Monday 7 October 2019

புதிய பாதையினரின் மார்க்சியமற்றப் பார்வை


உழைப்புப் பிரிவினையின் வளர்ச்சி சரக்கு உற்பத்தியைத் தோற்றுவிக்கிறது, சரக்கு உற்பத்தி முதலாளித்துவத்தைத் தோறுவிக்கிறது. முதலாளித்துவம் தன்னுகர்வுக்காக உற்பத்தி செய்யாது சமூகத் தேவைக்காக உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவத்தில் உழைப்புப் பிரிவினை சமூக உற்பத்தியாக வளர்ச்சி அடைகிறது.

முதலாளித்துவ உற்பத்திக்கு முன்பு வரை தனிப்பட்ட உற்பத்தியாளர் தமது கரங்களது உழைப்பாலோ, தமது குடும்பத்தினரின் உழைப்பாலோ உற்பத்தி செய்வதே வழக்கமாக இருந்தது. இத்தகைய உற்பத்தியாளர் உற்பத்திப் பொருளைச் சுவீகரிக்கத் தேவையில்லை. இயல்பாகவே அது முற்றிலும் அவருக்கு உரியதாகிறது. ஆனால் முதலாளித்துவ உற்பத்தியில் இது போல் இல்லை.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் உழைப்புப் பிரிவினையின் வளர்ச்சியால் உற்பத்தி சமூகமயமாகிவிட்டது. ஒவ்வொரு உற்பத்தியாளரும் பிற உற்பத்தியாளரை சார்ந்தே இருக்க வேண்டி வருகிறது. அதாவது தனது தொழிற்கூடத்திற்கு தேவையான உற்பத்திச் சாதனங்களான இயந்திரத்தை தாமே உற்பத்தி செய்திடாது, பிற உற்பத்தியாளர் செய்ததையே வாங்கிப் பயன்படுத்த வேண்டியதாகிறது. அதே போல் கச்சாப் பொருளையும் பிற உற்பத்தியாளர் செய்ததை நம்பியே இருக்க வேண்டியுள்ளது.

முதலாளித்துவ உற்பத்தியில் உற்பத்தியானது சமூகமயமானப் பின்பும், உழைப்பில் தான் நேரடியாக ஈடுபடாதப் போதும், முற்றிலும் ஏனையோர் உழைப்பின் உற்பத்திப் பொருளாய் இருந்த போதிலும் முதலாளியானர் அதைத் தாமே முன்பு போல் தொடர்ச்சியாகச் சுவீகரித்துக் கொள்கிறார்.

உற்பத்தி சாதனங்களும் மற்றும் பொருளுற்பத்தியும் சாராம்சத்தில் சமூகமயமாவிட்டது. சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்திக்கும், முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடயிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துககும் இடையிலான பகைமையாய் வர்க்கப் போராட்டமாய் வெளிப்படுத்திக் கொள்கிறது.

உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் உற்பத்தியின் பலன்களைக் கைப்பற்றிக் கொள்ளும் தனியார் முதலாளித்துவ வடிவத்திற்கும் இடையே உள்ள முரண்பாடே- முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடாகும்.

வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் இந்த முதலாளித்துவம், அதாவது முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக – நீதிமூலதனமாக – உலகமயமாதலாக வளர்ச்சியுறும் போது இந்த முரணும் வளர்ச்சியடைந்து முற்றுகிறது. ஒவ்வொரு மறுவுற்பத்தியின் போதும் இந்த முரணையும் சேர்த்தே  மறுவுற்பத்தி உற்பத்தி செய்கிறது. சமூகமயமான உற்பத்திக்கும் தனிவுடைமையிலான சுவீகரிப்புக்கும் இடையேயான இந்த முரண், சமூகமயமான உற்பத்திக்கு ஏற்ப தனிச்சொத்துடைமையை பொதுச்சொத்துடைமையாக மாற்றும் வரை தீருவதில்லை.

இந்த முரண்பாடு, முதலாளியையும் தொழிலாளியையும் சாராத புறநிலையிலான விதியாகும். இதனை மனித சிந்தனையைக் கொண்டு மாற்றிவிட முடியாது. இந்த முடிவு, மார்க்சிய அரசியல் பொருளாதாரம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் அணுகுமுறையால் எடுக்கப்பட்டது. இது மார்க்சியம். இதற்கு மாறானது வேற இயம்.

புதிய பாதையினர், இன்றைய கார்ப்பரெட் முதலாளிகள், சோஷலிச உற்பத்தி முறையின் திட்டமிட்ட பொருளாதாரத்தின் சிறப்பம்சங்களை தன்மயமாக்கிக் கொண்டனர் என்று கூறுகின்றனர். இது இயக்கவியலற்ற பார்வையாகும். திட்டமிட்ட பொருளாதாரம் தனிச்சொத்துடைமைப் பொருளாதாரத்தற்கு முரணானதாகும். இதனை கார்ப்பரெட் முதலாளிகளின் சிந்தனை சக்தியால் தகவமைத்துக் கொண்டதாக புதிய பாதையினர் கூறுகினறனர். இது மார்க்சிய அடிப்படைக்கு பொருத்தமற்றதாகும். மார்க்சியத்திற்கு முன்பானவர்களின் பார்வையான சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்றதையே அணுகுமுறையாகக் கொண்டுள்ளனர்.

வாழ்நிலை தான் சிந்தனையைத் தீர்மானிக்கும், சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்காது (அடித்தளம் தான் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கும்) என்பதே மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாதமாகும். புதிய பாதையினர் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை புறக்கணித்தால் இயக்கவியல் பார்வையற்ற கதம்பப் போக்கால் இத்தகைய முடிவிற்கு வருகின்றனர்.

     வர்க்க சமூகம் முழுமையாக நீங்கும் வரை, அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற மார்க்சியக் கோட்பாடு செயற்படும். வளர்சியுற்ற கம்யூனிச சமூகத்தில் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பர வினைபுரியும். அதாவது நினைத்தை நினைதப்படி செய்து முடிபதற்கான புறநிலைத் தடைகள் முழுமையும் நீக்கப்பட்டிருக்கும்.

