Saturday, 22 February 2025

நடைமுறையும் கோட்பாடும்

யூடியூபில் பார்க்க:-
https://www.youtube.com/watch?v=xkllVMqQcY8

நடைமுறை கோட்பாடு இதில் எது முக்கியமானது? என்ற கேள்வி அதிகமாகக் கேட்கப்படுகிறது.

நடைமுறையே முக்கியமானது என்று பெரும்பான்மையினர் பதிலளிப்பர், சிறுபான்மையினர் கோட்பாடே முக்கியம் என்று பதிலளிப்பர்.

இரண்டும் தவறானது. நடைமுறை கோட்பாடு இரண்டும் முக்கியமானது. இதில் ஒன்றை மட்டும் முக்கியமானது என்று பிரித்துப் பார்க்க முடியாது.

இருந்தாலும், “எங்களுக்கு கோட்பாட்டைவிட நடைமுறையேதான் முக்கியம்” என்று அடித்துக் கூறுபவர்கள் இருக்கிறார்கள்.

“எங்களுக்கு கோட்பாட்டைவிட நடைமுறைதான் முக்கியம்”- இதுவே ஒரு வகையானக் கோட்பாடுதான். கோட்பாடு இல்லாமல் நடைமுறை இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை.

நடைமுறையை எந்த வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டிதான் கோட்பாடு. கோட்பாடு எதை நடைமுறைப்படுத்த வேண்டும் எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே வலிறுத்துகிறது

கோட்பாடு நடைமுறைக்கு எதிரானது கிடையாது.

முதலில் ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். கோட்பாடு என்பது நடைமுறையில் இருந்துதான் உருவானது. அதனை நடைமுறைப்படுத்தும் போது அந்தக் கோட்பாடு சரியானதா? தவறானதா? என்பதை உறுதி செய்ய முடிகிறது.

மேலும் நடைமுறையில் இருந்துதான் அந்தக் கோட்பாடு வளர்ச்சி பெருகிறது, மேம்பாடு அடைகிறது.

கோட்பாடு இல்லாத நடைமுறையும், நடைமுறை இல்லாத கோட்பாடும் நடைமுறையில் சாத்தியமற்றது.

கோட்பாடு இல்லாத நடைமுறை குருட்டாம்போக்கான செயலாகத்தான் இருக்கும். இறுதியில் அனுபவாதமாக சுருங்கிப் போகும்.

நடைமுறைத் தோல்வி என்பது பெரும்பாலும் கோட்பாட்டினைப் பின்பற்றாததால்தான் எற்படுகிறது. அதே போல கோட்பாட்டினைப் புரிந்து கொள்ளாமையினாலும் ஏற்படுகிறது.

கோட்பாட்டை புரிந்து கொள்ளாதது, கோட்பாட்டை பின்பற்றாதது இதுதான் நடைமுறையில் சந்திக்கிற தோல்விகளுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

மார்க்சியம் என்பது ஒரு கோட்பாடு.

மார்க்சியக் கோட்பாட்டை மார்க்ஸ் தான் உருவாக்கினார். எங்கெல்ஸ் அதற்கு துணைபுரிந்தார்.

பாட்டாளி வர்க்கம் புரட்சிகரமானது என்பது மார்க்சின் ஒரு கோட்பாடு. இந்த கோட்பாட்டை மார்க்ஸ் தனது தனிப்பட்ட சொந்த முயற்சியால் உருவாக்கவில்லை. அன்றைய உற்பத்தி முறையில் இருந்துதான் இதனை உருவாக்கினார். அன்றைய எதார்த்தத்தில் இருந்துதான் உருவாக்கினார், அன்றைய நடைமுறையில் இருந்துதான் உருவாக்கினார்.

பாட்டாளி, இழப்பதற்கு ஒன்றும் இல்லாதவர்கள் என்று அன்று மார்க்ஸ் கூறினார், இதனையே இன்றும் தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிய முடியாது. இன்றைக்கு முதலாளித்துவமும் வளர்ந்திருக்கிறது, பாட்டாளிகளும் வளர்ந்திருக்கிறார்கள். இதற்கு ஏற்ப மார்க்சியத்தை நாம்தான் வளப்படுத்த வேண்டும்.

அது தானே நிகழாது, நாம் தான் முயற்சிக்க வேண்டும்.

அது போன்ற முயற்சி இங்கே பெரிய அளவில் நடைபெறவில்லை என்பதே உண்மை. இத்தகைய உண்மைகளை புரிந்து கொண்டு நாம் செயல் படவேண்டும்.

ஆலைத் தொழிலாளர்கள் மட்டும் பாட்டாளி என்று கருதிடமுடியாது. இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவர்களில் பலர் புதிய பாட்டாளிகளாக இருக்கிறார்கள். அதனை புதியதாக வரையறை செய்ய வேண்டும்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள்ள உள்முரண்பாட்டால் முதலாளித்துவம் அழிந்து போகும். முதலாளித்துவ சமூகத்தில் இருந்து சோஷலிச சமூகமாக மாறியே தீரும்.

உண்மைதான், ஆனால் சமூக மாற்றம் தானே நிகழாது, அதனை நடத்துவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி முன்னணிப்படையாக செயல்பட வேண்டும். அத்தகைய முன்னணிப் படையே உழைக்கும் மக்களைத் தலைமைத்தாங்கி நடத்தும்.

கம்யூனிஸ்டுகளின் கடமை என்ன? கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை என்ன?

என்பதை நாம் இன்றைய நடைமுறையில் இருந்து அறிந்து கொள்ளத் தேவையில்லை, அதனை கோட்பாடாக மார்க்ஸ் உருவாக்கி வைத்துள்ளார். அதனை நாம் இன்றைய பொருளாதார சூழ்நிலைமைக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த வேண்டும். நடைமுறையோடு வளரவும் செய்யும்.

மார்க்சிய அடிப்படைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றால், மார்க்ஸ் எழுதிய அனைத்து நூல்களையும் படிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆகியோர் எழுதிய நூல்கள் ஆங்கிலத்தில் 50 தொகுதி இருக்கிறது, தமிழில் 20 தொகுதி இருக்கிறது. அதில் உள்ள அடிப்படையானதை முதலில் படிக்க வேண்டும்.

லெனின் வாழ்ந்த காலத்தில் மார்க்சின் முக்கியமான பல நூல்கள் வெளியாகவில்லை, குறிப்பாக “ஜெர்மன் சித்தாந்தம்” என்கிற நூல்.

லெனின் மறைந்த பிறகுதான் இந்த நூல் அச்சாகியிருக்கிறது. ஆனால் குறைவாக கிடைத்த நூல்களில் இருந்தே லெனின் இயக்கவியல் மற்றும் பொருள்முதல்வாதம் ஆகியவற்றில் தெளிவு பெற்றவராகவும் அதனை நடைமுறைப்படுத்துபவராகவும் இருந்தார்.

கிடைக்கிற மார்க்ஸ் நூல்கள் அனைத்தையும் அனைவரும் படிக்க வேண்டியத் தேவையில்லை, அதில் தேவையானதை தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். ஆய்வு செய்பவர்கள் முழுமையாகப் படித்துக்கொள்ளட்டும்.

கம்யூனிஸ்டுகளின் கடமை என்ன? கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை என்ன? என்கிற கேள்வி முன்பே எழுப்பி இருந்தோம்.

இதற்கு ”கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” என்கிற நூலை முழுமையாகக்கூட படிக்க வேண்டாம். இரண்டாம் அத்தியாயமான, “பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்” என்பதை மட்டும் படித்தால் போதுமானது. அதில் கம்யூனிஸ்டுகளின் கடமையையும் கம்யூனிஸ்ட் கட்சியின் கடமையையும் அறிந்து கொள்ளமுடிகிறது.

 

“ஒட்டுமொத்தப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ள உறவு எத்தகையது? 

 

கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாக அமையவில்லை.

 

கம்யூனிஸ்டுகளுக்கு ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது.

 

பாட்டாளி வர்க்க இயக்கத்தை வடிவமைக்கவும் வார்த்தெடுக்கவும் அவர்கள் தமது சொந்தக் குறுங்குழுவாதக் கோட்பாடுகள் எவற்றையும் வகுத்துக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்டுகளை ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை பின்வருவன மட்டும்தாம்:

 

(1) வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் பாட்டாளிகளின் தேசியப் போராட்டங்களில், கம்யூனிஸ்டுகள் எந்தவொரு தேசிய இனத்தையும் சாராமல், பாட்டாளி வர்க்கம் முழுமைக்கும் உரிய பொதுவான நலன்களைச் சுட்டிக்காட்டி, முன்னணிக்குக் கொண்டு வருகின்றனர்.

