் தறுவாயில் இருந்து, அதனால் அவர்களின் அறிவு, எல்லைக்கு உட்பட்டதாகவும் வரம்பிடப்பட்டதாகவும் இருந்தது.

 முதலாளித்துவம் தொடக்கக் கட்டத்தில் இருந்ததால் கற்பனாவாதிகளால் மூலதனத்தின் ஆதிக்கம், முதலாளித்துவத்தின் சுரண்டலின் ஊற்று ஆகியவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை

     முதிர்ச்சியற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிலைமைகளுக்கும், முதிர்ச்சியற்ற வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்தாய் முதிர்ச்சியற்ற கோட்பாடுகளை கற்பனாவாதிகள் முன்வைத்தனர்.

 அதாவது கற்பனாவதிகளின் கோட்பாடு முதிர்ச்சி அற்று இருந்ததற்குக் காரணம் அன்றைய முதலாளித்துவம், வளர்ச்சி பெற்று இருக்கவில்லை. முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையேயான பகை முற்றவில்லை, அதனால் இந்த கற்பனாவாதிகளின் கோட்பாடு இதற்கு ஏற்ப முதிர்ச்சியற்ற கோட்பாடாக இருந்தது.

1840களுக்குப் பிறகு முதலாளித்துவம் முதர்ச்சியடையத் தொடங்கியது. முதலாளித்துவத்தை முழுமையாக ஆராய்ந்து அறிந்து கொள்ளும் வகையில் வளர்ந்திருந்தது. மார்க்சின் கண்ணோட்டம் விஞ்ஞானத் தன்மை உடையதாக இருப்பதற்கு இதுவே காரணமாகும்

முதலாளித்துவ உற்பத்தி முறையின், உள்முரண்பாட்டின் வெளிப்பாடே பொருளாதார நெருக்கடி என்று மார்க்ஸ் கண்டுபிடித்தார்.

இந்த நெருக்கடி என்பது யாரோ செய்த தவறுகளினால் உருவானது அல்ல, அது முதலாளித்துவ உற்பத்தியின் உள் முரண்பாட்டினால் ஏற்படுகிறது. இந்த உலகம் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்திதுள்ளது. 2007- 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை நாம் நேரில் கண்டுள்ளோம். இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகவே, சோஷலிச சமூக மாற்றம் ஏற்படுவதாக மார்க்ஸ் கூறினார்.

 சோஷலிச மாற்றம் என்பது தனிப்பட்ட நபரின் விருப்பத்தின் அடிப்படையில் உருவாவதில்லை, முதலாளித்துவ உற்பத்தி முறையின் நெருக்கடிக்குத் தீர்வாக சமூக மாற்றம் ஏற்படுகிறது என்று மார்க்ஸ் கூறினார்.

       மார்க்சின் வாழ்க்கையும் அவரது படைப்பான மார்க்சியத்தையும் மிகமிக சுருக்கமாக இன்று பார்த்தோம்.

 அறிமுகத்துக்கு இது போதும் என்று கருதி எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.