(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 83 வது வார வகுப்பு – 14-05-2023)
“மார்க்சியம் ஒரு விஞ்ஞானம்
அதை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது”, என்பது போன்ற பேச்சுகளை நாம் பல இடங்களில் கேட்டுக்
கொண்டுதான் இருக்கிறோம். அதே போல “புவி ஈர்ப்பு விசையை புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்
ஏன் ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம், ஆனால் புவி ஈர்ப்பு விசை நிகழ்ந்து கொண்டுதான்
இருக்கிறது. அதே போல மார்க்சியம் ஒரு விஞ்ஞானம் அதை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அது
விஞ்ஞானம்தான்” என்பது போன்ற பேச்சுகளையும் நாம் கேட்க முடிகிறது.
இன்றைய வகுப்பில் மார்க்சியம்
எத்தகைய விஞ்ஞானம் என்பதைத்தான் பார்க்கப் போகிறோம்.
மார்க்சியம் விஞ்ஞானம் என்றால் அதை ஏன் அனைவராலும்
ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்ற கேள்வி எழாமல் இருக்காது.
ஏன் என்றால் இந்த விஞ்ஞானம்
ஒரு வர்க்கத்திற்கு சார்பானது, அதாவது தொழிலாளி வர்க்கத்தின் நலனைச் சார்ந்த சித்தாந்தம்.
இதனை தொழிலாளி வர்க்கத்தை சுரண்டும் எதிர் வர்க்கத்தாலும் அதன் அறிவுத்துறையைச் சார்ந்தவர்களாலும்
விஞ்ஞானமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இதை பற்றிதான் இன்று பார்க்கப் போகிறோம்.
தத்துவம், அரசியல் பொருளாதாரம்,
விஞ்ஞானக் கம்யூனிசம் என்கிற மூன்று உள்ளடக்கத்தைக் கொண்டது மார்க்சியம் என்பது நமக்குத்
தெரிந்ததே. தத்துவம், அரசியல் பொருளாதாரம் எதை பேசுகிறது என்பது இதன் தலைப்பைக் கொண்டே
அறிந்திட முடிகிறது, மூன்றாவதான விஞ்ஞான கம்யூனிசம்
என்பது கம்யூனிஸ்டுகளின் அரசியலாகும். இதனை ஏன் விஞ்ஞானம் என்று கூறப்படுகிறது
என்றால் நமது அரசியல், மார்க்சியத் தத்துவம், அரசியல் பொருளாதாரம் என்கிற இரண்டின்
அடிப்படையில் முடிவெடுக்கப்படுகிறது.
இதை சற்று விரிவாக பார்ப்போம். முதலில் தத்துவம்.
மார்க்சியத் தத்துவம் இரண்டு
பிரிவுகளைக் கொண்டது. ஒன்று இயற்கையைப் பற்றிய பொருள்முதல்வாத அணுமுறையைக் கொண்டது,
இதற்கு இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று பெயர் இதனை இயற்கைவியல் பொருள்முதல்வாதம்
(Dialectical
Materialism / Natural Materialism) என்று கூறுவது பொறுத்தமாக இருக்கும். மற்றொன்று வரலாற்றை பொருள்முதல்வாதப் பார்வையில்
அணுகுவது இதற்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதம் (Historical Materialism) என்று பெயர்.
மார்க்சியம் தோன்றிய காலத்தில்,
விஞ்ஞானத்தில் மூன்று கண்டுபிடிப்புகள் இயக்கவியல் பொருளமுதல்வாதத்துக்கு அடிப்படையாக
இருந்தது.
1, ஆற்றலின்
உருமாற்றம் 2, உயிரணு 3, பரிணாமக்
கொள்கை
இந்த
மூன்றும் அன்றைய நூற்றாண்டின் மாபெரும் கண்டுபிடிப்புகளாகும்.
ஆற்றலின்
உருமாற்றம்:- ஆற்றலின் உருமாற்றம் என்ற கண்டிபிடிப்பு இயற்கையில் இயங்குகின்ற
சக்திகள் என்று சொல்லப்படுபவை அனைத்தும் இயக்கத்தினுடைய வெளிப்பாட்டின் வெவ்வேறு
வடிவங்களே என்று அறிவிக்கிறது. ஒரு பொருள் குறிப்பிட்ட அளவு மறைகிறது என்றால்
மறைந்தவை மற்றொன்றில் குறிப்பிட்ட அளவு தோன்றுகின்றன என்பது புரிந்து
கொள்ளப்பட்டது. ஆகவே இயற்கையின் மொத்த இயக்கமும்
ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்துக்கு மாற்றமடைகின்ற இடைவிடாத தொடர் நிகழ்வு
போக்காக,
இந்த ஆற்றலின் உருமாற்றம் பற்றிய கண்டுபிடிப்புகள் நிரூபித்தது.
உயிரணு:-
எல்லா உயர்நிலை உயிரினங்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் ஒரு பொது விதிக்கு ஏற்ப
நடைபெறுவதை சுட்டிக்காட்டுகிறது உயிரணு சுட்டிக்காட்டுகிறது.
பரிணாமக்
கொள்கை:- டார்வினால் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கை. இவ்வுலகில் நம்மைச்
சுற்றியிருக்கும் உயிரினங்கள் அனைத்தும் தொடக்கத்திலிருந்த ஒரு சில ஒற்றை
உயிரணுவைக் கொண்ட உயிரிகளிலிருந்து ஏற்பட்ட நீண்ட பரிணாமப் போக்கின் விளைவு ஆகும்.
அனைத்தும் எளிய உயிரினத்திலிருந்து சிக்கலான உயிரினங்களாக வளர்ச்சியடைந்து இருக்கின்றன.
மனிதன் என்பவன் விலங்கினத்தின் நெடிய பரிணாமத்தின் விளைவே, என்று
டார்வின் அறிவியல் முறையில் நிரூபித்தார்.
இந்த
முப்பெரும் கண்டுபிடிப்புகளின் மூலம் இயற்கையின் முதன்மையான மாற்றப் போக்குகளுக்கு
விளக்கம் கிடைத்தன.
இதன்மூலம் இயற்கையின் நிலையிருப்பு, வளர்ச்சி
ஆகியவற்றிற்கான காரணங்களை அறிந்து கொள்ள முடிந்தது..