 

(2) முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கப் போராட்டம் கடந்து செல்ல வேண்டிய பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும், எங்கும் எப்போதும் கம்யூனிஸ்டுகள் ஒட்டுமொத்த இயக்கத்தின் நலன்களையே முன்வைக்கின்றனர்.

 

எனவே, கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் நடைமுறை ரீதியில், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளில், மிகவும் முன்னேறிய, மிகவும் உறுதி வாய்ந்த பிரிவாக, மற்றவர்கள் அனைவரையும் முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற பிரிவாக உள்ளனர்.

 

மறுபுறம் கோட்பாட்டு வழியில், கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத ஓர் அனுகூலத்தை, அதாவது, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப் பெற்றுள்ளனர்.

 

கம்யூனிஸ்டுகளுடைய உடனடி நோக்கம், மற்றெல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் உடனடி நோக்கம் எதுவோ அதுவேதான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கட்டியமைத்தல், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் ஆகியவைதாம்.”

 

இதனை செய்யும் திறமற்றவர்கள் கம்யூனிஸ்டே கிடையாது, அவர்களால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தப் பயனும் கிடையாது. அதைவிட இந்தத் திறத்தை பெற்றிராத கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியே கிடையாது.

பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கட்டியமைத்தல், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் இதனை உணராத கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்க முடியாது.

அறிக்கையில் சூத்திரம் போல் சொல்லப்பட்டதை நாம் விரிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

கூலிவுயர்வு போராட்டத்தை நடத்துவது மட்டும் கம்யூனிஸ்டுகளின் வேலையில்லை, கூலி அமைப்பு முறையைத் தூக்கி எறிவதே இறுதி நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.

கூலிவுயர்வு போராட்டம் என்பது தொழிலாளர்களுக்கு முழுமையான விடுதலையைத் தராது, கூலி அமைப்பு முறை என்கிற முதலாளித்துவ அமைப்பையே தூக்கி எறிந்தால்- மட்டுமே முழுமையான விடுதலை கிட்டும்.

இதனை தொழிலாளர்களுக்கு கூலிவுயர்வு போராட்டத்தின் ஊடேயே சொல்லிக் கொடுக்க வேண்டும்.

தோல்வி பற்றி அதிகக் கவலைப்படத் தேவையில்லை, சோவியத் வீழ்ச்சியைப் பற்றி இங்கே நிறையத் தோழர்கள் கவலைப்படுகிறார்கள்.

பாரிஸ் கம்யூன் தோல்வி கண்டது, மார்க்ஸ் அதைப் பற்றி அதிகக் கவலைப்படாமல் அதன் அனுபவங்களைத் தொகுத்து நூல்களை எழுதினார்.

ஒவ்வொரு தோல்வியும் நமக்குப் படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.

பாரிஸ் கம்யூனின் அனுபவத்தின் மூலம் மார்க்ஸ் கண்ட சிலமுடிவுகளைப் பார்ப்போம்.

முதலாளித்துவ அரசமைப்பை அப்படியே உழைப்பாளர்கள் பயன்படுத்த முடியாது, அதனை ஒழித்து நமக்கான அரசமைப்பை உருவாக்க வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மார்க்ஸ் தெளிவுபடுத்தி உள்ளார்.

அது என்னவென்றால், முதலாளித்துவ சமூகத்துக்கும், வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்துக்கும் இடையில் உள்ள அரசு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

பாரிஸ் கம்யூன் வீழ்ச்சியில் இருந்து மார்க்ஸ் கற்றது இவைகள்.

பாரிஸ் கம்யூன் அனுபவங்களை  மார்க்ஸ், மார்க்சியக் கோட்பாட்டை வளப்படுத்துவதற்குப் பயன்படுதினார். நடைமுறை அனுபவங்களே கோட்பாடாகிறது.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற சொல்லை பயன்படுத்துவதில் பல தோழர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். அரசின் வர்க்கத் தன்மையைப் புரிந்து கொண்டிருந்தால் இந்தச் சிக்கல் ஏற்படாது. நடைமுறையில் மட்டும் உள்ளவர்களுக்கு இந்த சிக்கல் ஏற்படும். நடைமுறையோடு கோட்பாட்டை இணைந்து காண்பவர்களுக்கு இந்தச் சிக்கல் ஏற்படாது.

ஏன் என்றால் மார்க்சியக் கோட்பாடு இதனைத் தெளிவாக விளக்கி இருக்கிறது. அரசின் வர்க்கத் தன்மையை மார்க்சியம் தெளிவாக முன்வைத்துள்ளது.

ஆங்கிலத்தில் “சோவியத் சோஷலிச ஜனநாயகம்” என்கிற தலைப்பில் லெனின் எழுதியதை சோவியத் நாட்டில் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியிட்டனர், அதனை அன்று என்சிபிஎச் பதிப்பு நிறுவனம் தமிழில் வெளியிட்டது, தற்போது செந்தளம் வெளியிட்டகம் அதனை மறுபதிப்பாகம் செய்துள்ளது.

அந்தத் தொகுதியைப் படித்தால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது எந்தளவுக்கு முதலாளித்துவ சர்வாதிகாரத்தைவிட ஜனநாயகமானது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற நூலையும், லெனின் எழுதிய “அரசு” “அரசும் புரட்சியும்” ஆகிய இரு நூலையும் படித்தாலேயே போதுமானது.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது மிகுந்த ஜனநாயகத் தன்மை உடையது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

லெனின் எழுதிய நூல்கள் ஆங்கிலத்தில் 45 தொகுதி இருக்கிறது, தமிழில் 30 நூல்களுக்கு மேல் இருக்கிறது. இதனை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று கூறவில்லை. நமக்குப் புரியாதப் பகுதியை மட்டும் விளக்கத்துக்காக தேடி படிக்க வேண்டும்.

தற்போது தமிழில் போதுமான அளவுக்கு நூல்கள் இருக்கிறது. மறுபதிப்பாக வந்து கொண்டிருக்கிறது. நூல்கள் கிடைக்கவில்லை என்பதை ஒரு குறையாகச் சொல்லாமல் நாம் படிக்க வேண்டும்.

லெனின் எழுதிய தேர்வு நூல்கள் 12 தற்போது மறுபதிப்பு வந்துள்ளது. அதில் இன்றைய நிலைமைகளைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான நூல்கள் இடம்பெற்றுள்ளது.

நம் நாட்டில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடத்த வேண்டும் என்று சில கட்சிகள் கூறுகின்றன, சில அமைப்புகள் சோஷலிசப் புரட்சி நடத்த வேண்டும் என்று கூறுகின்றது. இதில் எது சரியானது என்கிற தெளிவு கிடைக்க வேண்டும்  என்றால் மூன்றாம் தொகுதியில் இடம் பெற்றுள்ள “ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதத்தின் இரண்டு செயல்தந்திரங்கள்“ என்கிற நூலையும்  ஐந்தாம் தொகுதியில் இடம் பெற்றுள்ள ”ஏப்ரல் ஆய்வுரைகள்” பற்றிய கட்டுரைகளையும் படிக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றால் இது போன்ற நூல்களை கண்டிப்பாக கம்யூனிஸ்டுகள் படிக்க வேண்டும்.

இந்தியாவுக்கு என்று தனிப்பட்ட பல பிரச்சினைகள் இருக்கின்றன, குறிப்பாக சாதி பற்றிய பிரச்சினை. இதனை கம்யூனிஸ்டுகள் தனித்துப் பார்க்கவில்லை, வர்க்கப் போராட்டத்துடன் இணைத்தே பார்க்கின்றனர்.

ஆனால் அதைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? முடியாது. சமூகத்தில் இருப்பது எதுவும் தானே போகாது, அதற்கான போராட்டம் நடத்தப்பட வேண்டும். போராடியே வீழ்த்த முடியும்.

முதலாளித்துவ உற்பத்தியில் காணப்படும் உள்முரண்பாட்டின் காரணமாக அது வீழ்ச்சி அடையும் என்று மார்க்சியம் கூறுகிறது.

இது தானே நடந்துவிடுமா? அதற்கான தயாரிப்பும் முயற்சியும் அவசியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நம் நாட்டில் உள்ள இடதுசாரிகளின் தேக்கநிலைக்கு பல காரணங்கள் இருக்கின்றன, அதில் முக்கியமானது வலது திரிபு, இடதுதிரிபு என்கிற இரண்டும் ஆகும்.

வலது திரிபை போக்க வேண்டும் என்றால் லெனின் எழுதிய  “என்ன செய்ய வேண்டும்” என்கிற நூலைப் படிக்க வேண்டும், அதே போல இடது திரிபை போக்க வேண்டும் என்றால் மார்க்ஸ்-எங்கெல்ஸ்-லெனின் ஆகிய மூவரும் எழுதிய நூல்களின் தொகுப்பான “அராஜகவாதமும் அராஜக சிண்டிக்கலிசமும்” என்கிற நூலைப் படிக்க வேண்டும்.

