Wednesday 2 January 2019

“லெனின் வாழ்வும் படைப்பும்” என்ற தலைப்பில் நான் எழுதிய நூலில் டிராட்ஸ்கியைப் பற்றிய வெறுப்பைத் தவிர்ப்பதற்காக மிகவும் குறைவாகவே எழுதினேன்:-



1) “கட்சி உறுப்பினர் சேர்ப்பின் வரையறுப்பு பற்றிய கட்சியின் விதியின் மீது கடும் விவாதம் நடைபெற்றது. கட்சியின் திட்டத்தை ஏற்றுக் கொண்டு, கட்சிக்குரிய கட்டணத்தை செலுத்துவதுடன், கட்சியின் அமைப்புகளில் எதேனும் ஒன்றில் சேர்ந்து கட்சியின் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படுபவரே கட்சியின் உறுப்பினராவார் என்பதே கட்சி விதியாகும்.

 

லெனினது இந்தக் கருத்தை பிளாகானவை மற்றும் உறுதியான இஸ்க்ராவாதிகளும் ஆதரித்தனர். கட்சியில் சேர்வதற்கு பணம் செலுத்தினால் போதும், கட்சி அமைப்புகளில் செயற்பட வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பது மார்டாவுடைய கருத்தாகும். இதனை, அக்ஸல்ராட், ஜாஸீலிக், மற்றும் நிலையற்ற இஸ்க்ராவாதிகள் இவர்களுடன் டிராட்ஸ்கியும் சேர்ந்து ஆதரித்தார்.”

 


2) “
போல்ஷிவிக் கட்சி மட்டுமே ஏகாதிபத்தியப் போரை எதிர்த்து உறுதிகுலையாமல் நின்றது. ஏகாதிபத்தியப் போரின் தன்மையைப் பற்றி லெனின் தொடர்ந்து எழுதினார். மற்றொரு போக்காக நடுநிலைவாதிகள் தோன்றினர். ஜெர்மனியில் காவுத்ஸ்கியின் தலைமையிலும், பிரான்சில் லோங்கேயின் தலைமையிலும், ருஷ்யாவில் டிராட்ஸ்கியின் தலைமையிலும் தங்களது தடுமாற்றத்தை நடுநிலை போக்காகக் கடைப்பிடித்தனர்.”

3) “அக்டோபர் 10ஆம் நாளன்று கட்சியின் மையக் கமிட்டியின் ரகசியக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு லெனின் வருகிறார் என்பதை அறிந்த கமிட்டி உறுப்பினர்கள் அவரை நேரில் காண ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். நரைமயிர் டோப்பாவில் ஒரு புதியவர் அங்கே வந்து பேசத் தொடங்கினார், அந்த மாறுவேடம் பூண்டவர் லெனின் என்பதை பேச்சில் இருந்து கண்டுகொண்டனர்.

லெனின் தனது கருத்தை முன்வைத்தார், இத்தருணம் புரட்சிக்கானதே, அது ஆயுதமேந்திய போராட்டமே. இதனை மையக் கமிட்டி ஏற்றது. காமினெவும், ஸினோவ்யெவும் மட்டுமே இந்தத் தீர்மானத்தை எதிர்த்தவர்கள். டிராட்ஸ்கி ஆயுதப் போராட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கவில்லை, ஆனால் சோவியத்துக்களின் இரண்டாவது காங்கிரசுக்குப் பிறகு பார்க்கலாம் என்று கருத்துரைத்தார். இதுகூட எழுச்சியை தடுக்கும் முயற்சியேயாகும். தாமதிப்பது பெரும் தவறுக்கு இடமளிக்கும் என்று லெனின் மறுதலித்தார்.

எழுச்சியின் தலைமைக்கு லெனின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.”