இந்த மார்க்சிய அடிப்படை புரிதல் இல்லாமல் (குறிப்பாக பலப்பிரயோகக் கோட்பாடு) இந்தப் புதிய பாதையினர், அணுவாயுதத் தயாரிப்பு, மற்றும் தன்வமாதல் என்கிறதை மட்டும் எடுத்துக் கொண்டு சாத்தியமில்லாததை சாத்தியப்பட்டதாகக் கருதிக் கொண்டிருக்கின்றனர்.

     காரியத்திற்கு தேவையான பொருளாதாரக் காரணங்களைக் கணக்கில் கொள்ளாது (மார்க்சிய அடிப்படையில் அல்லாது) தங்களது முடிவுகளை எடுக்கின்றனர். மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தையும் வரலாற்றியல் பொருள்முதல்வாததையும் புறக்கணித்ததால் புதிய பாதையினர், எனது எதிர்வினையை புரிந்து கொள்ளாது இருக்கின்றனர்.
************************************************************************************

புதிய பாதையினரின்பழைய பாதை:-








Tuesday 1 October 2019

“புதிய பாதையினரின்” பழைய பாதை:-


(எந்தவித பொருளாதாரக் காரணங்களைச் சுட்டிக்காட்டாமல், அணுவாயுதக் கண்டுபிடிப்பை முன் வைத்து, மார்க்சீய திட்டமிட்ட பொருளாதாரத்தின் சிறப்பம்சங்களை ஏகாதிபத்தியம் உள்வாங்கிவிட்டதாகக் கூறி, மார்க்சிய அடிப்படைகளைப் புறக்கணிக்கக் கோருகிற புதிய பாதையினரின் கருத்திற்கு எனது உடனடி எதிர்வினை)


1) புதிய பாதையினர்:- // அமரிக்கா தற்செயலாகக் கண்டு பிடித்த, தயாரித்த அணுக்குண்டே, உலகப்புரட்சி ஏற்படாமல், உலகில் விரைவாகச் சோசலிசம் மலராமல், உலகச் சமூகத்தில் பெரும் தாவிப் பாய்ச்சலிலான முன்னேற்றம் ஏற்படாமல் தடுத்தது.//

அணு ஆயுதக் கண்டுபிடிப்பின் தற்செயலால் மார்க்சியம் எதிர்பார்த்த சமூக மாற்றங்களுக்குத் தடை ஏற்பட்டுவிட்டதாகக் கூறுகிற புதிய பாதையினர் இந்த “தற்செயல்” குண்டைத் தூக்கி மார்க்சியத்தின் மீது போடுகின்றனர். பழைய மார்க்சியம் இனிமேல் செல்லாது என்று அறிவிக்கின்றனர். இதற்கு ஆதரவாக மார்க்சின் பெயரையும் இழுக்கின்றனர்.

புதிய பாதையினர்:- // மாமேதை மார்க்ஸ், "வரலாற்று (சமூகத்தின்) வளர்ச்சியின் வேகத்தையும் மந்தத்தையும் நிர்ணயிப்பது சில தற்செயலான நிகழ்ச்சிகளே" என்றார்.🌷5//

மார்க்ஸ் கண்டுபிடித்த சமூகம் பற்றிய வளர்ச்சியின் விதியை தற்செயல் நிகழ்ச்சியாகப் புதிய பாதையினர் சுருக்கிவிடுகின்றனர். மார்க்ஸ் கண்டுபிடித்த சமூகத்தின் உந்துவிசையான விதியை பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்று எங்கெல்ஸ் நமக்கு விளக்குகிறார்.

“வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப் போராட்டங்களும், அவை அரசியல், மத, தத்துவஞான அல்லது வேறு ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் அவை அநேகமாகச் சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே, இந்த வர்க்கங்கள் இருப்பதும் அதன் காரணமாக இவற்றுக்கிடையே ஏற்படுகின்ற மோதல்களும் கூட அவற்றின் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்பது அந்த விதியாகும். இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றம் பற்றிய விதிக்கு உள்ள அதே முக்கியத்துவம் வரலாற்றில் இந்த விதிக்கு உண்டு.”
(லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் - எங்கெல்சின் முன்னுரை)

இவ்வாறு மார்க்சியத்தைச் சிதைத்து நீர்த்துப் போக வைக்க முடியும் என்று நினைக்கின்றனர். சமூகம், மனித விருப்பத்தைச் சார்ந்ததல்ல என்பதை மார்க்சியம் தெளிவாவே சுட்டிக்காட்டியுள்ளது.

2) புதிய பாதையினர் அணுவாயுத பூச்சாண்டி காட்டி பயமுறுத்தித்துகின்றனர். இது போன்ற பல பூச்சாண்டிகளை மார்க்சியம் பார்த்துவிட்டது.

புதிய பாதையினர்:- “அணுவாயுதம் கண்டுபிடிக்கப் பட்டு, ஜப்பானில் போடப்பட்டதும், அதுவரை வர்க்கப் போராட்டத்தின் முக்கியத் தளமாக இருந்த, முன்னிலைப் பெற்றிருந்த அரசியல் போராட்டத்தின் முக்கியத்துவம் குறைந்து, அது பின்னிலைக்குப் போய் விட்டது.”


3) அணுவாயுத பூச்சாண்டியைக் கண்டு புதிய பாதையினர் தான் பயந்துள்ளனர். புரட்சியை மறுதலித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

புதிய பாதையினர்:- “..உலகில் எங்கும் அணுவாயுத சக்திகளின் ஆதரவு இல்லாமல் ஆயுதப் போராட்டத்தால் யாரும் யாரையும் வெல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதனால் பாட்டாளி வர்க்கமும் உலகின் எல்லா இடங்களிலும் ஆயுதப் போராட்டத்தால் ஆளும் வர்க்கங்களை வெல்ல முடியாது என்ற புதிய நிலைமை, மார்க்சீய லெனினிய மூலவர்கள் எதிர்பாராத புதிய நிலமை ஏற்பட்டது.”