ஏகாதிபத்திய கால மார்க்சியம் என்பது லெனினியம் ஆகும், இதனை அறிய வேண்டுமானால் ஸ்டாலின் எழுதிய “லெனினியத்தின் அடிப்படைகள்” என்கிற நூலைப் படிக்க வேண்டும். இந்த நூலில் லெனினியத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் முழுமையாகவும் ஸ்டாலின் எழுதியிருக்கிறார். இதனைப் படிக்காமல் லெனினியத்தை நாம் அறிந்து கொள்ள முடியாது.

மார்க்ஸ்-எங்கெல்ஸ்-லெனின் நூல்களைப் போன்று இன்று ஸ்டாலின், மாவோ நூல்கள் தமிழில் கிடைக்கிறது. வாங்கிப் படிக்க வேண்டியது நமது கடமை ஆகும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளில் இது போன்ற நூல்களை வாங்கி வைத்தால் அனைவரும் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். அனைத்து நூல்களையும் தனிநபர்கள் வாங்கிப் படிக்கக்கூடிய விலையில் அது இல்லை என்பது உண்மைதான். தோழர்கள் இணைந்து அல்லது கட்சிக் கிளைகளில் வாங்கி வைத்து தோழர்கள் சேர்ந்து படிக்க வேண்டும்.

கம்யூனிச நூல்களை தனித்தனியாகப் படிப்பதைவிட சேர்ந்து படிப்பது சிறப்பாக இருக்கும்.

இன்று நிறைய மார்க்சிய வகுப்புகள் நடைபெறுகிறது, இது மார்க்சியத்தைப் புரிந்து கொள்வதற்கு பெரிய வாய்ப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒரே நூலை படித்துக் கொண்டிருப்பது இன்றைய புதிய போக்காக இருக்கிறது. இதனை நான் ஏற்கவில்லை, மார்க்சிய அடிப்படைகள் நமக்கு சுருக்கமாகவும் சாரமாகவும் கிடைத்தால் போதும். மார்க்சியக் கோட்பாடு நமக்கு நடைமுறைக்கானதே அதனால் அதனையே தொடர்ந்து படித்துக் கொண்டிருக்க முடியாது.  

மார்க்சியத்தின் சாரத்தை தெரிந்து கொண்டு செயலில் இறங்க வேண்டும்.

கோட்பாடு நடைமுறையில் இருந்தே தோன்றியது, புதிய நடைமுறையில் இருந்தே பழைய கோட்பாடு வளம் பெருகிறது. இதனை நாம் மறக்கக்கூடாது.

மார்க்சியத்தைப் படிப்பதில் மொழியாக்கம் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. மொழியாக்கத்தில் சிக்கல் இருக்கிறது, ஆனால் அது முதன்மைக் காரணமாகக் கொள்ள முடியாது.

ஆங்கில மொழியாக்கத்தில் சிக்கல் பெரிய அளவுக்கு இல்லை ஆனால் ஆங்கிலத்தில் படிப்பவர்களுக்கும் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முக்கியக் காரணம்  மார்க்சியம் என்பது பலதுறைகளைச் சார்ந்ததாக இருக்கிறது. அதன் அடிப்படைகளை ஓரளவுக்காவது நாம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

முயற்சியே சிரமத்தை உடைக்க முடியும். முயற்சி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.

முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை.

இயந்திர மனிதன் (Robot) செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) ஆகியவை எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. இவைகளைப் புரிந்து செயல்பட வேண்டும் என்றால் மார்க்சிய அடிப்படைப் புரிதல் வேண்டும்.

வகுப்பெடுக்கும் போது நான் இயந்திர மனிதனைப் (Robot) பற்றி பேசினேன், அதனைப் பற்றி முகநூலில் எழுதினேன். அப்படி எழுதும் போது நான் எழுதுவது நிறையப் பேருக்குப் புரியாது, பதில் இருந்தும் புரியாமைக்குக் காரணம் மார்க்சியப் புரிதலற்றத் தன்மையே என்று அதில் தெரிவித்தேன். இப்படி வெளிப்படையாகக் கூறியதற்கு என்னை பலர் கடுமையாக அப்போது எதிர்த்தனர். 

அதனை வெளியிட்டப் போது படித்த ஒரு தோழர், முரண்பாடாக இருக்கிறது என்றார். இதில் முரண்பாடு எதுவும் கிடையாது.

இயந்திர மனிதன் அறுதி உபரி மதிப்பைப் படைக்கவில்லை, ஒப்பிட்டு உபரி மதிப்பை படைக்கிறது, அந்த ஒப்பிட்டு உபரி மதிப்பும் பிற்காலங்களில் கிடைக்காது போகிறது என்று கூறியிருந்தேன்.

அந்தத் தோழர் என் கருத்துகளில்  முரண்பாடு இருப்பதாகக் கூறினார். இதில் முரண்பாடு எதுவும் இல்லை, புதிய இயந்திரக் கண்டுபிடிப்புகளை மார்க்ஸ் எப்படிப் பார்த்தாரோ அதன் அடிப்படையில் இதற்கு விளக்கம் கொடுத்தேன். அதனால் இதில் முரண்பாடு இருக்க வாய்ப்பில்லை.

மார்க்சிய அடிப்படைப் புரிதல் இல்லாமையே முரண்பாடு இருப்பதாகத் தெரிவதற்கு காரணம் இருக்கிறது.

மார்க்சியம்  ஒரு விரிந்தப் படிப்புத் துறைகளைக் கொண்டுள்ளது, முதலில் நாம் எதைப் படிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு எங்கெல்ஸ் கூறியதை பதிலாகக் கொள்ளலாம்

மார்க்சின் மாபெரும் இருபெருங் கண்டுபிடிப்புகள் என்று எங்கெல்ஸ் எதைக் கூறுகிறார் என்று பார்ப்போம்.

 

வரலாறு பற்றிய பொருள்முதல்வாத கருத்தோட்டம், உபரி மதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் ரகசியம் புலப்படுத்தப்படல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாகச் சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாயிற்று.”

(கற்பனாவத சோஷலிசமூம் விஞ்ஞான சோஷலிசமும்)

மார்க்ஸ் எவ்வளவோ கண்டிபிடித்துள்ளார், அதில் முக்கியமானதாக இந்த இரண்டை எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றியல் பொருள்முதல்வாதம், உபரி மதிப்பு ஆகிய இரண்டையும் இங்கே எங்கெல்ஸ் சுட்டிக்காட்டி உள்ளதை மனதில் பதிந்து கொள்ள வேண்டும். மேலும்  உபரி மதிப்பு என்பதை நாம் மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்று புரிந்து கொள்ளலாம். ஏன் என்றால் நேரடியாக உபரி மதிப்பைப் புரிந்து கொள்ள முடியாது. மாறும் மூலதனம் மாறா மூலதனம் என்பது போன்றவற்றைப் புரிந்து கொள்ளாமல் உபரி மதிப்பை நாம் புரிந்துகொள்ள முடியாது.

வரலாற்றியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தை சுருக்கமாக அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மார்க்ஸ் கூறுவதைப் பார்ப்போம்.

 

மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் நுழைகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

 

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது.

 

இதன் மீது சட்டம், அரசியல் என்கிற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது.

 

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு  முன்னுரை)

சமூக வாழ்நிலையில் இருந்துதான் மனிதனின் கருத்துக்கள், சிந்தனைகள் தோன்றுகின்றன. அதாவது மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடும் போது ஏற்படுகிற வாழ்நிலையில் இருந்தே மனிதனின் கருத்துக்கள், சிந்தனைகள் தோன்றுகின்றன.

மார்க்சின் முடிவுகள் மார்க்சின் தனிப்பட்ட முடிவுகள் கிடையாது, அது எதார்த்த சமூகத்தின் பிரதிபலிப்பாகும்.

இந்தக் கோட்பாட்டை இன்னும் சுருக்கமாகக் கூறலாம்.

அடித்தளம் தான் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தைத் தீர்மானிப்பதில்லை. இங்கே தீர்மானிப்பது பற்றியே பேசப்பட்டுள்ளது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்தாது என்று கூறவில்லை. மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கத்தையே செய்ய முடியுமே தவிர தீர்மானிக்க முடியாது.

அடித்தளம் தீர்மானிக்கிறது என்றால் இது பொருள்முதல்வாதம்.

மேற்கட்டமைப்பு தீர்மானிக்கிறது என்றால் இது கருத்துமுதல்வாதம்.

உற்பத்தி உறவுகளில் இருந்தே சிந்தனை தோன்றுகிறது என்று காரணத்தோடு விளக்குவது பொருள்முதல்வாதம்.