4)“ஜெர்மன் அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட சம்மதித்தது. ஆனால் கடுமையான நிபந்தனைகளை விதித்தன. ஜெர்மனி தாம் கைப்பற்றியிருந்த போலந்து, லித்துவேனியா, லாட்வியாவின் பகுதி மற்றும் பேலோருஷ்யாவின் பகுதி ஆகியவற்றை தங்களிடமே விட்டுவிடும்படி கோரியது. இந்த கடுமையான நிபந்தனையை இளம் சோவியத் ஏற்கும்படியானது. நான்கு ஆண்டுகளின் போரினால் வீரர்கள் களைத்துப் போயிருந்தனர், வீரர்களை போர்முனையில் இருந்து அழைக்க வேண்டிய நிலையினை உணர்ந்து இந்த நிபந்தனைகளை ஏற்கவேண்டி வந்தது. இளம் சோவியத்தை நசுக்கத் துடிக்கும் பிற ஏகாதிபத்தியத்திடம் இருந்து காப்பாற்றுவதற்கு இந்த நிபந்தனைகளை ஏற்கவேண்டி வந்தது. இளம் சோவியத்தை வலுப்பெறுவதற்கு அவகாசம் வேண்டும், இந்த அவகாசத்தை அடைவதற்கு இந்த கடுமையான நிபந்தனையை ஏற்றாவது போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

                இந்த சமாதான ஒப்பந்தத்தை தடுப்பதற்கு எதிர் புரட்சியாளர்கள், மென்ஷிவிக்குகள், சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் முயன்றனர். இளம் சோவியத்தை ஜெர்மன் ஏகாதிபத்தியம் தொடர்ந்து தாக்கினால் சோவியத் அரசுக்கு ஆபத்து நேரும் என்பதை மனதில் கருதியே இவர்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்த சதித்திட்டத்தில் டிராட்ஸ்கியும், புக்காரினும் இணைந்து கொண்டனர். மேலும் “இடதுசாரி கம்யூனிஸ்டுகள்” என்ற பெயரில் கட்சிக்கு விரோதமாக, கட்சிக்குள் ஒரு குழுவை அமைத்துக் கொண்டனர்.”

5) “ஜெர்மனியுடன் சமாதானம் செய்திட வேண்டிய கட்டாய சூழ்நிலையைப் பற்றி கட்சியின் மையக் கமிட்டிக் கூட்டங்களில் பலமுறை விவாதங்கள் நடத்திய பின்பு, ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவது என்று முடிவாயிற்று. அயல்நாட்டு மக்கள் கமிசாரான டிராட்ஸ்கியை தலைமையாகக் கொண்ட குழு ஜெர்மனியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஜெர்மனியின் நிபந்தனைகளில் கையொப்பமிடாமல் சமாதானப் பேச்சை டிராட்ஸ்கி முறித்துக் கொண்டார்.

       இதனால் ஜெர்மனியின் படைகள் 1918ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மீண்டும் தாக்குதலைத் தொடுத்தது. ஒப்பந்தத்தில் காணப்படும் இடங்களைவிட அதிகமான இடங்களை இப்போரில் ஜெர்மனி கைப்பற்றியது. எதிரிப்படையினை பெத்ரோகிராத் நகரின் சிறிது தொலைவில் தடுத்து நிறுத்துவதற்கே, இளம் சோவியத் அரசு பெரும்பாடுபட்டது. மக்கள் கமிசார் சோவியத் சார்பாக லெனின் சோஷலிச தாயகம் ஆபத்தில் இருக்கிறது! என்று தலைப்பிட்டு மக்களுக்கு செய்தி அனுப்பினார். அதில் சமாதானமும் தற்காப்பும் தான் தற்போது அவசியமானது என்பது வலியுறுத்தப்பட்டது.

6) தொழிற்சங்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விவாதத்தை தேவையில்லாமல் டிராட்ஸ்கி கட்சிக்குள் கொண்டுவந்தார். 1920ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்து ருஷ்ய தொழிற்சங்க மாநாடு நடைபெற்றது. அப்போது டிராட்ஸ்கி தொழிற்சங்கங்களைத் திருத்தியமைப்பது, தொழிற்சங்கங்களை அரசு நிர்வாக நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பது போன்ற தேவையற்ற கருத்துக்களை தொழிலாளர் மத்தியில் வைத்தார். மேலும் தொழிலாளர்கள் பொறுமையாக பிரச்சினைகளை விவாதித்து வேலை செய்ய வைக்கும் முறையை எதிர்த்தார். ராணுவக் கட்டளைகளைப் போல் தொழிலாளர்களை வேலை வாங்க வேண்டும் என்றார்.