இதன் மூலம், இந்த உலகம் எந்த இயற்கை மீறிய சக்தியால் படைக்கப்பட்டது அல்ல என்ற முடிவுக்கு இயக்கவியல் பொருள்முதல்வாதம் விஞ்ஞானத்தின் அடிப்படையில் விளக்குகிறது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில்
மின்னணு, கதிரியக்கம் கண்டுபிடித்தபோது, அணுக்கள் பிளக்கப்பட்டது. உடனே சில தத்தவஞானிகள்
பொருளே மறைந்து போன பிறகு பொருள்முதல்வாதத்திற்கு இனி இடமே இல்லை. பொருள்முதல்வாதத்
தத்துவம் தகர்ந்து போயிற்று என்று கூறினர்.
இதற்கு லெனின் பதில் கூறினார்.
பருப்பொருள் மறைந்திடவில்லை,
பருப்பொருளை நாம் எந்தளவுக்கு அறிந்திருந்தோமோ அந்த எல்லை தான் மறைந்தது என்றார்.
இன்றைக்கு பிரச்சினை செய்பவர்களுக்கும் நாளை
பிரச்சினை செய்யப் போகிறவர்களுக்கும் சேர்த்தே லெனின் பதிலளித்துவிட்டார். அதாவது எதிர்காலத்தில்
புதியதாக எதைக் கண்டுபிடித்தாலும் அதற்கும் சேர்த்தே பதிலளித்துவிட்டார்.
பருப்பொருளுக்கு புதிய
விளக்கம் கொடுத்தார்.
நமக்கு புறத்தே இருக்கும் அனைத்தும் பருப்பொருட்களே. அது நமது
அறிதலில் வெளிப்படுகிறது.
அடுத்து வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் பற்றி பார்ப்போம்
மார்க்சுக்கு முன்புவரை
சமூகம் என்பது சிறந்த மனிதர்களால் படைக்கப்பட்டது,
அரசர்கள், தளபதிகள், ஞானிகள்
போன்றோர்களால் சமூகம் உருவாக்கப்படுகிறது என்று கூறப்பட்டது. இதற்கு மாறாக உற்பத்திச்
சக்திகளின்படி சமூகம் உருவாகிறது, வளர்கிறது, மாறுகிறது என்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம்
கூறியது.
சமூக இருப்பு, வளர்ச்சி, மாற்றம் ஆகியவற்றை மார்க்சியம் அடித்தளம்
மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டின் மூலம் விளக்குகிறது.
அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டின்படி சமூகம் குறிப்பிட்ட விதிகளில்தான்
செயல்படுகிறது. வரலாற்றை காரண காரியத்துடன் மார்க்சியம் விளக்குவதில்தான் அதன் விஞ்ஞான
அணுகுமுறை அடங்கியிருக்கிறது.
இயற்பியல் விதிகளை கண்டுபிடித்துக் கூறுவது இயற்பியல் விஞ்ஞானம், வேதியல் விதிகளைக் கண்டுபிடித்துக் கூறுவது வேதியல் விஞ்ஞானம், உயிரியல் விதிகளைக் கண்டுபிடித்துக்
கூறுவது உயிரியல் விஞ்ஞானம் அதே போல சமூக
வளர்ச்சியின் விதிகளைக் கண்டுபிடித்துக் கூறுவது வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்கிற விஞ்ஞானம் ஆகும்.
உற்பத்தி
உறவுகளின் கூட்டுமொத்தமே, சமூகத்தின்
பொருளாதார அமைப்பாகவும், சமூகத்தின்
உண்மையான அடித்தளமாகவும் அமைகிறது. இந்த அடித்தளத்துக்குப் பொருந்தக்கூடிய சமூக
உணர்வுகள் குறிப்பிட்ட வடிவங்களாக மேற்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது.
மேற்கட்டமைப்பில் உள்ள
கருத்துக்கள் அடித்தளத்தின் அடிப்படையில் ஏற்படுகிறது, மாறுகிறது என்று வரலாற்றியல்
பொருள்முதல்வாதம் நிரூபித்துள்ளது.
ஆனால் இதனை சுரண்டும் வர்க்கதாரும்
அதன் அறிவுத்துறையாளர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏன் என்றால் மார்க்சிய சமூக
வளர்ச்சியின் விதி முதலாளித்துவ சமூகத்தின் அழிவை வெளிப்படுத்துகிறது. வளர்ச்சியையும்
மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளும் முதலாளிகளால் அழிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்
வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை முதலாளிகளால் விஞ்ஞானமாக ஏற்றுக் கொள்ளமுடியாது.
உழைப்பாளர்களின் நலனுக்கு
வரலாற்றியல் பொருள்முதல்வாதம் உகந்ததாக இருப்பதால் உழைக்கும் வர்க்கம் இதை ஏற்றுக்
கொள்ள முடிகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதம் முதலாளித்துவ சுரண்டும் வர்க்க நலனுக்கு
எதிராக இருக்கிறது, அதனால் அவர்களால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆக வரலாற்றியல் பொருள்முதல்வாதம்
விஞ்ஞானமாக இருந்தாலும் இதனை அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
மார்க்சியம் என்பது வர்க்க
சார்ந்த விஞ்ஞானம் என்பதை ஓரளவுக்கு இப்போது புரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த இடத்தில் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது. இயற்கை விஞ்ஞானம்
செயல்படுவதற்கு மனிதனது உதவித் தேவையில்லை, ஆனால் சமூக விஞ்ஞானம் மனிதன் மூலமே நடைபெறுகிறது.
சமூக விதிகளை மனிதனே செயற்படுத்துகிறான்
என்பதில்தான் கம்யூனிஸ்டுகளின் அரசியல் வேலை அடங்கி இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி
தனது வேலைத்திட்டத்தை தமது விருப்பம் சார்ந்து அமைத்துக் கொள்வதில்லை.
சமூக வளர்ச்சியின் நிலைமையை
கணக்கிட்டு தமது செயற்பாட்டை அமைத்துக்கொள்கிறது. இதுபற்றி ஸ்டாலின் கூறுவதைப் பார்ப்போம்.
"பாட்டாளி
வர்க்கத்தின் கட்சி, தனது நடைமுறை வேலைகளைச் செய்வதற்கு மேம்போக்கான நோக்கங்களை வழி
காட்டியாகக் கொள்ளக்கூடாது. அதற்குப் பதிலாக, சமுதாய வளர்ச்சியின் விதிகளையும், அந்த
விதிகளைக் கொண்டு எடுக்கும் நடை முறைக்குரிய முடிவுகளையும்தான் வழிகாட்டியாகக் கொள்ள
வேண்டும்.