4) சோஷலிசப் பொருளாதாரத்திற்கான வளர்ச்சி நிலையைக் கணக்கில் கொள்ளாமல் ஏகாதிபத்தியவாதிகள் மன விருப்பப்படி சோசலிச திட்டமிட்ட பொருளாதாரத்தின் சிறப்பம்சங்களை உள் வாங்கினார்கள் என்று புதிய பாதையினர் கூறுகின்றனர். வரலாற்றியல் பொருள்முதல்வாததை ஏற்றுக் கொண்டவர்களால் இவ்வாறு கூறமுடியுமா? அணுவாயுத பூச்சாண்டியைக் காட்டி வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைக் கைவிட்டவர்களாலேயே இவ்வாறு கூறமுடியும்.

புதிய பாதையினர்:- //ஏகாதிபத்தியங்கள், தங்களது பழைய திட்டமிடாத போட்டி உற்பத்தியை தொடர்ந்தால், மூன்றாம் உலகப் போர் வரும். அணுப்போரும், பேரழிவும் ஏற்படும். அதன் முடிவில் உலகப் புரட்சி நடக்கும். அதனால் உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்கள் ஒரேயடியாக வீழும் என்பதைத் தெளிவாக உணர்ந்தார்கள்.
அதனால் தங்களது அக அழிவுக் கூறான, தடையற்ற போட்டிப் பொருளாதார உற்பத்தி முறையைக் கைவிட்டார்கள். சோசலிச திட்டமிட்ட பொருளாதாரத்தின் சிறப்பம்சங்களைப் படிப்படியாக வேறு வழியின்றி உள் வாங்கினார்கள். மார்க்சீய பொருளாதாரத்தையும், மக்கள் நல திட்டங்களையும் உள்வாங்கிய புதிய வகை அமைப்பாக மாறினார்கள்.....//

மார்க்ஸ் குறிப்பிடுவதைப் போல் நினைத்தபடி அதாவது தீர்மானிக்கிறபடி திட்டமிடுவதற்குக் குறிப்பிட்ட பொருளாதார அடித்தளம் அவசியம். ஆனால் அணுவாயுத பூச்சாண்டியைக் காட்டி, ஏகாதிபத்தியவாதிகள் சோசலிச திட்டமிட்ட பொருளாதாரத்தின் சிறப்பம்சங்களை உள்வாங்கிக் கொண்டு செயற்படுத்துவதாக வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைக் கைவிட்ட புதிய பாதையினர் கூறுகின்றனர்.

“பொருளுற்பத்தி நிகழ்முறையின் அடிப்படையிலான சமுதாய வாழ்க்கை நிகழ்முறையானது சுதந்தரமாக ஒன்றுசேர்ந்த மனிதர்கள் நிகழ்த்தும் உற்பத்தியாகக் கருதப்பட்டு, தீர்மானிக்கப்பட்ட திட்டத் துக்கேற்ப அவர்களால் உணர்வுபூர்வமாக இயக்கப்படும் நிலை வரும் வரை தன் மாயத் திரையை நீக்கி விடுவதில்லை . ஆயினும் சமுதாயம் இந்நிலையை அடைய குறிப்பிட்ட பொருளாயத அடித்தளம் அல்லது வாழ்க்கை நிலைமைகளின் தொகுப்பு தேவைப் படுகிறது. இவையோ ஒரு நீண்ட, வேதனை வாய்ந்த வளர்ச்சி நிகழ்முறையின் தன்னியல்பான விளைவாகும்.”
(மூலதனம் தொகுதி 1 பக்116)

மார்க்ஸ் குறிப்படுகிற மாதிரி நீண்ட காலம் தேவையில் அணுவாயுத பூச்சாண்டியைக் காட்டி ஏகாதிபத்திய வாதிகள், இன்றே செய்து காட்டுவர். என்பதே புதிய பாதையினரின் கருத்து. அடிப்படை மார்க்சியம் புரியாத பிதற்றல்களை இன்றைய மார்க்சியம் என்று புதிய பாதையினர் கூறிவருகின்றனர்.

5) கீழே கொடுக்கப்பட்ட புதிய பாதையினரின் கருத்து அப்பட்டமான ஏகாதிபத்திய அடிவருடிகளின் கருத்தேயாகும். இதனை எந்த மார்க்சியர்களும் மார்க்சியமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அது மட்டுமல்ல ஏகாதிபத்தியதிய அறிஞர்கள்கூட இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மார்க்சிய போர்வை அணிந்த இந்தப் புதிய பாதையினரால் தான் இவ்வாறு கூறமுடியும்.

புதிய பாதையினர்:- "ஏகாதிபத்தியங்களால், சோசலிசப் பொருளாதாரத்தின் திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்கி, முதலாளிகளால் சந்தையைச் சமாதானமாகப் பகிர்ந்து கொண்டு உற்பத்தியில் ஈடுபட முடியாது, முதலாளிகள் ஆவதற்கும், இலாபமீட்டுவதற்காகப் போட்டிப் போட்டு உற்பத்திச் செய்வதையும் எல்லா முதலாளித்துவ நாடுகளின் அரசுகளும் சேர்ந்து கட்டுப் படுத்தவோ, தடுக்கவோ முடியாது என்பதே, அணுக்குண்டு கண்டு பிடிப்பதற்கு முந்தைய அரசியல் நிலமை.