மனிதனின் சிந்தனையில் இருந்தே அதாவது மூளையில் இருந்தே சிந்தனைகள் தோன்றுகிறது என்றால் இது கருத்துமுதல்வாதம்.

தீர்மானிக்கிறது தாக்கம் செலுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல், அடித்தளம் மேற்கட்டமைப்பு இரண்டும் பரஸ்பர வினைபுரிகிறது என்று கூறுவது பொருள்முதல்வாதமும் இல்லாமல் கருத்துமுதல்வாதமாகவும் இல்லாமல் நடுநிலையைக் குறிக்கிறது. தத்துவத்தில் நடுப்பாதை என்பது கிடையாது என்று லெனின் கூறியதை இங்கே நினைவு கொள்வோம்.

நடுப்பாதை இறுதியில் கருத்துமுதல்வாதத்துக்கே இட்டுச் செல்லும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. இந்தத் தெளிவோடு அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற மார்க்சின் கோட்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற மார்க்சியக் கோட்பாட்டில் தவறு செய்தால் நடைமுறையானது தவறானதாகவே இருக்கும்.

கம்யூனிஸ்டுகளின் அரசியல் செயற்பாடு தவறாகப் போகாமல் இருக்க வேண்டும் என்றால் மார்க்சிய அடிப்படைக் கோட்பாட்டில் இருந்து பிறழாமல் இருக்க வேண்டும்.

மார்க்சிய அடிப்படைகளைப் பின்பற்றுவோம், மார்க்ஸ் கூறுகிய சமூக மாற்றத்தை செய்து காட்டுவோம்.

Tuesday, 20 June 2023

மார்க்சும் மார்க்சியமும்

 ("தமிழ் மரபு அறக்கட்டளை" என்கிற பன்னாட்டு அமைப்பு நடத்திய இணையவிழ உரைத்தொடர் நிகழ்ச்சியில், மார்க்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு (06-05-2023) "மார்க்சும் மார்க்சியமும்" நிகழ்த்திய உரை)

 காணொளியில் காண

https://www.youtube.com/watch?v=9RLNh_COH4s&t=26s

https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/829396352117885



 காரல் மார்க்ஸ் 19ஆம் நூற்றாண்டில் பிறந்த மாமேதை. கடந்த ஐநூறு ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பல்வேறு மேதைகள் தோன்றியுள்ளனர். இந்த ஐநூறு ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களில் முதல் ஐந்து மேதைகளின் பட்டியலைத் தயார் செய்தால் அதில் ஒருவராக காரல் மார்க்ஸ் கண்டிப்பாக இருப்பார்.

 மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள டிரியர் என்கிற நகரில் பிறந்தார். நேற்று அவரது 205-வது பிறந்த நாள். அதைமுன்னிட்டு இன்று மார்க்சையும் அவரது படைப்பான மார்க்சியத்தையும் நாம் பார்க்கப் போகிறோம்.

 மார்க்சின் தகப்பனார் வழக்குரைஞராக பணிபுரிந்தார். மார்க்சின் குடும்பம் வசதியான - நாகரீகம் கொண்டதாக இருந்தது. ஆனால் புரட்சிகரமானதாகக் கூறிட முடியாது.

 பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மார்க்ஸ் கல்லூரியில் சட்டம் படித்தார். சட்ட படிப்புடன் வரலாறு - தத்துவம் ஆகிய இரண்டிலும் அதிகம் கவனம் செலுத்தினார். தனது டாக்டர் பட்டத்துக்கு எபிக்யூரசின் தத்துவத்தை ஆராய்ந்தார். அந்தக் காலத்தில் ஹெகல் என்கிற தத்துவ அறிஞர் மிகவும் புகழ்பெற்றவராக இருந்தார். இளம் மார்க்சிடம் ஹெகலின் தாக்கம் அதிகம் இருந்தது.

 பிரபஞ்சம், பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியால் படைக்கப்பட்டது என்கிற கருத்துமுதல்வாத கணோட்டத்தை உடையவராக ஹெகல் இருந்தார். மார்க்ஸ் படிப்படியாக கருத்துமுதல்வாதத்தில் இருந்து விடுபட்டு பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திற்கு வந்தடைந்தார். இருந்தாலும் ஹெகலிடம் காணப்பட்ட இயக்கவியலை மார்க்ஸ் பெரிதும் மதித்தார்.

 கிரேக்கத் தத்துவத்தின் தொடக்கத்தில் இயக்கவியல் காணப்பட்டது, ஆனால் பின்னால் அது தொடராமல் போய்விட்டது. ஹெகல் இயக்கவியலை மீண்டும் கொண்டுவந்ததை மார்க்ஸ் மிகவும் பாராட்டினார்.

 ஹெகலின் இயக்கவியல் கருத்துமுதல்வாத மயக்கத்தில் இருந்ததால் அதை அப்படியே எடுத்துப் பின்பற்றாமல், இயக்கவியலை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் வளப்படுத்தினார்.

 முனைவர் பட்டத்துக்கான ஆய்வு பணியை முடித்தப் பிறகு கல்லூரியில் பேராசிரியராக பணி புரிய வேண்டும் என்பதே மார்க்சின் விருப்பமாக இருந்தது. ஆனால் அப்போது ஜெர்மனியில் பிற்போக்காளர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அந்த அரசு முற்போக்கான பேராசிரியர்களை பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றியது. இந்த நிலையில்  பேராசிரியராக வேண்டும் என்கிற தனது விருப்பத்தை மார்க்ஸ் கைவிட்டார். பத்திரிகையில் பணிபுரியலாம் என்று முடிவெடுத்தார்.

 எதிர் கட்சி பத்திரிகையான ரைனிஷ் என்கிற பத்திரிகையில் மார்க்ஸ் தொடர்ந்து எழுதினார். 1842ஆம் ஆண்டில் அந்த பத்திரிகையின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸ் தலைமை ஏற்றப் பிறகு அந்த பத்திரிகை புரட்சிகரமானதும் ஜனநாயகப் போக்குடையதாகவும் மாறியது.

 இதனைக் கண்ட அரசு, அந்தப் பத்திகையை, இரட்டைத் தணிக்கைக்கும் மும்முறைத் தணிக்கைக்கும் உள்ளானது. இறுதியில் அந்தப் பத்திரிகை தடை செய்யப்பட்டது.

 பள்ளி பருவத்தில் நண்பராக இருந்த ஜென்னி என்கிற மங்கையரை 1843ஆம் ஆண்டு மார்க்ஸ் மணம்புரிந்தார்.  அப்போதைய பிற்போக்கான அரசில் ஜென்னியின் தமையனார் அமைச்சராக இருந்தார். ஜென்னியின் குடும்பம் பிற்போக்கனதாக இருந்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் முற்போக்கான மார்க்சுடன் முற்போக்காக ஜென்னி இறுதிவரை பயணித்தார்.

 ஜெர்மனியில் தொடர்ந்து வாழ முடியாத நிலையில் மார்க்ஸ் பாரிசுக்கு செல்கிறார். பாரிசுக்கு வந்த மார்க்ஸ் ஒரு பத்திரிகையை நடத்தினார். அந்தப் பத்திரிகை ஜெர்மனி நாட்டுக்குள் ரகசியமாக அனுப்பபட்டது. மார்க்ஸ் எந்த நாட்டுக்கு சென்றாலும் அவர் தமது நாட்டை மறக்காமலேயே இருந்தார். தான் ஒரு ஜெர்மானியன் என்பதை அவர் எப்போதும் மறந்ததே இல்லை.

 1844ஆம் ஆண்டு எங்கெல்ஸ் பாரிசுக்கு வந்தார். மார்க்சை சந்தித்தார். அதுமுதல் இந்த இரண்டு நபர்களும் சிறந்த நண்பர்களாக வாழ்ந்தனர். தங்களது இறுதிகாலம்வரை எழுத்துப் பணிகளை இருவரும் இணைந்து செய்தனர். எங்கெல்சும் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவரே. பாரிசில் உள்ள புரட்சிகர குழுக்களுடன் இருவரும் சேர்ந்து செயல்பட்டனர். அப்படி செயல்பட்டுக் கொண்டிருக் போது மார்க்ஸ் ஒர் ஆபத்தான புரட்சியாளர் என்று 1845ஆம் ஆண்டு பாரிசில் இருந்து நாடுகடத்தப்பட்டார். தனது சொந்த நாட்டைவிட்டு பாரிசுக்கு வந்திருந்தாலும் மார்க்சை பிரஷ்ய அரசாங்கம் கண்காணித்து வந்தது,

 தொடர்ந்து மார்க்சுக்கு நெருக்கடியை கொடுத்தது. மார்க்ஸ் பாரிசில் இருந்து பெல்ஜியம் சென்றனர்.