எனவே, மனித குலத்தின் இன்பமயமான எதிர்காலம் என்ற ஒரு கனவாக இருந்து வந்த சோசலிசம், இப்பொழுது ஒரு விஞ்ஞானமா மாற்றப்படுகிறது.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும்
வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்- பக்கம் - 22-23)
புறநிலை விதியை மார்க்சியம் தனித்துப் பேசவில்லை, அது அகநிலையில் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பதைப் பற்றி சரியாகவே தெளிவுபடுத்தி உள்ளது. இருந்தாலும் புறநிலை என்று பேசினாலேயே அது இயந்திரத்தனத்துக்கு இட்டுச் செல்லும் என்று தொடர்ந்து பேசுபவர்களை நாம் பார்க்க முடிகிறது. அது அவர்களின் சொந்தப் பிரச்சினை, மார்க்சியக் கோட்பாட்டுப் பிரச்சினை அல்ல.
இதுவரை தத்துவத்தை சுருக்கமாகப் பார்த்தோம். அடுத்து அரசியல் பொருளாதாரம்.
குறிப்பிட்ட சமூகத்தினுடைய உற்பத்தி முறையின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவற்றைப் பற்றி விவரிப்பதே அரசியல் பொருளாதாரம் ஆகும்.
இங்கே நாம் முதலாளித்துவ உற்பத்தி முறையை எடுத்துக் கொள்வோம். முதலாளித்துவ உற்பத்தி முறை எப்படித் தோன்றியது, எவ்வாறு வளர்கிறது, அதன் வளர்ச்சியே முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு எவ்வாறு தடைபடுகிறது என்பதை மார்க்சிய அரசியல் பொருளாதாரம் சுட்டிக்காட்டுகிறது.
வளர்ச்சி அடைந்த புதிய உற்பத்திச் சக்திகளுக்கு உற்பத்தி உறவுகள் எவ்வாறு பழைமைப்பட்டு பொறுந்தாது போகிறது. இந்தப் பிரச்சினையே சமூக புரட்சிக்கு அடிப்படையாக எவ்வாறு அமைகிறது என்பதை மார்க்சிய அரசியல் பொருளாதாரம் விளக்கியுள்ளது.
இதனைப் புரிந்து தொழிலாளர்களின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சி, உழைக்கும் மக்களைக் கொண்டு முதலாளிதுவ உற்பத்தி முறையை எப்படித் தூக்கி எறிய வேண்டும் என்பதைப் பற்றிதான் மார்க்சிய அரசியல் பொருளாதாரம் போதிக்கிறது.
சமூக மாற்றம் என்பது தொழிலாளர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த முடிவு அல்ல, அது முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் உள்முரண்பாட்டிற்கான தீர்வாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியும் உழைக்கும் மக்களும் அந்தத் தீர்வை நடத்திக் காட்டுபவர்கள். இதை சரியாக நடத்த வேண்டும் என்றால் சமூகத்தின் புறநிலை விதியை சரியாக கணித்து அதன்படி கட்சியின் செயற்பாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும்.
சமூக புரட்சிக்கு புறநிலை-அகநிலை ஆகியவற்றின் இணைப்பு முக்கியமானதாகும். சமூகத்தில் புரட்சிக்கான புறநிலை வரும்வரை கட்சி என்ன செய்ய வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானதாகும். ஏன் என்றால் அமைதிகாலத்தில் கடைபிடிக்கும் போக்குகளில்தான் புரட்சிக்கு தயாரிக்கும் பணி அடங்கியுள்ளது.
நம் நாட்டில் புரட்சியை மறந்த நடைமுறைவாதிகளும், நடைமுறையற்ற புரட்சியாளர்களும் நிறைந்து காணப்படுகின்றனர்.
மக்கள் மத்தியிலும் கட்சி ஊழியர்களுக்கு - இடையிலும் இன்றைய செயற்பாடு புரட்சிக்கான தயாரிப்பாக இருக்க வேண்டும்.
புரட்சிக்கு காத்துக் கொண்டிருப்பது புரட்சிகர செயற்பாடாகாது, புரட்சியை நோக்கி தயாரிப்பதே புரட்சிகர செயற்பாடாகும். கட்சி ஊழியர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும், வர்க்க உணர்வை ஊட்ட வேண்டியது முன்னணிப் படையான கட்சியின் கடமையாகும். இந்தக் கடமையை கட்சி திறம்பட செய்திட வேண்டுமானால் மார்க்சிய அடிப்படைகளை நன்றாகப் புரிந்திருக்க வேண்டும்.
வர்க்க அரசியல்படுத்துகிற திறமையினை கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருக்க வேண்டும். தலைமையே சித்தாந்தப் பலவீனாக இருந்தால், புரட்சிகர நடவடிக்கை பலவீனமாகவே காணப்படும். இடதுசாரி கட்சியின் பலவீனம் பொதுவாக சித்தாந்த பலவீனத்தில் அடங்கி இருக்கிறது.
மார்க்சிய அடிப்படையில் இன்றைய செயற்பாட்டை இடதுசாரி கட்சிகள் அமைத்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ சமூகம் அளிக்கிற குறைந்தபட்ச ஜனநாயகத்தை முழுமையாகப் பயன்படுத்தி பலம் பெற வேண்டும்.
லெனின் தனது அரசு என்கிற தலைப்பில் பேசும் போது இது பற்றி தெளிவாகக் கூறியுள்ளார். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது முழுமையான ஜனநாயகம் கிடையாது, இதில் இடதுசாரிகளுக்கு எந்த சந்தேகமும் வராது, ஆனால் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை பயன்படுத்தி தம்மை வளர்த்துக் கொள்ள இடது தீவிரவாதத்துக்கு தெரிவதில்லை.
இறுதிக் குறிக்கோளைப் பற்றி அதிகம் பேசுகிற இடது தீவிரவாதம் அதற்கான இன்றையப் பணியை செய்யாது தவிர்க்கிறது.