அதனால்தான் மார்க்சீய மூலவர்கள், முதலாளிகளால் சந்தையைச் சமாதானமாகப் பகிர்ந்து கொண்டு, திட்டமிட்ட உற்பத்தியில் ஈடுபட்டு, யுத்தம் செய்யாமல் வாழவும், ஆளவும் முடியாது என்று கருதினார்கள். மார்க்சீய மூலவர்கள் எதிர்பாராத அணுக்குண்டு கண்டு பிடிப்பாலேயே, ஏகாதிபத்தியங்களால், சமாதானம் செய்து கொண்டு, திட்டமிட்ட உற்பத்தியில் ஈடுபட்டு, நீடித்து வாழவும், ஆளவும் முடிகிறது.
திட்டமிட்ட பொருளாதார உற்பத்தியில் பாட்டாளி வர்க்க அரசுகளால் மட்டுமே ஈடுபட முடியும் என்ற மார்க்சீய மூலவர்களின் கருத்தும், கணிப்பும், பழைய அரசியல் நிலமைகளின் படி சரியானதது தான். ஆனால், யுத்தங்களைத் தவிர்த்தாக வேண்டிய புதிய அரசியல் நிலமையில், ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசுகளால் திட்டமிட்ட பொருளாதார உற்பத்தி முறையில் ஈடுபட முடியும். 🐙11
..
இந்தத் திட்டமிட்ட போட்டி உற்பத்தி முறையானது, பாட்டாளி வர்க்கத்தின் திட்டமிட்ட, போட்டியற்ற சோசலிச உற்பத்தி முறையை விட மேம்பட்ட உற்பத்தி முறையாகும்."

6) ஆதாரமற்ற இந்தப் பிதற்றல்களுக்கு எல்லாம் பதிலளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். மார்க்ஸ் காலத்தில் பார்த்த வணிக நெருக்கடியும் 1915 & 1934 வாக்கில் ஏற்பட்ட முதல் & இரண்டாம் பெரும் பொருளாதார நெருக்கடியும் ஒன்றல்ல, ஆனால் மார்க்ஸ் குறிப்பிட்டப்படியே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் பிறகும் 2008 வாக்கில் மேலைநாடுகளில் பொருளாதா நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2008ல் தான் மார்க்ஸ் எழுதிய பொருளாதார நெருக்கடியைப் பற்றி விரிவாகப் பேசுகிற மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் பெரும் அளவு விற்கப்பட்டது. தற்போது நடைபெறுகிற நெருக்கடிகள் மார்க்ஸ் சந்தித்த வணக நெருக்கடியைப் போல் இல்லை என்பது உண்மை தான், மார்க்ஸ் கூறுகிற காரணத்தின் படியே பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகிறது.

தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள வாகனத் துறை நெருக்கடியும் மிகைவுற்பத்திக் காணரமாக விற்பனை இல்லாது தேங்கிக் கிடக்கிறது. திட்டமிட்ட பொருளாதாரம் என்பது முதலாளித்துவ ஏகாதிபத்திய காலகட்டத்தல் சாத்தியமில்லை என்பதற்கு இவைகளே சாட்சிகள்.

புதிய பாதையினர்:- "...மார்க்சீய திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்கிய ஏகாதிபத்தியங்கள், சமூகத்தின் முக்கியத் தேவைகளையும், முக்கியப் பிரிவினர்களின் தேவைகளையும் சரியாகக் கணக்கில் எடுத்து, அதனை எப்படி, யார் யார் மூலம் எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, அந்த உற்பத்தியை ஒரே முதலாளியிடமோ, ஒரே முதலாளிய கார்பரேட்டிடமோ விடாமல், முதலாளிகளின் அழுத்தங்களுக்கு ஏற்ப பல முதலாளிகளிடம் பிரித்துக் கொடுத்து, முதலாளிகளிடையே திட்டமிட்ட போட்டியை ஏற்படுத்துகிறார்கள். 🌻12

இந்தத் திட்டமிட்ட போட்டி, எல்லைக்கு உட்பட்ட போட்டி உற்பத்தி முறையில், உற்பத்தி திறன் வேகமாக அதிகரிக்கிறது. உற்பத்தி கருவிகளும், தொழில் நுட்பமும் விரைவாக முன்னேறுகிறது, மக்களின் வித விதமான தேவைகளுக்கும், ரசனைகளுக்கும் ஏற்ப, வித விதமான பொருட்கள் விரைவாக உற்பத்தியாகிறது, உற்பத்தியான பொருட்கள், வணிக முதலாளிகளால் விரைவாகச் சந்தைப் படுத்தப் படுகிறது.
இதனால் மிகை உற்பத்தியும், ஆலைகள் மூடலும் பெருமளவுக்குத் தவிர்க்கப் படுகிறது."

7) புதிய பாதையினரின் அடிப்படைக் குறிக்கோள் இதுதான். ஏகாதிபத்தியம் படிப்படியாகத் தளர்ந்து அழிந்துவிடும். புரட்சிகர மார்க்சிய வாதிகள் புரட்சிக்கான புறநிலைமைகளைக் கண்ட போதும் அதற்கான அகநிலையைத் தயாரிக்காமல் சோம்பிக்கிடக்க வேண்டும்.

வர்க்கப் போராட்டத்தைப் புதிய பாதையினரின் விருப்படி தடை போட முடியாது. ஏன் என்றால் வர்க்கப் போராட்டம் யாருடைய மனதை சார்ந்து எடுக்கப்படும் முடிவல்ல, முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் உள்முரண்பாட்டின் வெளிப்பாடு என்கிறது மார்க்சியம்.

புதிய பாதையினர்:- “மார்க்சீய லெனினிய அடிப்படையில், பழைய ஏகாதிபத்தியங்கள், மார்க்சீயத்தை மேற்கண்டவாறு உள்வாங்கி, புதிய ஏகாதிபத்தியமாக மாறி, ஒரேயடியாக அழியாமல், படிப்படியாகத் தளர்ந்து, அழிந்து வருகிறது என்கிறது.”

புதிய பாதையினர் வரலாற்றியல் பொருள்முதல்வாததைப் புறக்கணித்ததால் வர்க்கப் போராட்டத்தைப் புறக்கணிக்கின்றனர். வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பார்வை கைவிட்டதால் எந்தவித பொருளாதாரக் காரணங்களும் இல்லாமல் மனவிருப்படி ஏகாதிபத்தியவாதிகள் மார்க்சீய திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்கிக் கொண்டதாகக் கூற முடிகிறது.