 1847ஆம் ஆண்டு மார்க்சும் எங்கெல்சும் “கம்யூனிஸ்ட்டுகளின் லீக்” என்கிற ரகசிய பிரச்சார சங்கத்தில் சேர்ந்தனர். இங்கிருக்கும் போதுதான் மார்க்சும் எங்கெசும் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” என்கிற புகழ்பெற்ற ஆவணத்தை எழுதினர். இந்த நூல் அனைத்து உழைக்கும் மக்களின் விடுதலைக்கான அடிப்படை ஆவணமாக இன்றும் காணப்படுகிறது.

 1848ஆம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சி காரணமாக மார்க்ஸ் பெல்ஜியத்தில் இருந்து நாடுகடத்தப்பட்டார். பெல்ஜீயத்தில் இருந்து பாரிஸ் சென்று - அங்கிருந்து ஜெர்மன் வந்தடைந்தார்.

 ஜெர்மனியில் “புதிய ரைனிஸ் பத்திரிகை” ஒன்றை தலைமையேற்று நடத்தினார். ஜெர்மனியில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. 1849ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

 மார்க்ஸ், மீண்டும் பாரிசுக்கு சென்றார், அங்கிருந்து மீண்டும் நாடு கடத்தப்பட்டு லண்டன் நகருக்கு வந்தடைந்தார்.  இத்துடன் நாடுகடத்தும் படலம் முடிவுக்கு வருகிறது.

 தொடக்கக் காலத்தில் மார்க்ஸ் பலமுறை நாடுகடத்தப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார். இங்கிலாந்தில் அவருக்கு பெரிய பிரச்சினை எதுவும் வரவில்லை, தனது எழுத்துப் பணியையும் அரசியல் பணியையும் தொடர்ந்து செய்துவந்தார். லண்டனில் மார்க்சின் குடும்பம் மிகவும் வறுமையில்தான் வாழ்ந்தது. வறுமையிலும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகவே மார்க்ஸ் இருந்தார். மார்க்ஸ்-ஜென்னி தம்பதியர்களுக்கு மொத்தம் ஏழு குழந்தைகள் பிறந்தன. மோசமன வறுமையினாலும், நோய்களினாலும் நான்கு குழந்தைகள் இறந்தன, மூன்று குழந்தைகள் மட்டுமே உயிர்பிழைத்து.

 நண்பரான எங்கெல்ஸ் பண உதவி செய்திடாமல் போயிருந்தால் மார்க்சும் வறுமையில் மடிந்திருப்பார் என்பதே உண்மையாகும்.

 1863ஆம் ஆண்டு லண்டன் நகரில் “சர்வதேசத் தொழிலாளர் சங்கம்” நிறுவப்பட்டது. இதுவே வரலாற்றில் முதலாவது அகிலம் என்று கூறப்படுகிறது. அகிலத்தில் மார்க்ஸ் தமது சித்தாந்தத்தை நிலைநிறுத்தினார். அவர் தமது கருத்துக்கு எதிராக இருந்த, குட்டி முதலாளித்துவ போக்குகளை முறியடித்தே தமது கருத்தை நிலைநிறுத்தினார்.

 உழைக்கும் மக்களின் விடுதலைக்கு அடித்தளமிட்ட மார்க்சின் பொருளாதார நூலான “மூலதனத்தின்” முதல் தொகுதி 1867ஆம் ஆண்டு வெளிவந்தது. மூலதனம் நூல் மூன்று தொகுதிகளைக் கொண்டது. மார்க்ஸ் முதல் தொகுதியை மட்டுமே அச்சுக்கு தயார் செய்து வைத்திருந்தார். இரண்டாம் மூன்றாம் தொகுதிகள் மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு எங்கெல்சால் வெளியிடப்பட்டது.

 1871ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூன் என்கிற தொழிலாளர் ஆட்சி ஏற்பட்டது. அது விரைவில் விழ்ச்சியும் அடைந்தது. இருந்தாலும் உலகிலேயே இதுதான் முதல் உழைப்பாளர்களின் அட்சி என்று மார்க்ஸ் பெருமையுடன் கொண்டாடினார். பாரிஸ் கம்யூனை ஆராய்ந்து “பிரான்சில் உள்நாட்டுப் போர்” என்ற பெயரில் மார்க்ஸ் ஒரு நூலை எழுதினார்.

 அகிலத்தில் வேலை செய்ததும், அரசியல் பொருளாதார ஆய்வை தொடர்ந்து செய்ததாலும் மார்க்சின் உடல் கடுமையாக பாதித்தது. 1881ஆம் ஆண்டு மார்க்சின் காதல் மனைவியான ஜென்னி மறைந்தார்.

 ஜென்னியின் மறைவு மார்க்சை மிகவும் பாதிக்கும் என்று எங்கெல்ஸ் உள்ளிட அவரது நண்பர்கள் கருதினர். அவ்வாறு கருதியது போலவே ஜென்னியின் இழப்பும் உடல் நோயும் மார்க்சை மிகவும் பாதித்தது. 1883 ஆம் ஆண்டு மார்ச் மாதம்14ஆம் தேதி இந்த உலகத்தைவிட்டு மார்க்ஸ் மறைந்தார்.

 மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது எங்கெல்ஸ் நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டது மிகவும் முக்கியமானதாகும். அங்கக இயற்கையின் (organic nature) வளர்ச்சி விதியை டார்வின் கண்டு பிடித்ததைப் போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார். மேலும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் சிறப்பு விதியையும் கண்டுபிடித்தார்.

 மார்க்ஸ் தமது வாழ்க்கையில் பலவற்றைக் கண்டுபிடித்தார். அதில் குறிப்பிடத்தக்கது என்று இங்கே இரண்டை மட்டும் எங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

 1) வரலாற்றியல் பொருள்முதல்வாதம்,

 2) உபரி மதிப்பின் மூலம் முதலாளித்துவ சுரண்டலை வெளிப்படுத்துதல்.

 வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பது மார்க்சிய ஆய்வுமுறைமை ஆகும்.  எந்தத் துறையை சார்ந்த, ஆய்வு மாணவனவனாக இருந்தாலும், பல்வேறு ஆய்வு முறைமைகளை அறிந்திருக்க வேண்டும். அதில் ஒன்றான மார்க்சிய ஆய்வு முறைமை மார்க்சிய தத்துவமான வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில் அடங்கியிருக்கிறது.

 மார்க்சின் மூலதனம் என்கிற பொருளாதார நூலும், இந்த அணுகுமுறையில்தான் எழுதப்பட்டது. அதனால் மார்க்சின் பொருளாதாரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும், அவரது வரலாற்றியில் பொருள்முதல்வாதம் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

 மார்க்சின் உடல்தான் மறைந்தது. ஆனால் அவர் படைத்தளித்த “மார்க்சியம்” என்கிற படைப்பு இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. இதுவரை மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுதியப் படைப்புகள் ஆங்கிலத்தில் 50 தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இன்னும் பல தொகுதிகள் வரயிருக்கிறது. தமிழில் கிட்டத்தட்ட 20 தொகுதிகள் வந்துள்ளது. மார்க்சிய அடிப்படையை அறிந்து கொள்வதற்கு இது போதுமானது ஆகும்.

 மார்க்ஸ் பிறந்த நாளில், பிறந்தார் - வாழ்ந்தார் - மறைந்தார் என்று கூறுவதுடன் அவர் படைத்தளித்த சித்தாந்தத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

 மார்க்சியத்தை அரசியல் செயல்பாடாக மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. கல்வி புலத்தில் பல துறைகளில் மார்க்சியம் கற்பிக்கப்படுகிறது. குறிப்பாக தத்துவம், பொருளாதாரம், சமூகவியல், அரசியல், தொல்லியல் போன்ற துறைகளில் மார்க்சியம் கற்பிக்கப்படுகிறது. மார்க்சிய தொல்லியல் (Marxist archaeology) என்று ஒரு தனிப்பிரிவே இருக்கிறது. இதை நம் நாட்டு தொல்லியல் துறையைச் சார்ந்தவர்களில் பெரும்பான்மையினர் அறிந்திருக்கவில்லை என்பது மிகவும் கவலைக்குரியதாகும்.

 இப்போது மார்க்சியத்தை பார்ப்போம்

 மார்க்சியம் மூன்று விஷயங்களைப் பேசுகிறது. தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம். மார்க்சியம் ஒரு தனித்த போக்குகிடையாது. அது வரலாற்றின் தொடர்ச்சியில்தான் வந்தது.

 மார்க்சின் தத்துவம் ஜெர்மனி தத்துவத்தின் தொடர்ச்சியாகும், மார்க்சின் அரசியல் பொருளாதாரம் ஆங்கிலேய அரசியல் பொருளாதாரத்தின் தொடர்ச்சியாகும், மார்க்சின் விஞ்ஞான கம்யுனிசம் பிரெஞ்சு சோஷலிசத்தின் தொடர்ச்சியாகும்.