முதலாளித்துவ ஜனநாயகம், கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைத்துக் கொள்வதற்கும், ஊழியர்களை பயிற்சி அளிப்பதற்கும் உழைக்கும் மக்களை சங்கமாகத் திரட்டுவதற்கும், அவர்களை அரசியல் படுத்துவதற்கு வாய்ப்பளிக்கிறது. இது பற்றி லெனின் கூறியதைக் கேட்கும் போது அதிதீவிர இடதுசாரிகளுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
லெனின்:-
“பண்ணையடிமை முறையுடன் ஒப்பிடும் பொழுது, ஜனநாயகக் குடியரசும் அனைத்து மக்களுக்குரிய வாக்குரிமையும் மாபெரும் முன்னேற்றமாகத் திகழ்த்தன. பாட்டாளி வர்க்கம் இன்று பெற்றுள்ள ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அடைவதற்கும், மூலதனத்தை எதிர்த்து முறையாகப் போராடுகின்ற, உறுதியும் கட்டுப்பாடும் பெற்ற அணிகளை வகுப்பதற்கும் அவை வாய்ப்பு அளித்துள்ளன. பண்ணையடிமை குடியானவர்களிடம் கிட்டத்தட்ட இது போன்றதுகூட எதுவும் இருத்ததிவை என்றால், அடிமைகளைப் பற்றிக் கூறத் தேவையேயில்லை.
அடிமைகள் கிளர்த்து எழுத்தனர், கலகம் புரிந்தனர். உள்நாட்டுப் போர்களைத் தொடங்கினர் என்பதை நாம் அறிவோம். ஆயினும் வர்க்க உணர்வுள்ள பெரும்பாலாரையோ, போராட்டத்தை நடத்துவதற்கு வேண்டிய கட்சியை அவர்களால் ஒருபோதும் தோற்றுவிக்க முடியவில்லை. தாங்கள் எந்தக் குறிக்கோளுக்காகப் போராடுகிறோம் என்பதைத் தெளிவாகப் புரித்து கொள்ள அவர்களுக்கு முடியவில்லை. வரவாற்றின் மிகப்பெரும் புரட்சிகரமான காலகட்டங்களில்கூட ஆளும் வர்க்கங்கவின் கைப்பாவைகளாகவே அவர்கள் எப்போதும் இருந்தனர்.
சமுதாயத்தின் உலக வளர்ச்சி நிலையிலிருந்து பார்க்கும் பொழுது. முதலாளித்துவக் குடியரசு, நாடாளுமன்றம், அனைத்து மக்களுக்குரிய வாக்குரிமை ஆகிய அனைத்தும் மாபெரும் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. மனித இனம் முதலாளித்துவத்தை நோக்கிச் சென்றது. முதவாளித்துவம் ஒன்றுதான், நகர்ப்புறப் பண்பாட்டின் மூலம், ஒடுக்கப்பட்ட பாட்டாளிவர்க்கம் தன்னைத்தானே உணரும்படியாகச் செய்யவும் உலகத் தொழிலாளி இயக்கத்தை உண்டாக்கவும் வாய்ப்பு அளித்தது; உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களைக் கட்சிகளாக, திரளான மக்களின் போராட்டத்தை உணர்வுபூர்வமாக நடத்திச் செல்லும் சோஷலிசக் கட்சிகளாக அமையும்படி செய்தது. நாடாளுமன்ற முறை இல்லையேல். தேர்தல் அமைப்பு இல்லையேல், தொழிவாளி வர்க்கத்தின் இவ்வளர்ச்சிப் பெருக்கம் ஆகமுடியாத காரியமாகவே இருந்திருக்கும்.”
(அரசு)
இந்த லெனின் கூற்று பலரை திகைக்க வைத்துள்ளது. அவர்கள் இந்தக் கூற்றை அரசு பற்றிய வர்க்க சார்ப்பானதற்கு எதிராகப் பார்க்கின்றனர்.
இந்த லெனின் கூற்றை மறந்தால், முதலாளித்துவ சமூகத்தில் நம்மால் கட்சி கட்டவே முடியாது.
லெனின் கூறியதை மனதில் கொண்டு முதலாளித்துவம் அளிக்கிற குறைந்தபட்ச ஜனநாயகத்தை முழுமையாகப் பயன்படுத்தி கம்யூனிஸ்ட் கட்சி தம்மையும் உழைக்கும் மக்களையும் வளர்த்தெடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் மற்றொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பயன்படுத்துகிறேன் என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் அகப்பட்டு வலது தீரிபாகவும் போய்விடக்கூடாது. சீர்திருத்தப் போராட்டத்தையே இறுதிப் போராட்டமாக கருதிக் கொள்ளக்கூடாது.
கூலி உயர்வுக்கு மட்டும் போராடி, கூலி அமைப்பு முறையை தூக்கி எறிகின்ற வர்க்க கடமையை மறந்து போவது வலது திரிபாகும்.
இடது தீவிரவாதிகள் சீர்திருத்தப் போராட்டத்தை முற்றப் புறக்கணிக்கின்றனர்,.
வலது திரிபுவாதிகள் சீர்த்திருத்தப் போராட்டத்தில் முற்ற முடங்கி வர்க்கக் கடமையை மறக்கின்றனர்.
இறுதிக்குறிக்கோளை மறந்திடும் போக்கை சீர்திருத்தவாதம் என்று மார்க்சியம் எதிர்க்கிறது. சீர்திருத்தப் போராட்டத்தை முற்ற முழுக்க மறுப்பதை அராஜகவாதம் என்று மார்க்சியம் எதிர்க்கிறது.
“மார்க்சியமும் சீர்திருத்தவாதமும்” என்ற சிறுகட்டுரையில் இதை லெனின் மிகத் தெளிவாக நமக்குக் கூறியுள்ளார். சீர்திருத்தவாதம் என்பது தொழிலாளர்களை முதலாளித்துவ வழியில் ஏமாற்றுவது என்று லெனின் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அராஜகவாதிகளைப் போலல்லாது மார்க்சியவாதிகள் சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தை, அதாவது ஆளும் வர்க்கத்தின் ஆட்சியதிகாரத்தை அழிக்காமலே உழைப்பாளி மக்களுடைய நிலைமைகளை மேம்படச் செய்வதற்கான போராட்டத்தை அங்கீகரிக்கின்றனர். ஆனால் அதேபோதில் மார்க்சியவாதிகள் சீர்திருத்தவாதிகளை எதிர்த்து மிகவும் வைராக்கியமான ஒரு போராட்டத்தை நடத்துகின்றனர். சீர்திருத்தவாதிகள் தொழிலாளி வர்க்கத்தின் குறிக்கோள்களையும் செயற்பாடுகளையும் சீர்திருத்தங்களைப் பெற்றுக் கொள்வதுடன் நின்றுவிடும்படி நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்திவிடுகிறவர்கள்.