புதிய கண்டுபிடிப்பான வரலாறு பற்றிய பொருள்முதல்வாதத்தைக் கைவிட்டு “சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது” என்கிற மார்க்சுக்கு முன்பான வரலாறு பற்றிய பழைய கருத்துமுதல்வாத கண்ணோட்டத்திற்குப் புதிய பாதையின் சென்றுவிட்டனர். இவர்கள் புதிய பாதையினர் கிடையாது மிகமிகப் பழைய பாதையினர்.

“கடந்த வரலாறு அனைத்தும் புதிதாய்ப் பரிசீலனை செய்யப்படுவதை இந்தப் புதிய உண்மைகள் அவசியமாக்கின. இதன்பின் கடந்த வரலாறு அனைத்துமே (அதன் முதிர்ச்சியற்ற புராதன கட்டங்களைத் தவிர்த்து) வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்பது புலனாயிற்று; போரிடும் இந்தச் சமூக வர்க்கங்கள் எப்பொழுதுமே பொருளுற்பத்தி பரிவர்த்தனை முறைகளின் விளைவாய் உருவாகின்றவை - சுருங்கக் கூறுமிடத்து அவற்றின் காலத்திய பொருளாதார நிலைமைகளின் விளைவாய் உருவாகின்றவை- என்பது புலனாயிற்று. சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்பொழுதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால் தான் வரலாற்றின் அந்தந்தக் காலக் கூறுக்குமுரிய நீதிநெறி அரசியல் நிறுவனங்களும் மற்றும் சமயக் கருத்துக்களும் தத்துவவியல் கருத்துக்களும் பிற கருத்துக்களுமாகிய மேற்கட்டுமானம் அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காண முடியும். ……… முடிவில் இப்பொழுது கருத்துமுதல்வாதம் அதன் கடைசிப் புகலிடமாய் அமைந்திருந்த வரலாற்றின் தத்துவவியலிலிருந்தும் விரட்டப்பட்டது. இப்பொழுது வரலாற்றுக்குப் பொருள்முதல்வாத விளக்கம் முன் வைக்கப்பட்டது. இது காறும் செய்யப் பட்டது போல மனிதனது உணர்வைக் கொண்டு அவனுடைய வாழ்நிலைக்கு விளக்கம் கூறுவதற்குப்பதில் மனிதனது வாழ்நிலையைக் கொண்டு அவனுடைய உணர்வுக்கு விளக்கம் கூறுவதற்கு ஒரு வழி கண்டறியப்பட்டது.”
(டூரிங்கக்கு மறுப்பு 48-49)

8) அணுவாயுதத்தை அடுத்து டார்வினை வைத்து விளையாட்டுக் காட்டுகிறார்கள் இந்தப் புதிய பாதையினர்.


புதிய பாதையினர்:- “டார்வினுக்கும், அவருடைய பரிணாமக் கோட்பாடுக்கும், மார்க்ஸ் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்தார். மார்க்சின் சிறப்பம்சமே, அவரது பொருளாதாரத்தின் அடிப்படைகள் பற்றிய ஆழமான ஆய்வும், உபரி மதிப்பின் தோற்றம், அதன் மூலதன மாற்றம், அது சமூகத்தின் அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தும் தாக்கம் போன்றவற்றை ஆராய்ந்தறிந்து விளக்கியதுதான்.”

      டார்வினுக்கு மார்க்சியர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர் ஆனால் எச்சரிக்யோடு கொடுத்தனர். எங்கெல்சின் எச்சரிக்யை இதோ, “டார்வினுடைய போதனையில் பரிணாமக் கோட்பாட்டை நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் டார்வினுடைய நிரூபண முறை (பிழைப்புப் போராட்டம், இயற்கைத்தேர்வு முறை) புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உண்மையைப் பற்றி முதல், தற்காலிகமான, அரைகுறையான வெளியீடு மட்டுமே என்று கருதுகிறேன்.” (பி.லா.லவ்ரோவுக்கு எழுதிய கடிதம், நவ. 1875) இதே கடிதத்தில் டார்வினை முன்வைத்து தோன்றுகிற மோசமான பொருளியலாளர்களைக் கண்டித்துள்ளார். பிழைப்புப் போராட்டம், இயற்கைத் தேர்வு போன்றவற்றில் பொருளாயத புறநிலைமைகளைப் புறக்கணிப்பதை மார்க்சியம் ஏற்றுக் கொள்ளவில்லை. பிழைப்புப் போராட்டமே கம்யூனிச சமூகத்தைப் படைத்திடாது. அதற்கான புறநிலை வளர்ச்சி அவசியம்.

புதிய பாதையினர் மார்க்சின் சிறப்பம்சம் என்று கூறி மார்க்சியத்தைப் புரட்டுகின்றர். அடித்தளம் அனைத்துத் துறைகளிலும் (மேற்கட்டமைப்பிலும்) தாக்கம் செலுத்துவதை மார்க்ஸ் ஆராய்ந்தார் என்று மார்க்சின் கண்ணோட்டம் தலைகீழாகப்பட்டுள்ளது.

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கும் (நிர்ணயிக்கும்), மேற்கட்டமைப்பு அடித்தளத்தன் மீது தாக்கம் செலுத்துகிறது என்பதே மார்க்சின் புதிய கண்டுபிடிப்பு. மார்க்சுக்கு முன்பு வரை வரலாறு பற்றிய கண்ணோட்டம் மேற்கட்டமைப்பே அடித்தளத்தைத் தீர்மானிக்கும் (சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கும்) என்று கருத்துமுதல்வாதம் மற்றும் மார்க்சுக்கு முன்பான பழைய பொருள்முதல்வாதம் கருதிவந்தது. ஆனால் மார்க்ஸ் வரலாற்றைப் பொருள்முதல்வாதப் பார்வையில் முதன்முறையாக அணுகினார்.

“மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும். அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டடம் எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது.

மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு-
 முன்னுரை –மார்க்ஸ்)

மனிதர்களின் சிந்தனை அவர்களுடைய வாழ்க்கை நிலையை நீர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றன என்பதை மார்க்ஸ் நேரடியாகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இதனை எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றோர்கள் தெளிவாக விளக்கியிருக்கின்றனர். மாசேதுங் தமது “முரண்பாடு பற்றி” என்ற நூலில், நெருக்கடி நேரத்தில் மேற்கட்டமைப்புத் தீவிரமாகச் செயற்படும் என்பதற்குப் பதில் தீர்மானிக்கும் என்ற எழுதியுள்ளார். மாசேதுங்கின் கூற்று எவ்வாகையில் தவறு என்பதை எனது வலைப்பூவில் (https://marxphilosophy.blogspot.com/2018/11/blog-post.html) எழுதியுள்ளேன்.

9) “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யில் மார்க்சும் எங்கெல்சும் வைத்த முழக்கத்தையே மார்க்சிய அடிப்படையாக, புதிய பாதையினர் புரிந்து கொண்டு கருத்துப் போராட்டத்தை நடத்துகின்றனர். “பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள்.”

மார்க்சியத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்த முழக்கமே போதும் என்று பலர் நினைத்துக் கொண்டு, இன்றைக்கு இந்த நிலைமை மாறிவிட்டது என்று கூறிவருகின்றனர். புதிய பாதையினரும் இந்தப் போக்கையே கடைபிடிக்கின்றனர்.

புதியவகை உயரிய தொழிலாளர் பிரிவு (superior class of workmen) உருவாவதை மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதனைத் லெனினும் தொடர்ந்து விவரித்துள்ளனர், இவைகளின் தொடர்ச்சியாகத்தான் நவீன மேம்பட்ட பாட்டாளிகளை அணுக வேண்டும். இது பற்றி எனது “லெனின் வாழ்வும் படைப்பும்” என்ற நூலில் எழுதியுள்ளேன்.

“மார்க்ஸ் தாம் எழுதிய மூலதன முதல் தொகுதியில் ஒப்பீட்டு உபரி-மதிப்பின் உற்பத்தி என்ற பகுதியில், இயந்திர சாதனமும் நவீனத் தொழில்துறையும் என்ற அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார். தொழிற்புரட்சியைத் தொடர்ந்து தானியங்கி தொழிற்சாலை (automatic factory) தோன்றிடும் போது தொழில்நுட்பத்தைக் கையாள்கிற புதியவகை உயரிய தொழிலாளர் பிரிவு (superior class of workmen) உருவாவதை மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

“மேம்பட்ட தொழிலாளர் பிரிவு இது, இவர்களில் சிலர் விஞ்ஞானக் கல்வி கற்றவர்கள், மற்றவர்கள் ஒரு தொழிலுக்கு என்றே வளர்க்கப்பட்டவர்கள், இந்தப் பிரிவு ஆலைத் தொழிலாளர் வர்க்கத்துடன் சேர்த்துக் கணக்கிடப்பட்டாலும், அதிலிருந்து வேறுபட்டதாகும். இந்த உழைப்புப் பிரிவினை முற்றிலும் தொழில்நுட்ப வழிப்பட்டது.
தொழிலாளியைக் குழந்தைப் பருவம் முதற்கொண்டே நுணுக்க இயந்திரம் ஒன்றின் பகுதியாக மாற்றியமைத்திடும் விதத்தில் இயந்திர சாதனம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இவ்விதம், அவரது மறுவுற்பத்தியின் செலவுகள் கணிசமாகக் குறைக்கப்படுவது மட்டுமல்ல, வேறு வழியின்றி தொழிற்சாலை முழுவதையும், அதாவது முதலாளிகளையும் அவர் சார்ந்து வாழ வேண்டிய நிலை அதே நேரத்தில் முழுமையாக்கப் படுகிறது.

வேறெங்கும் போலவே இங்கும் சமூக உற்பத்தி நிகழ்முறையினது மேம்பாட்டின் விளைவாய் அதிகரித்த உற்பத்தித் திறனுக்கும், அம்மேம்பாட்டை முதலாளி பயன்படுத்திச் சுரண்டுவதன் விளைவாய் அதிகரித்த உற்பத்தித் திறனுக்கும் இடையில் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

கைத்தொழில்களிலும், பட்டறைத் தொழிலிலும் தொழிலாளி கருவியைப் பயன்படுத்துகிறார், தொழிற்சாலையில் இயந்திரம் அவரைப் பயன்படுத்துகிறது. அங்கே உழைப்புக் கருவியின் இயக்கங்கள் அவரிடம் இருந்து தொடங்குகிறது, இங்கே இயந்திரத்தின் இயக்கங்களை அவர் பின்தொடர வேண்டும்.

பட்டறைத் தொழிலில் தொழிலாளர்கள் உயிருள்ள இயங்கமைப்பின் அங்கங்களாவர். தொழிற்சாலையில் உயிரற்ற இயங்கமைப்பு தொழிலாளியைச் சாராமல் சுயேச்சையாய் இருப்பதையும், அதற்குத் தொழிலாளி உயிருள்ள ஒட்டுவால் ஆகிவிடுவதையும் காண்கிறோம்.”
(மூலதனம் தொகுதி ஒன்று - பக்கம் 568-569, 570-571)

இயந்திரத்தின் ஒட்டுவாலாய் போன தொழில்நுட்ப தொழிலாளர்களின் வேதனைகளையும் இங்கே மார்க்ஸ் தொகுத்துள்ளார். ஆக, தமது உற்பத்திச் சக்தியை விற்கக்கூடிய நிலையில், முதலாளியின் மூலதனத்தை சார்ந்து வாழக்கூடிய சுரண்டப்படும் இந்த தொழிற்நுட்ப தொழிலாளியும் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. இதன் தொடர்ச்சியாக தற்கால நவீன உற்பத்தி முறைக்கு வரும் போது இன்றைய பாட்டாளி தனிச் தேர்ச்சிபெற்ற, அதற்கு சான்றிதழ் பெற்ற, மூளை உழைப்பைச் செலுத்தும் தொழிலாளியாக இருக்கிறார்.