 மார்க்சின் எழுத்துக்கள் அனைத்தும் தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் என்கிற மூன்று பிரிவுக்குள் அடங்கும். இந்த மூன்றையும் மிகமிக சுருக்கமாக இப்போது பார்ப்போம்.

 தத்துவம் என்பது பற்றி மக்களிடம் பலதரப்பட்ட கருத்து இருக்கிறது. தத்துவம் என்பது ஓய்வு பெற்றவர்கள், குடும்ப பொறுப்புகளை முடித்தவர்கள் - அறிந்து கொள்ள வேண்டியது.  மேட்டுகுடியினரால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியது. இது போன்ற கருத்துக்கள் மிகப்பெரும் தவறாகும். தத்துவக் கண்ணோட்டம் இன்றி, அதாவது ஒர் உலகக் கண்ணோட்டமில்லாத ஒரு நபரையும் சமூகத்தில் பார்த்திட முடியாது. தற்போது தமிழக அரசு அறிவித்து, பின்பு திரும்பப்பெற்ற 12 மணிநேர வேலை நாளைப் பற்றி செய்தி வரும் போது நமக்கு சில கருத்துக்கள் தோன்றியிருக்கும். அந்தக் கருத்துக்கள் நமது தத்துவத்தின் அடிப்படையில்தான் உருவானது.

       அதே போல ஒரு குறிப்பிட்ட செய்தியை, ஒவ்வொரு செய்தி தொலைக்காட்சியும் வெவ்வேறு முறையில் அணுகுகிறது என்றால் அதற்கு அந்தந்த தொலைக்காட்சி பின்பற்றுகிற தத்துவ அடிப்படையின் வேறுபாடே காரணமாகும். அதாவது அவர்களின் அரசியல் கணோட்டத்தை, அவர்களின் தத்துவமே உருவாக்குகிறது.

 தெரிந்தோ தெரியாமலோ தத்துவக் கண்ணோட்டம் உடையவர்களாகவே சமூகத்தில் அனைவரும் உள்ளனர். அதை அவர்கள் ஒழுங்குபடுத்தி செழுமைப்படுத்தி வளர்க்காமல் இருந்திக்கலாம், ஆனால் அனைவருக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. அந்தக் கண்ணோட்டம் தத்தவத்தின் அடிப்படையிலேயே அமைகிறது.

 அடுத்து, தத்துவத்தின் அடிப்படைக் கேள்வி என்னவென்பதைப் பார்ப்போம்.

 தத்துவம் ஒரு பெரிய துறையை சார்ந்தது. அது பல விஷங்களைப் பற்றி பேசுகிறது. அனைத்தையும் நாம் இங்கே பார்த்திட முடியாது. அடிப்படையானவற்றை மட்டும் பார்ப்போம். தத்துவத்தின் அடிப்படைக் கேள்வி என்னவென்றால்

 உலகம் படைக்கப்பட்டதா?

 அல்லது என்றும் நிரந்தரமாக இருந்து வருகிறதா?

        இதுதான் அடிப்படைக் கேள்வி

 தத்துவம் எவ்வளவு விஷயங்களைபேசினாலும், தத்துவத்தின் அடிப்படை இந்த கேளிவின் பதிலில்தான் இருக்கிறது.

 தத்துவங்களின் வேறுபாடு இந்த கேள்விகளுக்கு அளிக்கிற பதிலில் தான் அடங்கியிருக்கிறது.

 உலகம் படைக்கப்பட்டதா?

 அல்லது என்றும் நிரந்தரமாக இருந்து வருகிறதா?

 இந்த உலகம் எதோ ஒருவகையில் படைக்கப்பட்டது என்று கருதுவது கருத்துமுதல்வாதம்.

 இந்த உலகம் என்றும் உள்ளது, அது மாறிக் கொண்டிருக்கும் ஆனால் அழியாது என்று கூறுவது பொருள்முதல்வாதம்.

 கருத்துமுதல்வாதம் இரண்டு வகைப்படும் ஒன்று புறநிலைக் கருத்துமுதல்வாதம் மற்றொன்று அகநிலைக் கருத்துமுதல்வாதம். உலகுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியால் இந்த உலகம் படைக்கப்பட்டது என்று கூறுவது புறநிலை கருத்துமுதல்வாதம். படைக்கும் சக்தி இந்த உலகுக்கு அப்பால்----- புறத்தில் இருப்பதாக கருதுவதினால் இதற்கு புறநிலை கருத்துமுதல்வாதம் என்று பெயர்.

 அடுத்து அகநிலை கருத்துமுதல்வாதம் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.

 படைக்கும் சக்தி புறத்தில் இல்லை. நமது அகத்தில்தான் இருக்கிறது.  புறத்தில் காணப்படுவது அனைத்தும் அகத்தில் தோன்றியதே. புறத்தில் இருப்பது, அகத்தின் பிரதிபலிப்பு என்று கூறுவது அகநிலைக் கருத்துமுதல்வாதம்.

 பொதுவாக அனைத்து மதங்களும் புறநிலைக் கருத்துமுதல்வாதத்தையே பின்பற்றுகிறது.

 மத்துவரின் வைணவமும், ராமானுஜரின் வைணவமும், தமிழ்நாட்டில் காணப்படும் மெய்கண்டாரின் சைவ சித்தாந்தமும் புறநிலைக் கருத்துமுதல்வாதமாகும். கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களும் புறநிலை கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.

 மத்துவரும் ராமானுஜரும் புறநிலை சக்தியை, அதாவது இந்த உலகதைப் படைக்கிற புறநிலை சக்தியை பிரம்மம் என்கின்றனர், சைவ சித்தாந்தம் அந்த புறநிலை சக்தியை பதி என்கிறது. கிறித்துவம் அந்த சக்தியை பிதா என்கிறது, இஸ்லாம் அந்த சக்தியை அல்லா என்கிறது.

 ஆதி சங்கரரின் அத்வைதத் தத்துவம் அகநிலைக் கருத்துமுதல்வாதமாகும். அத்வைதம் புறநிலைக் கடவுளை மறுத்து நாமே கடவுள் – நானே கடவுள் என்கிறது. தத்துவமசி என்கிற உபநிடத மகாவாக்கியம் இதையே வலியுறுத்துகிறது.

 அத்வைதத்தைப் பொருத்தளவில் அகமே படைக்கும் சக்தி- அகமே கடவுள் ஆகும், அகமே பிரமம்.

 அடுத்து கருத்துமுதல்வாதத்துக்கும் பொருள்முதல்வாதத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்.

 தத்துவங்கள் அனைத்தும் உணர்வுநிலையையே முதன்மைப்படுத்துகிறது. ஆங்கிலத்தில் Consciousness என்று சொல்லப்படுவதையே தமிழில் உணர்வுநிலை என்று கூறப்படுகிறது.

 மனிதனது உணர்வுநிலையே அனைத்தையும் தீர்மானிக்கிறது என்று கருத்துமுதல்வாதம் கூறுகிறது.

 பொருள்முதல்வாதம் உணர்வுநிலைதான் முடிவெடுக்கிறது ஆனால் உணர்வுநிலை தானே சுயமாகச் சிந்தித்துக் கொள்வதில்லை. மனிதன் புறவுலகோடு ஏற்படும் தொடர்பால் உணர்வுநிலை உருவாகிறது.

 உணர்வுநிலை புறவுலகின் தொடர்பால் ஏற்படுகிறது, உணர்வுநிலையின் மாற்றங்கள் புறவுலகின் மாற்றத்தால் நிகழ்கிறது. கருத்துமுதல்வாதத்துக்கு உணர்வுநிலையே அடிப்படை. பொருள்முதல்வாதத்துக்கு உணர்வுநிலை தோன்றுவதற்குக் காரணமான புறநிலையே அடிப்படை.

 எந்த சூழ்நிலையில் வாழ்கிறானோ அந்த சூழ்நிலையின் அடிப்படையில் மனிதன் சிந்திக்கிறான் என்பது பொருள்முதல்வாதம்.  எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் தனது உணர்வுநிலைக்கு ஏற்பவே மனிதர் சிந்திக்கிறான் என்பது கருத்துமுதல்வாதம்.

 இதுவரை கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்கிற இரு பெரும் தத்துவப் பிரிவுகளைப் பார்த்தோம். மார்க்ஸ் எந்தத் தத்துவப் பிரிவைச் சேர்ந்தவர் என்றால், அவர் பொருள்முதல்வாதத்தைச் சேர்ந்தவர்.