மூலதனத்தின் ஆதிக்கம் இருக்கிற வரை, தனிப்பட்ட மேம்பாடுகள் ஏற்படினும், எப்பொழுதும் கூலி அடிமைகளாவே இருந்து வருவோரான தொழிலாளர்களை முதலாளித்துவ வழியில் ஏமாற்றுவதுதான் சீர்திருத்தவாதம்.”
(மார்க்சியமும் சீர்திருத்தவாதமும்)
கம்யூனிஸ்ட் கட்சியானது ஆதிதீவிர இடது தீவிரவாதத்துக்கும், வலது திரிபான சீர்த்திருத்தவாதத்துக்கும் எதிராகப் போராடி, தன்னை சரியான வழியில் செலுத்த வேண்டும். அப்போதுதான் புரட்சிக்கான அகநிலைத் தயாரிப்பை, புரட்சிகர புறநிலைக்கு ஏற்ப செயற்படுத்த முடியும்.
இறுதி பகுதியான விஞ்ஞான கம்யூனிசத்தை அடுத்துப் பார்க்கப் போகிறோம்.
பழங்குடிகள் வாழ்ந்த ஆதி கம்யூனிச சமூகத்தின் சிதைவில் இருந்தே வர்க்க சமூகம் தோன்றுகிறது.
பழங்குடிகளில் சிலர் பணக்காரர் என்றோ - பலர் ஏழை என்றோ இருப்பதில்லை. கிடைப்பதை அந்த சமூகத்தில் உள்ள அனைவர்களும் சமமாகவே பங்கிட்டுக் கொண்டனர். அதனால் அங்கே பணக்காரன் ஏழை என்கிற பிரிவு தோன்றிவில்லை.
பழங்குடி சிதைந்தப் பின்பு தோன்றிய சமூத்தில்தான் பணக்காரன் ஏழை என்கிற வர்க்க பேதம் தோன்றியது. இந்த வர்க்க வேறுபாடுக்குக் காரணம் சொத்துடையே ஆகும்.
சொத்துடைமைதான் வர்க்க வேறுபாட்டை உருவாக்கியுள்ளது. இந்த வர்க்க வேறுபாட்டை ஒழிக்க வேண்டுமானால் சொத்துடையை ஒழிக்க வேண்டும்.
கம்யூனிசத்தின் இறுதிக் குறிக்கோள் சொத்துத்துடையை ஒழிப்பதே ஆகும்.
இந்த சமூகத்தில் உள்ள அனைவரும் நல்ல நிலையில் சமமாக வாழ வேண்டும் என்று பல காலாமாக, பல அறிஞர்கள் நினைத்து வந்தனர். வர்க்க வேறுபாடு தோன்றியதில் இருந்தே இத்தகைய கருத்துக்கள் காணப்படுகிறது.
ஆனால் அவர்கள் இந்த சொத்துடைமையை அழிக்காமல் பணக்காரரின் தயவில் அனைவரையும் வாழ வைத்திடலாம் என்று கருதினர். ஆனால் சொத்துடைமை சமூகத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதை எதார்த்த அனுபவம் நமக்குக் காட்டியுள்ளது.
மார்க்சுக்கு முன்பு மூன்று கற்பனாவாத சோஷலிஸ்டுகள் இருந்தனர். 1) சான்-சிமோன், 2) ஃபூரியே 3) ராபர்ட் ஓவன். இம் மூவரும் ஒரு வகையில் மேதைகளே.
தொடக்கக் காலத்தில், முதலாளித்துவ உற்பத்தியின் பெருக்கத்தைப் பார்க்கும் போது சமூக தேவைகள் நிறைவு பெற்றுவிடும் என்றே முதலில் பொதுவாக நம்பப்பட்டது. ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையிலான, தொழில் வளர்ச்சி, உழைப்பாளி மக்களுக்கு வறுமையையும், பெரும் துயரத்தையுமே தந்தது.
இதனை பார்த்த கற்பனாவாத மேதைகள், முதலாளித்து சமூக அமைப்பு முறையை கண்டித்தனர், அதன் மறைவைப் பற்றி கனவு கண்டனர், அதற்கு மாற்றாக ஒரு புதிய சமூக அமைப்பை வடிவமைத்துக் கொண்டனர்.
இம்மேதைகள் முதலாளித்துவ சமூகத்தின்மீது வைத்த விமர்சனம் மிகவும் கடுமையானது.
முதலாளித்துவத்துக்கு முந்திய சமூகங்கள் எப்படி குறைபாடு உடையதாக இருந்ததோ அதைப் போலவே முதலாளித்துவ சமூகமும் குறைபாடு உடைதாகக் காணப்படுகிறது. எப்படி முந்திய சமூகம் தூக்கி எறியப்பட்டதோ அதேபோல இந்த முதலாளித்துவ சமூகமும் தூக்கி எறியப்படும் என்று கற்பனாவாதிகள் கருத்தினர்.
கற்பனாவாதிகள் வாழ்ந்த காலத்தில், முதலாளித்துவம் வளரும் தறுவாயில் இருந்து, அதனால் அவர்களின் அறிவு, எல்லைக்கு உட்பட்டதாகவும் வரம்பிடப்பட்டதாகவும் இருந்தது.
முதலாளித்துவம், தொடக்கக் கட்டத்தில் இருந்ததால் கற்பனாவாதிகளால் மூலதனத்தின் ஆதிக்கம், முதலாளித்துவ சுரண்டலின் ஊற்று ஆகியவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை
முதிர்ச்சியற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிலைமைகளுக்கும், முதிர்ச்சியற்ற வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்தாய் முதிர்ச்சியற்ற கோட்பாடுகளை கற்பனாவாதிகள் முன்வைத்தனர்.
அதாவது கற்பனாவதிகளின் கோட்பாடு முதிர்ச்சி அற்று இருந்ததற்குக் காரணம் அன்றைய முதலாளித்துவம், வளர்ச்சி பெற்று இருக்கவில்லை. முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையேயான பகை முற்றவில்லை, அதனால் இந்த கற்பனாவாதிகளின் கோட்பாடு இதற்கு ஏற்ப முதிர்ச்சியற்ற கோட்பாடாக இருந்தது.