தற்காலத்திய தொழிற்சாலைகள் அதிநவீனமாக மாறிவிட்டது, இங்கே முழுவதும் தானியங்கி இயந்திரங்களையும், கணிப்பொறி இயந்திர மனிதனைக் (computer robot) கொண்டும் இயக்கப்படுகிறது. இதனை இயக்குகின்ற தொழில்நுட்ப தொழிலாளர்கள் தங்களது உடலைவிட மூளையை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதே போல் மூளை உழைப்பை செலுத்துகின்ற தகவல் தொழில்நுட்ப துறையில் பணிசெய்பவர்களில் பலபிரிவுகள் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். உடலுழைப்பைவிட மூளை உழைப்பைச் செலுத்துபவர்களுக்கு இன்றைய நிலையில் அதிகம் ஊதியம் கிடைக்கிறது என்பது உண்மையே. இவர்களிடம் இருந்துதான் மேட்டுக்குடி பாட்டாளிகள் தோன்றுகின்றனர்.

மேட்டுக்குடி பாட்டாளிகளின் மேட்டுக்குடி சிந்தனைகள் எல்லாம் முதலாளித்துவத்தின் செழுமைக் காலத்தில் மட்டும் தான் காணப்படும், தொடர்ந்து வரக்கூடிய பொருளாதார நெருக்கடியால் இவர்களும் நெருக்குதலுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் தங்களது பழைய வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாது என அறிந்திடும்போது இவர்களின் மேட்டுக்குடி சிந்தனை தவிடுபொடியாகிவிடும்.

“…தொழிலாளி வர்க்கத்தில் அதிக ஊதியம் பெறுவோரைக் கூட – இவ்வர்க்கத்தின் மேட்டுக்குடியினைரையும் கூட- தொழில்துறைக் கொந்தளிப்புகள் எப்படிப் பாதிக்கின்றன”25 என்று மேட்டுக்குடி தொழிலாளர்களும் பொருளாதார நெருக்கடியின் போது அவர்கள் எப்படியெல்லாம் பாதித்தனர் என்பதினைப் பற்றிய செய்தியேடுகளில் வந்துள்ள அறிக்கையை மார்க்ஸ் நமக்கு எடுத்துக் காட்டுகிறார். முதலாளித்துவ செழுமையின் போது கிடைக்கின்ற அதிக ஊதியம், பொருளாதார நெருக்கடியின் போது உறுதியற்று போகிறது. செய்திடும் வேலையும் உறுதியற்றது என்பதை உணர்ந்திட்ட மேட்டுக்குடி பாட்டாளிகள் மார்க்சியத்தின் பக்கம் இருப்பர். வரலாறு அறியாத நேர்காட்சி கண்ணோட்டம் கொண்டவர்கள் நெருக்கடியின் போதே மார்க்சியத்தை நாடுவர்.

இந்த மேட்டுக்குடியினரை தனிப் பிரிவான அடுக்காக கொள்ளமுடியாது, தொழிலாளி வர்க்கத்தினுடைய இயக்க வளர்ச்சியில் மாறிச்செல்வதையேக் குறிப்பதாகும் என்கிறார் லெனின்.

“நடுநிலைவாதிகளிடையில், சட்ட முறைமையின் நச்சு நோயால் அரிக்கப்பட்டுப் போனவர்களும், நாடாளுமன்றச் சூழலால் கெடுக்கப்பட்டவர்களுமான வழக்கமான பக்தர்களும், சொகுசான பதவிகளுக்கும் வசதியான வேலைகளுக்கும் பழக்கமாகி விட்ட அதிகார வர்க்கத்தாரும் உள்ளனர். வரலாற்று முறையிலும், பொருளாதார முறையிலும் பார்த்தால் அவர்கள் தனிப் பிரிவான ஓர் அடுக்கு அல்ல, ஆனால் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பழைய கட்டத்தில் இருந்து ஒரு மாறிச் செல்லுதலை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்”
(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்
 தேர்வு நூல்கள் 5 -பக்கம் 77)

பாட்டாளிகளும், பாட்டாளிகளை வழிநடத்தும் கம்யூனிஸ்டுகளும் சமூகப் போராளியாக செயற்பட வேண்டுமானால், நிலவும் சமூகத்தின் பிரச்சினைகளை வரலாற்று முறையில் ஆய்ந்து, அதற்கான முடிவை எடுக்க வேண்டும். இதற்கு மார்க்சியத்தில் காணப்படும் அரசியல் பொருளாதாரம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அப்போதுதான் தமது அரசியல் செயற்பாட்டை விஞ்ஞான அடிப்படையில் அமைத்துக் கொள்ள முடியும்.”

இன்றைய வளர்ச்சிக்கட்டதை மார்க்ஸ் லெனின் வழியில் சிந்திப்பதே மார்க்சியர்களின் கடமை. இந்தக் கடமையைப் புரிந்து கொள்ளாமல் புதிய பாதையினர் மார்க்சையும் லெனினையும் கைவிட முனைகின்றனர்.

வாழ்நிலை சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்றால் இது பொருள்முதல்வாதம்

சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்றால் இது கருத்துமுதல்வாதம்.

இந்தப் பொருள்முதல்வாதப் பார்வை முழுமையாகப் புதிய பாதையினர் புறக்கணித்துவிட்டனர். அவர்கள் மேற்கட்டமைப்பை முதன்மைப்படுத்துகின்றனர். இது மார்க்சியத்திற்கு எதிரானதும். கருத்துமுதல்வாதமாதும் ஆகும்.

புதிய பாதையினர்:- “இன்றிருப்பது, மார்க்ஸ் லெனின் காலத்தைய இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி வர்க்கமல்ல என்றும், பாட்டாளிகளில்/மக்களில் கணிசமானோர் உபரிமதிப்பில்/சுரண்டலில் பங்கு பெறும் வர்க்கங்களாக மாறி விட்டார்கள். இவர்களிடம் வரும் உபரி மதிப்பை சேமித்து குட்டி முதலாளிகளாகவும், முதலாளிகளின், முதலாளிய கார்பரேட்களின் பங்காளிகளாகவும் மாறி வருகிறார்கள். இதன் மூலம் ஓருபுறம் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டே, மறைமுகமாக முதலாளித்துவத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்”

10) 2008ல் மேலைநாடுகளில் பொருளாதார நெருக்கடி சந்தித்த போதும், புதிய பாதையினர் இதனை ஒப்புக்கொள்ளாது. இந்த நிலைமை மாறிவிட்டது என்று கூறுவருகின்றனர்.