 மார்க்ஸ் நவீன பொருள்முதல்வாதத்தைப் படைத்தார். மார்க்சுக்கு முன்பும் பொருள்முதல்வாதச் சிந்தனை இருந்தது. அதன் தொடர்ச்சியே – வளர்ச்சியே மார்க்சின் நவீன பொருள்முதல்வாதம்

 இந்தியாவிலும் உலகாயதம், சாங்கியம் போன்ற தொடக்கநிலை பொருள்முதல்வாத சிந்தனைப் பள்ளிகள் இருந்தது. அதன் தொடர்ச்சியாகவே மார்க்சின் பொருள்முதல்வாதத்தை நாம் பார்க்க வேண்டும். புதிய நிலைமைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப மார்க்ஸ் நவீனப் பொருள்முதல்வாதத்தைப் படைத்தார்.

 மார்க்சின் பொருள்முதல்வாதத் தத்துவம் இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றொன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

 இயற்கை பற்றியும் அதன் மாற்றத்தைப் பற்றியும் பேசுவது இயக்கவியல் பொருள்முதல்வாதம். சமூகம் - வரலாறு ஆகியவற்றின் தோற்றம் இருப்பு மாற்றம் போன்றவற்றைப் பேசுவது வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

 யக்கவியல் பொருள்முதல்வாதத்தையும் - வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

 இயக்கவியல் பொருள்முதல்வாதம் பலவற்றைப் பற்றி பேசுகிறது. அதில் குறிப்பிடத் தக்கவை, பருப்பொருள், அதன் இயக்கம், விசும்பு, காலம், உணர்வுநிலை, அறிவுத்தோற்றவியல்.

 இதனை இங்கே விரிவாகப் பார்ப்பதற்கு நேரம் இல்லை. இருந்தாலும் பருப்பொருள் இயக்கம், விசும்பு, காலம் பற்றி மட்டும் பார்ப்போம்.

 உணர்வுநிலையைப் பற்றி நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். அதனால் மற்றவற்றைப் பார்ப்போம். ஆங்கிலத்தில் Matter என்பதையே தமிழில் பருப்பொருள் என்கிறோம். நம்மைச் சாராமல் புறத்தில் இருக்கும் அனைத்தும் பருப்பொருள் ஆகும்.

 உலகில் காணப்படும் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது. முற்றிலும் இயக்கமோ, மாற்றமோ இல்லாத பொருள் - இந்த உலகில் எதுவும் இல்லை.

 இயக்கம் இன்றிப் பருப்பொருள் இல்லை. அதே போல பருப்பொருள் இன்றி இயக்கமும் இல்லை. சக்தி என்பது தனித்த பொருள் அல்ல, அது பொருளோடு இணைந்தே காணப்படுக்கிறது. இயக்கம் என்பது பருப்பொருளின் உள்ளேயும் பிற பருப்பொருளோடு சேர்ந்தும் இயங்குகிறது.

 பருப்பொருள் இல்லாமல் இயக்கமில்லை, இயக்கம் இல்லாமல் பருப்பொருள் இல்லை என்று பார்த்தோம்.

 இந்தப் பருப்பொருளின் இயக்கம் என்பது விசும்பிலும் காலத்திலும் நடைபெறுகிறது.

 ஆங்கிலத்தில் Space என்பதையே தமிழில் விசும்பு என்று கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் Time என்பதையே தமிழில் காலம் என்று கூறப்படுகிறது.

 விசும்பு என்பது பருப்பொருளின் இருத்தலையும், மற்ற பொருளுடன் அது கொண்டுள்ள உறவிலும் வெளிப்படுகிறது.

 ஒரு பொருள் இருக்கிறது என்றால் அது ஒர் இடத்தில் தான் இருக்கும், அந்த பொருள் தனித்து இருப்பதில்லை மற்ற பொருளோடு தொடர்பில் -  உறவில்தான் இருக்கும்.

 ஒரு பொருள் தொடர்ந்து இருக்கிறது என்றால் அது காலத்தில் நிகழ்கிறது. பொருளின் இயக்கம் மாற்றம் காலத்தில் தான் நடைபெறுகிறது.

 பருப்பொருளின் இருப்பும் தொடர்பும் - தொடர்ந்து செல்வது காலத்தில்தான்.

 நாம் பார்த்ததை நினைவு கொள்வோம்.

 பருப்பொருள் இல்லாமல் இயக்கம் இல்லை, இயக்கம் இல்லாமல் பருப்பொருள் இல்லை. பருப்பொருளின் இயக்கங்கள் -மாற்றங்கள் விசும்பிலும் காலத்திலும் நடைபெறுகிறது

 இது இயக்கவியல் பொருள்முதல்வாதம்.

 அடுத்துப் பார்க்கப் போவது வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

 இயக்கவியல் பொருள்முதல்வாதத்தில் உணர்வுநிலையின் தோற்றத்தைப் பற்றி பார்த்தோம் அல்லவா, அதன் தொடர்ச்சியே வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

 மனிதன் எந்தச் சூழ்நிலையில் வாழ்கிறானோ அந்த சூழ்நிலையில் இருந்து சிந்தனை தோன்றுகிறது என்பதுதான் வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

 பழங்குடிகள் அனைவர்களின் சிந்தனையும், அதே போல கிராமங்களில் உள்ள அனைவர்களின் சிந்தனையும், பொதுவாக ஒரே மாதிரிதான் இருக்கிறது. நகரங்களில் வாழ்பவர்களின் சிந்தனை நகர வாழ்க்கையை ஒட்டியே இருக்கிறது. இந்த சிந்தனைகளின் வேறுபாட்டுக்குக் காரணம் அந்தந்த இடங்களில் நிகழும் உற்பத்தி நிலைமைகளே என்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.

 சூழ்நிலை என்று பொதுவாகக் கூறினாலும் அது பொருளாதார சூழ்நிலைமைகளையே மார்க்சியம் குறிப்பிடுகிறது. அதாவது உற்பத்தியில் ஈடுபடுகின்ற சூழ்நிலையையே குறிப்பிடுகிறது.

 வாழ்நிலைமையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை என்பதே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை.

 அதாவது எந்தப் பொருளாதார உற்பத்தி முறையில் வாழ்கிறோமோ அந்தப் பொருளாதார உற்பத்தி முறைக்கு ஏற்பவே சிந்தனை ஏற்படுகிறது.

 சிந்தனைக்கு ஏற்ப - நமது வாழ்நிலை அமைத்துக் கொள்ள முடிவதில்லை, வாழ்நிலைமைக்கு ஏற்பவே சிந்தனை அமைகிறது என்பதையே மார்க்சியத் தத்துவம் வலியுறுத்துகிறது.

 வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் பற்றிய மார்க்சின் புகழ்பெற்ற ஒரு மேற்கோள் இருக்கிறது. அதை நாம் மேற்கோளாகப் பார்க்கப் போவதில்லை, அதில் கூறப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட மார்க்சின் வார்த்தைகளிலேயேப் பார்ப்போம்.

 

மனிதர்கள் தமது வாழ்க்கைக்கு தேவைப்படுவதை - உற்பத்தி செய்திடும் போது, தவிர்க்க முடியாத வகையில், திட்டவட்டமான உறவுக்குள் நுழைகிறார்கள். இந்த உறவுகள் மனிதர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து புறநிலையாக இருக்கிறது. 

 

இதுவரை வளர்ச்சியடைந்துள்ள  பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும்.

 

இந்த அடித்தளத்தின் மீது மதம், தத்துவம், சட்டம், அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது.

 

அடித்தளத்துக்கு பொருத்தமாக சமூக உணர்வின் வடிவங்கள் தோன்றுகின்றன.

 

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை,  அவர்களுடைய சமூக வாழ்நிலையே உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

 இதைத்தான் அந்த மேற்கோள் கூறுகிறது. அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டை மார்க்ஸ் இந்த இடத்தில் மிகவும் சிறப்பாக விளக்கி உள்ளார்.

 உற்பத்தியில் ஈடுபடுகிற பொருளாதார நிலைமைகளே சமூகத்தின் அடித்தளம் ஆகும், அடித்தளத்தை ஒடியே சிந்தனை என்கிற மேற்கட்டமைப்பு ஏற்படுகிறது- இதுவே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை ஆகும்.

 அடுத்து அரசியல் பொருளாதாரம்.

 அரசியல் பொருளாதாரம் என்பது, ஒர் உற்பத்தி முறையின் தோற்றம் - வளர்ச்சி - வீழ்ச்சி ஆகிவற்றைப் பற்றி பேசுகிறது.  ஐரோப்பாவைப் பொருத்தளவில் நான்கு உற்பத்தி முறைகளை அது சந்தித்துள்ளது,

 முதல் உற்பத்தி முறை பழங்குடி சமூகமான ஆதி கம்யூனிச சமூக உற்பத்தி முறை, 2) அடிமை சமூக உற்பத்தி முறை, 3) நிலப்பிரபுத்துவ சமூக உற்பத்தி முறை, 4) இன்றைய முதலாளித்துவ சமூக உற்பத்தி முறை.