1840களுக்குப் பிறகு முதலாளித்துவம் முதர்ச்சியடையத் தொடங்கியது. முதலாளித்துவத்தை முழுமையாக ஆராய்ந்து அறிந்து கொள்ளும் வகையில் வளர்ந்திருந்தது. மார்க்சின் கண்ணோட்டம் விஞ்ஞானத் தன்மை உடையதாக இருப்பதற்கு இதுவே காரணமாகும்
ஆக, மார்க்சிய விஞ்ஞான கம்யூனிசக் கோட்பாடு உருவாவதற்கு ஒரு பின்புலம் இருக்கிறது. இந்த பின்புலம் நமக்கு என்ன உணர்ந்துகிறது என்றால், சமூகத்தைப் போன்றே, சமூகப் பொருளாதாரமும் விதிகளுக்குள்தான் நிகழ்கிறது. இந்த விதியின் அடிப்படையிலேயே மார்க்சியத்தின் விஞ்ஞான கம்யூனிசம் அமைக்கப்பட்டுள்ளது.
கற்பனாவாத கம்யூனிஸ்டுகள் வரை, கம்யூனிசத்தை மக்கள் விருப்பப்பட்டு உருவாக்குவதாகவே கருதினர். ஆனால் மார்க்சிய விஞ்ஞான கம்யூனிசம்தான் முதலாளித்துவ உள்முரண்பாட்டுக்குத் தீர்வாகவும், தொழிலாளர்கள் முதலாளிகள் ஆகியோர்களுக்கு இடையே உள்ள வர்க்கப் போராட்டத்தின் விளைவாகவும் கம்யூனிச சமூகம் தோன்றும் என்று விஞ்ஞான அடிப்படையில் விளக்கியது.
கம்யூனிச சமூகம் என்பது உருவாக்கப்படுவதில்லை, தவிர்க்க முடியாத வகையில் நிலைநாட்டப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி என்பது பல கட்டங்களைக் கடந்து வருவதாகம், கம்யூனிச சமூகம் வரவேண்டுமானால் அதற்கு முன்பாக முதலாளித்துவம் முழுவளர்ச்சி அடைய வேண்டும். முதலாளித்துவ புரட்சியை முழுநிறைவடையச் செய்ய முதலாளித்துவ வர்க்கம் தயங்கும் போது பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றி முதலாளித்துவ ஜனநாயகத்தை முழுநிறைவு செய்த பிறகே சோஷலிச உற்பத்தி முறையை செயல்படுத்தும்.
ருஷ்யாவில் 1917 ஆம் ஆண்டு நடைபெற்ற நவம்பர் புரட்சியானது ஒரு சோஷலிசப் புரட்சி என்று லெனின் தனது ஏப்ரல் ஆய்வுரையில் விளக்கி இருந்தாலும், ஆட்சியைப் பிடித்தவுடன் சோஷலிச உற்பத்தி முறையை கைக்கொள்ளாமல் விடுபட்டுப் போன முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சியை நிறைவேற்றும் வகையில் புதிய பொருளாதாரக் கொள்கையை அமைத்தார்.
அரசு, சோஷலிசமாக இருந்தால் மட்டும் போதாது. சோஷலிச உற்பத்திக்குத் தேவைப்படுகிற அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து இருக்க வேண்டும்.
முதலாளித்துவ சரக்கு உற்பத்திக்கு, வேலைப்பிரிவினை அவசியமாகும், உற்பத்தியானது சமூகமயமானதாக இருக்க வேண்டும். சமூகமயப் பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையே உள்ள முரண்பாடே முதலாளித்துவ உற்பத்திக்கு அடிப்படையாகும்.
சமூக வேலைப்பிரிவினையும் சமூகமயப் பொருளுற்பத்தியும் வளர்ச்சி அடையும் போது ஏற்படுகிற பிரச்சினையை முதலாளித்துவத்தால் தீர்க்க முடியாமல் போகிறது.
வர்க்க போராட்டத்தின் உச்சத்துக்கான பொருளாதார பின்புலம் இதுதான்.
சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையாக வெளிப்படுகிறது என்று வர்க்கப் போராட்டத்துக்கு மார்க்சியம் விஞ்ஞான விளக்கம் கொடுக்கிறது.
பொதுவாக முதலாளிகளும், சமூகம் வர்க்கமாகப் பிரிந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளவர் ஆனால் அவர்களால் அதற்கான காரணத்தை விஞ்ஞான வழியில் நிறுவமுடியவில்லை. மார்க்சியமே வர்க்க பிளவுக்கானக் காரணத்தை விஞ்ஞான வழியில் நிறுவியுள்ளது.
அதே போல இதற்கான தீர்வையும் விஞ்ஞான வழியிலேயே கூறியுள்ளது.
முதலாளித்துவத்தின் தொடக்கக் காலத்திலும் சரி, ஏகபோக முதலாளித்துவமான ஏகாதிபத்தியக் காலத்திலும் சரி, பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க முடியவில்லை.
பொருளாதார நெருக்கடி என்பது யாரோ சில முதலாளிகள் செய்த தவறுகளினால் ஏற்படவில்லை. முதலாளித்துவத்தின் உள்முரண்பாட்டினால் ஏற்படுகிறது. அதாவது சமூகமயமான பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவ சவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாட்டினால் ஏற்படுகிறது என்று மார்க்சியம் பொருளாதார நெருக்கடிக்கு விஞ்ஞானத் தன்மையில் காரணக் காரிணத்தோடு விளக்கியுள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடியே சமூகப் புரட்சிக்கான புறநிலையாகும். சமூகத்தின் புறநிலை விதி தானே செயப்படுவதில்லை, இயற்கை விஞ்ஞானம் மனிதர்களின் துணையின்றியே செயல்படுகிறது. ஆனால் சமூக விஞ்ஞானத்தின் விதிகள் மனிதனைக் கொண்டே நிகழ்கிறது.
புரட்சிகர சமூக மாற்றத்துக்கு புறநிலையும் அதனைப் புரிந்து செயல்படக்கூடிய உழைக்கும் மக்களும் அவர்களைத் தலைமைத்தாங்கம் கட்சியும் தேவைப்படுகிறது.
இங்கே கட்சி என்று கூறப்படுவது பாட்டாளிகளின் கட்சி என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஏன் என்றால் சோஷலிசப் புரட்சியை முன்னின்று நடத்தப் போவது பாட்டாளிகளே, அதாவது ஆலைத் தொழிலாளர்களே, பிற தொழிலாளர்களும் இணைந்து கொள்வர் ஆனால் தலைமை ஏற்பது பாட்டாளிகளே.
