Friday 17 March 2023

புதிய பாதையினரின் வர்க்க சமரசப் போக்கு தொழிலாளர்களுக்கு எதிரானது.

  


முதுமை பித்தன்:-

 //உண்மையான மனிதநேய மார்க்சீய லெனினியம் என்பது, உண்மையான சமூக அறிவியலாக, உயர் தர்க்க அறிவியலாக இருக்குமானால், அதனை யார் வேண்டுமானாலும் பயன் படுத்தி பயன் பெறலாம்.// 

முதுமை பித்தன்:-

//ஈஸ்வரன் அ.கா. மார்க்சிய திட்டமிட்ட உற்பத்தி முறை என்பது, சமூக பொருளாதார உற்பத்தி முறை சார்ந்த ஒரு சமூக பொருளாதார அறிவியல் கோட்பாடு. இந்த சமூக அறிவியல் கோட்பாட்டை, பொது அறிவியல் கோட்பாடுகளை போல் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.//

இயற்கை அறிவியலைப் போல மார்க்சிய சமூக அறிவியலான பொருளாதாரம் அனைவருக்குமானது கிடையாது. வர்க்க சமூகத்தில் பொருளாதாரம் பொதுமானது கிடையாது, வர்க்க சார்பானதே. முதலாளிகளுக்கு வேறு அரசியல் பொருளாதாரம் தொழிலாளிகளுக்கு வேறு அரசியல் பொருளாதாரம். மார்க்ஸ் எழுதிய மூலதனம், "தொழிலாளி வர்க்கத்தின் விவிலியம்” என்று எங்கெல்ஸ், மூலதனம் ஆங்கிலப் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் (1886) கூறியுள்ளார்.

“தாஸ் கேபிட்டல்" கண்டத்தில் (Continent] "தொழிலாளி வர்க்கத்தின் விவிலியம்” என்று போற்றப்படுகிறது. இந்த நூலில் கண்டுள்ள முடிவுகள் ஜெர்மனியிலும் ஸ்விட்சர்லாந்திலும் மட்டு மன்றி, பிரான்சிலும் ஹாலந்திலும் பெல்ஜியத்திலும் அமெரிக்கா விலும், ஏன், இத்தாலியிலும் ஸ்பெயினிலும் கூட நாளும் பரவி, மேலும் மேலும் மாபெரும் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அடிப் படைக் கோட்பாடுகளாகிக் கொண்டிருக்கின்றன என்பதையும், எங்கு பார்த்தாலும் தொழிலாளி வர்க்கம் தனது நிலைமையினுடையவும், அபிலாஷைகளுடையவும் மிகப் பொருத்தமான தெரிவிப்பை இந்த முடிவுகளில் மேலும் மேலும் அடையாளங் கண்டு கொள்கிறது என்பதையும் அந்த இயக்கத்துடன் பரிச்சயமுள்ள எவரும் மறுக்க மாட்டார்.”

(எங்கெல்ஸ் முன்னுரை 1886)

மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் அறிவியல் முடிவு என்ன சொல்கிறது, “முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது”.*இந்த மார்க்சிய பொருளாதார அறிவியல் முடிவை எந்த முதலாளி உள்வாங்கிக் கொள்வார்கள்.

மார்க்ஸ்:-

முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடும்நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது.

 

முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையிலிருந்து விளைவதான முதலாளித்துவத் தனதாக்க முறை முதலாளித்துவத் தனியுடைமையைத் தோற்றுவிக்கிறது. உடைமையாளரின் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட தனியாள்-தனியுடைமையின் முதல் மறுப்பு இது. ஆனால், முதலாளித்துவப் பொருளுற்பத்தி இயற்கை விதிக்குரிய உறுதிப்பாட்டுடன் அதன் மறுப்பையே ஈன்றெடுக்கிறது. இது மறுப்பின் மறுப்பு. இது உற்பத்தியாளருக்குத் தனியுடைமையை மீண்டும ஏற்படுத்தித் தருவதன்று, முதலாளித்துவ சகாப்தத்தால் வரப்பெற்றதாகிய கூட்டு-வேலையின் அடிப்படையிலும், நிலமும் உற்பத்திச் சாதனங்களும் எல்லாருக்கும் பொதுவாய் இருப்பதன் அடிப்படையிலுமான தனியாள் உடைமையை அவருக்கு அளிப்பது ஆகும்.