 இந்தியாவில் இதே உற்பத்தி முறையின் வடிவங்களை நாம் பார்க்க முடியாது. கண்டிப்பாக ஆதி கம்யூனிச சமூகம்- என்கிற பழங்குடி சமூகம் காணப்பட்டுள்ளது.

 அடுத்து கூறப்பட்ட அடிமை சமூகம் உற்பத்தி முறை  என்பது இந்தியாவில் காணப்படவில்லை. அடிமைகள் இருந்ததற்கான சான்றுகள் நம் நாட்டில் கிடைத்துள்ளன. ஆனால் அதை ஒரு தனித்த உற்பத்தி முறையாகக் கூறிட முடியாது.

 இந்திய சாதி முறை ஒரு வகையில் அடிமை சமூக உற்பத்தி முறையை நினைவுபடுத்துகிறது என்று கூறலாம்.

 இந்தியாவில் இன்று நிலவும் உற்பத்தி முறை முதலாளித்துவ உற்பத்தி முறை ஆகும். இதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.

 அரசியல் பொருளாதாரம், ஒவ்வொரு உற்பத்தி முறையின் தோற்றம் வளர்ச்சி விழ்ச்சியைப் பற்றி விளக்குகிறது என்று பார்த்தோம். மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்கிற நூல் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சியைப் பற்றி பேசுகிறது. அரசியல் பொருளாதாரம் பற்றிய அறிமுகத்துக்கு இது போதும்.

 முதலாளித்துவம் எப்படி உழைப்பாளர்களை சுரண்டுகிறது என்பது பற்றியும் உபரி மதிப்பு பற்றியும் நாம் விவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய அறிமுகத்துக்கு இது போதும் என்று கருதுகிறேன்.

 அடுத்து விஞ்ஞான கம்யூனிசம்.

 ஆதி கம்யூனிச சமூகத்தின் சிதைவில் இருந்தே வர்க்க சமூகம் தோன்றுகிறது.

 பழங்குடிகளில் சிலர் பணக்காரர் என்றோ - பலர் ஏழை என்றோ இருப்பதில்லை. கிடைப்பதை அந்த சமூகத்தில் உள்ளவர்கள் சமமாகவே பங்கிட்டுக் கொண்டனர். அதனால் அங்கே பணக்காரன் ஏழை என்கிற பிரிவு தோன்றிவில்லை.

 பழங்குடி சிதைந்தப் பின்பு தோன்றிய சமூத்தில்தான் பணக்காரன் ஏழை என்கிற வர்க்க பேதம் தோன்றுகிறது. இந்த வர்க்க வேறுபாடுக்குக் காரணம் சொத்துடையே ஆகும். சொத்துடைமைதான் வர்க்க வேறுபாட்டை உருவாக்கியுள்ளது. இந்த வர்க்க வேறுபாட்டை ஒழிக்க வேண்டுமானால் சொத்துடையை ஒழிக்க வேண்டும். கம்யூனிசத்தின் இறுதிக் குறிக்கோள் சொத்துத்துடையை ஒழிப்பதே ஆகும்.

 இந்த சமூகத்தில் உள்ள அனைவரும் நல்ல நிலையில் சமமாக வாழ வேண்டும் என்று பல காலாமாக, பல அறிஞர்கள் நினைத்து வந்தனர். சமூகத்தில் வர்க்க வேறுபாடு தோன்றியதில் இருந்தே இந்தக் கருத்துக்கள் காணப்படுகிறது.

 ஆனால் அவர்கள் இந்த சொத்துடைமையை அழிக்காமல் பணக்காரரின் தயவில் அனைவரையும் வாழ வைத்திடலாம் என்று கருதினர். ஆனால் சொத்துடைமை சமூகத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதை எதார்த்த அனுபவம் நமக்குக் காட்டுகிறது.

 மார்க்சுக்கு முன்பு மூன்று கற்பனாவாத சோஷலிஸ்டுகள் இருந்தனர். 1) சான்-சிமோன், 2) ஃபூரியே 3) ராபர்ட் ஓவன். இம் மூவரும் ஒரு வகையில் மேதைகளே.

 தொடக்கக் காலத்தில், முதலாளித்துவ உற்பத்தியின் பெருக்கத்தைப் பார்க்கும் போது சமூக தேவைகள் நிறைவு பெற்றுவிடும் என்றே முதலில் பொதுவாக நம்பப்பட்டது. ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையிலான, தொழில் வளர்ச்சி, உழைப்பாளி மக்களுக்கு வறுமையையும், பெரும் துயரத்தையுமே தந்தது.

       இதனை பார்த்த கற்பனாவாத மேதைகள், முதலாளித்து சமூக அமைப்பு முறையை கண்டித்தனர், அதன் மறைவைப் பற்றி கனவு கண்டனர், அதற்கு மாற்றாக ஒரு புதிய சமூக அமைப்பை வடிவமைத்துக் கொண்டனர். 

       இம்மேதைகள் முதலாளித்துவ சமூகத்தின்மீது வைத்த விமர்சனம் மிகவும் கடுமையானது. முதலாளித்துவத்துக்கு முந்திய சமூகங்கள் எப்படி குறைபாடு உடையதாக இருந்ததோ அதைப் போலவே முதலாளித்துவ சமூகமும் குறைபாடு உடைதாகக் காணப்படுகிறது. எப்படி முந்திய சமூகம் தூக்கி எறியப்பட்டதோ அதேபோல இந்த முதலாளித்துவ சமூகமும் தூக்கி எறியப்படும் என்று கற்பனாவாதிகள் கருத்தினர்.

       கற்பனாவாதிகள் வாழ்ந்த காலத்தில் முதலாளித்துவம் வளரும் தறுவாயில் இருந்து, அதனால் அவர்களின் அறிவு, எல்லைக்கு உட்பட்டதாகவும் வரம்பிடப்பட்டதாகவும் இருந்தது.

 முதலாளித்துவம் தொடக்கக் கட்டத்தில் இருந்ததால் கற்பனாவாதிகளால் மூலதனத்தின் ஆதிக்கம், முதலாளித்துவத்தின் சுரண்டலின் ஊற்று ஆகியவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை

     முதிர்ச்சியற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிலைமைகளுக்கும், முதிர்ச்சியற்ற வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்தாய் முதிர்ச்சியற்ற கோட்பாடுகளை கற்பனாவாதிகள் முன்வைத்தனர்.

 அதாவது கற்பனாவதிகளின் கோட்பாடு முதிர்ச்சி அற்று இருந்ததற்குக் காரணம் அன்றைய முதலாளித்துவம், வளர்ச்சி பெற்று இருக்கவில்லை. முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையேயான பகை முற்றவில்லை, அதனால் இந்த கற்பனாவாதிகளின் கோட்பாடு இதற்கு ஏற்ப முதிர்ச்சியற்ற கோட்பாடாக இருந்தது.

1840களுக்குப் பிறகு முதலாளித்துவம் முதர்ச்சியடையத் தொடங்கியது. முதலாளித்துவத்தை முழுமையாக ஆராய்ந்து அறிந்து கொள்ளும் வகையில் வளர்ந்திருந்தது. மார்க்சின் கண்ணோட்டம் விஞ்ஞானத் தன்மை உடையதாக இருப்பதற்கு இதுவே காரணமாகும்

முதலாளித்துவ உற்பத்தி முறையின், உள்முரண்பாட்டின் வெளிப்பாடே பொருளாதார நெருக்கடி என்று மார்க்ஸ் கண்டுபிடித்தார்.

இந்த நெருக்கடி என்பது யாரோ செய்த தவறுகளினால் உருவானது அல்ல, அது முதலாளித்துவ உற்பத்தியின் உள் முரண்பாட்டினால் ஏற்படுகிறது. இந்த உலகம் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்திதுள்ளது. 2007- 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை நாம் நேரில் கண்டுள்ளோம். இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகவே, சோஷலிச சமூக மாற்றம் ஏற்படுவதாக மார்க்ஸ் கூறினார்.

 சோஷலிச மாற்றம் என்பது தனிப்பட்ட நபரின் விருப்பத்தின் அடிப்படையில் உருவாவதில்லை, முதலாளித்துவ உற்பத்தி முறையின் நெருக்கடிக்குத் தீர்வாக சமூக மாற்றம் ஏற்படுகிறது என்று மார்க்ஸ் கூறினார்.

       மார்க்சின் வாழ்க்கையும் அவரது படைப்பான மார்க்சியத்தையும் மிகமிக சுருக்கமாக இன்று பார்த்தோம்.

 அறிமுகத்துக்கு இது போதும் என்று கருதி எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.