இந்தப் பாட்டாளிகளை மார்க்சியம் ஏன் முன்னிறுத்துகிறது என்றால், முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியில் முதலில் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் பாட்டாளிகளே. அதனால் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வை நோக்கி முதலில் நகர்பவர்கள் பாட்டாளிகளே.
இந்தப் பாட்டாளிகளை பற்றி, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கூறியதைப் பார்ப்பம்.
“முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்கும் மேலாகத் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்கவியலாதவை ஆகும்.”
இந்த தவிர்விக்க முடியாமையே விஞ்ஞான விளக்கமாகும்.
சமூகப் புரட்சி நிகழ வேண்டுமானால், புறநிலை-அகநிலை ஆகியவற்றின் இணைவு அவசியமாகும். புறநிலையைப் புரிந்து கொள்ள முடியாத கம்யூனிஸ்ட் கட்சியால் புரட்சியை நிகழ்ந்த முடியாது. அதுமட்டுமல்ல புரட்சிக்குத் தடையாகவும் அத்தகையக் கட்சி செயல்படும் என்கிற ஆபத்தும் இருக்கிறது.
புறநிலை என்பதை, சற்று விரிவாகப் பார்ப்போம்.
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியே ஒர் உற்பத்தி முறையின் மாற்றத்துக்கு அடிப்படை என்று மார்க்சியம் கூறுகிறது.
ஆதிக் கம்யூனிச சமூக உற்பத்தியில் ஏற்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியே அடிமைச் சமூகத்தைத் தோற்றுவித்தது, அதே போல அடிமைச் சமூகத்தில் ஏற்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியே நிலப்பிரபுத்துவ சமூகத்தை ஏற்படுத்தியது, அதே போல நிலப்பிரபுத்துவ உற்பத்தியில் ஏற்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியே நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சிக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்துக்கும் காரணமாகிறது.
முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஏற்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் ஏற்பட்ட மிகை உற்பத்தியினால்தான் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது.
நெருக்கடியின் போது, முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை முதலாளித்துவ வினியோக முறையினை எதிர்த்துக் கலகம் புரிகிறது. பொருளுற்பத்தி சக்திகள், எதை மீறி வளர்ந்து விட்டனவோ அந்தப் பொருளுற்பத்தி முறைக்கு எதிராக கலகம் செய்கின்றது.
இந்த நிலைமை என்ன சொல்கிறது என்றால், வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளை நெறியாண்மை செய்திட முடியாமல் முதலாளித்துவம் திணறுகிறது.
ஏகாதிபத்தியத்தின் பொருளுற்பத்தி முறையில் திட்டமிட்ட உற்பத்திக்கு வாய்ப்பில்லாததால் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வை அதனால் தரமுடியாமல் திட்டமிட்ட கம்யூனிச சமூக உற்பத்தி முறையிடம் சரணடைகிறது.
முதலாளித்துவ அமைப்புத் தோன்றுவதற்கு முன்பு பல நெருக்கடிகளை சமூகம் கண்டிருக்கின்றன. அது வறட்சி, பெருவெள்ளம் போன்றவற்றால் ஏற்பட்டவை, அதாவது இவை இயற்கையின் சீற்றத்தால் உருவானவை.
மிகை உற்பத்தி என்ற இந்த பொருளாதார நெருக்கடி முதலாளித்துவ அமைப்பில் மட்டுமே உருவாகியுள்ளது.
மிகை உற்பத்தியால் வாணிபம் சுருங்குகின்றன, சந்தையில் பொருட்கள் விற்பனையாகாமல் குவிந்துவிடுகிறது, இதனைத் தொடர்ந்து தொழிற்சாலையில் உற்பத்தி குறைத்தல், உற்பத்தியை நிறுத்துதல், தொழிற்சாலை மூடுதல் போன்றவை ஏற்படுகிறது. தொழிலாளர்களின் வேலையிழப்பு தொடர்கிறது.
பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் மார்க்சியம் மிகை உற்பத்தி என்றே கூறுகிறது. குறைநுகர்வு என்பது இரண்டாம் நிலையானதுதான். இந்த குறைநுகர்வு என்கிற பிரச்சினை முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முன்பும் காணப்பட்டதுதான்.
இந்த இரண்டாம் நிலைக் காரணத்தையும் சேர்த்துப் பார்ப்போம்.
இந்த மிகை உற்பத்தி என்பது, ஒருவகையில் சார்பானதாகும். அதாவது உண்மையில் சமூகத்திற்குத் தேவையானது போக மீதமுள்ளதை, இந்த மிகை உற்பத்தி குறிப்பிடவில்லை. இந்த முதலாளித்துவ உற்பத்தி முறை, தொழிலாளர் மற்றும் பல வேலையாளர்களை வேலையிழக்கச் செய்து, அவர்களிடம் வாங்கும் சக்தியை இழக்க செய்துவிடுகிறது.
முதலாளித்துவம், தனியுடைமை முறையில் செயல்படுவதால், உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும், பலன்களை கையகப்படுத்தும் தனிவுடைமை பெற்ற முதலாளித்துவ வடிவத்திற்கும் இடையே காணும் முரண்பாடாய் விளங்குகிறது.
முதலாளித்துவ உற்பத்தியில் ஏற்பட்ட அராஜக போக்காலும், மூலதனத்தின் உழைப்பைச் சுரண்டுவதின் விளைவுகளாலும், தொழிலாளிகளிடையே வாங்கும் திறன் குறைந்து போகிறது. முதலாளித்துவத்தில் உற்பத்தியின் நோக்கம், மக்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதல்ல, உழைப்பாளியின் உபரி உழைப்பை சுரண்டி மூலதனத்தை பெருக்குவதே ஆகும்.
முதலாளித்துவத்தின் சரக்கு உற்பத்தியானது, நுகர்வுடன் தொடர்புடையதாகும், ஆனால் உழைப்பாளிகள் மற்றும் அனைத்து மக்களின் வாங்கும் திறனை, முதலாளித்துவம் இழக்கச் செய்து விடுகிறது. நுகராமல் சந்தையில் சரக்கு குவிந்து கிடக்கும் காலகட்டத்தில் உழைப்பாளியும் மக்களும் நுகரமுடியாமல், வேலையிழந்து, பட்டினியில் கிடந்து அவதிபடுகின்றனர்.