 

இந்தக் கோரிக்கைகள் தொழிற்சங்கம் பற்றிய விவாதமாக இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளை எழுப்புதையே நோக்கமாக கொண்டிருந்தது. டிராட்ஸ்கியின் இந்தப் போக்கை எதிர்ப்புக் குழுக்களும் பின்பற்றின. கட்சி நிறுவனத்தைக் கைப்பற்றும் வகையில் தங்களது போக்கை மாஸ்கோவில் இந்தக் குழுவினர் தீவிரமாக செயற்படுத்தினர். புக்காரினும் இடிதாங்கி என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்துக்கொண்டு செயற்பட்டார். தொழிற்சங்கங்களில் டிராட்ஸ்கி கூறுவது போல் ராணுவ போக்கை கையாளமுடியாது என லெனின் வாதிட்டார். முதன்மையான கட்சி அமைப்புகள் லெனினுடைய முடிவையே ஆதரித்தன.


7) “கட்சியில் புதியதாக சேர்ந்தவர்களால் கட்சியின் கட்டுக்கோப்பு பாதிக்கும் நிலை ஏற்பட்டது. 1920ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 7 லட்சம் பேர் கட்சியில் இருந்தனர். இதில் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாகவும், விவசாயிகளின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காகவும், மீதமுள்ளவர்களாவர் அலுவலர்கள், அறிவுத்துறையினர், மற்றும் மென்ஷிவிக்குகளிடம் இருந்தும், சோஷலிஸ்ட் புரடசியாளர்களிடம் இருந்தும் வந்தவர்களாவர். புதியதாக வந்தவர்களில் பலர் அரசியலில் உறுதியற்றவர்கள். இந்தப் போக்கினரை டிராட்ஸ்கி, புக்காரின் போன்ற குழுவாதிகள் பயன்படுத்தி கட்சியை குலைக்க முனைந்தனர். இந்த அபாயத்தை தவிர்க்க வேண்டுமானால் கட்சிக்குள் செயற்படும் பிரிவுகளையும், கட்சி விரோத குழுக்களை அமைத்துக் கொண்டு செயற்படுவதை தடை செய்ய வேண்டும் என்று 10வது காங்கிரஸ் முடிவெடுத்தது.

8) “சிரமத்தோடு சோவியத் அரசு பயணித்துக் கொண்டிருக்கும்போது லெனின் நோய்க்கு ஆளானார். இந்த சந்தர்ப்பத்தில் டிராட்ஸ்கி போன்ற எதிர்ப்பாளர்கள் போல்ஷிவிக் கட்சியின் மீது தாக்குதல் தொடுத்தனர். எதிர்ப்பாளர்களை டிராட்ஸ்கி ஒன்றுதிரட்டி கட்சிக்குள் எதிர்ப்புக்குழு அமைக்க முயற்சித்தார்.  தற்போதைய சோவியத் நாடு மிகவும் அபாயகரமான பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது, இதிலிருந்து மீள வழியில்லை, வீழ்வது உறுதி என்பதானக் கருத்துக்களை பரப்பிக் கொண்டிருந்தார். இந்த சதியினை நிறுத்தாமல் தொடர்ந்தார். அக்டோபர் புரட்சியின் படிப்பினைகள் என்ற தலைப்பில் 1924ஆம் ஆண்டு டிராட்ஸ்கி கட்டுரை ஒன்று எழுதினார். இதில் லெனினியத்தை மறுத்து டிராட்ஸ்கியத்தை பதிலிட்டார். இந்தப் போக்கை எதிர்த்து லெனினியத்தை பாதுகாக்க ஸ்டாலின் 1924ஆம் ஆண்டு லெனினியத்தின் அடிப்படைகள் என்ற நூலை எழுதினார். இன்றுவரை இந்நூல் லெனினியத்தை காப்பாற்றுவதில் தம் கடமையினை செய்து வருகிறது.


No comments:

Post a Comment