 

தனியாள் உழைப்பிலிருந்து பிறக்கும் சிதறலான தனியுடைமையை முதலாளித்துவ தனியுடைமையாக மாற்றுவது, ஏற்கெனவே நடைமுறையில் சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்தியை ஆதாரமாய்க் கொண்ட முதலாளித்துவத் தனியுடைமையை சமூகப் பொதுவுடைமையாக மாற்றுவதை விடவும் ஒப்பிட முடியாத அளவுக்கு நிகழ்முறையாகும், வன்முறை மலிந்த, கடினமான நிகழ்முறையாகும், இது இயற்கைதான். முதலாவது மாற்றம் உடைமைப் பறிப்பாளர் ஒரு சிலர் மக்கட் பெருந்திரளின் உடைமைப் பறிப்பதாகும். இரண்டாவது மாற்றம் மக்கட் பெருந்திரள் உடைமையாளர் ஒரு சிலரின் உடைமையப் பறிப்பதாகும்.”

(மூலதனம் முதல் தொகுதி -பக்கம் 1025-1027)

மார்க்சின் பொருளாதார அறிவியல் கண்டுபிடிப்பானது, முதலாளித்துவத்தின் உள்முரண்பாடடை வெளிப்படுத்துகிறது. சமூகமயமான பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையே காணப்படம் உள்முரண்பாட்டை மார்க்சிய அறிவியல் எடுத்துக் காட்டுகிறது. இதை எந்த முதலாளி உள்வாங்கிக் கொள்வார் (ஏற்றுக் கொள்வார்).

மார்க்சிய பொருளாதார அறிவியலின் வர்க்கத்தன்மையை மறுப்பதின் மூலம், புதிய பாதையினரின் வர்க்க பார்வையற்ற போக்கு, வர்க்க சமரசத்துக்கு இட்டுச்செல்கிறது. இந்த வர்க்க சமரசம், அனைத்துத் தொழிலாளர்களின் வர்க்க நலன்களுக்கு எதிரானது.

இதன் மூலம் புதிய பாதையினரின் கருத்துக்கள், மார்க்சிய விரோதப் போக்கைக் கொண்டுள்ளது என்பது அம்பலமாகிறது.

மார்க்சிய அறிவியலை ஏகாதிபத்தியத்துடன் இணைக்கும் புதிய பாதையினரின் முயற்சி என்பது மார்க்சியத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியாகும். இத்தகைய திருத்தல்வாதிகளை மார்க்சியம் தொடர்ந்து அம்பலப்படுத்தியே வெற்றி பெற்று வருகிறது.

மார்க்சிய விஞ்ஞானத்தை எவ்வளவு எடுத்துக்காட்டினாலும் புதிய பாதையினருக்குப் புரியாது. ஏனென்றால் புதிய பாதைனியருக்கு மார்க்சிய விரோத நூல்களில் இருந்தே போதிக்கப்பட்டுள்ளது. அந்த போதனையில் இருந்து அவர்களால் விடுபடமுடியாது. புதிய பாதையினரின் வர்க்க சமரசப் போக்கை அம்பலப்படத்துவதுடன் தற்போதைய விமர்சனப் பணி முடிவடைகிறது.

புதிய பாதையினரின் அனைத்து அபத்தங்களுக்கும் பதிலளித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. இது தொடர்பான அனைத்துக்கும் இதுவே பதிலாகும்.

இப்போதைக்கு இந்த விமர்சனம் போதுமானது.

No comments:

Post a Comment