முதலாளித்துவ அமைப்பில் மிகை உற்பத்தி, நெருக்கடி, தேக்கம், ஏற்றம், செழுமை என்கிற சுற்று மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது.
இந்த பொருளாதார நெருக்கடியை முதலாளித்துவ வர்க்க எப்படி சமாளிக்கிறது? மிகையான உற்பத்திப் பொருளை அழிக்கிறது, கோதுமை அதிகமாக விளைந்த போது அதை எரிபொருளாக பயன்படுத்தியது, மிகையானதை கடலில் கொட்டியது. உற்பத்தி சக்திகளை வலிந்து அழிப்பதின் மூலம் சமாளிக்கிறது
வீழ்ந்து போகாமல் தாக்குப்பிடித்த, தொழில் நிலையங்கள் புதிய ஏற்றம் பெற்று, புத்துயிர் உற்று வளர்கிறது. மீண்டும் முதலாளித்துவத்தில் திறனுடைய தேவையை கணக்கில் எடுக்காமல், மிகு உற்பத்தி என்ற நிலையை நோக்கிச் செல்கிறது. மீண்டும் சந்தை சுருங்குதல், சந்தையில் சரக்குகள் குவிதல், உற்பத்தியில் வீழ்ச்சி, உற்பத்தி நிறுத்தம், தொழிற்சாலை மூடுதல் என்ற பழைய நிலைமைகளை விட, கடுமையான நிலைமைகள் மீண்டும் அரங்கேறுகிறது.
இந்த உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயுள்ள மோதல், சோஷலிசப் புரட்சிக்கான அடித்தளத்தை, இந்த பொருளாதார சூழல் அமைத்துத் தருகிறது. உற்பத்திச் சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும், இடையே ஏற்படும் முரண்பாடு தான், புதிய சமூக உற்பத்தி முறைக்கான மாற்றத்திற்கு இட்டுச்செல்கிறது. இதைத் தொடர்ந்து கம்யூனிச உற்பத்திமுறை தோற்றம் பெறுகிறது.
இந்த சமூக மாற்றம் விஞ்ஞான அடிப்படையில் விளக்குவதற்கு, வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றும் மார்க்சிய அரசியல் பொருளாதார அணுகுமுறையே காரணமாகும். சமூக மாற்றத்துக்கான காரணத்தை இந்த இரண்டின் அடிப்படையில்தான் மார்க்ஸ் கூறியுள்ளார்.
கம்யூனிச மாற்றம் என்பது தனிப்பட்ட நபரின் விருப்பத்தின் அடிப்படையில் உருவாவதில்லை, முதலாளித்துவ உற்பத்தி முறையின் நெருக்கடிக்குத் தீர்வாக சமூக மாற்றம் ஏற்படுகிறது என்று மார்க்ஸ் விஞ்ஞான அடிப்படையில் நிறுவியுள்ளார்.
தத்துவம், அரசியல் பொருளாதாரம், கம்யூனிசம் ஆகியவை எப்படி விஞ்ஞானத் தன்மையுடையதாக மார்க்ஸ் நிறுவியுள்ளார் என்பதை மிகமிக சுருக்கமாகப் பார்த்தோம்.
மார்க்சியத் தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதம் இயற்கை விஞ்ஞானத்தின் அடிப்படையில் இந்த உலகம் வெளி சக்தியால் படைக்கப்படவில்லை என்று நிறுவியுள்ளது. தத்துவத்தின் மற்றொரு பிரிவான வரலாற்றியல் பொருள்முதல்வாதம் இந்த முதலாளித்துவ சமூகமானது பிற சமூகத்தைப் போல மறைந்து ஒழியும் என்று கூறுகிறது. மார்க்சிய அரசியல் பொருளாதாரம் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவற்றைப் பற்றி பேசுவதின் மூலம், முதலாளித்துவ உற்பத்தி முறை மறைந்து கம்யுனிச உற்பத்தி முறை தோன்றும் என்று கூறுகிறது. இறுதிப் பகுதியான விஞ்ஞானக் கம்யூனிசமானது, ஆதி கம்யூனிச சமூகம் சிதைத்தது முதல் வர்க்கப் பிளவு ஏற்பட்டது, முதலாளிதுவமே இறுதி வர்க்க சமூகம், கம்யூனிச சமூகத்தில் வர்க்க படிப்படியாக மறைந்து போகும் என்கிறது. இதை முதலாளிகளும் முதலாளித்துவ அறிஞர்களும் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.
முதலாளித்துவம் மறைவும்வரை, முதலாளித்துவம் அழியாது என்று போராடுவார்கள், அவர்களுடைய நலன் இப்படி அவர்களை பேச வைக்கிறது. ஆனால் தொழிலாளர்களின் நலன் மார்க்சியம் கூறுவதை ஏற்கிறது. மார்க்சியமே தொழிலாளர்களின் கோட்பாடாகும்.
மார்க்சியம் விஞ்ஞானம்தான் ஆனால் அது வர்க்க சார்பானது, மார்க்சியம் தொழிலாளர்களின் வர்க்க நலன் சார்பான விஞ்ஞானம். முதலாளித்துவ வர்க்க நலன் சார்ந்தவர்களால் மார்க்சியத்தை விஞ்ஞானமாக ஏற்க முடியாது.
இனிமேல் மார்க்சிய உள்ளடக்கமான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் ஆகியவற்றைப் பற்றி படித்தாலோ, அல்லது இதைப் பற்றி பேசினாலோ விஞ்ஞானத் தன்மையை இணைத்தே படிப்போம் பேசுவோம்.
லெனின் கூறிய ஒரு கருத்தோடு இந்த உரையை முடித்துக் கொள்கிறேன்.
“வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் "ஒருசார்பற்ற" சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது. அதிகாரத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானம் அனைத்தும், மிதவாதிகளது விஞ்ஞானம் அனைத்தும் ஏதாவெதாரு விதத்தில் கூலி அடிமை முறையை ஆதரிக்கிறது. மார்க்சியமோ கூலி அடிமை முறையை ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போர்ப்பிரகடனம் செய்துள்ளது.”
(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)
கூலி அமைப்பு முறையை தூக்கி எறிவதைப் பற்றிய சமூக விஞ்ஞானத்தை எந்த முதலாளியும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், மார்க்சிய சமூக விஞ்ஞானம் பாட்டாளி வர்க்க சார்பானது ஆகும்.
No comments:
Post a Comment