புதிய பாதையினர்:- “டார்வினின் தகவமைப்பு கோட்பாட்டின் படி, பழைய ஏகாதிபத்தியங்கள், தமது அழிவுக் கூறான, கட்டுப்பாடற்ற போட்டி உற்பத்தி முறையைக் கைவிட்டு விட்டு, புதிய நிலமைகளில் உயிர் வாழ்வதற்கு தேவையான, மார்க்சீயத்தின் ஆக்கக் கூறான, திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்கி, அதனை தங்களது தனித் தன்மைக்கேற்ப, திட்டமிட்ட போட்டி, கட்டுப் பாட்டுக்கு உட்பட்ட போட்டி எனும் கலப்பு உற்பத்தி முறையாக மாற்றியமைத்து, தங்களை புதிய நிலமைக்கேற்ப தகவமைத்துக் கொண்ட, புதிய ஏகாதிபத்தியமாக மாறி விட்டதை, மரபு வழி மார்க்சீயர்கள் இன்னும் புரிந்துக் கொள்ளாமல் குழம்பியும், தளர்ந்தும் வருகிறார்கள்...

புதிய பாதையினர் பொருள்முதல்வாதத்தைக் கைவிட்டதால் ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் விருப்பப்படி போட்டிகளைத் தவிர்க்க மார்க்சீயத்தின் திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்கிவிட்டார்கள் என்ற முடிவுக்கு வருகின்றனர். மார்க்சியம் கூறுகிற சோஷலிச திட்டமிட்ட பொருளாதாரத்தைச் செயற்படுத்துவற்கான உற்பத்தி சக்திகளினுடைய வளர்ச்சியின் முன்தேவைகளைப் புதிய பாதையினர் கணக்கில் கொள்ளவேயில்லை. தனிச் சொத்துடைக்கும் வினியோகத்திற்கும் உள்ள இயக்கவியல் தொடர்பை புறக்கணிக்கின்றனர்.

ருஷ்ய நவம்பர் புரட்சியின் போது சோவியத் என்கிற சோஷலிச அரசு இருந்த போதும் சோஷலிசப் பொருளாதாரத்தை நிறுவ முடியாமல் லெனின் புதிய பொருளாதாரக் கொள்கையை அமைத்து, விடுபட்ட முதலாளித்துவ ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். புறநிலைத் தன்மையை முற்றப் புறக்கணித்துவிட்டு அகநிலையாகவே அதாவது பொருளாதார முன்நிபந்தனை இல்லாமல் மனமாற்றத்தின் மூலமாகவே, ஏகாதிபத்தியவாதிகள் மார்க்சிய திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்வாங்கிவிட்டத்தாகப் புதிய பாதையினர் கூறுகின்றனர். தொடர்ந்து வருகின்ற பொருளாதார நெருக்கடிகள் புதிய பாதையினரின் இந்தக் கூற்று தவறானது என்பதை நிலைநிறுத்தும்.

புதிய பாதையினர்:- “இத்தகைய புதிய சமூகப் பொருளாதார அரசியல் சூழலில், மக்களே, மக்களின் மூலதனத்தின் மூலம், முதலாளிகளின்றி, மக்களுக்கான உற்பத்தி சாதனங்களை, மக்களின் கார்பரேட்கள் மூலம் உருவாக்கி வளர்ப்பது எனும், முதலாளித்துவ கார்பரேட்டுகளுக்கு எதிரான பொருளாதாரப் போராட்டம் தான், இன்றைய உண்மையான வர்க்கப் போராட்டம் என்று எங்கல்சே வந்துக் கூறினாலும் இவர்கள் உடனே ஏற்க மாட்டார்கள்.”

எங்கெல்ஸ் இயக்கவியல் பொருள்முதல்வாதி, அவர் இப்போது வந்து கூறினாலும் தமது கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டார். இறுதிகாலங்களில் எழுதிய கடிதங்களைப் படித்தால் அவர் எவ்வளவு உறுதியான இயக்கவியல் பொருள்முதல்வாதி என்பது தெரியும்.

வர்க்கப்போராட்டத்தைப் புறக்கணித்துவிட்டு முதலாளித்துவக் கார்பரேட்டுகளுக்கு எதிராக மக்கள் கார்பரேட்டை அமைக்க வேண்டும் என்று புதிய பாதையினர் கூறுகின்றனர். அரசு, காவல், ராணுவ, நீதித்துறை போன்ற பலம்பொருந்திய மேற்கட்டமைப்புகள் முதலாளித்துவக் கார்பரேட்டுகளின் தேவைக்கு உருவானவை, முதலாளித்துவ கார்ரேட்டுகளின் பக்கத்தில் மக்கள் கார்ரேட்டை அமைப்பதை அது சும்மா பார்த்துக் கொண்டிருக்குமா? இந்தப் பொருளாதாரப் போராட்டம் சாதிப்பதற்கு வாய்ப்பில்லை, மார்க்சிய வழியிலான வர்க்கப் போராட்டமே சரியானது. ஏன் என்றால் இது முதலாளித்துவ உற்பத்தியின் உள்முரண்பாட்டின் வெளிப்பாடு ஆகும்.

புறநிலைத் தன்மைகளை ஒதுக்கிவிட்டு அகநிலைத் தன்மையோடு பேசுகிற, மக்களின் கார்பரேட்கள் என்கிற இந்தப் புதிய பாதையினரின் பார்வை கற்பனைவயமானது அகநிலையானது, மார்க்சியத்திற்குப் புறம்பானது. இன்றைய ஏற்றத்தாழ்வான வர்க்க நிலையில் மார்க்சின் மார்க்சியமே வழிகாட்டி ஆகும். அதுவே விஞ்ஞானத் தன்மையானது.  விஞ்ஞான வழியே வெற்றி கிட்டும் பாதையாகும்.